Friday, 28 June 2024

பொதுக் காலம் பதின்மூன்றாம் ஞாயிறு - 30/06/2024


திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்திருக்கும் நல் உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். 

தேனியும் மலரும் இணையும்போது தேன் உருவாவதுபோல், 

காலையும் மாலையும் இணையும்போது நாளின் முழுமை அடைவதுபோல், 

மூங்கிலும் காற்றும் இணையும்போது இசை உருவாவதுபோல், 

மனிதனும் இறைவனும் இணையும்போது இவ் உலகின் புதுமை உருவாகின்றது, மறைபொருள் தெளிவாகின்றது, இறையருள் பெருகுகின்றது. இவ் அதிசயம் தேடி இன்று இப்பலியில் நாம் இணைந்திருக்கின்றோம். பொதுக்காலம் 13ம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கும் எமக்கு, இறைவனின் அருள் நிறைவாகக் கிடைக்க, அவரில் இணைந்து புதுமை படைக்க எம்மை ஆயத்தம் செய்வோம். 

இறைவார்த்தை: 

- சாலமோனின் ஞான நூல் இன்றைய முதலாவது இறைவார்த்தையாக தரப்படுகின்றது. ஆண்டவர்மீது அச்சம் கொள்வதும், அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதுமே உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டுகின்றார். தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி இறைவனின் ஆட்சி மண்ணுலகில் மலர கொடுக்கப்படும் முயற்சியாக முதலாவது இறைவார்த்தை அமைகின்றது. 

- புனித பவுலின் கொரிந்து நகர் மக்களுக்கு எழுதப்பட்ட இரண்டாவது மடலில், அவர்களுக்கான அழகிய அறிவுரையாக இது அமைகின்றது. கிறிஸ்துவில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவரில் கொண்ட நம்பிக்கையில் நிலைத்திருக்கத் தவறியவர்கள், பவுலுக்கு எதிராக கலகம் விளைவித்தவர்கள் என அனைவருக்குமான அழகிய மடலாக இது அமைகின்றது. 

- மாற்கு நற்செய்தி, புற இனத்தவருக்கு எழுதப்பட்ட நற்செய்தியாக அமைகின்றது. இங்கே, இயேசுவே மெசியா அவரே இறைமகன் என அறிக்கையிட பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுவதைக் காணலாம். இன்றைய நற்செய்தி, இயேசுவின் மேல் அதிகமான நம்பிக்கைகொள்ள அழைப்பதைக் காணலாம். 

எமது நம்பிக்கை ஆழப்படுத்தப்பட வேண்டும்; வெறுமனே கண்களால் காணும், காதுகளால் கேட்கும் உலகத்தின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் சான்றுபகரும் நம்பிக்கையற்ற பக்தர்களாக அல்லாமல், உள்ளத்து உணர்வுகளுக்கு செவிசாய்த்து, உயரிய விழுமியங்களுக்கு இடங்கொடுத்து வாழும் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும். வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்களாக அல்லாமல், இயேசுவின் பார்வையில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம்கொடுக்கும் அன்பர்களாக மாறவேண்டும். இவ் அருளை எமக்கும் எமது குடும்பங்களுக்கும், இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழும் அனைவருக்கும் பெற்றுத்தர தொடரும் இப்பலியில் மன்றாடுவோமாக. 

வருகைப் பல்லவி

திபா 46:2 மக்கள் அனைவருமே, களிப்புடன் கைகொட்டுங்கள்; மகிழ்ச்சிக் குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;

ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;

என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;

சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். -பல்லவி


4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்;

அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;

மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. -பல்லவி


10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;

ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;

12b என் கடவுளாகிய ஆண்டவரே,

உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7,9,13-15

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். “மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

அக்காலத்தில்

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-24, 35b-43

அக்காலத்தில், இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் எமது வலுவின்மையில், இயலாமையில், நம்பிக்கையற்ற நிலையில், வல்லமையாக, புதிய சக்தியாக எமக்கு வலுவளிக்கின்றது. அவரது வார்த்தைக்கு செவிமெடுத்தவர்களாக எமது தேவைகளை ஒப்பூக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்பின் இறைவா! திரு அவை வழியாக எமக்கு ஆன்மிக ஊட்டத்தையும், வழிகாட்டலையும், நம்பிக்கையில் நிறைவையும் தருகின்றீர். இதற்காக உழைக்கும் அனைத்து கரங்களையும் ஆசீர்வதியும், எமக்காக செபிக்கும் நல் உள்ளங்களை ஆசீர்வதியும், இதனால், திரு அவை பணியாளர்கள் அனைவரும் உம்மை அன்பு செய்வதன் வழியாக எம்மை நேரிய பாதையில் நடத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. அன்பின் இறைவா! இவ் அழகிய நாளுக்காக நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது வாழ்விலே நாம், உமது மகன் இயேசுவில் முழு நம்பிக்கை கொள்ளவும், எமது அழகிய குடும்பங்களில் அவரை வாழ்விக்கவும், நன்மைகள் அதிகம் புரிந்து, சொந்தங்கள் அதிகம் சேர்த்து, பஞ்சமும், வஞ்சகமும் வாழ்வில் தொலைத்து புதிய பாதை அமைத்திட அர்ருள்புரிய வேண்டுமென்று, ...

3. அன்பின் இறைவா! திருத்தந்தையின் வழிகாட்டலில், தொடங்கியிருக்கும் ஜுபிலி ஆண்டிற்கான பயணத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுகின்றோம். இவ்வுலகின் போக்கில் தடுமாறும் எம் மக்கள், புதிய முயற்சிகளால் தூண்டப்பட்டு, இயேசுவின் கல்வாரி அன்பை விதைத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. அன்பின் இறைவா! பாதுகாபிற்காக, அமைதிக்காக, அன்பிற்காக ஏங்கும் எமது நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் நடைமுறைகள் வழியாக, முயற்சிகள் வழியாக புதிய ஆரம்பத்தை கண்டடைவார்களாக. எமது தலைவர்கள் எப்பொழுதும், மக்களை நேரிய பாதையில் வழி நடத்தவும், தியாகத்தாலும், கடின உழைப்பாலும் நல் எதிர்காலத்தை உருவாக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் உமது சாயலாக பாவனையாக படைக்கப்பட்டு எப்பொழுதும் உம்மை எமது இதயத்திலும், உணர்விலும் சுமந்துகொண்டே இருக்கின்றோம். உம்மில்கொண்ட நம்பிக்கையால் எமது வாழ்வை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவ் நம்பிக்கையால் உம்மிடம் நாம் கொண்டுவந்த அனைத்து தேவைகளுக்கும் செவிசாய்த்து உமது அருளை பொழிந்திடுவீராக. எங்கள். 

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நீரே அருள்கூர்ந்து ஏற்பாடு செய்யும் உம் மறைநிகழ்வுகள் எங்களுக்கு நற்பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் பணியின் புனிதக் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருப்பனவாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு ! என்னுள் இருப்பதெல்லாம் அவரது திருப்பெயருக்கே!காண். திபா 102:1  

அல்லது

தந்தையே, அவர்கள் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக என அவர்களுக்காக வேண்டுகிறேன். அதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்புவதாக, என்கிறார் ஆண்டவர். யோவா 17:20-21


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுத்து உணவாக உட்கொண்ட இப்புனிதப் பலிப்பொருள் எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் முடிவில்லா அன்பினால் உம்முடன் ஒன்றிணைக்கப்பட்டு என்றும் நிலைத்திருக்கும் கனி தர அருள்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச். ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 


ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆ) 30.06.2024

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 1:13-15: 2,23-24

சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்டபடியால் இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் 'ஏற்றுக்கொள்ளப்படாத நூலாகவே' கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். இன்றைய வாசகம் முதலாம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வரிகள் சாவு என்கின்ற மறைபொருளை விளக்க முயற்சிக்கின்றது. ஞானம் பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது என்ற தொனியில் இந்த அதிகாரம் அமைந்துள்ளது. வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் (29) 30

நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம் இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்களில் பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் நன்றி செலுத்துவதாகவும் அமையும். இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரணையில் அமைந்துள்ளதனைக் காணலாம். தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது. ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 8:7-15

2கொரிந்தியர் 8ம் அதிகாரம் யூதேயாவிலுள்ள ஏழை கிறிஸ்தவர்களின் நிலையை எடுத்துரைப்பதாகவும், அவர்களுக்கு நன்கொடை திரட்டுவதாகவும் உள்ளது. இந்த அதிகாரத்தின் ஆரம்ப வரிகளில் மசிதோனிய திருச்சபையின் நிலையை விளக்குகிறார், பவுல். மசிதோனிய திருச்சபை ஏழைகளுக்கு நன்கொடை கொடுப்பதில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என காட்டுகிறார் பவுல். இந்த பணியோடு தீத்துவிற்கு நல்ல தொடர்பு இருக்கிறது என்பதையும் பவுல் எழுதுகிறார். இதன் தொடர்ச்சியாக பவுல் கொரிந்திய திருச்சபையையும் ஏழைகளுக்க உதவி செய்யச் சொல்லி கேட்கிறார். வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

நற்செய்தி: மாற்கு 5:2-43

இயேசு இரத்தபோக்குடைய பெண்மணியை குணப்படுத்தலும், யாயீரின் மகளை உயிர்ப்பித்தலுமான நிகழ்வுகள் மூன்று நற்செய்திகளிலும் காணப்படுகின்றன. விவிலிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, மாற்குதான் இந்த நிகழ்வுகளை எடுத்தியம்புவதில் முன்னோடியாக அல்லது மூலமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் குணப்படுத்தல் நிகழ்வும், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் நிகழ்வும், இயேசு ஆண்டவருடைய வல்லமையைக் காட்டுகின்றன. இயேசுவிற்கு மரணத்தின் மீது ஆதிக்கம் இருந்தது என்பதைக் காட்டவே இந்த நிகழ்வுகள் முயற்சிக்கின்றன. நம் ஆண்டவர் நம்மை குணப்படுத்துவார், தேவையானது ஒன்றே, அது நம்பிக்கை. கவனமாக நற்செய்தி வரிகளுக்கு செவி கொடுப்போம்.

Fr. M. Jegankumar Coonghe, OMI

Sunday, 23 June 2024

இறுதி பிரியாவிடைச் செபம் - புனித பேதுரு (புலம்பெயர் தமிழர்களுக்காக)


 

பிரியாவிடை செபம் புனித பேதுரு

அன்பும் தயாபரமும் நிறைந்த புனித பேதுருவே, அடியோர்கள் நாம் உமது பதியிலே அமர்ந்திருந்து, ஈர விழிகளுடன் காத்திருந்து, இறைவனின் அன்புக்காகவும், இரக்கத்திற்காகவும் உமது பரிந்துரை வேண்டி நிற்கின்றோம் புனிதரே. 

அடைக்கலம் தேடுகின்றோமே, ஆதரவு தேடுகின்றோமே, உறவுகள் தேடுகின்றோமே, உரிமையும் தேடுகின்றோமே. நாடு விட்டு நாடு வந்தோம், சொந்தங்கள் விட்டு தூர வந்தோம், உரிமையை தொலைத்துவிட்டு விலகியே வந்தோமே. வேறு வழி தெரியவில்லையே, வெறுமையோடும், விரித்த இரு கரங்களோடு, கண்களில் ஏக்கத்தோடு உள்ளத்தில் நம்பிக்கையோடு சரணடைகின்றோம் எமது காவலரே, புனித பேதுருவே. 

எமது பாதைகள் எப்போதையா இலகுவானதாய் இருந்தது; தோல்களில் எத்தனை சுமைகள், உள்ளத்தில் எத்தனை வடுக்கள், பாதையில் எத்தனை தடைகள், வயிற்றிலே எத்தனை பசிகள். இரவு பகலாக இத்தனை சுமைகளை தாங்கினோம், கடும் குளிரினால் அவதிகளை தாங்கினோம், அவமானங்களைத் தாங்கினோம், இல்லிடமின்றி, தூக்கமின்றி, எம் கண்களில் கண்ணீர் துடைக்க கரங்கள் இன்றி அனைத்தையும் தாங்கியே சென்றோமே. 

இயேசுவுக்காய் அனைத்தையும் துறந்து, மரணம் மட்டும் திரு அவையை காத்து வழிநடத்திய அன்பு மேய்ப்பரே! நீர் நல்ல தலைவராய், எல்லோரையும் அணைப்பவராய், தூய ஆவிக்கு செவிசாய்ப்பவராய் இருந்தீரே. நேரிய பாதையில் எம்மையும் எமது குடும்பங்களையும் இங்குள்ள அனைவரையும் வழிநடத்துவீர் எமது புனிதரே. 

எமது பிள்ளைகளின் வாழ்வைப் பாருமையா. ஞானத்தையும், அறிவையும், இறை அழைத்தலையும் கொடுத்து, உண்மையில் இறைவனை அறிந்துகொண்டு, உள்ளத்தில் அவரை அன்புசெய்து, தமது செயலில் சாட்சியம்தேடிடும் நல்ல விவேகத்தையும் அளித்திட வேண்டிநிற்கின்றோம். 

நாம் பிறந்த எமது நாட்டை ஒப்புக்கொடுக்கின்றோம். இழந்த எம் உறவுகளை திரும்பிப் பார்க்கின்றோம், உடைந்த எம் வீடுகளை திரும்பிப் பார்க்கின்றோம், மறந்த எம் மகிழ்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றோம். பொருளாதார கெடுபிடியால், இயற்கை அணர்த்தத்தால், அரசியல் பிறழ்வுகளால் அவதியுறும் எமது மக்கள், நிரந்தர மகிழ்ச்சியை நாள்தோறும் சுவைத்திட அருள்புரியும் எமது புனிதரே.

இறுதியாக, புனித பேதுருவே, உமது சந்நிதானம் விட்டு பிரிய இருப்பதால், உம்மை பணிந்து வணங்குகின்றோம்.  எம்மை எல்லாம் இயேசுவின் பாதம் கொண்டு சேர்ப்பவரே. பல திசைகளிலும் இருந்து பாரங்களோடும் தேவைகளோடும் வந்திருக்கும் உமது அடியவர்கள நாம் உம்மிடம் இரந்து கேட்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாயும், எமக்காக பரிந்து பேசும், விண்ணக அருளை பொழிந்தருளும். நவின உலகில் நாம் தடுமாறாமலும், குடும்ப உறவில் நிலைகுலையாமலும், தொழில் துறைகளில் எம்மை தொலைக்காமலும், இருக்க வேண்டுகின்றோம்.   'உன் பெயர் பேதுரு, இந்த பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன்' என்று விண்ணகத்தின் திறவுகோளை பெற்ற எம் புனிதரே. இம்மண்ணகத்தில் வாழும் எமக்கு இயேசுவின் பணியைக் கற்றுத்தாரும், இயேசுவின் மனநிலையைக் கற்றுத்தாரும், இயேசுவின் வாஞ்சையைக் கற்றுத்தாரும், இயேசுவின் விருப்பங்கள் அனைத்தையும் எமக்குக் கற்றுத்தாரும். நாளும் நாமும் உமது அன்பிலும் வல்லமையிலும் வளர எமக்காய் பரிந்து பேவீர் புனிதரே, ஆமென். 


Wednesday, 19 June 2024

பொதுக்காலம் பன்னிரெண்டாம் வாரம் - 23/06/2024


பொதுக்காலம் பன்னிரெண்டாம் வாரம் 

இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் அன்புள்ள இறைமக்களே! இன்று பொதுக்காலத்தின் பன்னிரெண்டாம் வாரத்தினுள் நுழைகின்றோம். காலங்களும் நேரங்களும் எம்மைக் வெகுவாகவே கடந்து சென்றாலும், தொடக்கமும் முடிவுமாக இருக்கும், அகரமும் ணகரமுமாயிருக்கும் கடவுளின் உன்னத வழிநடத்தலும், பராமரிப்பும் எம்முடனே இருக்கின்றது. நாம் ஆரம்பிக்கும் இவ்வாரமும் இதற்குச் சான்றாகும். 

(இன்று திருத்தந்தையின் தினமாகும். "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன் " என்று, அன்றுகொடுத்த உறுதிமொழியை இன்றுவரைக்கும் பாதுகாத்துவரும் எமது திருத்தந்தைக்காக இன்று மன்றாடுவோம். இத்திருப்பலியை சிறப்பிக்கும் .... இவர்களுக்காகவும் இப்பலியிலேஇறைவரம் வேண்டுவோம்.)

இறைவார்த்தை 

யோபு நூல், விவிலியத்தில் காணப்படும் ஞான இலக்கியங்களுள் முதன்மையானதே. நாற்பத்தி இரண்டு அதிகாரங்களைக் கொண்ட இந்நூல், நீதிமானாகிய யோபுபடும் துன்பத்திற்கு காரணம் அவரது பாவமா? அல்லது இவ்வுலகத்தின் பாவமா? எனும் விவாதத்திற்கு விடைகூறும் நூலாக இது அமைந்துள்ளது. எது நடந்தாலும், கடவுளின் ஆற்றலே சிறந்தது, அவரது வல்லமையே மேலானது என்று இறுதிவரைக்கும் துணிந்துசெல்லும் யோபு இன்று எமக்கு ஓர் எடுத்துக்காட்டு. 

கொரிந்து நகருக்கு புனித பவுல் எழுதிய இரண்டாம் மடலில் போலியான எண்ணக்கருக்களை கொண்டு வாழ்ந்து, இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்திக்கு தடையாக இருந்த பலருக்கு தனது மடலின் வழியாக ஒப்புரவை ஏற்படுத்த விளைகின்றார் புனித பவுல். இயேசுவின் மேல் உள்ள எமது நம்பிக்கை தளர்வானதாயின் இவரது நம்பிக்கை தரும் வார்த்தைகள் எமது விசுவாசத்திற்கு உரமூட்டுகின்றதே. 

மாற்கு நற்செய்தியில் சீடர்களின் நம்பிக்கை தெளிவாக்கப்படுகின்றது. இயேசுவின் உடனிருப்பு என்பது ஒரு மாயை அல்ல, ஒரு சடங்கு அல்ல; மாறாக அது வாழ்வு, மாறாத உண்மை யதார்த்தம், எம்மைவிட்டு விலகிடாத நிலையான புதுமை. 

எனவே, 

இப்புதிய வாரத்தை ஆரம்பிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு உன்னத பலமாக அமைகின்றன. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நாளுக்கு நாள் மாறுகின்றபோது, உறவுகளும், நண்பர்களும் நம்பிக்கை இழக்கின்றபோது, அரசியல் வாக்குவாதங்கள் அநாவசியமாகின்றபோது, இயற்கையும் எம்மைவிட்டு தொலைவில் செல்லுகின்றபோது, பிந்தொடரும் பலவகையான யுத்தங்கள் அர்த்தம் இழக்கின்றபோது - நம்பிக்கை இழக்காமல் இயேசுவை பற்றிப்பிடிக்க இன்றைய இறைவார்த்தைகள் எமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இயேசுவே பலம், அவரே எமக்கு வாழ்வு என்று அவரில் நம்பிக்கை கொண்டவர்களாக இத்திருப்பலியின் பக்தியுடன் இணைந்துகொள்வோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 27:8-9 ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே மீட்பு தரும் பாதுகாப்பு. ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; என்றென்றும் அவர்களை ஆண்டு நடத்திய ருளும்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உம்மையே நம்பி, உம்முடைய அன்பில் நிலைத்திருப்பவர்களை நீர் என்றும் கைவிடுவதில்லை ; இவ்வாறு நாங்கள் உமது திருப்பெயரை எக்காலத்திலும் போற்றவும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் வாசகம்

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

“கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல் திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; 
நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.
24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; 
ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். -பல்லவி

25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; 
அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.
26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; 
பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.  -பல்லவி

28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; 
அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29 புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;
கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. -பல்லவி

30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; 
அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, 
மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு 
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! -பல்லவி

 

இரண்டாம் வாசகம்

பழையன கழிந்து புதியன புகுந்தன.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இறைமக்கள் மன்றாட்டு 

குரு. "நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது"எனும் யோபுவின் வார்த்தை எமக்கு ஆருதலைத் தருகின்றது. இறைவனின் பலத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. அன்பின் இறைவா! உமது திரு அவையை வழிநடத்தும். உமது பாதையில் உம் பிள்ளைகளை இவ்வுலக ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கவும், பாவக்கறைகளில் இருந்து விடுவிக்கவும் உழைக்கும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. வல்லமையின் ஆண்டவரே! எமது திருத்தந்தையை ஆசீர்வதியும். உலகத்தின் அடையாளங்களை உள்ளறிந்து, உறவையும், அன்பையும், மன்னிப்பையும் விளை நிலமாக்க உழைக்கும் எம் திருத்தந்தையின் ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று, ... 

3. அன்பின் இறைவா! எமது பங்குத்தந்தையை ஆசீர்வதியும்.  தனது பலம், நேரம், விடாமுயற்சி, தனது ஞானம், அனைத்தையும் எமது வளர்ச்சிக்காக காணிக்கையாக்கும் இவரை தொடர்ந்து உமது அருளால் நிறைத்திட வேண்டுமென்று, ...

4. அருளின் வடிவே இறைவா! எமது பெற்றொரை ஆசீர்வதியும். எமக்காகவே வாழும் இவர்களின் உழைப்பையும் வியர்வையையும் தியாகத்தையும் எமது வாழ்வின் வெளிச்சமாக ஏற்று, கற்றுக்கொண்டு வாழ அருள்புரிய வேண்டுமென்று, ...

5. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளை (பிள்ளைகளாகிய எம்மை) ஆசீர்வதியும். நீர் தந்துள்ள பலம், வீரம், ஆற்றல், ஆக்கும்திறம், ஞானம், என அனைத்தையும் அறிந்து செயற்படற் செய்தருளும். இதனால் உம்மை இவ்வுலகில் தொடர்ந்தும் பிரதிபலிக்கும் கருவியாகிட அருள்புரியவேண்டுமென்று, ...

குரு.  அன்பின் ஆண்டவரே! நம்பிக்கையை எமக்கு கற்றுத் தருபவரே. உமது வாழ்வு எமக்கு ஓர் எடுத்துக்காட்டே, அதுவே எமக்கு முன் உதாரணமே. இன்றைய நாளில் எம்து காணிக்கைகளாக உமது பாதம் சமர்ப்பிக்கும் இம்மன்றாட்டுக்களை ஏற்றருளும். நாம் பயணிக்கும் இப் பாதையில் உம்மை விட்டு விலகிடாமல் இருந்திட அருள்புரிய வேண்டுமென்று, எங்கள் ... 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் தூயோராக்கப்பட்டு, உம்மை மகிழ்விக்கும் எங்கள் மனங்களின் காணிக்கைகளை உமக்கு அளித்திட அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

திபா 144:15 ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நம்புகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

அல்லது

யோவா 10:11,15 நல்ல ஆயன் நானே. என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் உயர்மதிப்புள்ள உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்றுப் புதுப்பிக்கப்பட்ட நாங்கள் உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: இறைப்பற்றுடன் நாங்கள் அடிக்கடி நிறைவேற்றும் இப்பலியின் பயனாக எங்கள் மீட்பை உறுதியாய்க் கண்டடையச் செய்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி... 

 

Tuesday, 18 June 2024

செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை



 செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை 

அன்னை மரியின் பாதம் படுத்துறங்குவது எத்துனை இனிது, அவள் இனிக்கும் சொல்கொண்ட தூதுரைகள் எத்துனை இனிது; சுகம் தரும் கருணைவிழிகள் எத்துனை இனிது, சுமைகளோடு வரும் எமக்கு துணையாய் இருப்பது எத்துனை இனிது. அம்மா என்றெல்லாம் அசையா நம்பிக்கையில் அரவணைக்க அழைக்கும்போது அருள்தரும் அணையா விளக்காக நீயிருப்பாய் தாயே. 

அன்னையின் பரிந்துரைகொண்ட ஆசீர்களை பெற, இயேசுவின் கல்வாரிப்பலிக்கு இணைந்திருக்கும் அன்பு உறவுகளே! இன்று "செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை" எனும் அழகிய கருப்பொருள் எமது சிந்தனைக்காக எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நவநாளை சிறப்பிக்கும் சாட்டி திருத்தல இறைமக்களுக்காகவும், திருத்தல அன்பிய சபையினருக்காகவும் விசேட விதமாக மன்றாடுவோம். 

இறைவார்த்தை

இஸ்ராயேலின் தலைமைத்துவம் மாற்றம்பெற்று, அரசர்களின் ஆட்சியை முன்நிலைப்படுத்தும் அழகிய நூலாக சாமுவேலின் முதல் நூல் எமக்கு கொடுக்கப்படுகின்றது. இருப்பினும், இஸ்ராயேலின் தலைவர் இறைவனே என்பதை எழுதப்படாத சட்டமாக, இதயத்தின் மௌன ஒலியாக ஒலிக்கவேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. குழந்தைகள் இல்லாத அன்னாவின் செபம் கேட்கப்படும் எனும் ஏலியின் இறைவாக்கு அன்னாவை ஆசீர் நிறைந்த பெண்ணாக மாற்றும் என்று எண்பிக்கின்றார். யோவான் நற்செய்தியில், அன்னை மரியாவின் பெரும் பங்கு காட்டப்படுகின்றது. கானாவூரில் நடைபெற்ற திருமணத்தில் ஒரு பெண்ணின் தலைமைத்துவமும், அவளின் நிபந்தனையற்ற கரிசணையும் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆணாதிக்க சமுகத்தில், அன்னை மரியாளின் இச்செயல் ஒரு சவாளே. அவளின் வேண்டுகோளுக்கு இறைவனின் இதயமும் திறந்துகொடுக்கும் என்பதை இப்புதுமை வழியாக கற்ருக்கொள்ளலாம். 

ஜுபிலி ஆண்டு

அன்னை மரியாள் ஒரு சாட்சியப் பெண்ணே, அவளிடம் நம்பிக்கை என்பது வாழ்வின்  தெளிவான ஒரு யதார்த்தமே. எங்களுக்காக இறை திட்டத்தில் உடன் இருந்தாள், தன் மகன் வழியாக அனைத்தையும் நிறைவேற்றுவதில் அவள் தெளிவாய் இருந்தாள். அன்னை மரியைப் போல் நம்பிக்கையில் தெளிவாய் பயணிக்க திருத்தந்தை அழைப்புவிடுக்கின்றார். மரியன்னையின் உடனிருப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை அளிக்கின்றது, அவளின் பரிந்துரை மிக வல்லமையானது, சக்திமிக்கது. அவளின் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவானது, உறுதியானது, நிரந்தரமானது. 

எனவே, 

எமது கைகளை அகலவிரித்துப் பார்ப்போம், அநுதினம் நாம் சேகரிக்கும் அனைத்துமே நிரந்தரமற்றது; தேவையற்ற பாவ வாழ்வு, புரியாத அநாகரிக பழக்கங்கள், உணர்வுக்கு மிஞ்சிய பிரிவினைகள், கோபங்கள், பலனளிக்காத பண பொருள் ஆசைகள் என எதையுமே எம்மிடம் கொண்டுசெல்ல முடியாது என அன்னையின் ஆளுமை நிறுபித்துவிட்டது. இவ்வுலகத்தில் வாழ்ந்த அன்னை மரியாவிடம் இருந்த மிகப்பெறுமதியான சொத்து அவளின் பரிந்துரைமிக்க செபமே. அன்னை மரியாள் எம்மிடம் செயற்பட அநுமதிப்போம். அவளின் எண்ணங்கள், ஆசைகள், உணர்வுகள் இயேசுவத் தாங்கும் பாக்கியம்பெற்றனவே. இதை நாமும் உணர்ந்து கடைப்பிடித்து வாழ இறைவரம் வேண்டுவோம்.  

இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று மொழிந்த அன்னை மரியின் அன்பு வார்த்தைகள் இயேசுவை குறித்துக் காட்டுகின்றன. அன்னை மரியின் வழி, இயேசுவின் அன்பு வார்த்தைக்கு செவிகொடுக்கும் மக்களாக எமை மாற்றி எமது உள்ளத்தின் உணர்வுகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து மன்றாடுவோம். 

1. அன்பின் ஊற்றே இறைவா! அழைத்தலின் ஆழம் உணர்ந்து, தமது வாழ்வே திரு அவைக்கு அணிசேர்க்கும் என்று அர்ப்பணிக்கும் குருத்துவ துறவற பணியாளர்கள் அனைவருக்கும் நிறையாசீர் கிடைக்கவும் அவர்கள் வழி எமது மக்கள் இறை அனுபவம் பெற்று வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இங்கே கூடியிருக்கும் உமது அன்பர்கள் நாம் உமது வார்த்தைக்கு செவிகொடுக்கின்ற, அதன்படி வாழுகின்ற சீடர்களாக எமை மாற்றியருளும். உமது தாயின் அன்பு இதயத்தை போல் எமக்கு கறுத்தாரும், அவளின் பாச உணர்வுகளுக்கு எம்மை அடிமைகளாக்கும், அவளின் பாவ விடுதலைக்கான போராட்டத்தில் எம்மையும் இணைத்தருளும், கருணைமழை போன்ற அவளின் பரிந்துரையில் எம்மையும் எம குடும்பத்தையும் சேர்த்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது எதிர்கால தலைமுறையான எமது அன்புப் பிள்ளைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். விசுவாசத்தின் வேர்கள் இவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிவதாக. எமக்கு எப்பொழுதும் முன்மாதிரியான அன்னை மரியைக் கண்டு பாவிப்பார்களாக, நல் ஒழுக்கங்களை கற்றுக்கொள்வார்களாக, புதிய சிந்தனைகள் வழியாக, இறைவனை என்றும் எங்கும் தம் இதயத்திலும், ஞானத்திலும் தாங்கிச் செல்ல அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

4. இப்பலியை ஒப்புக்கொடுக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். அன்னை மரியை தமது அன்புத் தாயாக கொண்டு, உம்மை அநுதினம் தமது வாழ்வில் சான்றுபகரவும், திருக்குடும்ப வெளிச்சத்தை உலகிற்கு எடுத்தியம்பவும், திரு அவையின் மறைபோதக வாழ்வுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! கரம் கொடுத்து காப்பவரே உமக்கு நாங்கள் நன்றி சொல்கின்றோம். இன்றைய நாளிலே உமது வார்த்தையை கேட்டு, அதை ஆழ தியானிக்க எமக்கு தந்த இவ் அழகான சந்தர்ப்பத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று நாங்கள் உமது தாயாகிய அன்னை மரியா காட்டிய பாதையிலே நடக்கவும் உம்மை விட்டு விலகிடாத நல்ல கருவியாகவும் எம்மை மாற்றியருள வேண்டுகின்றோம். நீர் எமது தந்தை, நாங்கள் உமது பிள்ளைகள் என்ற உணர்விலே உமது பாதம் சமர்ப்பித்த எமது தேவைக்ளை எல்லாம் நீர் தயவாய் செவிசாய்த்தருளும். உமது அருளால் எமது வாழ்வும் வளம்பெற அருள்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி... 

Monday, 17 June 2024

பல கேள்விகளுக்கு விடைகொடுத்து, வாழ்வின் பாதைகளைத் தீர்மானிக்கும் செபம்


திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு இறைமக்களே, பதுவை புனித அன்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் ஆயத்த நாள்களில் ஏழாம் நாளாகிய இன்று நாம் இந்நன்றித் திருப்பலியில் இணைந்து இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுத்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாளின் கருப்பொருளாக "பல கேள்விகளுக்கு விடைகொடுத்து, வாழ்வின் பாதைகளைத் தீர்மானிக்கும் செபம்" எனும் அழகிய தலைப்பில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய நவநாளை சிறப்பிக்கும் ஐந்தாம் வலய அன்பிய இறைமக்களையும், அந்தோனியார் ஆலய அன்பிய சபையினரையும் ஒப்புக்கொடுத்து இப்பலியிலே இவர்களுக்காக மன்றாடுவோம். 

இறைவார்த்தை

எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதலாம் இறைவார்த்தையில் இறைவாக்கினரின் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தின் பின் எரேமியா இறைவாக்கினரின் வாக்கு, ‘இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது’ என்னும் நம்பிக்கைப் பேரொளியாக மாறுகின்றது. மக்களின் மனம் மாறவேண்டும். அவர்களின் நம்பிக்கை பெருகவேண்டும், இன்பங்களை அனுபவிப்பதில் மாத்திரம் கடவுளை காண்பதல்ல, துன்பங்களின் போதும் தளைத்திடா நம்பிக்கை வளரவேண்டும் என வலியுறுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் இயேசு வரிசெலுத்துவது பற்றி தனது எண்ணக்கருவை விபரிக்கின்றார். மீனின் வாயில் கிடைக்கும் ஸ்தாத்தேர் நாணயத்தைக் நாணயத்தைக் கொண்டு வரிசெலுத்த முனைவதை நற்செய்தியில் காணலாம். ஸ்தாத்தேர் நாணயம் என்பது நான்கு திராக்மா நாணயத்திற்கு சமனானது, அதாவது நான்கு நாள் கூலிக்குச் சமனானது. இயேசுவின் இப்படிப்பினை மிக அழகான பாடத்தைக் கொடுப்பதைக் காணலாம். 

ஜுபிலி ஆண்டு. 

திருத்தந்தையின் இவ் அழகிய மடலில், முன்வைக்கும் எதிர்பார்ப்புக்கள் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும்  பத்திலடியே. சிறையிலே கைதிகளாக இருப்போருக்கு மரண தண்டனை எனும் சட்டம் தளர்த்தப்படவேண்டும். நாம் அவர்களோடு ஒன்றித்திருக்கின்றோம் என்பதன் அடையாளமாக சிறைச்சாலையிலேயே 'புனித நுழைவாயிலை' ஆரம்பித்து, இதனூடாக இவர்கள் நுழைகையில் தமது நம்பிக்கையோடு கூடிய எதிர்காலத்தைக் காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். இவ்வாறே வைத்தியசாலையில் இருப்போர், பலவீனமானோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் தமக்கென்றே ஒரு சுதந்திர வாழ்வை தேடி அழைகின்றார்கள். இவர்களுக்கான நம்பிக்கையின் பாதை காட்டப்படவேண்டும் எனும் அழகிய முயற்சி இவ் ஜுபிலி ஆண்டின் சிறப்பாகின்றது. 

எனவே, செபம் பல கேள்விகளுக்கு பதில்கொடுத்திருக்கின்றது, நம்பிக்கையோடு செபிக்கும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகின்றது. எமது செபத்தால் புதிய வாழ்வை தொடங்கலாம், புதிய பாதை அமைக்கலாம், புதிய கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம். இதுவே எமது நம்பிக்கை. எமக்கு முன் நம்பிக்கை வாழ்வை வாழ்ந்துசென்ற பல நூறு புனிதர்கள் இதற்கு சான்றுபகர்வார்கள். எச்சூழ்நிலையிலும், எல்லாவேளையிலும் இறைவனோடு இருக்கும் அழகிய நேரங்களை வீணாக்காமல், செபிப்போம், ஒன்றிப்போம் ஒரே திரு அவையில் இறைசமுகமாய் உருவாகுவோம். 

இறைமக்கள் மன்றாட்டு


குரு: வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம், ஏனெனில் ஆண்டவர் எமது பாதுகாப்பாக இருக்கின்றார், எமது தேவைகளில் எமக்கு செவிமெடுக்கின்றார், எமது இயலாமையில் எமக்கு துணை நிற்கின்றார். எமது விண்ணப்பங்களை அவரிடம் சமர்ப்பிப்போம். 


1. திரு அவைப் பணியாளர்களுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், திரு அவையின் மாண்புக்காக உழைக்கவும், ஒரே, மற்றும் புனித, கத்தோலிக்க திரு அவையின் வாழ்வுக்காக பணியாற்றும் வாஞ்சை கொண்டு வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மான்றாடுகின்றோம். 


2. எமது பங்கு திரு அவைக்காக மான்றாடுவோம். 

அன்பின் இறைவா! விசுவாசத்தின் விளைநிலமாகிய எமது பங்கை வழிநடத்தி அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தை, துறவற உறவுகள் மற்றும் பங்கின் மக்கள் அனைவருக்கும் தேவையான அருள் வளங்களை அளித்தருளும். என்றுமே தமது தியாகத்தாலும், ஆர்வத்தாலும், வாஞ்சையாலும் எமது பங்கிற்கு அணிசேர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. இத்திருப்பலியை சிறப்பிப்போருக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா இன்று இந்நவநாளை சிறப்பிக்கும் ஐந்தாம் அன்பிய இறைமக்களுக்காகவும், அந்தோனியார் ஆலய அன்பிய சபையினருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களின் வாவை ஆசீர்வதியும், தொழில்துறையையும் வாழ்வாதாரத்தையும், பிள்ளைகளின் நல்வாழ்வையும் ஆசீர்வதியும். தொடர்ந்தும் உமது அன்பை விட்டு விலகிடாமல் பயணித்திட வேண்டூமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. எமது இளைஞர் யுவதிகளுக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா! மாறிவரும் கலாசார வேட்கையினாலும், சினிமா மோகத்தினாலும், அதிநவின தொழில்நுட்ப உலகத்தின் தாக்கத்தாலும் கவரப்பட்டு பாதிப்புறும் எமது இளையோர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பையும், விசுவாசதையும் தொலைத்திடாமல், அவருக்காக இறுதிவரைக்கும் வாழும் உள்ளம் கொண்டு வாழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்', எனும் திருப்பாடல் ஆசிரியரின் வலிமையின் வார்த்தைகளோடு இணைந்து, வாழ்வு எனும் கொடைக்காக நன்றி சொல்லி, ஆவர் எம்மேல் கொண்ட கருணைக்காகவும், பேரிரக்கத்திற்காகவும், பராமரிப்பிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் வார்த்தைகளில் எடுத்துரைத்த விண்ணப்பங்களுக்கும், எண்ணத்திலும், சிந்தனையிலும், சொல்லமுடியாமல் தவிக்கும் பல விண்ணப்பங்களுக்கும் அவர் செவிசாய்க்கவும், மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம், ஆமென். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Saturday, 15 June 2024

திரு அவை ஒரு செபிக்கும் கூட்டம்



திருப்பலி முன்னுரை 

இறைவனின் பலியில் இணைந்து, இதயத்தில் இருக்கும் இயேசுவை இகமதில் வரவேற்று, கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும், அவரது வார்த்தையிலும் அவரை சுவைக்கவும், அனுபவிக்கவும் இன்று நாம் ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்றைய திருப்பலி வழியாக இறைவனுக்கு நன்றிசொல்லுவோம், புகழ் பாடுவோம். 'திரு அவை ஒரு செபக்கூட்டம்' எனும் கருப்பொருள் இன்றைய நாளுக்கான சிந்தனையாக தரப்பட்டுள்ளது. இந்நவநாளை சிறப்பிக்கும் அன்னை தெரேசா அன்பியம் மற்றும் ஆரம்ப கால இறைமக்களுக்காக மன்றாடுவோம். மற்றும் மண்கும்பாண் மற்றும் இந்து சமய உறவுகளுக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். 

இறைவார்த்தை: 

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் புனித பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது; மக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் இறைபணியாற்றுகின்றார், போலிப்போதகர்கள் மத்தியில் துணிந்துநின்றார், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராய் இருக்கத் தகுதியற்றவர் எனும்போதேல்லாம் அவர்களுக்காக செபிக்கின்றார். தூய வாழ்வு வாழ துணிந்து அழைப்பதைக் காணலாம். கொரிந்து மக்களை ஒப்புரவு பாதயில் வழிநடத்த புனித பவுல் இம்மடலை தகுந்த முறையில் வழிநடத்துவதைக் காணலாம். லூக்கா நற்செய்தியில், திரு அவையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கின்றார். இயேசுவின் சீடத்துவ வாழ்வு என்ன என்பதன் அடிப்படை தத்துவத்தை துள்ளியமாகவும், சவால்களோடும் எடுத்தியம்புவதைக் காணலாம். 

ஜுபிலி ஆண்டு

திரு அவையின் அடிப்படை உருவாக்கம், கடவுளின் முதற்படைப்பில் கிடைக்கும் ஆசீர்வாதமே. ஆணும் பெண்ணும், கணவனாக மனைவியாக ஒன்றிணைந்து ஏற்படுத்தும் உன்னதவாழ்வே. இவ்வாழ்வு படைப்பிற்கும், படைத்தவருக்கும் திறந்த முறையில் பதிலளிப்பதேயாகும் என திருத்தந்தை கோடிட்டுக் காட்டுகின்றார். கணவன் மனைவிற்கிடையில் உருவாகும் அன்பே அதன் முதல் பணியாகும். இதனால் அவர்கள் புதிய தலைமுறையை தகுதியான முறையில் உருவாக்குகின்றார்கள், செபிக்கும் திரு அவைக்கு வித்திடுகின்றார்கள். புதிய குழந்தைகளை, புதிய உலகை, புதிய திரு அவையை உருவாக்குவது இவர்களின் தார்மீகக் கடமையே. இவர்கள் அன்பை இழந்தால், அனைத்தையும் இழந்துவிடுவார்கள், அனைத்தும் இழந்து போவதற்கு காரணமாகிவிடுவார்கள். 


தூய ஆவியின் வருகைக்காக ஒன்றித்து செபித்தது, திரு அவையாக சேர்ந்து செபித்ததற்கு முதல் உதாரணமாகும். இதனைத் தொடர்ந்தே முதல் கிறிஸ்தவர்களாக, புதிய கிறிஸ்துவைத் தாங்கும் கூட்டமாக இணைந்து செபித்தமை இன்று எமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களே. எனவே, இன்றைய நாளில் திரு அவை சமூகமாக இத்திருப்பலி வழியாக செபிக்க கூடிவந்துள்ளோம், இதற்காக நன்றி கூறுவோம். எமது செபங்கள் திரு அவைக்கு தேவையானதே. எமது செபங்கள் நோயாளிக்கு ஆறுதலாகவும், ஏழையின் கண்ணீருக்கு விடையளிப்பதாகவும், துன்பபடுவோருக்கு துயர்துடைப்பதாகவும், வலிமை இழந்தோருக்கு வாழ்வாகவும், இறந்தவர்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதாகவும் அமைகின்றது. சேர்ந்து செபிப்போம், இவ்வுலகை புதிய பாதையில் அமைத்திட முன்வருவோம், இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.  


முதலாம் இறைவார்த்தை

2கொரிந்தியர் 6:14:18

நற்செய்தி இறைவார்த்தை 

லூக்கா: 14: 25-33


இறைமக்கள்மன்றாட்டு

குரு: "தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது" எனும் இயேசுவின் வார்த்தைகள் எமது கிறிஸ்தவ வாழ்விற்கு தேவையான வலிமையை அளிக்கின்றது. எமது அன்றாட செபங்கள் இவ்வுலகிற்காக எப்பொழுதும் அமைய வேண்டும். இவ் அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. பல்வேறு துன்பங்களால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. இன்றைய நாள் வழிபாட்டை சிறப்பிக்கும் அன்னை தெரேசா அன்பிய இறைமக்கள் மற்றும் இந்து சமய மக்களை அனைவரும் இறை இயேசுவின் ஆசீரையும், அருளையும் வல்லமையையும் நிறைவாக அனுபவிப்பார்களாக. தங்களது வாழ்வில் கிடைக்கும் அனைத்து செல்வங்களும் இறைவன் கொடுத்தது என நம்பவும், உறவோடும், உரிமையோடும் உம்மை அநுதினம் நேசிக்கவும் அன்பு செய்யவும் உமது அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். அன்பியங்களாக இணைது செபிக்கவும், செபத்தால் புதிய பாதை அமைக்கவும் எமக்கு வரம் அருள்வீராக. நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Thursday, 13 June 2024

கர்த்தர் கற்பித்த செபத்தின் ஆழம் காண்போம்


திருப்பலி முன்னுரை

புதிய பயணம் ஒன்றில் நாம் புதிய தூதுவர்களாய் இன்று புதிய உலகம் படைக்க கூடிவந்துள்ளோம். கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! நவநாட்களின் மூன்றாவது நாளாகிய இன்று 'கர்த்தர் கற்பித்த செபத்தின் ஆழம் காண்போம்' எனும் இறைவார்த்தையின் சிந்தனைப் பகுதி எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிக அழகிய இச்செபத்தின் ஆழம் காண எம்மை தயார்படுத்திக் கொள்வோம், தூய ஆவியின் துணைவேண்டுவோம். இன்றைய நாளை சிறப்பிக்கும் ஆறாம் வலய அன்பிய இறைமக்களை இப்பலியில் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். அத்தோடு அமதிகள் பொதுநிலையினருக்காகவும் அவர்களின் பணிவாழ்வுக்காகவும் மன்றாடுவோம். 

இறைவார்த்தை: 

சாமுவேல் இரண்டாம் நூல், அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. கடவுள் மீது தாவீதின் ஆழமான பற்று, மக்கள் தாவீது மீது கொண்ட நம்பிக்கை என்பன இந்நூலின் வலிமையை விபரிக்கின்றது. தாவீது தவறிழைக்கும் போதெல்லாம், இறைவன், நாத்தான் இறைவாக்கினர் வழியாக தனது உன்னத அன்பையும் பிரமாணிக்கத்தையும் எடுத்தியம்புவதையும் காணலாம். தாவீது கடவுளுக்கு ஓர் அழகிய கோவிலை கட்ட விரும்பியபோது அது நாத்தான் வழியாக ஆசீர்வாதமாக மாறுவதை காணலாம். மத்தேயு நற்செய்தியில் இறைவேண்டல் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கின்றார். எப்படி செபிப்பது, யாரிடம் செபிப்பது, எதற்காக செபிப்பது, செபிக்கும் போது உள்ள மனநிலை என்பன பற்றி மிக தெளிவாக எடுத்தியம்புவதை காணலாம். 

ஜுபிலி ஆண்டு:

திருத்தந்தை எமக்கு தந்துள்ள இந்த ஜுபிலி ஆண்டில், திருப்பயணம் செய்யும் எமது வாழ்வு மிக முக்கியமானது. இத்திருப்பயணத்திலே, காலத்தின் அடையாளங்களை கண்டு பயணிப்பது மிக அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றார். எம்மைச் சுற்றி நடப்பவைகள் உதாரணமாக, இயற்கை அழிவுகள், யுத்த அனர்த்தங்கள், நாளும் பல்வேறு காரணங்களால் மரணிப்பவர்கள், எமது உதவும் கரங்களுக்காக ஏங்குபவர்கள், ஒருவேளை உணவுக்காக இடைவிடாது உழைப்பவர்கள், நோயாளிகள், துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள், அகதிகள், குடும்ப வன்முறைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள் என அனைத்தும் எமது செபங்களில் தாங்கிச் செல்ல வேண்டியவைகளே. 'உமது ஆட்சி வருக' எனும் வார்த்தை சுயநல அனுபவமாக இருக்கக்கூடாது. மாறாக தன்னல மறுப்பாகவும், பிறர்நல வாழ்வாகவும் அமைய வேண்டும். இதுவே திருத்தந்தையின் கனவாகும். 

எனவே, 

இன்று, கடலலை தாலாட்டி, கவிமழை மீட்டி, மண் உயர்ந்து, மனமுயர்ந்து,  மீன்கொளிக்கும் இவ்வழகிய புரவிநகரை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். இயற்கை தரும் கொடைகளும், எம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் தரும் அன்பும், இறைவன் தரும் உன்னத கொடைகளே. 'உமது திருவுளம் மண்ணுலகில் நிறைவேறுக' என்று செபிக்கும் ஒவ்வொரு கனமும் இக்கிராமத்தின் ஆசீர்வாதமே. தாவீதைப் போல, நல்ல எண்ணங்களை, நல்ல செயல்களை இறைவன் இன்று வரவேற்கின்றார். உள்ளத்தால், உறவால் ஒன்றிணைந்தவர்களாய் இன்றைய பலியில் எம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.  


2 சாமுவேல்: 7:18-29

திருப்பாடல்: 17:1-8

மத்தேயு: 6:9-13


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: "உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை" எனும் தாவீதின் நன்றிப்பாடல் இன்று எமக்கு புதிய நம்பிக்கையை தருகின்றது. உள்ளத்தின் நன்றியின் வார்த்தைகள் எமது எண்ணங்களாக, செபங்களாக, வேண்டல்களாக உம்மிடம் எழுவதாக. எமது விண்ணப்பங்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. விண்ணுலகின் தந்தையே!  உமது அரசை உலகமெங்கும் பரப்ப தமது வாழ்வை உமக்காக அர்ப்பணிக்கும் எமது திரு அவைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். தமது பணிவாழ்வில் உம்மை மாத்திரம் தமது அர்ப்பணத்தின் முன்மாதிரிகையாக தெரிந்திடவும், கடினமாக பாதைகள் நடுவிலும், உறுதியாக பயணம் செய்யும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று,...

2. விண்ணுலகின் தந்தையே!   எமது பங்கிலே பணியாற்றும் பங்குத்தந்தை, மற்றும் இத்திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தை, குருக்கள், துறவிகள், இறைதொண்டுப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்களின் தாராள மனமும், தளராத உள்ளமும், சோர்ந்திடா உறுதியும், சீரான தீர்மானங்களும் இப்பங்கின் வளர்ச்சிக்கான படிகளே. உமது சிறகில் இவர்களை காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,...

3. விண்ணுலகின் தந்தையே!   எமது பங்கின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைக்கும் ஊதியங்களை அன்பளிப்பாக உவந்தளிக்கும் அனைத்து நன்கொடையாளிகள், நலன்விரும்பிகள் அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். இறைவா! இவர்களின் அகலவிரிந்த இதயங்களையும், தயங்கமறுக்கும் கரங்களையும் ஆசீர்வதியும். தொடர்ந்தும் இவர்களின் இவ்வழகிய அறச்செயலால் இவ்வுலகம் அழகுபெற அருள்புரிய வேண்டுமென்று,...

4. விண்ணுலகின் தந்தையே! இன்று தமது நவநாளை சிறப்பிக்கும் ஆறாம் வலய அன்பிய இறைமக்களையும், அமதிகளின் பொதுநிலையினர் சபையையும் ஆசீர்வதியும். இறை அரசுப் பணியை தமது வாழ்வாலும், வார்த்தையாலும், அறச்செயல்களாலும் ஆற்றும் இவர்கள் வழியாக எமது பங்கும், மக்களும் அனைத்து உலகும் நிறைவுபெற வேண்டுமென்று,...

குரு. வல்லமையின் இறைவா! ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே உரியன என்று உம்மை நாம் மனதாற வாழ்த்துகின்றோம். இன்று நீர் எமக்கு கற்றுத்தந்த செபத்துக்காகவும், அதன் வலிமையான அர்த்தங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். நாம் தாழ்ச்சியுடன் இன்று உம்மிடம் ஒப்படைக்கும் அனைத்து வேண்டல்களையும் ஏற்றருளும். இவைகள் எமக்கு நிறைவான அருளை பெற்றுத்தருவதாக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Wednesday, 12 June 2024

விவிலிய வாசிப்போடு செபிப்போம்


விவிலிய வாசிப்போடு செபிப்போம் 

இறைவனுக்கும் பிரியமான அன்பு உள்ளங்களே! எமது பெருவிழா ஆயத்த நாட்களின் இரண்டாவது நாளில் இன்று நாம் கால் பதிக்கின்றோம். இன்றைய நாளில் விவிலிய வாசிப்போடு செபிப்போம் எனும் அழகிய கருப்பொருள் எமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளது. இன்றைய வழிபாடுகளை இரண்டாம் அன்பிய இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். 

இறைவார்த்தை: 

புனித யாக்கோபு எழுதிய திருமுகமானது உலகிலே சிதறுண்டு வாழும் அனைத்து பன்னிரெண்டு குலத்து இஸ்ராயேல் மக்களுக்கும் எழுதப்பட்டுள்ளது. சுயநலமற்றஇ இறைவனுக்குகந்த தூய வாழ்வு வாழ இத்திருமுகம் அழைத்து நிற்கின்றது. இதயத்தில் விதைக்கப்பட்ட இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் அறிவுரையை புனித யாக்கோபு எமக்கு விடுக்கின்றார். புனித மத்தேயு எழுதிய நற்செய்தி கிறிஸ்தவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையே. எழுத்தில் எழுதப்பட்ட சட்டங்களை அல்லஇ இதயத்தில் எழுதப்பட்ட இறைவனின் வார்த்தையே வாழ்வுதரும் எனும் நம்பிக்கையை உறுதிமொழியாகக் கொடுக்கின்றார். இறைவனின் வார்த்தையே உயிர்இ அதுவே மனுவுருவாகி எம்மிடையே தங்கிய இயேசு என்று மனந்தளர்ந்துபோன கிறிஸ்தவர்களை தேற்றுவதைக் காணலாம். 

ஜுபிலி ஆண்டு:

திருத்தந்தை பிரான்சிஸ்இ இவ்வுலகத்தை இயேசுவின் அன்பினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்பதை தனது ஜுபிலி மடலிலே தெளிவுபடுத்துகின்றார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து வேதனையோஇ நெருக்கடியோஇ இன்னலோஇ பட்டினியோ நம்மை பிரிக்க முடியாது. நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவுமே பிரிக்கவே முடியாது எனும் புனித பவுலின் ஆழ்ந்த வார்த்தைகளை கோடிட்டு காட்டுகின்றர். விவிலியத்தில் இருப்பவை இறைவனின் வார்த்தையேஇ அவை அன்பைத் தாங்கும் எமது செபங்களாக மாறவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பமாகும். 

எனவே,

எம்மை தாங்கிக்கொள்ளும் இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்றுக்கொள்வோம். இறைவார்த்தையை பொருளுணர்ந்து வாசிப்பதன் வழியாய் இறைவனை அறிந்துஇ அன்புசெய்ய முடியும். இதுவே உண்மை. இதை இன்று நாம் கற்றுக்கொள்வோம். இறைவனை இலக்கணமாக படைக்கும் இவ்விவிலியம் எமது வாழ்வு எனும் நூலை எழுதுவதாக. இப்புதிய அர்த்தம் தரும் இன்றைய நாளை அவர்பாதம் ஒப்புக்கொடுத்து இப்பலியிலே மன்றாடுவோம்.  


யாக்கோபு 1:19-27

திருப்பாடல் 119

மத்தேயு: 24:32-35 

இறைமக்கள் மன்றாட்டு 

குரு: "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.” எனும் இயேசுவின் உன்னத வார்த்தைகள் எமக்கு ஓர் புதிய நம்பிக்கையின் கருவியாக அமைகின்றது. அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர்களாய் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்பின் இறைவா! உமது திரு அவையின் பணியாளர்களை ஆசீர்வதியும். உமது வார்த்தையிலே முழு நம்பிக்கைகொண்டு அதை இடைவிடாத பணியார்வத்தால் உலகெங்கும் பறைசாற்றும் உம் பணியாளர்கள் சவால்களுக்கு முகங்கொடுத்து, தீமைகளை வென்று, நன்மைகள் விதைகளாக விதைக்கும் மன தைரியத்தையும் அளித்தருள வேண்டுமென்று,... 

2. அன்பின் இறைவா! உமது வார்த்தையே எமது வாழ்வின் செபங்கள், உமது வார்த்தையே எமது வாழ்வின் பாதை என்பதை முழுமனதுடன் நம்பச்செய்தருளும். எம்மைச் சூழ்ந்து காணப்படும் அனைத்து விதமான எதிர்ப்புக்கள், தவறான போக்குகள், பிழையான தீர்மானங்கள், சூழ்ச்சிகள் என்பவை உமது வார்த்தையையை வாழாத எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பதை ஏற்றுக்கொண்டு அவற்றை விலகி வாழும் வல்லமையை அளித்திட வேண்டுமென்று,...

3. அன்பின் இறைவா! இன்றைய நாளை சிறப்பிக்கும் இரண்டாம் அன்பிய இறைமக்களாகிய எம்மை ஆசீர்வதியும். இன்றைய இறைவார்த்தை வழியாக நீர் எம் அனைவரோடும் பேசியிருக்கிறீர் என்பதை முழுமையாக நம்புகிறோம். அன்பிய இறைமக்களாக ஒன்றிப்பிலும், பகிர்விலும், அன்பிலும், விசுவாச வெளிச்சத்திலும் உம்மை கண்டுபாவிக்கும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று,...

4. அன்பின் இறைவா! எமது நாட்டிலே அசாதாரண காலநிலை மாற்றத்தால் பாதிப்புறும் அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுக்கின்றோம். அதேவேளை, வெளிநாடுகளிலே, யுத்தத்தால், அகோர வன்முறையால், பசியினால், பட்டினியினால் பாதிப்புறும் மக்களை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே இவர்களை பொறுப்பெடுத்து, உமது அன்பினால் இவர்களுக்கு மீட்பின் பாதையை காட்டியருள வேண்டுமென்று,...

5. அன்பின் இறைவா! எமது கிரமத்தை நிறைவாய் ஆசீர்வதியும். கடந்துசென்ற எமது வாழ்வுப் பாதையிலே நாம் கண்ட இழப்புக்கள், தோல்விகள், நோய்கள், எதிர்ப்புக்கள்,வீண்பழிகள் மத்தியிலும் எம்மை காத்துவந்ததற்காய் நன்றி கூறுகின்றோம். இனிவரும் காலங்களிலும் நாம் எமது குடும்ப உறவிலே நிலைத்திருக்கவும், கிறிஸ்தவ விசுவாச வாழ்விலே தளைத்தூண்றி நிற்கவும் எமது வாழ்வோடு பயணித்தருள வேண்டுமென்று,...

குரு: வல்லமையின் ஆண்டவரே! உண்மையான மனதோடு உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். நாம் பாவிகள் தான், ஆனாலும் எமக்காய் மரித்தவர் நீர், நாம் உம்மை மறந்தவர்கள் தான், ஆனாலும் நீர் எம்மை அணைத்துக் கொண்டீர். நாம் ஊதாரிகள் தான் ஆனாலும் நீர் எம் மனங்களை அறிந்து அன்புசெய்கின்றீர். பணிவோடு உம்மிடம் எம்மை ஒப்புக்கொடுக்கின்றோம். உமது அருளை எமக்கு நிறைவாய் பொழிந்தருள்வீராக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Tuesday, 11 June 2024

செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம்

 


செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! அல்லை-வெண்புரவி நகர் மீதிலே கோவில் கொண்டெழுதருளி வீற்றிருக்கும் எமது பங்கின் பகாவலரும் பதுவை நகர் புனிதருமான புனித அந்தோனியாரின் விழாவைக் கொண்டாட எம்மை ஆயத்தம்செய்யும் முதலாம் நாளில் ஒன்றுகூடியுள்ளோம். இன்று 'செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம்' எனும் கருப்பொருள் இறைவார்த்தையின் வழியில் எம்மை சிந்திக்க அழைக்கின்றது. 

இன்றைய இறைவார்த்தை; 

முதலாம் இறைவார்த்தையாக தோபித்து நூல் எமக்கு கொடுக்கப்படுகின்றது. இந்நூல் அழகிய யூத குடும்பப் பிண்ணனியை எமக்கு சித்தரிக்கின்றது. சாரா தனக்குமேல் சூட்டப்பட்ட இகழ்ச்சியை நீக்கும்படி வேண்டிக்கேட்டுக்கொண்ட செபம் கொடுக்கப்படுகின்றது. புனித லூக்கா எழுதிய நற்செய்தியில் இயேசுவை அலகை சோதித்தது பற்றி குறிப்பிடப்படுகின்றது. 

ஜுபிலி ஆண்டு:

"எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது" எனும் உரோமையருக்கு புனித பவுல் எழுதிய மடலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வார்த்தைகளைக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் ஓர் அழகிய மடலை எழுதி, 2025ம் ஆண்டை ஜுபிலி ஆண்டாக கொண்டாட அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றார். மாற்றங்களை கொணரும் இவ் ஜுபிலி ஆண்டை முழுமனதுடன் வரவேற்போம்.  இவ்வுலகை அதிகம் அன்புசெய்யவும், எமது பாவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தழும்புகள் அழிய, இரக்கதின் ஆண்டவர் துணை நிற்கவும் வேண்டி நிற்கின்றார். இவ்வுலகிலே ஏழைகளாய் இருக்கும் அகதிகள், புலம்பெயர்ந்தோர், முதியவர்கள், திருமண உறவை இழந்தவர்கள், நவின உலகிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளவர்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், யுத்தங்கள் நிறுத்தப்பட்டு, சுயநல அரசியல் அகற்றப்பட்டு, இயற்கை அன்புசெய்யப்பட்டு அமைதி தரும்  புதிய உலகம் உருவாகவேண்டி, செபிப்பதால் மாத்திரமே அதை நிறுபிக்க முடியும் என எங்களை இன்று அழைத்து நிற்கின்றார். 

எனவே, 

நாம் ஆரம்பிக்கும் இப்புதிய பயணம் செபத்தில் எம்மை அழைத்துச் செல்வதாக. இயேசு செபித்ததால் தீமைகளை கண்டுகொண்டு, அதை முறியடித்தார். செபிப்பதால் மாத்திரம் தீமைகளை கண்டுகொண்டு விலகிச் செல்லாலாம். இதயே இன்றைய நாள் சிந்தனைகள் எம்மை அழைத்துச் செல்கின்றன. செபிக்கும் குடும்பங்கள் உருவாகட்டும், செபத்தில் நிலைக்கும் உள்ளங்கள் பெருகட்டும், செபத்தால் தீமைகளை வெல்லமுடியும் எனும் தரியம் உருவாகட்டும். செபிக்கும் உள்ளங்கள் தான் விதைக்கும் நம்பிக்கையாக அமைய இன்றைய திருப்பலியில் வேண்டுவோம். 

முதலாம் இறைவாக்கு: தோபித்து 3:11-16

திருப்பாடல் 28

நற்செய்தி இறைவாக்கு: லூக்: 4:1-13

இறைமக்கள் மன்றாட்டு:

குரு: “ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை" எனும் தோபித்தின் மன்றாட்டு இறைவனை இடைவிடாது போற்றவும், தூய உள்ளத்தோடு அவரிடம் திரும்பிச் செல்லவும் எமை அழைத்து நிற்கின்றன. செபத்தினால் ஒரு புதிய வாழ்வை தொடங்கலாம் எனும் புதிய நற்செய்தி படிப்பினைக்கமைய எமது விண்ணப்பங்களை இறைவனிடம் ஒப்புக்கொடுப்போம். 

1. எமது திரு அவைப் பணியாளர்கள் தமது வாழ்வை அர்ப்பணத்தோடும், தியாகத்தோடும் இறை அரசை இவ்வுலகம் எல்லாம் பரப்ப வேண்டுமென்றும், எச்சூழ்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும், தமது செப வாழ்வை கைவிட்டுவிடாமல் இறைவனோடு ஒன்றித்திருக்கும் வல்லமையை அளித்திட வேண்டுமென்று,... 

2. நாம் எதிர்நோக்கி காத்திருக்கும் ஜுபிலி ஆண்டிலே, இவ்வுலகம் இறை நம்பிக்கையில் அதிகமாக வளரவும், இயேசுவ பின்பற்றும் உள்ளங்கள் பெருகவும், மனிதனின் உள்ளங்களை, உணர்வுகளை மதித்து அன்புசெய்யும் இதயங்கள் வளரவும், இவ்வுலகம் தேடும் அமைதி நிரந்தரமாக கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. எமது முதலாவது நவநாள் வழிபாட்டிலே, எமது இதயங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். குற்றங்களை களைந்தருளும், பாவங்களை போக்கியருளும், தீமைகளை நீக்கியருளும், இதனால் நாம் என்றும் தூய உள்ளத்தோடு உம்மைத் தேடும் அருளை எமக்கு தந்தருள வேண்டுமென்று,...

4. . எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: பல்வேறு அக, புறக் காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்கள், உடைந்துபோன குடும்பங்கள் அன்பை தொலைத்து நிற்கும் குடும்பங்கள், புரிந்துணர்வற்று தீமைகளை விதைகளாக விதைக்கும் குடும்பங்கள் அனைத்தும் செபத்தினால் தம் குடும்பங்கள் ஒன்றித்து நிலைத்திருக்க முடியும் என உறுதியாக நம்பவும், இந்நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் இருக்க இறைவன் துணைபுரிய வேண்டுமென்று, ...

5. . இன்று இத்திருப்பலியை சிறப்பிக்கும் மீனவர் சங்கத்தினருக்காக மன்றாடுவோம். தமது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பி இரவுபகலாக உழைக்கும் இக்குடும்ப தலைவர்கள் ஆசீர்வதிக்கப்படவும், நீதியோடும் நேர்மையோடும் தமது வாழ்வின் தெரிவுகளை மேற்கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று,..

குரு: அன்பின் ஆண்டவரே, இக்கிராமத்தின் பாதுகாவலராகிய புனித அந்தோனியாரை எமக்கு தந்ததற்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரை வழியாக நாம் உம்மிடம் இரஞ்சு கேட்கும் வரங்களை எமக்கு அருள்வீராக. வல்லமையின் ஆண்டவரே! இன்று நாம் ஆரம்பிக்கும் எமது ஆன்மிக பயணம் எமக்கு நிறைவைத் தருவதாக, எம் வாழ்வுக்கு அருளையும் ஆசீரையும் அளிப்பதாக. எமது உள்ளார்ந்த செப வாழ்வின் ஊடாக உம்மை என்றும் அனுபவித்திட அருள்புரிவீராக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Sunday, 9 June 2024

பொதுக்காலம் பதினொராம் ஞாயிறு வாரம்


  

திருப்பலி முன்னுரை

 'நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.'

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு இறை மக்களே! பொதுக்காலம் பதினொறாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், எமது இறை தந்தைக்கு உரிய அன்பர்களாக, மாதிரிகைகளாக, அவரின் அன்பு சீடர்களாக வாழ இறை வரம் வேண்டுவோம். 

இன்று நாம் மிக அழகான இறைவார்த்தைப் பகிர்வில் நுழைய இருக்கின்றோம். மனிதனின் இதயத்தில் இறைவனின் வார்த்தை விதைக்கப்பட்டவுடன், இறை அரசின் வளர்ச்சி எண்பிக்கப்படுகின்றது. இயற்கையின் வளர்ச்சி எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதேபோன்று வளர்ந்து மனிதனாக மாறும் குழந்தையின் மாற்றமும் எவ்வளவு அற்புதமானதாகவே அமைகின்றது. இவைகள் மனிதனின் அறிவை மிஞ்சுகின்றதே. இதையே இன்றைய இறைவார்த்தை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. மேலும், திரு அவையினூடாக, திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் ஊடாக, எமது திரு அவை புனிதர்கள் ஊடாக, இவ்வுலகில் புனிதம் படைக்கும் அனைத்து நிகழ்வுகள் ஊடாக இறை அரசு பாரிய மரம்போல  வளர்ந்து வியாப்பித்திருக்கின்றது. 'உமது ஆட்சி வருக' என்று நாள்தோறும் அழைக்கும் எமது செபங்கள் இன்னும் உயரவேண்டும். 

 எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலும் நம் இதயத்திலும் இறைவனின் அரசு வளரும் அனைத்து முயற்சிகளும் பெருகவேண்டும்.  பொறுமையை இழக்காது, மனச்சோர்வை தளர்த்தாது, நம்பிக்கையில் பயணிக்கும் அன்பு பிள்ளைகளாக மாறவேண்டும். வேற்றுமைகள், பிரிவினைகள் கடந்து, இறை அரசில் பங்குபெற அனைவரையும் அழைக்கும் மனம் வளரவேண்டும். இதற்கான வரங்களும் இறை ஆசீரும் இத்திருப்பலி வழியாக எமக்குக் கிடைக்க இறை வரம் வேண்டுவோம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும். நீரே எனக்குத் துணையாய் இருப்பீராக் என்னைத் தள்ளிவிடாதிரும்; என் மீட்பராகிய கடவுளே, என்னைக் கைவிடாதிரும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை எதிர்நோக்கி இருப்போரின் ஆற்றலானவரே, உம்மால் அன்றி வலுவற்ற எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே உம் கட்டளைகளை நிறைவேற்றி எங்கள் விருப்பத்தாலும் செயலாலும் உமக்கு உகந்தவர்களாகிட உமது அருள் உதவியைக் கனிவுடன் எங்களுக்கு என்றும் அளிப்பீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 
17: 22-24

தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.

பதிலுரைப் பாடல்: 92

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 
5: 6-10

நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்.

நற்செய்தி இறைவாக்கு

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
4: 26-34

எல்லா விதைகளையும்விடச் சிறியது. எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகிறது.

இறைமக்கள் மன்றாட்டு

குரு.  இறைவனின் பாதையில் ஒன்றித்து பயணிக்கும் நாம் எந்த தடை வரினும், சவால்கள் வரினும் இடைவிடாது இறை அரசை பரப்பிடும் அன்பர்களாக எமை அமைத்துக்கொள்வோம். அவ் இறை அரசிலே அனைத்து தேவைகள், விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லி எம் அனைவருக்காகவும் இறைவரம் வேண்டுவோம்.      

1. இறைவா! நம்பிக்கையின்  விதையை எங்களுக்குக் கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது புனித திரு அவையில் அன்பு மக்களாகவும் இறை சமூகமாகவும் வளர அருள்புரிய வேண்டுமென்று, ...

2. இறைவா! எமது கிறிஸ்தவ வாழ்க்கையை நம்பிக்கையின் விதைகளுடன் வளர்க்கவும், எம்மை எக்கணமும் கைவிடாது ஆதரவளிக்கவும், நீர் அனுப்பிய உமது பணியாளர்களாகிய, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவிகள் அனைவருக்காகவும் நன்றி கூறுகின்றோம். உமது அருளால் அவர்களின் பணியை ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

3. இறைவா! அன்பு குடும்பங்களாக, எமது நேரத்தை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பின்றி, வேலையின்றி, நிம்மதியின்றி, அமைதியின்றி அலையும் அனைத்து குடும்பங்களுக்கும் வலிமையையும், நம்பிக்கையையும் கொடும். எமது உள்ளங்கள் பேசும் அன்புமொழியைகேட்டு எமக்கு அருள்புரிய வேண்டுமென்று, ...

4. இறைவா! நீர் எமக்கு தருகின்ற ஒவ்வொரு நாளும் புனிதமானது என்பதை நாம் உணரச்செய்யும். எமது பிள்ளைகள், இளைஞர்கள் தமது வாழ்வில் கடந்துசெல்லும் அனைத்து நாட்களும், நேரங்களும் உம்மில் காணும் மகிழ்ச்சியாகவும், உண்மை உணர்வாகவும் இருப்பதாக. இவற்றை முழுநிறைவில் பயன்படுத்தும் திறனை அளித்திட வேண்டுமென்று, ...

5. இறைவா! உலகிலே நாம் காணும் அனைத்து வன்முறைகளும் அகன்று போவதாக. அமைதியை ஏற்படுத்தும் மனிதர்களும், முயற்சிகளும், அதற்கான வழிமுறைகளும் நாளும் பெருகவும், உருவாகவும் வேண்டுமென்று, ...

குரு. அன்பின் ஆண்டவரே! இன்று நாம் செல்லும் வாழ்வுப்பாதையிலே நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்கள், செயற்பாடுகள், அவநம்பிக்கைகள் அனைத்தும் அகன்றுபோவதாக. உமது அரசு எண்பிக்கும் மிக அழகான வாழ்க்கை எம்மை சூழ்வதாக. எமது குடும்பங்கள் ஆசீர்பெறுவதாக, நம்பிக்கைகொண்ட சமூகம் பெருகுவதாக.  உமது அன்பு குழந்தைகளாக நாம் நம்பிக்கையுடன் ஒப்புக்கொடுக்கும் இவ் வேண்டல்கள் உமதண்டை வந்துசேர்வதாக. எங்கள்.  

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, மக்களினத்தார் ஒப்புக்கொடுக்கும் இந்த அப்ப, இரச காணிக்கைகள் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாகவும் எங்களைப் புதுப்பிக்கும் அருளடையாளமாகவும் மாறச் செய்கின்றீர்; அதனால் இவற்றின் அருள் உதவி எங்கள் உடலுக்கும் மனதுக்கும் என்றும் குறைவுபடாமல் கிடைக்க அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன், அதையே நான் நாடித் தேடுவேன்; அதனால் ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருப்பேன். 

அல்லது

தூய தந்தையே! நீர் எனக்கு அளித்த இவர்களை உம் பெயரால் காத்தருளும்; அதனால் அவர்கள் நம்மைப் போல் ஒன்றாய் இருப்பார்களாக, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

ஆண்டின் பொதுக்காலம் 11ம் வாரம், 16.06.2024
முதல் வாசகம்: எசேக்கியேல் 17:22-24
எசேக்கியேல் புத்தகம் பபிலோனிய ,டப்பெயர்வு வாழ்வின் உணர்வுகளைக் காட்டுகிறது
என்பது வரலாற்று ஆய்வாளர்களினதும், பாரம்பரிய ஆசிரியர்களினதும் நம்பிக்கை. எசேக்கியேல்
,றைவாக்கினர், பபிலோனிய ,ராணுவத்தால் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள்
கூட்டத்தில் சிறுவனாக சென்றிருக்க வேண்டும். ,தனை ,றைவாக்கு நூலாக கிறிஸ்தவ-யூத
பாரம்பரியம் ஏற்றுக்கொண்டாலும், ,தில் திருவெளிப்பாட்டு ,லக்கிய வகை பகுதிகள் ,ருப்பதை
மறுக்க முடியாது. எசேக்கியேல் ,றைவாக்கினர் காட்சிகள் உருவகங்கள் வாயிலாக அழகாக
,றைவாக்குரைப்பார். எசேக்கியேல் புத்தகத்தின் 17வது அதிகாரம் கழுகு, திராட்சைக் கொடி, போன்ற
உவமைகளை கொண்டுள்ளது. ,ந்த அதிகாரத்தின் ,றுதி பகுதி கடவுளின் நம்பிக்கை தரும்
வாக்குறுதி என்ற பகுதியைக் தாங்கியுள்ளது.
......................................................
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 92
ஓய்வு நாள் திருப்பாடல் என ,ந்தப் பாடல் அறியப்படுகிறது. மகிழச்சியானதும்,
பக்தியானதுமான வார்த்தைகளை ,ந்த பாடல் கொண்டுள்ளது. தனி மனித புகழ்ச்சிப்பாடலான ,ந்த
பாடல், ,றைவனை புகழ்வதை மட்டுமே தன்னுடைய கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஒய்வு நாள்
கடைப்பிடிப்பு, பபிலோனிய நாட்டிலே கடுமையாக வளர்ந்திருக்க வேண்டும். உண்மையான ஓய்வு
நாள் என்பது கடவுளில் மகிழ்ந்திருப்பது அல்லது அவரைப் பற்றி சிந்திப்பது என்பதை அழகாகக்
காட்டுகிறார் ஆசிரியர். ,ந்த திருப்பாடலை முதல் மனிதன் ஆதாம் பாடினார் என்ற அழகான கதை
ஒன்று யூத மக்கள் மத்தியில் வழக்கிலிருக்கிறது. பிற்காலத்தில், ,தில் குறிப்பிடப்பட்டுள்ள ,சைக்
கருவிகளைக் கருத்தில் கொண்டு, ,தனை தாவீது எழுதினார் என்ற வாதமும் உள்ளது. கடவுளைப்
புகழ்ந்து பாடுவோம்.
...............................................................
,ரண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 5,6-10
,வ்வுலக வாழ்க்கை அழிந்ததுபோகக்கூடியது என்றாலும், அழியாத ,ல்லம் ஒன்று
வான்வீட்டில் தயாராக ,ருக்கிறது என்பதை பவுல் ,ந்த அதிகாரத்தில் அடையாளம் வாயிலாக
காட்டுகிறார். மனிதர்கள் ,ந்த உலகத்தில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டாலும், அவர்கள் வான்
வீட்டிற்காக ஏங்குகிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார். மனிதர்கள் வான்வீட்டை
உரிமையாக்க பூவுல வீட்டை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கில்லை மாறாக வான்வீட்டை முதன்மைப்
படுத்த வேண்டும் என்பதே ,ங்கு வலியுறுத்தப்படுகிறது. பவுலின் ஆழமான வார்த்தைகளுக்கு
செவிகொடுப்போம்.
..................................................
நற்செய்தி: மாற்கு 4:26-34
மாற்கு நற்செய்தியின் நான்காம் அதிகாரம் பல உவமைகளை கொண்டமைந்துள்ளது. ,ங்கே
காட்டப்படுகின்ற உவமைகள் மற்றைய நற்செய்திகளில் விளக்கமாக ஆராயப்படுகின்றன. அதிகமான
,ந்த உவமைகள் மாற்கு நற்செய்தியில்தான்
, மூலமாக உள்ளன என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
விதைப்பவர் உவமை, விளக்கு உவமை, தானாக வளரும் விதை உவமை, கடுகு விதை உவமை
போன்றவை ,ந்த அதிகாரத்தில் காட்டப்படுகின்றன. ,ன்றைய வாசகம், ,றையாட்சியை பற்றிய
படிப்பினையை நமக்கு கொடுக்கின்றது. நற்செய்தி வாசகத்திற்கு கவனமாக செவிகொடுப்போம்.

Thanks to ...
Fr. M. Jegankumar Coonghe, OMI

Saturday, 8 June 2024

பொதுக்காலம் பத்தாம் ஞாயிறு வாரம் - 09/06/2024

 


திருப்பலி முன்னுரை

 'ஆண்டவரையே நம்பியிரு பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.'

கடவுளின் அன்பாலும், அவர் எம்மேல் கொண்ட அளவற்ற பாசத்தாலும், நாம் பாவத்திலுருந்து மீட்கப்பெறவும், அவரின் எல்லையற்ற இரக்கத்தால் நாம் மன்னிப்புப் பெறவும், தம் மகன் வழியாக, அவரின் சிலுவைச் சாவின் வழியாக விடுதலை பெற்றுத்தந்த இயேசுவின் அன்புப் பலியில் கூடிவந்துள்ள என் இறைமக்களே, உங்கள அனைவரையும் இவ் அன்புப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பொதுக்காலம் பத்தாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். 

எம்மைப் படைத்த கடவுளின் அன்பு அளவுகடந்தது. நாம் தவறிழைக்கும் போதெல்லாம், அவரிடமிருந்து தவறிச் செல்லும் போதெல்லாம்,  எமது கடந்துவந்த பாதையில் நன்றியின் மனநிலையை மறந்த போதெல்லாம், வெற்றியின் உயர்வில் மதிமயங்கிப்போய் இறைவனை மறந்தபோதெல்லாம் இறைவன் எம்மை விட்டுவிலகுவதே இல்லை என்பதையே இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு உணர்த்துகின்றன. 

தீமையினால் தீமையை வெல்லமுடியாது - அது வெற்றி என்று கூறவது போலித்தனம். நாம் தீமைகளைக் கண்டு பழகிப்போய்விட்டோம், தீமை செய்வதை நியாயப்படுத்துகின்றோம், அதற்கு உடந்தையாக இருக்கின்றோம். இவைகள் எமது வாழ்வில் பிளவுகளையே ஏற்படுத்துகின்றன. இயேசு இதை, தூய ஆவிக்கு எதிரான பாவங்கள் என்றே எண்பிக்கின்றார். 

இயேசுவை அதிகமாக அன்புசெய்யும் நாம் தீமைகளோடு உடன் பயணிப்பது மிகத் தவறானதே, பொருத்தமற்றதே. திரு அவை வழியாக தமது இறை அரசை உலகமெங்கும் நிலைநிறுத்தும் இயேசுவின் அன்பர்களாக எமை மாற்றுவோம். ஒரு தனி மனிதனால் இவ்வுலகிற்கு மீட்பு கிடைத்தது போல், எம் ஒவ்வொருவரின் தனித்துவமான வாழ்க்கையால் இவ்வுலகில் அன்பை நிலை நிறுத்த முடியும், இவ்வுலகிலே தீமைக்கு எதிராகவும், தீமை செய்வோருக்கு எதிராகவும் போரிட முடியும். இவ்வுலகிலே யுத்தம் செய்வோரின் எண்ணங்கள் கொடூரமானது, இரக்கமற்றது, சுயநலம் நிறைந்தது. இந்த யதார்த்த நிலை மாறவேண்டும். எம் மக்கள் விரும்பும் வாழ்வு விடியவேண்டும். இதற்கான வரங்களை கேட்டு தொடரும் பலியில் பங்கேற்போம். 

வருகைப் பல்லவி

காண். திபா 26:1-2 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யார் முன் நான் அஞ்சி நடுங்க வேண்டும்? என் பகைவர்கள் என்னைப் தாக்கும்போது அவர்களே இடறி விழுந்தார்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன் இவ்வாறு உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றை உணரவும் உமது வழிநடத்துதலால் அவற்றையே நாங்கள் நிறைவேற்றவும் உம்மை வேண்டுவோருக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 
4: 13 - 5: 1

நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்.

நற்செய்தி இறைவாக்கு

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
3: 20-35

பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.

இறைமக்கள் மன்றாட்டு

குரு. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும் எனும் புனித பவுலின் அழகிய எண்ணங்கள் நிறைந்த வார்த்தைகளால் எமது வாழ்வில் அழகிய எண்ணங்கள் மலரவும், அருள் நிறையப்பெறவும் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.     

தூய ஆவியின் துணைகொண்டு இவ்வுலகெல்லாம் நற்செய்திப் பணியாற்றிவரும் அனைத்து திருநிலையினரும் இறை அருளால் நிறைக்கப்படவும், அவர் வல்லமையால் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, ...

எமது திருத்தந்தை, மறைமாநில ஆயர் மற்றும் அனைத்து ஆயர்களும் இவ்வுலகின் சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் முகங்கொடுத்து, தீமைகள் மத்தியில் இயேசுவின் அன்புநிறை நற்செய்தி வாழ்வின் விழுமியங்களை பறசாற்ற வேண்டிய அருளை அளித்திடவேண்டுமென்று, ...

எமது பங்கில் மற்றும் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறவற குருக்கள் துறவிகளும் தமது ஏழ்மையான, கீழ்படிவுள்ள, கற்புநிறை வாழ்வால் கிறிஸ்துவுக்கு சான்றுபகரவும், நற்செய்திக்காய் உழைக்கும் இத்துறவற வாழ்வு இன்னும் அதிகமாய் மேலோங்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

எமது பங்கிற்காக, கிராமத்திற்காக, எமது சமூகத்திற்காக பலன்களை எதிர்பாராது உழைக்கும் பல நல் உள்ளங்கள் பெருகவும், வறியோரை, இயலாமையில் இருப்போரை, ஏழைகளை, கல்விக்காக கரம் ஏந்துவோர் அனைவரையும் தாங்கும் உள்ளங்களை இறைவன் இன்னும் அதிகமாக எமக்கு தரவேண்டுமென்று,...

இந்த உலகத்திலே பெருகிவரும் வன்முறையால், மனிதம் முற்றுமுழுதாக அழிந்தும், மனித விழுமியங்கள் அவமதிக்கப்பட்டு, வாழ்வதற்கு உரிமை மறுக்கப்படும் இந்த அந்தரங்க உலகிலே, கிறிஸ்து இவ்வுலகிற்கு தரும் அன்பும் தியாகமும் இன்னும் அதிகமாக வளரவும், மனிதனை மனிதன் மதிக்கும் உள்ளங்கள் பெருகவும் இறைவன் இவ்வுலகை இன்னும் ஆசீர்வதிக்கவும் வேண்டுமென்று,...

குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் இரக்கத்துடன் உம்மிடம் வேண்டும் எமது மன்றாட்டுக்களுக்கு செவிசாயும். நாம் நிறைவுள்ளவராய் வாழவே நீர் விரும்புகின்றீர். இவ்வுலகில் பெருகும் அனைத்து தீமைகளும் எம்மைவிட்டு விலகவும், நாம் என்றும் உமது அன்பின் சிறகில் அடைக்கலம் காண அருள்புரிய வேண்டுமென்று எங்கள். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் பணியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாகி எங்கள் அன்பை வளர்ப்பதாக. எங்கள். 

திருவிருந்துப் பல்லவி

திபா 17:3 ஆண்டவர் என் கற்பாறை; என் புகலிடம்; என் மீட்பர்; என் கடவுளே எனக்குத் துணைவர்.

அல்லது

1 யோவா 4:16 கடவுள் அன்பாய் இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...