திருப்பலி முன்னுரை
'அவர் பலியாகப் படைத்த இரத்தம், அவரது சொந்த இரத்தமே. இதனால் கிறிஸ்து, நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார்.'
இன்று நாம் அனைவரும் நற்கருணைக்கு விழா எடுக்கின்றோம். கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசுவின் வல்லமையுள்ள பிரசன்னம், வெந்நிற அப்பத்தில் அவரது உடலாகவும், திராட்சை இரசத்தில் அவரது இரத்தமாகவும் காணப்படுவது உண்மையே. இந்த உலகத்திலே, நாம் வழிபடும் ஒரே கடவுளை, எமது ஐம்புலன்களால் அறியமுடியும் என்றால் அது கிறிஸ்து எமக்கு தந்த இந்த நற்கருணையிலேயே. கிறிஸ்துவின் உறுதிதரும், நம்பிக்கைதரும் வார்த்தைகளான, 'இது என் உடல், இது என் இரத்தம்; இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்பது சர்வ சாதாரண வார்த்தைகள் அல்ல. அதுவே எம்மை தெய்வீகத்தோடு இணைக்கும் வார்த்தைகள், உறவிலே உறுதிதரும் வார்த்தைகள், இறைவனை எமது இதயத்தில் தினமும் தாங்கும் வார்த்தைகள். திரு அவை வழியாக கிறிஸ்து தரும் இவ் அற்புதமான அனுபவத்திற்காக நன்றி கூறுவோம். எம்மாவுஸ் பயணத்தில், கிறிஸ்து அப்பத்தை உடைத்து கொடுத்தபோது, சீடர்களின் அகக் கண்களை இயேசு திறந்தார். ஒவ்வொரு முறையும் அப்பத்தை உடைத்துக் கொடுக்கும்போது கிறிஸ்துவின் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் எனும் உறுதிமொழியையும் விட்டுச் சென்றார்.
இதுவே எமது நம்பிக்கை. இதை மெய்பிக்கவே இன்று நாம் இந்த நற்கருணைக்கு பெருவிழா கொண்டாடுகின்றோம்.
இன்று உலகின் பல்வேறு மெய்ஞானத்தின், அறிவியலின், விஞ்ஞானத்தின், கலாசாரமயமாக்கல் மற்றும் பிரிவினைசபைகளின் வளர்ச்சிப் போக்கில் இவ்வெந்நிற அப்பத்தில் கிறிஸ்துவின் பிரசன்னம் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு, அறியாமையின் விதைகள் விதைக்கப்பட்டும் மக்களின் மனங்கள் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. எமக்கிடையே காணப்படும் பல்வேறு வகையான பிரிவுகள், பிளவுகள், போலி வாழ்க்கை, எரிச்சல், பொறாமை, அடிமைத்தனம் என அனைத்துமே இன்று உருவாக்கியிருக்கும் விபச்சார கலாசாரமும், கிறிஸ்துவின் இவ்வுண்மை பிரசன்னத்திற்கு தடைகளே, தூய்மை வாழ்வுக்கு எதிரானவையே.
இன்று நாம் பயணிக்கும் இவ் ஆபத்தான உலகத்திலே, இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் தாங்கும் இதயங்களை உருவாக்குவோம். அன்பும், தியாகமும் இதன் இரு துருவங்களாக ஏற்று வாழ்வோம். நம்மைச் சுற்றியிருக்கும் அவநம்பிக்கை தரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, கிறிஸ்துவின் நற்கருணைக்கு சான்றுபகரும் புதிய நற்கருணைப் பேளையாக மாறுவோம், இதற்கான இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 80:17 கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, இந்த வியப்புக்கு உரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.
முதலாம் இறைவாக்கு
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8
ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.
பதிலுரைப் பாடல்: 116
பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.
இரண்டாம் இறைவாக்கு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15
கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை தூய்மைப்படுத்துகிறது!
நற்செய்தி இறைவாக்கு
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26
இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், கிறிஸ்துவை உடலோடும், ஆன்மாவோடும் உண்டு பருக கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்காகவும் நன்றி கூறுவோம். எமது ஆன்மாவை அன்புசெய்யும் கிறிஸ்து தன்னை தமது மெய்யான உணவாகத் தருகின்றார். அவரிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! உமது திரு அவையை ஆசீர்வதியும். இத் திரு அவையின் வழியாக பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், இவ்வுலகை புனிதப்படுத்தும் தமது பணியில், உமது முழுமையான அன்பையும், தியாகத்தையும், பரிசுத்தத்தையும் தமது வாழ்வின் ஒளிரும் விளக்காக்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...
2. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஆயுதக் கலாசாரத்தால் வெற்றி நடைபோடும் பல நாடுகளில், அன்பை விதைக்கும் உணர்வுகளைக் கற்றுக்கொடும். பட்டினியால், பஞ்சத்தால் இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக, உதவும் கரங்களைக் கற்றுக்கொடும். மனிதனை மனிதன் மதியாது, மான்பிழக்க வழிதேடும் பொய்க் கலாசாரத்தில், பண்பை, விழுமியங்களை விதைக்கக் கற்றுக்கொடும். இதனால் அவர்கள் என்றும் உம்மை பிரதிபலிக்க அருள்புரியவேண்டுமென்று, ...
3. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஜிபிலி ஆண்டை எதிர் நோக்கிக் காத்திருக்கும் உம்மிடம் எம் அனைவரையும் ஒப்புக்கொடுக்கின்றோம். பாவத்தால், அறியாமையால், தீண்டாமையால், அதீதகோபங்களால் மூழ்கிக்கிடக்கும் எமது பூமியில், நாம் காத்திருக்கும் அமைதியும், சந்தோஷமும், நிறை ஆசீரும் இவ் ஜுபிலி ஆண்டு எமக்கு பெற்றுத்தர வேண்டுமென்று, ...
4. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! எமது நாட்டிலே, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், எமது கலை, கலாசார, பண்புகளை பெருமையோடும் வலிமையோடும், உரிமையோடும் தாங்கும் கருவிகளாக உருவாகுவார்களாக. தமது ஞானத்தால் உணமையை எடுத்துரைப்பார்களாக, தமது அறிவால் புதுமை தேடுவார்களாக, தமது நம்பிக்கையால் கிறிஸ்துவை என்றும் தாங்கவேண்டுமென்று, ...
5. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! நாம் உம்மை அதிகம் அன்பு செய்யும் பிள்ளைகளாக மாறுவோமாக. உமது உடலும் இரத்தமும் தரும் ஆன்ம சக்தி எம்மை இறுதிவரை உமது சீடராக உருவாக்குவதாக. நம் வாழ்வில் சம்பாதிக்கும் அனைத்து நன்மைகளும் உம்மை நிலைநிருத்தச் செய்யவேண்டுமென்று, ...
குரு. நற்கருணையின் ஆண்டவரே! இன்று நாம் பெருமகிழ்வோடு, நற்கருணையில் உமது உண்மைப் பிரசன்னத்தை போற்றிப் புகழ்கின்றோம். உம்மை உடலாகவும், இரத்தமாகவும் உண்னும் அரிய வாய்ப்பை எமக்கு தருவதையிட்டு பெருமைகொள்கின்றோம். நாம் உம்மை திருப்பலியில் பெற்று, உண்டு மகிழ எமக்குள் வாஞ்சையையும் ஆன்ம தாகத்தையும் தாரும். இறைவா, உண்மை உள்ளத்தோடு நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. உமது அன்பு பொங்கிவரும் ஆறாய் எம்மில் பாய்வதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமது மீட்பின் மறைபொருளைக் குறித்துக்காட்டுகின்றன் அதனால் உமது திரு அவைக்கு ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைக் கனிவுடன் தந்தருள்வீராக.
திருவிருந்துப் பல்லவி
யோவா 6:57 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன், என் கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உயர்மதிப்புள்ள உம் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் இவ்வுலகில் உட்கொள்வது உமது இறைத்தன்மையைச் சுவைத்து இன்புறுவதன் முன்னடையாள மாய்த் திகழ்கின்றது; அதனால் நாங்கள் அப்பேரின்பத்தில் என்றென்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment