திருப்பலி முன்னுரை
'நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.'
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு இறை மக்களே! பொதுக்காலம் பதினொறாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், எமது இறை தந்தைக்கு உரிய அன்பர்களாக, மாதிரிகைகளாக, அவரின் அன்பு சீடர்களாக வாழ இறை வரம் வேண்டுவோம்.
இன்று நாம் மிக அழகான இறைவார்த்தைப் பகிர்வில் நுழைய இருக்கின்றோம். மனிதனின் இதயத்தில் இறைவனின் வார்த்தை விதைக்கப்பட்டவுடன், இறை அரசின் வளர்ச்சி எண்பிக்கப்படுகின்றது. இயற்கையின் வளர்ச்சி எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதேபோன்று வளர்ந்து மனிதனாக மாறும் குழந்தையின் மாற்றமும் எவ்வளவு அற்புதமானதாகவே அமைகின்றது. இவைகள் மனிதனின் அறிவை மிஞ்சுகின்றதே. இதையே இன்றைய இறைவார்த்தை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. மேலும், திரு அவையினூடாக, திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் ஊடாக, எமது திரு அவை புனிதர்கள் ஊடாக, இவ்வுலகில் புனிதம் படைக்கும் அனைத்து நிகழ்வுகள் ஊடாக இறை அரசு பாரிய மரம்போல வளர்ந்து வியாப்பித்திருக்கின்றது. 'உமது ஆட்சி வருக' என்று நாள்தோறும் அழைக்கும் எமது செபங்கள் இன்னும் உயரவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலும் நம் இதயத்திலும் இறைவனின் அரசு வளரும் அனைத்து முயற்சிகளும் பெருகவேண்டும். பொறுமையை இழக்காது, மனச்சோர்வை தளர்த்தாது, நம்பிக்கையில் பயணிக்கும் அன்பு பிள்ளைகளாக மாறவேண்டும். வேற்றுமைகள், பிரிவினைகள் கடந்து, இறை அரசில் பங்குபெற அனைவரையும் அழைக்கும் மனம் வளரவேண்டும். இதற்கான வரங்களும் இறை ஆசீரும் இத்திருப்பலி வழியாக எமக்குக் கிடைக்க இறை வரம் வேண்டுவோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும். நீரே எனக்குத் துணையாய் இருப்பீராக் என்னைத் தள்ளிவிடாதிரும்; என் மீட்பராகிய கடவுளே, என்னைக் கைவிடாதிரும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம்மை எதிர்நோக்கி இருப்போரின் ஆற்றலானவரே, உம்மால் அன்றி வலுவற்ற எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே உம் கட்டளைகளை நிறைவேற்றி எங்கள் விருப்பத்தாலும் செயலாலும் உமக்கு உகந்தவர்களாகிட உமது அருள் உதவியைக் கனிவுடன் எங்களுக்கு என்றும் அளிப்பீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24
தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.
பதிலுரைப் பாடல்: 92
பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-10
நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்.
நற்செய்தி இறைவாக்கு
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34
எல்லா விதைகளையும்விடச் சிறியது. எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகிறது.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. இறைவனின் பாதையில் ஒன்றித்து பயணிக்கும் நாம் எந்த தடை வரினும், சவால்கள் வரினும் இடைவிடாது இறை அரசை பரப்பிடும் அன்பர்களாக எமை அமைத்துக்கொள்வோம். அவ் இறை அரசிலே அனைத்து தேவைகள், விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லி எம் அனைவருக்காகவும் இறைவரம் வேண்டுவோம்.
1. இறைவா! நம்பிக்கையின் விதையை எங்களுக்குக் கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது புனித திரு அவையில் அன்பு மக்களாகவும் இறை சமூகமாகவும் வளர அருள்புரிய வேண்டுமென்று, ...
2. இறைவா! எமது கிறிஸ்தவ வாழ்க்கையை நம்பிக்கையின் விதைகளுடன் வளர்க்கவும், எம்மை எக்கணமும் கைவிடாது ஆதரவளிக்கவும், நீர் அனுப்பிய உமது பணியாளர்களாகிய, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவிகள் அனைவருக்காகவும் நன்றி கூறுகின்றோம். உமது அருளால் அவர்களின் பணியை ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...
3. இறைவா! அன்பு குடும்பங்களாக, எமது நேரத்தை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பின்றி, வேலையின்றி, நிம்மதியின்றி, அமைதியின்றி அலையும் அனைத்து குடும்பங்களுக்கும் வலிமையையும், நம்பிக்கையையும் கொடும். எமது உள்ளங்கள் பேசும் அன்புமொழியைகேட்டு எமக்கு அருள்புரிய வேண்டுமென்று, ...
4. இறைவா! நீர் எமக்கு தருகின்ற ஒவ்வொரு நாளும் புனிதமானது என்பதை நாம் உணரச்செய்யும். எமது பிள்ளைகள், இளைஞர்கள் தமது வாழ்வில் கடந்துசெல்லும் அனைத்து நாட்களும், நேரங்களும் உம்மில் காணும் மகிழ்ச்சியாகவும், உண்மை உணர்வாகவும் இருப்பதாக. இவற்றை முழுநிறைவில் பயன்படுத்தும் திறனை அளித்திட வேண்டுமென்று, ...
5. இறைவா! உலகிலே நாம் காணும் அனைத்து வன்முறைகளும் அகன்று போவதாக. அமைதியை ஏற்படுத்தும் மனிதர்களும், முயற்சிகளும், அதற்கான வழிமுறைகளும் நாளும் பெருகவும், உருவாகவும் வேண்டுமென்று, ...
குரு. அன்பின் ஆண்டவரே! இன்று நாம் செல்லும் வாழ்வுப்பாதையிலே நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்கள், செயற்பாடுகள், அவநம்பிக்கைகள் அனைத்தும் அகன்றுபோவதாக. உமது அரசு எண்பிக்கும் மிக அழகான வாழ்க்கை எம்மை சூழ்வதாக. எமது குடும்பங்கள் ஆசீர்பெறுவதாக, நம்பிக்கைகொண்ட சமூகம் பெருகுவதாக. உமது அன்பு குழந்தைகளாக நாம் நம்பிக்கையுடன் ஒப்புக்கொடுக்கும் இவ் வேண்டல்கள் உமதண்டை வந்துசேர்வதாக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, மக்களினத்தார் ஒப்புக்கொடுக்கும் இந்த அப்ப, இரச காணிக்கைகள் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாகவும் எங்களைப் புதுப்பிக்கும் அருளடையாளமாகவும் மாறச் செய்கின்றீர்; அதனால் இவற்றின் அருள் உதவி எங்கள் உடலுக்கும் மனதுக்கும் என்றும் குறைவுபடாமல் கிடைக்க அருள்புரிவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன், அதையே நான் நாடித் தேடுவேன்; அதனால் ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருப்பேன்.
அல்லது
தூய தந்தையே! நீர் எனக்கு அளித்த இவர்களை உம் பெயரால் காத்தருளும்; அதனால் அவர்கள் நம்மைப் போல் ஒன்றாய் இருப்பார்களாக, என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.
No comments:
Post a Comment