Friday, 3 January 2025

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா - 05/01/2025

 ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா




திருப்பலி முன்னுரை

புதிய இளங்காலைப் பொழுதினிலே, இறை உள்ளங்களாக இறை சந்நிதானம் ஒன்று கூடியுள்ள என் அன்பு உறவுகளே! அன்னையாம் திரு அவை இன்றைய நாளிலே ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றாள். இதை வரலாற்றிலே, 'மூவிராசாக்கள் பெருவிழா' என்றும் அழைப்பர். கீழைத்தேய திரு அவையிலே இன்றைய நாளைத் தான் கிறிஸ்து பிறப்பின் நாளாகக் கொண்டாடுவர். இதற்கான காரணம்,  இன்றைய நாளில் தான் கிறிஸ்து எனும் இறைமகன் தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றார். 

'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' எனும் புனித மத்தேயுவின் நற்செய்தி அனுபவம், பல அர்த்தங்கள் நிறைந்த ஆழ்ந்த விளக்கங்களை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. இயேசுவை அரசராக, மாந்தர் அனைவரின் வீரனாக அடையாளம் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இயேசுவை இவ்வுலகிற்கு எண்பித்தது ஒரு புதிய விடிவெள்ளி, அதை துள்ளியமாகக் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இவர் இறை மகன் என்பதன் வெளிப்பாடு, இவர்கள் செலுத்தும் ஆராதனையும் வணக்கமுமே. 

இயேசு தன்னை தொடர்ந்தும் வெளிப்படுத்த இருக்கின்றார். இத்தொடர் வெளிப்பாட்டிலே நானும் இயேசுவைக் கண்டுகொள்ள வேண்டும். ஞானிகளைப் போல், நாம் எத்திசை சார்ந்தவர்களாகவோ, எந்நிலையில் வாழ்பவர்களாகவோ, எந்தெந்த பட்டப் படிப்புக்களை படித்தவர்களாகவோ, எவ்வகை சார்ந்தவர்களாகவோ இருந்தாலும் பரவாயில்லை. இயேசுவைக் கண்டுகொள்வதே எமது நோக்கமும் தேடலுமாக இருக்கவேண்டும். இயேசுவின் பிறப்பிற்கு கொடுக்கப்பட்ட பரிசுகள், அவர்களின் விலைமதிப்பில்லா பொன்னோ பொருளோ அல்ல, மாறாக, அவர்களின் அளவில்லா மகிழ்ச்சி நிறைந்த இதயமே. இது தான் எமது அன்பின் பரிசாக அமைய வேண்டும். இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு தொடரும் அன்பின் பலியிலே கலந்து இறைவரம் வேண்டி செபிப்போம்.


வருகைப் பல்லவி

காண். மலா 3:1; 1 குறி 28:12 இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும்

ஆட்சியும் அவரது கையிலே. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, விண்மீன் வழிநடத்த உம் ஒரே திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர் கனிவுடன் வரம் அருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை ஏற்கெனவே நம்பிக்கையால் அறிந்துள்ள நாங்கள் உமது மாட்சியின் தோற்றத்தைக் கண்டுகளிக்கும்வரை வழிநடத்தப்படுவோமாக. உம்மோடு. எங்கு நடைமுறை இருக்கின்றதோ, அங்கு தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாய்பாட்டுக்கு ஏற்ப (பக். 126 2) நற்செய்திக்குப் பிறகு நடப்பு ஆண்டின் மாறும் திருவிழாக்கள் அறிவிக்கப்படலாம்.


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


முதல் இறைவாக்கு

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;

அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!

உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி


7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;

நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;

பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி


10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;

சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.

11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்.

எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி


12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;

ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம்

உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு

குரு: ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இன்று எம்மிடம் இருப்பதை இயேசுவிக்கு காணிக்கையாகக் கொடுப்போம், எமது விண்ணப்பங்கள் விரும்பிக்கேட்கும் இறையருள்,  அவர் அளிக்கும் அன்பின் பரிசாக அமைவதாக. 

1. அன்பின் இறைவா! இயேசுவின் பிறப்பின் செய்தியை உலகமெங்கும் அறிவிக்கும் வாஞ்சைகொண்ட எம் திரு அவைப் பணியாளர்கள் என்றும் எப்பொழுதும் உம்மை தமது பணியினாலும், ஆர்வத்தினாலும் தாங்கிச் செல்லும் வாஞ்சையை அளித்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அருள் வழங்கும் இறைவா! உம்மைக் காணவேண்டும் எனும் ஆர்வத்திலே ஏங்கிக் கொண்டிருக்கும் பல உள்ளங்களுக்கு, ஞானிகள் தந்த எதிர்நோக்கும், நம்பிக்கையும் இவர்கள் உள்ளங்களுக்கு மகிழ்வை தருவதாக. தமது வாழ்வின் தேடலில், தொடர்ந்தும் இயேசுவை கண்டுகொள்ளவேண்டிய வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3.அமைதியின் இறைவா!  எமது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார  சூழ்நிலையில் மீழமுடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு, புதிய வாழ்வின் மாற்றங்கள், தீர்மானங்கள், எடுகோள்கள், புதிய வாழ்வின் பயணத்திற்கு அருள்பாலிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. நாம் வாழும் சமூகத்தில், ஆரோக்கியமான சமூக விழுமியங்கள் கட்டி எழுப்பப்படவும் ஒருவரை ஒருவர் ஏற்று, அன்புடன் தாங்கி அமைதியில் நிறைவு காணவும், எம்மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வின் நிலைகளை ஏற்று வாழவும், நாம் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான வழிகோலவும், தொழில் துறைகளை ஆசிர்வதிக்கவும், கல்வி வாழ்வை மேம்படுத்தவும், குடும்ப பொறுப்புக்களை சீரமைக்கவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும் என உமது வரங்களிலும் வல்லமையிலும் நம்பிக்கை கொண்டு உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எமது குடும்பங்களாய், பங்கு சமூகமாய், அன்பின் உறவுகளாய் எம்மை வழிநடாத்தி, அருளால் நிறைத்து ஆசித்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்க உம்மை வேண்டுகின்றோம்: பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படவில்லை; எனினும் இக்காணிக்கைகள் வழியாக இயேசு கிறிஸ்து அறிக்கையிடப்படுகின்றார், பலியிடப்படுகின்றார், உட்கொள்ளப்படுகின்றார் என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


தொடக்கவுரை: கிறிஸ்து, பிற இனத்தாருக்கு ஒளி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்தவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


ஏனெனில் பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில்

எமது மீட் பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர்;

சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது

அவருக்கு உரிய சாகாத் தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்.


ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,

அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்

வான் படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி :

காண். மத் 2:2 கிழக்கில் அவரது விண்மீனைக் கண்டோம்; ஆண்டவரை வணங்கக் காணிக்கைகளுடன் வந்திருக்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, எங்கும், எப்பொழுதும் விண்ணக ஒளியாய் நீர் எங்கள் முன் செல்ல உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பங்கேற்க வேண்டும் என நீர் விரும்பும் மறைநிகழ்வைத் தூய்மையான உள்ளுணர்வுடன் கண்டுகொள்ளவும் தகுதியான ஆவலுடன் அறிந்துகொள்ளவும் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜே. சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...