Thursday, 9 January 2025

ஆண்டவருடைய திருமுழுக்கு 12/01/2025

 ஆண்டவருடைய திருமுழுக்கு



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணையும் என் இறை உறவுகளே! உங்கள் அனைவரையும் இக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்றைய நாளிலே அன்னையாம் திரு அவை "ஆண்டவருடைய திருமுழுக்கு" திரு விழாவைக் கொண்டாடுகின்றாள். இன்றைய நாளோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவுற்று, ஆண்டின் பொதுக்காலம் ஆரம்பமாகின்றது. 

படைப்பின் தொடக்கத்திலே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருந்ததுபோல், ஆண்டவரின் திருமுழுக்கின் போதும் இதே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருப்பதைக் காணலாம். இவ் உன்னத பிரசன்னமே, இயேசுவை இறுதிவரைக்கும் வழிநடத்தியது. இயேசுவின் பணிவாழ்வின் ஆரம்பத்திற்கு ஆணிவேராகவும், அத்திவாரமாகவும் இருந்தது இந்த திருமுழுக்கு. இந்த கனப்பொழுது வரைக்கும் தான் இயேசுவின் வருகைக்கான ஆயத்தமாக திருமுழுக்கு யோவானின் பணி இருந்தது. இதிலிருந்து அவர் முன்னறிவித்த இயேசுவின் பணிவாழ்வு ஆரம்பமாகின்றது. 

இன்றைய நாளிலே, நாம் பெற்றுக் கொண்ட எமது திருமுழுக்கை நினைத்துக் கொள்வோம்; அத் திருவருட்சாதனத்தின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட கொடைகளுக்காக நன்றி சொல்லுவோம். எமது கிறிஸ்தவாழ்வு  இறை அன்பிலும், பராமரிப்பிலும், நம்பிக்கையிலும் கட்டப்பட்ட வாழ்வாக மிளிர வரம்வேண்டுவோம். நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் உரிமையோடு அவரை எம் இதயத்தில் தாங்கிக்கொள்வோம். பாவங்களை தகர்த்தெறிந்து புனித வாழ்வு வாழ இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். மத் 3:16-17 ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின் குரல் ஒலித்தது.


"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.


அல்லது

இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு


முதல் இறைவாக்கு

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5,9-11

“ ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!


1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.

2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்;

வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி


3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்;

கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்;

காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!

4 காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்;

தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். - பல்லவி


24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!

நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;

அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. - பல்லவி


27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.

28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன;

நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. - பல்லவி


29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்;

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;

மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும்

கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7

அன்பிற்குரியவரே,

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16,21-22

அக்காலத்தில்

மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு 

1. பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். அன்பின் இறைவா! இவ்வுலகின் மக்களை உமது அரியணை காணச் செய்ய, திருவருட்சாதனங்களால் அலங்கரிக்கும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும், தங்கள் பணியை நிறைவாகச் செய்ய அருள்புரிய வேண்டுமென்று, ...

2. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். அன்பின் இறைவா! திருமுழுக்கு எனும் அருட்சாதனத்தால் நாம் இறைவனை முழுமையாக அனுபவிக்கவும் அவரின் அன்பை நிறைவாக சுவைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. ஆண்டவரே, உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அன்பின் இறைவா! திருமுழுக்கின் வழியாக நீர் தந்த தூய ஆவிக்காக நன்றி சொல்கின்றோம். இவ்வுலகத்தை தமது அதிகாரத்தால், வல்லமையால் ஆளும் தலைவர்கள், இறை ஏவுதலின் வழியாக தமது தீர்மானங்கள புடமிடவும், மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

4. இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் நாளும் இறந்துகொண்டிருக்கும் உம் மக்களை கண்ணோக்கும். எமது பாவங்களை அல்ல, உமது இரக்கத்தினால் எம்மை தூய்மைப்படுத்தி நீர் தரும் மீட்பை அனுபவிக்கவும், இவ்வுலகின் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவும் வரமருள வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: ஆண்டவருடைய திருமுழுக்கு.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


வியத்தகு மறைநிகழ்வுகளால் யோர்தான் ஆற்றில்

புதிய முழுக்கினை நீர் குறித்துக் காட்டினீர்;

அதனால் விண்ணிலிருந்து வந்த குரல் வழியாக

உம்முடைய வார்த்தை மனிதரிடையே குடி கொண்டு இருப்பதை நாங்கள் நம்பச் செய்தீர்;


மேலும் தூய ஆவியார் புறா வடிவில் இறங்கியதன் வழியாக

உம் ஊழியர் கிறிஸ்துவை மகிழ்ச்சியின் எண்ணெயால் பூசி

அவரை ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியதை அறியச் செய்தீர்.


ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து

நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,

முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.


திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:32, 34 இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.

அருட்தந்தை சா. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...