Friday, 20 December 2024

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - பெருவிழா - 01/01/2025

 இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - பெருவிழா





திருப்பலி முன்னுரை 

கிறிஸ்துவுக்குள் அன்புமிக்க உறவுகளே! 2024ம் ஆண்டை நாம் ஓடிமுடித்துவிட்டோம். பன்னிரெண்டு மாதங்களுக்குள், 365 நாட்களுக்குள் எத்தனை எத்தனை ஆயிரம் அனுபவங்கள். வெற்றிகள் தோல்விகள், பிறப்புக்கள் சில உறவுகளின் இறப்புக்கள், நாம் சாதித்தவை, நம்மை விட்டு தொலைந்து சென்றவை, நாம் தவறி விழுந்தவைகள், எம்மை எழுந்து நடக்கச் செய்தவைகள்,  எம்மை உழுக்கிய அணர்த்தங்கள், இவ்வுலகை கண்ணீர் சிந்தவைத்த யுத்தங்கள், மாற்றங்கள், பிடிவாதங்கள், அதிஸ்டங்கள், எம்மை முடக்கிய நோய்கள் -  இவ்வாறு இவ்வருடம் எமக்கு விடைகொடுத்துச் செல்கின்றது. ஆனால் பிறக்கும் புதிய வருடம் 2025 எம்மை நோக்கி நகர்த்த இருக்கும் பாதைகள் அதிசயமாகட்டும். 

இன்று திரு அவை தாயானவள் "இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா" வின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள். அன்னை மரியாள் இயேசுவின் தாயாக, கடவுளின் தாயாக மாத்திரம் அல்ல; அவள் எமது திரு அவையின் தாயாகவும் இவ்வுலகிற்கான பாதுகாவலியுமாக இருக்கின்றாள். இவ்வுலகு அதன் படைப்பின் தொடக்கத்திலே ஆதிப்பெற்றோரால் காயப்பட்டு பாவநிலையால் அதன் நிலை இழந்திருந்த போதும், இவ்வுலகிலே பிறந்து, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை மரியாவின் தூய்மையால், பிரமாணிக்கத்தால், கீழ்ப்படிவால், அவளின் கற்புநிறை வாழ்வால் இவ்வுலகு இழந்ததை மீண்டும் பெறலாயிற்று. எனவே, நாம் தொடங்கும் இவ்வருடத்தை அவளின் பாதத்திலும் பாதுகாவலிலும் ஒப்புக்கொடுத்து ஆரம்பிப்போம். 

2025ம் ஆண்டு ஒரு ஜுபிலி ஆண்டே. திரு அவை முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும். அது எமக்கு தரும் அனைத்து படிப்பினைகளும் மேலும் எமது நம்பிக்கையை வளர்த்திடச் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் பலனளிக்க மன்றாடுவோம். 

2025ம் ஆண்டு எமக்கும் எமது குடும்பங்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாக அமைய மன்றாடுவோம்;  

2025ம் ஆண்டு இயேசுவை எனது வாழ்வால் சான்றுபகரும் கருவியாக நான் மாற மன்றாடுவோம்; 

2025ம் ஆண்டு இவ்வுலகம் தேடும் அமைதியின், நீதியின் இல்லிடமாக மாற மன்றாடுவோம். இப்புதிய ஆண்டிலே நாம் தனித்து அல்ல, மாறாக சேர்ந்து பயணிப்போம்; பகைமையை அல்ல, மகிழ்வையும் அன்பையும் கொடுத்து பகிர்ந்திடும் நல் உள்ளங்களாக மாறிடுவோம். இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.

அல்லது

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.


"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே; அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1ய)

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!


1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி


4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி


5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!

மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,

காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: பிறந்திருக்கின்ற புதிய வருடத்திலே ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிய வேண்டி, எமது தேவைகளை அவர் பாதம் ஒப்புக்கொடுப்போம். 


1. 'நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள'; என்று மொழிந்த இறைவா! இன்றைய உலகில் நற்செய்தி அறிவிக்க என நீர் தேர்ந்துகொண்ட உம் அடியார்களாகிய திருநிலைப் பணியாளர்களையும், பொதுநிலைப் பணியாளர்களையும், உம் கரம் தாங்கி அவர்களை ஆசீர்வதித்து, உமது சித்தப்படி அப்பணியை முழு மனதுடன் நிறைவேற்ற உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 2. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என்ற புனித பவுலின் உரைக்கல்லிற்கு ஒப்ப, அழைக்கப்பட்ட  நாம் அனைவரும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கவும், தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யவும், பொய்மை மலிந்த உலகிலே உண்மை நிலைநிற்க அதற்காக உழைக்கவும், தமது அர்ப்பணத்தால் திருஅவை வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. பிறந்திருக்கும் இப்புதிய உலகை ஆசீர்வதியும். நாம் கால்பதிக்கும் இவ்வருடம் அனைத்து ஆசீர்களையும் எமக்கு தருவதாக. தூய ஆவியின் தூண்டுதலால் நாமும் புதியவற்றையே சிந்தித்து, எமது தீய உணர்வுகளில் மாற்றங்களை காணவும், எமது சமூகத்திற்காக, புதிய தலைமுறையினருக்காக புதிய விடியலாக நம் உருவாகிட அருள்புரிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. அன்புள்ள ஆண்டவரே! பிறந்திருக்கின்ற புதிய ஆண்டிலே, எமது குடும்பங்கள், உறவுகள், சொந்தங்கள், பிள்ளைகளின் வாழ்வு, மற்றும் அவர்களின் கல்வி, எதிர்கால கனவுகள், தீர்மானங்கள், பெற்றோரின் வாழ்வாதாரங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், எமக்கு முன்பே இருக்கின்ற சவால்கள் போராட்டங்கள் மத்தியில் துணிவுடம் பயணிக்கவேண்டிய வலிமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. அன்பின் ஆண்டவரே! எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


6. அன்பும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே! இந்த நவீன உலகிலே கிறிஸ்தவ வாழ்வை சிதைக்கும் வன்முறைகள்,  துஸ்பிரயோகங்கள், கருக்கொலைகள், யுத்தங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் சீர்கேடுகளை அதிகாரத்தோடும், உரிமையோடும், தட்டிக்கேட்கவும், இதனால் பாதிப்புறும் எம் மக்களின் வாழ்வுக்கு ஒரு விடியல் கிடைத்திடவும் நீர் தேர்ந்தெடுக்கின்ற உமது மக்கள் உண்மையில் நிலைத்திடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: எங்களை எல்லாம் அன்புசெய்து வழிநடத்தும் இறைவா! உமது ஆசீர்வாதத்தால் எமக்கு நீர் தந்திருக்கின்ற இந்த புதிய ஆண்டிற்காய் நன்றி சொல்கின்றோம். எமது மனங்களை மாற்றும், புதிய மாற்றங்களை தாரும், புதிய தீர்மாங்கள் வழியாக எமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவியருளும். நாம் கடந்து செல்ல இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உமது திட்டத்தின் படி நடந்தேறுவதாக. எமது விண்ணப்பங்கள் அனைத்தையும் நீர் நிறைவேற்றி உமது அருளை எமக்கு பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.


தொடக்கவுரை: புனித கன்னி மரியாவின் தாய்மை: புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்ட வரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதும்

எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் தாய்மையின் பெருவிழாவில்

நாங்கள் உம்மைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்துவதும் மெய்யாகவே தகுதி யும் நீதியும் ஆகும்,

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆ கும்.

தூய ஆவி நிழலிட்டதால், அந்த அன்னை உம்முடைய ஒரே திருமகனைக் கருத்தாங்கி,

தமது கன்னிமையின் மாட்சியில் நிலைத்து நின்று

முடிவில்லா ஒளியான எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உலகுக்கு அளித்தார்.


அவர் வழியாகவே உமது மேன்மையை வானதூதர் புகழ்கின்றனர்;

தலைமை தாங்குவோர் உமமை வழிபடுகின்றனர்;

அதிகாரம் செலுத்துவோர் உம்திருமுன் நடுங்குகின்றனர்;

வானங்களும் அவற்றிலுள்ள ஆற்றல்களும் சேராபீன்களும் ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்:

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு

நாங்கள் உம்மைத் தாழ் மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி : எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...