பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை அன்பின் பிள்ளைகளாய் இப்பலியிலே இணைந்திருக்கும் எம் அன்பு இறைமக்களே! தூய ஆவி வழியாக கிடைக்கும் அனைத்து கொடைகள் மற்றும் வரங்களை இப்பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரம் வழியாக நாம் பெற இறைவரம் வேண்டி வந்திருக்கின்றோம்.
இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் பெறும் ஆசீர்கள் நிறைவானதே. திரு அவையிலே நாம் பலராக, பல மொழி பேசுபவராக, பல திறமைகளை கொண்டவர்களாக இருந்தாலும் நாம் ஒரே கிறிஸ்துவையே பின்பற்றுகின்றோம், ஒரே எதிர்நோக்கைக் கொண்டே வாழுகின்றோம் மேலும் ஒரே நம்பிக்கையிலே நாம் பயணிக்கின்றோம் என புனித பவுல் எமக்கு நினைவூட்டுகின்றார். நற்செய்தியில், இயேசுவின் புதுமைகளில் தண்ணீரை இரசமாக மாற்றிய புதுமை, முதற் புதுமையாக யோவான் நற்செய்தியில் தரப்பட்டுள்ளது.
நாம் மாற்றங்களை உருவாக்கும் சமுகத்தில் வாழ விரும்புகின்றோம்; அதை ஏற்படுத்தும் சக்திகளையும் உருவாக்குகின்றோம். இம்மாற்றங்கள் புறக்காரணிகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல, எனது ஆளுமையிலும் எமது சிந்தனைகளைலும் எமது ஆழமான நம்பிக்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால் தான் நாம் பல காரணங்களால் வேறுபட்டிருந்தாலும், ஒரே கிறிஸ்துவில் எம்மை ஒன்றிணைக்க வேண்டும். அன்னை மரியாள் கூறுவதுபோல 'அவர் சொல்லுவதை எல்லாம் செய்யுங்கள்' எனும் வார்த்தை எம் அனைவரையும் நடத்திச் செல்ல மன்றாடுவோம்.
மேலும், இயற்கை அணர்த்தத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வுலகின் மக்கள் அனைவரையும் இப்பலியிலே நிணைந்து அவர்களுக்காகவும் இறைவரம் கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
திபா 65:4 கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும்; உம் புகம் பாடிடும்; உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீரே; உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவார்த்தை
மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5
சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.
இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b)
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி
2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8a ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி
9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10ac வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;
ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி
இரண்டாம் இறைவார்த்தை
தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11
சகோதரர் சகோதரிகளே,
அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.
பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.
அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவார்த்தை
கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். எனவே இவ்விறைவனிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. ஆயர்களை நம்பி மந்தைகளை ஒப்படைத்து அவர்களை நேரிய, உயரிய பாதையில் நடத்த நீர் கொடுத்த குருக்கள் துறவிகள் மற்றும் அனைவரும் உமது பணியை ஏற்று திறம்படச் செய்ய அருள்புரிய வேண்டுமென்று,...
2. அன்பின் ஆண்டவரே, எமது வாழ்வுக்கு தேவையான செபத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறியவும், இதனால் உம்மேல் கொண்டுள்ள எங்கள் உறவு சிறக்கவும், எங்கள் சகோதர சகோதரிகளுடனான சிறந்த புரிதல் உருவாகவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
3. நீதியுடன் ஆட்சி செய்யும் இறைவா! நமது தலைவர்கள் அனைவரும் மிகவும் தாழ்மையுள்ளம் கொண்டவர்களாகவும் நன்மை பயக்கும் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மையாக இருக்க அருள்புரிய வேண்டும் என்று, ...
4. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று இயேசுவைக் குறித்து கூறிய அன்னை மரியைப் போல, எமது வாழ்க்கைத் தேர்வுகளில் வழிகாட்ட நல்ல பெற்றோரையும், அனைவரும் இயேசுவின் பக்கம் எமது பார்வையைத் திருப்ப நல்ல ஆசான்களையும், அவர் நம் ஒவ்வொருவருக்கும் விட்டுச்சென்ற போதனைகளை கடைப்பிடிக்கவும் கற்றுத்தரவும் சிறந்த பணியளர்களையும் எமக்கு அளித்தருள வேண்டுமென்று, ...
5. ‘கடவுள் நற்செய்தி மூலம் நம்மை அழைத்திருக்கிறார்' எனும் அழகிய சிந்தனை வழியாக, இந்த புதிய ஜுபிலி ஆண்டின் தொடக்கத்தில், நாம் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவும், கிறிஸ்துவின் வழியாக நாம் உருவாக்கப்படவும், நமது சமூகம் புதுப்பிக்கப்படவும் வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர்; நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!
அல்லது
1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்; நம்புகிறோம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment