பொதுக் காலம் ஆறாம் ஞாயிறு
முன்னுரை
(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)
இப்புதிய இளங்காலைப் பொழுதினிலே, அன்பின் உறவுகளாய், இறைவனின் பிள்ளைகளாய், அவரது பீடம் நாடி, தெய்வீகப் பலி ஒப்புக்கொடுக்க வந்திருக்கும் என் இனிய உறவுகளே. உங்கள் அனைவரையும் இயேசுவின் பெயரால் வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் ஐந்தாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். அனைத்துமே புதிதாய் பிறந்து, அனைத்திலும் புதிய வாழ்வுக்கான பாதை அமைத்திட இந்த ஞாயிறு எம்மை அழைத்து நிற்கின்றது.
விடுதலைப் பயணத்தின் தொடர்ச்சியாகவும், குருக்களுக்கான மேலும் வழிபடுவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை வரிசைப்படுத்துகின்ற நூலாகவும் லேவியர் நூல் திகழ்கின்றது. தொழுநோயாளியின் மட்டில் குருவுக்குரிய கடமை பற்றி முதலாம் இறைவார்த்தையான லேவியர் நூல் எடுத்தியம்புகின்றது. ஆன்மீக முதிர்ச்சியின்மை என்பது உரோமை மக்களின் சீர்கெட்ட நடத்தையிலே காணப்படுகின்றது என்பதைக் கண்டிப்புடன் விமர்சிப்பதையும், திரு அவை மேலுள்ள எமக்குரிய கடமை பற்றியும் புனித பவுலின் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதலாம் திருமுகத்தில் தெளிவாகக் காட்டுகின்றார். மேலும் மாற்கு எழுதிய நற்செய்தியிலே, இம்மக்கள் மேல் கொண்ட இயேசுவின் இரக்கம், அனைத்தையும் கடந்து செயலாற்றக் கூடியது என்பதை காட்டுகின்றார்.
நாம் வாழும் சமூகம், தேவையற்றைதை சேகரித்து, தேவையானதை தவறவிடுகின்றது. சுய நலனை உள்வாங்கிக்கொண்டு, பிறருக்கு உதவுவதை, இரக்கம் காட்டுவதை, அவர்களை ஆதரிப்பதை தவறவிடுகின்றது. விமர்சனங்கள் அதிகரித்து, வீண்பேச்சுக்கள் மலிவடைந்து, வாதங்கள் உருவாகிக்கொண்டே செல்கின்றது. இருப்பினும், இயேசுவின் பரிவும், இரக்கமும் எம்மை சிந்தனைக்குள் இட்டுச்செல்லவேண்டும். சங்கீத ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்' என்று அவர் பாதம் நாடிச் செல்ல இவ்வழிபாடு எம்மை அழைத்து நிற்கின்றது. இச்சிந்தனைகளை மனதில் இருத்தி தொடரும் இக்கல்வாரிப் பலியில் பங்குகொள்வோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும் அதனால் நீர் என்னை மீட்டீர் ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர் உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர் எனக்கு உணவு அளிப்பீர். திபா 30:3-4
உன்னதங்களிலே' சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடிகொள்வதாக உறுதி அளித்துள்ளீNர் எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு:
லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46
தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 11
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
இரண்டாம் இறைவாக்கு :
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 - 11: 1
நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன், நீங்கள் என்னைப்போல் நடங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா. லூக் 7: 16
நற்செய்தி இறைவாக்கு:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40- 45
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்று தொழுநோயாளியை சுகப்படுத்திய இறைவனின் வார்த்தைகள் எமக்கும் ஆறுதல் தரும் வார்த்தைகளாக அமைகின்றன. ஆண்டவர் விரும்பும் மனநிலையில், எமது விண்ணப்பங்களை திரு அவையின் தேவைகளோடு இணைத்து மன்றாடுவோம்.
1. அன்பின் ஆண்டவரே, திரு அவைப் பணியாளர்கள் அனைவருக்கும், திரு அவையின் தேவையை முழுமையாக அறியும் ஞானத்தைக் கொடும், ஏழைகளின் உள்ளத்தை அறியும் வாஞ்சையை கொடும், துயருறும் மக்களின் அழுகுரல் கேட்கச் செய்தருளும். இவ்வாறு எப்பொழுதுமே இவர்கள் தங்கள் பணி வாழ்வின் அர்ப்பணத்திற்கு சான்றுபகிர அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
2. அன்பின் ஆண்டவரே, நீதியின் பொருட்டு துயருறும் அனைவரும், உமது சிலுவையின் தியாகத்தில் பங்குபெறுவார்களாக. தமது வீழ்ச்சியில் நிறைவுகாணவும், தாழ்ச்சியில் உயர்ந்து நிற்கவும், கண்னீரில் அர்த்தம் காணவும், தமது துன்பத்தில் வெற்றியைக் கண்டுகொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
3. அன்பின் ஆண்டவரே, இவ்வுலகத்தின் வாழ்வுக்காக, திரு அவையின் வளர்ச்சிக்காக பல நிலைகளில் இருந்து பணிபுரிந்து, தமது உழைப்பால், ஊதியத்தால் உதவிகள் புரியும் நலன் விரும்பிகள் நன்கொடையாளிகள் அனைவரையும் ஆசிர்வதித்து, அவர்களின் வாழ்வு என்றும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
4. அன்பின் ஆண்டவரே, வைத்திய சாலைகளில் நோய்வாய்ப்பட்டு பல்வேறு வழிகளில் உதவிகளின்றி தவிக்கும் அனைவரையும் உமது கரமேந்தி, காத்தருள்வீராக. துன்பத்தின் வழியே சிலுவையின் வாழ்வு என்று எண்பித்த இயேசுவின் வழியில் இவர்களும் ஆறுதல் அடையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
5. அன்பின் ஆண்டவரே, எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைக்கும் அனைவரும் இறைவனின் வழிநடத்துதலையும் பராமரிப்பையும் தங்கள் வாழ்வில் உணர்ந்துகொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
குரு:: இறைவா, இன்றைய நாளுக்காக நன்றி சொல்லி எமது வாழ்வை ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எமது உள்ளத்தின் விண்ணப்பங்கள் எல்லையற்றவை இருப்பினும், உமது இறை திட்டத்தில் எம்மை அர்ப்பணிக்கின்றோம். நாம் நாளும் வளம்பெறவேண்டும், இறையன்பின் வளரவேண்டும், சகோதரத்துவத்தில் உயரவேண்டும். நீரே எமது விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து அவற்றைப் பெற்ருத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி:
காண். திபா 77:29-30: அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர் ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார் அவர்களது விருப்பம் வீணாகவில்லை.
அல்லது
யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:
ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment