புனித வியாழன் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
முன்னுரை
இறை உறவில் இதம் மகிழ இனிதே கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே!
இன்று புனித வாரத்தின் பெரிய வியாழன். வரலாறு காணமுடியாத தன் வாழ்வின் உயரிய செயலை இயேசு இன்று எமக்கு விட்டுச் செல்கின்றார். தன்னை உடைத்துக் கொடுத்து, மாதிரி காட்டிச் சென்று இரு பெரும் அருட்க்கொடைகள் வழியாக தன்னை தினமும் பலியாக்கி, பலிப்பொருளாக்கி, பலிப்பீடத்தின் வழியாக நற்கருணையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இதை என் நினைவாகச் செய்யுங்கள் எனும் இயேசுவின் வல்லமைமிகு வார்த்தைகள் இன்றும் திருப்பலியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இயேசு, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானவர், தான் அழைத்துத், தேர்ந்தெடுத்து, தன்னோடு இருக்க தம் பணிப்பொறுப்பையே கொடுத்தவர், அவர்களின் கால்களைக் கழுவி குருத்துவ அருட்கொடைக்குரிய பொருளையும் உணர்த்திவிட்டார்.
இவ் அழகிய அருட்கொடைகள் வழியாக, கிறிஸ்து இன்றும் வாழும் இறைவனாக தன்னை எண்பித்துவிட்டார், அதேவேளை இவ் இரு அருட்கொடைகள் வழியாக திரு அவை இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது, எமக்குத் தேவையாக அருட்கொடைகளும் நிறைவாகப் பொழியப்படுகின்றன. எனவே, எம் இதயத்தை நற்கருணையில் வாழும் கிறிஸ்துவின் ஆலயமாக மாற்றுவோம். அம் மகிழ்ச்சியை உலகெங்கும் பரப்பும் கருவியாக எம்மை மாற்றிக்கொள்ள வரங்கேட்போம். மேலும், தம்மை தியாகியாக்கி, தமது வாழ்வால் கிறிஸ்துவை உலகறிவிக்கும் குருக்களுக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ளவேண்டும்; அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.
"உன்னதங்களிலே" பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் "உன்னதங்களிலே" பாடும்வரை மணிகள் ஒலிக்காது.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.
இறைவார்த்தை வழிபாடு
முதல் இறைவாக்கு
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:
அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.
இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
திலுரைப் பாடல்
திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)
பல்லவி:கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.- பல்லவி
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16 ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்;
நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்;
என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.- பல்லவி
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.- பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம் யோவா 13: 34
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி இறைவாக்கு
இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15
பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மறையுரை
'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படுவதில்லை.
பாதங்கழுவும் சடங்கு
இப்பொழுது பாதம் கழுவும் சடங்கு ஆரம்பமாகின்றது. 'இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.' இப்புனித செயல், பணிவிடை பெறவன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்பதன் உள் அர்த்தத்தை எண்பிக்கின்றது. குருத்துவ அருட்சாதனத்தின் அடிநாதமாகிய இச்செயல் அதன் வழிநடக்கின்ற அனைத்து குருக்களின் தார்மிக அழைத்தலை உணர்த்துகின்றது. பக்தியோடு இச்சடங்கில் பங்கேற்போம்.
பாடல்
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
அன்பொருவருக்கொருவர் செய்வீர் - 2
சரணம்
1. தாம் உலகில் நின்று தந்தையிடம் செல்லும்
நேரம் வந்ததை அறிந்த இயேசு
தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர்
இறுதிவரையும் அன்பு கூர்ந்தார்
2. பாஸ்கா விழாவிற்கு சீடருடன் இயேசு
பந்தி இரவில் அமர்ந்தபோது
எழுந்து சீடர்களின் பாதம் கழுவி
துணியினால் அவர் துடைத்தாரே
3. போதகர் ஆண்டவர் ஆகிய நானே
சாதனை இன்றுங்களுக்களித்தேன்
நீங்களும் ஒருவர் ஒருவர் பாதங்கள்
கழுவவேண்டுமெனப்பணித்தேன்
4. உங்களுக்கே ஒரு புதிய கட்டளை
இன்று நான் கொடுக்கிறேன் இதோ
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
அன்பொருவருக்கொருவர் செய்வீர்
5. இத்தகைய அன்பு கொண்டிருந்தாலோ நீங்கள்
என் சீடரென்றெல்லோரும் அறிவர்
இவ்வாறு அன்புடன் அன்றிரவே – தம்
சீடருக்கே இயேசு பணித்தார்
6. சாகுமுன் எமக்குச் சாதகமாகவே
சோதர அன்பினையே புகட்டி
நற்கருணை மூலம் அற்புதமாய் அதை
தற்பர அன்புடன் இணைத்தாரே
இறைமக்கள் மன்றாட்டு
குரு: 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று இயேசு எம்மை அவர் சீடராக மாற அழைக்கின்றார். சீடத்துவ வாழ்வின் உயிர்நாடி, நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம்.
1. தமது குருத்துவத்தை நினைவுகூர்ந்து கொண்டாடும் அனைத்து திருநிலைப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். இயேசுவை சொந்தமாக்கிகொண்டு, அவர் பணியை சிரமேற்கொண்டு, தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து குருக்களும் இயேசுவின் அழைப்பை ஏற்று இறை மக்களுக்காகவே வாழ்ந்து, இறை அருளை இரஞ்சும் கருவிகளாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சீடர்களுக்கு மாதிரிகாட்டி ஆசிரியரும், குருவுமாக திகழும் இறைவா, எமது நாளந்த வாழ்விலே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கற்றுக்கொள்ள வரமருளும். எம்மைக் கடந்துசென்ற காலங்களில் இத்திரு அவைக்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த அனைத்து பணியாளர்களையும் நன்றியோடு நினைக்கச் செய்தருளும். இவர்களின் நம்பிக்கை வாழ்வு எமக்கு ஒரு சான்றாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது திரு அவையில் நற்கருணை மட்டில் வாஞ்சையோடும் தாகத்தோடும் தவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். ஒவ்வொரு திருப்பலியின் போதும் அருட்சாதன முறையில் உட்கொள்ளும் இயேசுவின் உடலும் இரத்தமும் எமது வாழ்வுக்கான அருமருந்தாக அமையவும், எமது நாளாந்த வாழ்வை தாங்கிக் செல்லவும், புனித வாழ்வுக்கு எம்மை அழைத்து நாளும் புதுப்பிக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இன்றைய சூழலில், மிகுந்த அச்சத்தோடும், தீராத நோவுகளோடும், முடிவில்லாத கவலையோடும் வாழும் அனைவரையும் நினைத்துக்கொள்வோம். துன்பங்கள் வாழ்வின் சுமைகளன்று, சவால்கள் அதன் எல்லைகளன்று, மாறாக இயேசுவோடு இணைந்து பயணிக்கும் அருள்கிடைக்கவும், தீமைகளை நாடிச்செல்லாத மனதை உருவாக்கி, இயேசுவின் மனநிலை கொண்டு வாழும் அருள்கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் போர்கள் நிறுத்தப்படவும், வன்முறைகள் ஒழிக்கப்படவும் மன்றாடுவோம். தனி மனித சுயநலத்தால் எமக்கு முன்பே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை இறைவன் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டுமென்று மன்றாடுவோம். நாளும் மாண்டுகொண்டிருக்கும் மனித மாண்பு காக்கப்படவும், நாம் விரும்பும் சுதந்திரம் நிலைநாட்டப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் இறைவா, நீர் நல்லவர், எமக்கு வாழ்வு கொடுப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். இன்றைய நாளில் நீர் எமக்கு தந்திருக்கும் இவ்வழகிய அருட்கொடைகளுக்காக நன்றி கூறுகின்றோம். இவைகள் வழியாக இத்திரு அவையை நிலைநாட்ட நாம் உழைப்போமாக. எமது தேவைகள், எமது விண்ணப்பங்கள் இவ்வுலகின் வாழ்வுக்கான அருளையும் ஆசீரையும் உம்மிடமிருந்து பெற்றுக்கொடுப்பதாக. இவற்றை எல்லாம் என்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் உம் திருமகன் இயேசுக் கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
நற்கருணை வழிபாடு
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.
தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்.
தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்
நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்;
மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக
முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,
தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.
எங்களுக்காகப் பலியான அவருடைய
திரு உடலை உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.
அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம்
நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - 1 கொரி 11:24-25
"இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்; புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்யுங்கள்" என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்
- திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார்.
- எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும்.
- கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது.
- எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற பணியாலர் முன்னின்று வழிநடத்துகின்றார்.
- எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார்.
- அவ்வேளையில் 'பாடுவாய் என் நாவே' அல்லது வேறு நற்கருணைப் பாடல் 'பாடப்படுகின்றது.
- நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் - தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் - நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும்.
- பின் முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது 'மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும்.
- பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.
- பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.
முன்னுரை
இப்பொழுது தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம் செய்யப்படுகின்றது. இயேசு தனது தந்தையின் விருப்பத்தை சிரமேற்கொண்டு தனது பாடுகள் மரணத்தில் பங்கேற்கின்றார். இயேசுவின் இந்த பாஸ்கா மறைபொருளை சிந்திக்க அழைக்கும் நேரமிது. விழித்திருந்து செபியுங்கள் என்று எமக்கு அழைப்புவிடுக்கும் இயேசுவின் உணர்வுகளோடு இன்று பயணிப்போம். நற்கருணையாக உடைக்கப்பட்டு இன்று எமக்காக பாடுகளை தாங்கும் இயேசுவில் எம்மையும் இணைத்து இவ்வழிபாட்டில் கலந்துகொள்வோம்.
நற்கருணை பவனிக்கான பாடல்
1. பாடுவாய் என் நாவே மாண்பு
மிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த
வயிற்றுதித்த கனியவர் தாம்
பூதலத்தை மீட்கச் சிந்தும்
விலைமதிப்பில்லாதுயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை
எந்தன் நாவே பாடுவாயே
2. அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னி நின்று
நமக் கென்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்
3. இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவரமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்கு
தம்மைத் தாமே திவ்விய உணவாய்
தம் கையாலே அருளினாரே
பவனி முடிந்த பின்பு
4. மாண்புயர் இவ்வருட் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
5. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக, ஆமென்.
No comments:
Post a Comment