Thursday, 22 August 2024

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் - 25/08/2024


பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்ணங்களோடும் இத்திருப் பீடம் நாடி வந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி ஒறாம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகளின் ஆன்மிகத்தோடு சிந்திக்க இருக்கின்றோம். 

இன்றைய முதலாம் இறைவாக்காக யோசுவா நூலில் இருந்து தரப்படுகின்றது. மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. முன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக்கருத்தாகும். அனைத்து மக்களினமும், தம்மை அழைத்துவந்த இறைவனுக்கே பணிபுரிவோம் எனும் வாக்கை உறுதிமொழியாக அளிப்பதை இன்றைய இறைவாக்கு தெளிவுபடுத்துகின்றது. புனித பவுலின் எபேசியருக்கு எழுதிய நூல், இன்றைய இரண்டாம் இறைவாக்காக  கொடுக்கப்படுகின்றது. திருமணத்தில் கணவன் - மனைவியின் உன்னத உறவை, கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையில் உள்ள உறவில் தெளிவுபடுத்துகின்றார். யோவான் எழுதிய  நற்செய்தியில், "வாழ்வு தருவது தூய ஆவியே" என்பதை ஆணித்தரமாகவும், உறுதியாகவும் கூறும் இயேசு, தனது சீடர்களின்  நம்பிக்கையையும், பிரமாணிக்கத்தையும் சோதிக்கின்றார்.

நமக்கு முன்பே தெரியும் வாழ்வு மிக சாதாரணமானது அல்ல, மிக இலகுவானதும் அல்ல. சோதனைகளுக்குள் அதிகம் சிக்கி தாடுமாறும் காலம். ஏமாற்றங்களை எதிர்பார்த்து, வெறுப்புக்களை சம்பாதித்து, சுய மரியாதைகளை இழந்து, மற்றவர்களின் கடும் சினத்திற்கு உள்ளாகும் ஒரு விசித்திர வாழ்வைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதைத்தவிர, தொலைத் தொடர்பு சாதனங்களால் சூழப்பட்டு, எது சரி எது பிழை தெரியாதமல், பிறர் பெயருக்கு பங்கம் விளைவித்தும் வாழும் இவ்வாழ்விலே,  தூய ஆவியை தொலைத்து தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

எமது இறை உறவை பலப்படுத்தவும், எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு பணிபுரியவும், திரு அவையை  அன்புசெய்து வாழவும் இறைவார்த்தை விடுக்கும் சவால் இன்று  எமக்கு கொடுக்கப்படும் அழைப்பே. நாம் இறைவனில் தொடர்ந்தும் வாழவே, தூய ஆவி எம்மை வலுவூட்டுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழியாக தூய ஆவிக்கு செவிமெடுப்போம், தூய ஆவியின் துணைவேண்டி நிற்போம், அவரின் அழைப்பில் எம்மையும் இணைத்து இப் பலியில் கலந்திடுவோம். 

வருகைப் பல்லவி   'காண். திபா 85:1

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்து, என் மன்றாட்டை. கேட்டருளும்; என் கடவுளே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள உம் ஊழியனை மீட்டருளும்; ஆண்டவரே! என் மேல் இரக்கமாயிரும் ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன்.

திருக்குழும மன்றாட்டு

நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

நாங்களும் அவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-2a,15-17,18b

அந்நாள்களில்

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது:

“ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.”

மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;

அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;

அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி


17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;

அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;

நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி


19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;

அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;

அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி


21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;

நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;

ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-32

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.

“இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்” என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில்

இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர்.

இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. இயற்கை அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக்கொண்டீரே; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15 'ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.


அல்லது

யோவா 6:54 எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என் கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி 


No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...