புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு
திருப்பலி முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் பிரியமான இறை உறவுகளே!
இன்று எமது தாய் திரு அவை அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றாள். அன்னை மரியைக் குறித்து உருவாக்கப்பட்ட கத்தோலிக்க திரு அவையின் நான்கு மறை சத்தியங்களில் இதுவும் ஒன்றாகும். திருத்தந்தை பன்னிரன்டாம் பத்தினாதர் 1950ம் ஆண்டு கார்த்திகை மாதம் முதலாம் திகதி, அன்னை மரியாள் இவ்வுலகின் வாழ்வை நிறைவுசெய்தபின், தனது உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் எனும் சத்தியத்தை பிரகடணப்படுத்தினார். இன்று நாமும் இதை முழு மனதுடனே அறிக்கையிடுகின்றோம், நம்புகின்றோம், இதையே எமது நம்பிக்கையின் வாழ்வாக மாற்றுகின்றோம்.
அன்னை மரியாவுக்கு விழா எடுத்து, அவளுக்கு அதி வணக்கம் செய்வது மிகச் சிறந்ததே. உலகெல்லாம் அன்னைக்காக விழா எடுத்து அவளின் பரிந்துரை கேட்டு மன்றாடுவது இன்று மட்டுமல்ல, திரு அவையின் தொடக்க காலத்திலிருந்தே வருகின்ற அதன் பாரம்பரியமாகும். ஆயிரம் ஆயிரம் பெயர்கள் கொண்டு, ஆயிரம் ஆயிரம் கோவில்களில் குடியிருக்கும் எமது அன்னை இன்றும் எமக்கு பாதுகாவலியே. உலகில் நடந்தேறிய யுத்தங்கள் மத்தியிலும், அணர்த்தங்கள் மத்தியிலும், நோய்கள் மத்தியிலும் குண்றா மகிமையோடு, எம் குலத்தின் தாயாக என்றும் எப்பொழுதும் பரிந்துபேசும் தாயை எமக்கு தந்த இறைவனுக்கு நன்றி கூறி இப்பலியில் எம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
உள்ளம் கலங்கி நான் உன் பாதம் நிற்கின்றேன்
உன் அருள் வேண்டி நான் உன் கண்கள் பார்க்கின்றேன்
உருண்டோடிடும் நாள்களும் நேரமும் - உன்னை மறந்ததில்லை அம்மா,
உலகத்தை நம்பும் எமக்கு - உன் உதிரம் தந்த மகனை நம்பச் செய்யும்
உண்மை இதுவே என்று எம்மை பணியச் செய்யும்
உம் திருமகன் அருள் தந்து எமைக் காக்க - என்றும் கண்விழித்து
உம் பரிந்துரை தாரும் அம்மா...
வருகைப் பல்லவி
காண். திவெ 12:1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண் மீன்களைத் தலை மீது முடியாகச் சூடியிருந்தார். அல்லது கன்னி மரியாவைப் பெருமைப்படுத்தி, விழா எடுக்கும் நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக. அவரது விண்ணேற்பில் வானதூதர் மகிழ்கின்றனர். இறைமகனைப் போற்றிப் புகழ்கின்றனர்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் அன்னையாகிய மாசற்ற கன்னி மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுத்துக்கொண்டீரே; நாங்கள் விண்ணகத்துக்கு உரியவற்றை என்றும் நாடி அவரது மாட்சியில் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 1 9a; 12: 1-6,1 0ab
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.
எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)
பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்;
ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! -பல்லவி
10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!
உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்;
உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! -பல்லவி
15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது
அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26
சகோதரர் சகோதரிகளே,
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.
எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில்
மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,
“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
1. அன்பின் ஆண்டவரே! அன்னைக்கு விழா எடுக்கும் நாம் உமது திரு அவைக்காக மன்றாடுகின்றோம். உமது உடலை தாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் உடைத்துக்கொடுத்து, நாளும் திரு அவையின் புனிதத்திற்காக உழைக்கும் உம் ஊழியர்கள், தமது எண்ணங்களில், சிந்தனைகளில், வார்த்தைகளில், செயல்களில் திரு அவைக்கு அணிசேர்க்க வேண்டுமென்று, ...
2. அன்பின் ஆண்டவரே! இன்றைய அன்னையின் விழாவில், அவளின் நிறை ஆசீருக்காக இரஞ்சி நிற்கும் உம் அடியார்கள் அனைவரும், அன்னையின் வாழ்வால் ஈர்க்கப்படவும், அவளின் அன்பால் வழிநடத்தப்படவும், அவள் காட்டும் பாதையாகிய இயேசுவில் தினமும் எமது வாழ்வை கொண்டு நடத்திட வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று, ...
3. அன்பின் ஆண்டவரே! இன்று உலகெல்லாம் போற்றும் அன்னையை எமக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். மாறிடும் உலகிலே, மாறாத உம் அன்பை தாங்கும் அன்னையின் பக்தர்கள் எம்மை கண்ணோக்கும். எமது பாவங்களை மன்னியும், எமது குற்றங்களில் இருந்து எமக்கு விடுதலை தாரும், எமது இயலாமைகள் அனைத்தையும் நீக்கும், பகைமைகளை தகர்தெறிந்திடும், உறவுகளை மதிக்க கற்றுத்தாரும், ஏழைகளை அரவணைக்க, வறியோரை ஆதரிக்க எமக்கு அருள்புரிய வேண்டுமென்று, ...
4. அன்பின் ஆண்டவரே! உலகிலே நடந்தேறும் கொடிய யுத்தங்கள் நிறைவுபெற உம் அன்னை வழியாக மன்றாடுகின்றோம். மரணங்கள் எமக்கு தேவையில்லை, அநீதிகள், பொய்மைகள், போலி வாழ்க்கைகள் எமது தொலைதூரமாகிட மன்றாடுகின்றோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் இவ்வுலகம் மதிக்கவும், அன்பு செய்யவும், அரவணைக்கவும் அன்னை எம்மை தொடர்ந்தும் தம் இதயத்தில் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இறைப்பற்றுடன் நாங்கள் அளிக்கும் காணிக்கை உம்மிடம் வந்து சேர்வதாக; விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், எங்கள் இதயங்கள் அன்புத் தீயால் பற்றியெரிந்து என்றென்றும் உம்மை நாடுவனவாக. எங்கள்.
தொடக்கவுரை: மரியாவினுடைய விண்ணேற்பின் மாட்சி.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
எனெனில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா
இன்று விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
உமது திரு அவை அடைய இருக்கின்ற நிறைவின்
தொடக்கமும் சாயலு மாக இந்த விண்ணேற்புத் திகழ்கின்றது;
இவ்வுலகில் பயணம் செய்யும் மக்களுக்கு
உறுதியான நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும்
முன்னடையாளமாகவும் அது விளங்குகின்றது.
ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச்
சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்து
அவரைப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை
நீர் கல்லறையில் அழிவுறாமல் காத்தது மிகப் பொருத்தமே.
ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி
லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளங்களில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் உயிர்ப்பின் மாட்சிக்கு வந்து சேர்வோமாக. எங்கள்.
அருட்ததை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment