Thursday, 28 March 2024

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி - 29/03/2024

 


புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும் 

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

  • மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.
  • இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.
  • சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.
  • ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.


முன்னுரை

இன்று புனித வெள்ளி. 'திருச்சிலுவை மரம் இதோ இதிலே தான் தொங்கியது, உலகத்தின் மீட்பு' என்று புனித வெள்ளியின் முழு அர்த்தத்தையும் குறித்துக் காட்டும் சிலுவை இன்று எமது வழிபாட்டின் மையமாக அமைகின்றது. இன்று விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தொங்கும் இயேசுவின் வாழ்வின் முழுமையை சிந்திக்க இருக்கின்றோம். இது தியாகத்தின் நாள், மீட்பின் நாள், தன்னைப் பலியாக்கியதன் மூலம் அவரே பலியாகவும், பலிபொருளாகவும், பலிப்பீடமாகவும் இவ்வுலகிற்கு தன் அன்பைக் காட்டிய அழகான நாள். 'தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை' (யோவா:15:13) என்று இவ்வுலகில் அன்பே தலைசிறந்தது என்று மெய்ப்பித்துக் காட்டிய அழகிய நாள். இயேசுவின் பாடுகள் எமக்கு வாழ்வின் அர்த்தத்தைக் காட்டவல்லது. அவரது இரத்தம் எமக்கு மன்னிப்பின் பானமாக மாறவல்லது. அவரது இறப்பு எமக்கு மீட்பைத் தரவல்லது. எனவே, இன்றைய வழிபாட்டில் பக்தியோடு பங்கேற்க எம்மையும் இணைத்துக் கொள்வோம். இன்றைய வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 

1. இறைவாக்கு வழிபாடு

2. திருச்சிலுவை ஆராதனை 

3. திருவிருந்து.

இயேசுவின் வார்த்தைகள் எம்மை குத்தி ஊடுறுவட்டும், இயேசுவின் அர்ப்பணம் எமது வாழ்வின் நிலைகளைத் தொடட்டும், இயேசுவின் இறப்பு எமது வாழ்வுக்கு ஆதாரமாய் அமையட்டும். இச்சிந்தனைகளோடு இவ்வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம். 

ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம்

திருப்பலிக்கு உரிய சிவப்பு நிற உடைகள் அணிந்து அருள் பணியாளரும் திருத்தொண்டர் இருந்தால், அவரும் அமைதியுடன் பீடத்தின் முன் வந்து, பீடத்துக்கு வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுவார்கள் அல்லது பொருத்தமானால் முழங்கால் பணிந்து சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவார்கள்; மற்ற அனைவரும் முழங்காலில் இருப்பர்.

மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள். பதில்: ஆமென்.

இறைவாக்கு வழிபாடு

முதலாம் இறைவாக்கு: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்  52: 13 - 53: 12

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்

பதிலுரைப் பாடல்  திபா 31

பல்லவி: 'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.'

என் இறைவா என் இறைவா 

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)


1. என்னைப் பார்ப்போர் எல்லாரும் 

என்னை ஏளனம் செய்கின்றனர் 

உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் 

ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் 

அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் 

இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்


2. ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன 

பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது 

என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் 

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் 

அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்


3. என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் 

என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள் 

ஆனால் நீரோ ஆண்டவரே 

என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும் 

எனக்கு துணையான நீர் எனக்கு 

உதவி புரிய விரைந்து வாரும்


இரண்டாம் இறைவாக்கு: எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம்      4: 14-16; 5: 7-9

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

நற்செய்திக்கு முன் வழ்த்தொலி: பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1 - 19: 42

குருத்து ஞாயிறன்று நடைபெற்றதுபோல், ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.

மறையுரை

பொது மன்றாட்டு

  • இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். 
  • இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

முன்னுரை

இப்பொழுது திருவழிபாட்டின் பொது முன்னுரை இடம்பெறும். திரு அவையில் காணப்படும் ஒவ்வொரு நிலையில் இருப்போருக்காகவும், அதன் வளர்ச்சியில் பயன்களாக அமைய இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் மன்றாடுகின்றோம். தொடக்கக் காலத்தில் இருந்தே எமது திரு அவை சந்தித்த துன்பங்கள், இழப்புக்கள், சிந்திய இரத்தத் துளிகள், போலியான, முறனான கொள்கைகள் மட்டில் போராடும் திரு அவையாகவே இதை நாம் சந்திக்கின்றோம். நாம் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் எமது மன்றாட்டுக்கள் இன்று திரு அவைக்கு அணிசேர்ப்பதாக. பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 

01. புனிதத் திரு அவைக்காக

02. திருத்தந்தைக்காக

03. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

04. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

05. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

06. யூத மக்களுக்காக

07. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

08. கடவுளை நம்பாதவர்களுக்காக

09. நாடுகளை ஆள்வோருக்காக

10. துன்புறுவோருக்காக


இரண்டாம் பகுதி திருச்சிலுவை ஆராதனை

முன்னுரை

இப்பொழுது திருச்சிலுவை ஆராதனை இடம்பெறும். அவமானத்தின் சின்னமாய் இருந்த சிலுவை இன்று ஆராதனைக்குரியதாய் மாறுகின்றது. இதுவே சிலுவை, இதிலே தான் தொங்கியது உலகத்தின் மீட்பு என்று சிலுவையை மும்முறை உயர்த்திக் காட்டி அதை உலகிற்கான விடுதலையின் சின்னமாக எண்பிக்கின்றார். குருவானவர் இச்சிலுவையை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் அனைவரும் முழந்தாற்படியிட்டு அதை ஆராதிப்பர். உயரிய மதிப்பும், ஆராதனையும் அதை முத்திசெய்யும்போது அளிப்பர். தாழ்ந்துகிடந்த எனது வாழ்வை உயர்த்திவிட்ட சிலுவை, அடிமைப்பட்டிருந்த எனது வாழ்வின் தளைகளை உடைத்தெறிந்த சிலுவை எனக்கு வாழ்வு அளிப்பதாக. முழந்தாற்படியிடுவோம். 


திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.

பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, 'திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். மக்கள் எல்லாரும், 'வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். 

பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள். இது மூன்று தடவைகள் இடம்பெறும்.


திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.


பாடல்

1. எனது ஜனமே நான் உனக்கு

என்ன தீங்கு செய்தேன் சொல்

எதிலே உனக்கு துயர் தந்தேன்

எனக்குப் பதில் நீ கூறிடுவாய்


எகிப்து நாட்டில் நின்றுன்னை

மீட்டுக் கொண்டு வந்தேனே

அதனாலோ உன் மீட்பருக்குச்

சிலுவை மரத்தை நீ தந்தாய்


நாற்பது ஆண்டுகள் நான் உன்னை

பாலைநிலத்தில் வழிநடத்தி

உனக்கு மன்னா உணவூட்டி

வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்

அதனாலோ உன் மீட்பருக்கு

சிலுவை மரத்தை நீ தந்தாய்


நான் உனக்காக எகிப்தியரை

அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை

வதைத்து ஒழித்தேன் நீயோ என்னைக்

கசையால் வதைத்துக் கையளித்தாய்


பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்

நீயோ என்னைத் தலைமையாம்

குருக்களிடத்தில் கையளித்தாய்


நானே உனக்கு முன்பாக

கடலைத் திறந்து வழி செய்தேன்

நீயோ எனது விலாவை ஓர்

ஈட்டியினாலே திறந்தாயே


மேகத்தூணில் வழிகாட்டி

உனக்கு முன்னே நான் சென்றேன்

நீயோ பிலாத்தின் நீதிமன்றம்

என்னை இழுத்துச் சென்றாயே


பாலைவனத்தில் மன்னாவால்

நானே உன்னை உண்பித்தேன்

நீயோ என்னைக் கன்னத்தில்

அடித்துக் கசையால் வதைத்தாயே


இனிய நீரைப் பாறையினின்று

உனக்கு குடிக்கத் தந்தேனே

நீயோ கசக்கும் காடியை

எனக்கு குடிக்கத் தந்தாயே


2. ஆணி கொண்ட உன் காயங்களை 

அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2


வலது கரத்தின் காயமே -2 

அழகு நிறைந்த ரத்தினமே 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது கரத்தின் காயமே -2 

கடவுளின் திரு அன்புருவே 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


வலது பாதக் காயமே - 2 

பலன் மிகத் தரும் நற்கனியே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது பாதக் காயமே - 2 

திடம் மிகத் தரும் தேனமுதே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


திருவிலாவின் காயமே - 2 

அருள் சொரிந்திடும் ஆலயமே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


  • ஆராதனை முடிவுற்றபின் திருத்தொண்டர் அல்லது பணியாளர் ஒருவர் திருச் சிலுவையைப் பீடத்தில் வைக்கும் பொருட்டு எடுத்துச் செல்கின்றார். பீடத்தைச் சுற்றியோ பீடத்தின் மேலோ திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.

திருவிருந்து

  • பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. 
  • அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். 
  • இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.
  • திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.
  • விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே செபம் சொல்லப்படுகின்றது.


நற்கருணை 

திருவிருந்துப் பாடல் 

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள். பதில்: ஆமென்.

  • அருள் பணியாளர் 'இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக' என அழைப்பு விடுக்கின்றார்.
  • பின் அருள்பணியாளர் மக்களை நோக்கி நின்றவாறு, அவர்கள்மீது தம் கைகளை விரித்து, பின்வரும் மன்றாட்டைச் சொல்கின்றார்:

ஆண்டவரே, தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில் உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக் அவர்கள் ஆறுதல் அடைவார்களாக் புனித நம்பிக்கை வளர்வதாக் நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள். பதில்: ஆமென்.

  • கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

Fr. S. James Suren OMI

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...