பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்ணங்களோடும் இத்திருப் பீடம் நாடி வந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி ஒறாம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகளின் ஆன்மிகத்தோடு சிந்திக்க இருக்கின்றோம்.
"மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்" எனும் இறைவனின் வார்த்தை இன்றைய முதலாம் இறைவார்த்தையில் உரக்க ஒலிக்கின்றது. இறைவாக்கினர் எசாயா அறிவிக்கும் இறைவனின் வார்த்தைகள் மிக ஆழமானதே! “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்” எனும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் வார்த்தைகள் எமக்கான அழகிய அழைப்பாக அமைகின்றன. லூக்கா நற்செய்தியும் எமது தனிப்பட்ட வாழ்வைக் குறித்து சாடுகின்றார், சவால்விடுகின்றார்.
நமக்கு முன்பே தெரியும் வாழ்வு மிக சாதாரணமானது அல்ல, மிக இலகுவானதும் அல்ல. சோதனைகளுக்குள் அதிகம் சிக்கி தாடுமாறும் காலம். ஏமாற்றங்களை எதிர்பார்த்து, வெறுப்புக்களை சம்பாதித்து, சுய மரியாதைகளை இழந்து, மற்றவர்களின் கடும் சினத்திற்கு உள்ளாகும் ஒரு விசித்திர வாழ்வைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதைத்தவிர, தொலைத் தொடர்பு சாதனங்களால் சூழப்பட்டு, எது சரி எது பிழை தெரியாதமல், பிறர் பெயருக்கு பங்கம் விளைவித்தும் வாழும் இவ்வாழ்விலே, தூய ஆவியை தொலைத்து தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
எமது இறை உறவை பலப்படுத்தவும், எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு பணிபுரியவும், திரு அவையை அன்புசெய்து வாழவும் இறைவார்த்தை விடுக்கும் சவால் இன்று எமக்கு கொடுக்கப்படும் அழைப்பே. நாம் இறைவனில் தொடர்ந்தும் வாழவே, தூய ஆவி எம்மை வலுவூட்டுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழியாக தூய ஆவிக்கு செவிமெடுப்போம், தூய ஆவியின் துணைவேண்டி நிற்போம், அவரின் அழைப்பில் எம்மையும் இணைத்து இப் பலியில் கலந்திடுவோம்.
வருகைப் பல்லவி 'காண். திபா 85:1
ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்து, என் மன்றாட்டை. கேட்டருளும்; என் கடவுளே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள உம் ஊழியனை மீட்டருளும்; ஆண்டவரே! என் மேல் இரக்கமாயிரும் ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன்.
திருக்குழும மன்றாட்டு
நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21
ஆண்டவர் கூறியது:
மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி
2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13
சகோதரர் சகோதரிகளே,
தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?
இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.” அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30
அக்காலத்தில்
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:
“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.
ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:
இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்
நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று
3. இயற்கை அணர்த்தத்தினால் யுத்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்
துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று
4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக்கொண்டீரே; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண். திபா 103:13-15 'ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.
அல்லது - யோவா 6:54
எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என் கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி