பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே!
இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவர் தரும் ஆன்மிக உணவை உண்டு, அவர் இரத்தத்தில் பருகி எமது வாழ்வை புதுப்பித்துக்கொள்ள ஒன்றுகூடிவந்துள்ளோம். ஒவ்வொரு திருப்பலியும் என்னையும் இறைவனையும், என்னையும் அயலவரையும், என்னையும் இவ் இயற்கையையும் இணைக்கும் ஓர் ஊடகமே. தன்னை தாழ்த்தி வந்த இயேசுவிடம், எம்மையும் தாழ்த்தி அவர் ஆசீரையும் வல்லமையையும் இரஞ்சி நிற்போம்.
இன்றைய இறைவார்த்தைகள் வாழ்வின் நிலையான பாடத்தை எமக்குக் கற்றுத்தருகின்றன. வாழ்வை சுருக்கி அதை ஞானக் கண்களோடு கற்றுக்கொள்வோமானால் இவைகள் அனைத்துமே வீண் என முன்மொழியும் விவிலிய ஆசிரியர்கள் எமது ஆன்மாவுக்கான எமது தேடல் உறுதியாகவும், நிலையாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இவ் இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, இவ்வுலகத்திலே, கடவுளை மீறி மனிதனின் அறிவும், அவனது திறமையும், அவனது ஆசைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உணர்வுக்கும் அவர்களது இருப்புக்கும் உரிமைகொண்டாடும் இவ்வுலகில், அதன் நோக்கம் தவறிப்போவதை அறியாது, இறைபராமரிப்பில் நம்பிக்கை கொள்ளாது, கடவுளுக்குக் கூட இடங்கொடாது வாழும் போது, இவ்வுலகும் வீண்தான். இருப்பினும் மனமாற்றத்திற்கு எப்பொழுதும் இடமுண்டு. இதன் மத்தியில் நாம் எங்கே? என்பதை இன்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இயற்கைச் சட்டத்திற்கு எதிராக செல்லும் அனைத்து மனிதனும் இறைவனுக்கு எதிராகவே செயற்படுகின்றனர்;
எது சரி, பிழை என அறிய விரும்பாத அனைவரும், இறைவன் பேசும் குரலை தொலைத்துவிடுகின்றனர்; உடலை விற்று, எதிர்காலம் தொலைத்து ஆன்ம பசியைத் தொலைத்து வாழும் பலருக்கு இயேசு ஒரு சிலை தான்; இயேசுவே என் வழி என்று நாம் செல்லும் பதை இன்று ஆரம்பமாகட்டும், ஒவ்வொரு நாளும் நான் தேடும் உயிருள்ள உணவாகட்டும். எம்மை கருவில் இருந்து உருவாக்கி, உயிராக்கி, உலகறிய காட்டிய இயேசுவை என்றும் எம் வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். இதற்காக வரம்கேட்டு இப்பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
கடவுளே! எனக்குத் துணை யாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை ; நீரே என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
உழைத்துச் சேர்த்த சொத்தை,
அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2; 2: 21-23
வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.
ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ் நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
அக்காலத்தில்
கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, ‘என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. கருணையின் இறைவா! உமது திரு அவையை ஆசீர்வதியும். இறை நம்பிக்கை இழந்து, பொய்மையை உண்மையாக மாற்றி உழைத்திடும் மக்கள் மத்தியில் இயேசுவை உலகறிய கொண்டுசெல்ல உழைக்கும் திரு அவையின் பணியாளர்களை நீர் தாங்கிச்செல்லவும் வழிநடத்தவும் வேண்டுமென்று,...
2. கருணையின் இறைவா! திவ்ய நற்கருணையில் வீற்றிருந்து, ஆன்ம உணவாக எம் இதயத்தில் வருவதற்காய் உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். திருமுழுக்கு பெற்ற அனைத்து மக்களும் இதன் ஆழத்தை உணர்ந்து வாழவும், உம் வழியாக உண்மை வாழ்வுக்கு செல்லும் வழியை நாளும் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று,...
3. கருணையின் இறைவா! எமது திருநாட்டில் எமது மக்களின் கண்ணீரையும், உள்ளத்து உணர்வுகளையும், முடங்கிக் கிடக்கும் எதிர்கால கனவுகளையும் நீர் கண்ணோக்கும். அரசியல் மாற்றங்களாலும், அதிகார அடக்குமுறைகளாலும், அலட்சியபோக்குகளாலும், பொருளாதார கெடுபிடிகளாலும் அவதிப்ப்படும் எம் மக்கள் அனைவர் உள்ளத்திலும் மாற்றங்கள் நிகழவும், நம்பிக்கையும், துணிவும் நாம் அனைவரும் சம்பாதிக்கும் விளைநிலங்களாகிட அருள்புரிய வேண்டுமென்று,...
4. கருணையின் இறைவா! அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் நலனுக்காக உழப்பவர்கள் அனைவரும் நேர்மையையும் உண்மையையும் அணிகலனாகக் கொண்டு உழைக்கவும், பணம் பதவிக்காக அல்ல, மக்கள் அனைவரும் தேடும் மகிழ்ச்சியையும், அமைதியையும் இவர்கள் தமது உழைப்பால் பெற்றுக் கொடுத்திட வரமருளவேண்டுமென்று,...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - சா.ஞா. 16:20
ஆண்டவரே, எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.
அல்லது - யோவான் 6:35
வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது ; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக. எங்கள்.
அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment