பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் என்றும் இணைந்திருக்கும் என் இனிய உள்ளங்களே! உங்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு அழைத்து நிற்கின்றோம். பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், இறை அனுபவம் பெற்று, இறை திட்டத்தில் இணைந்து, புதிய வாழ்வுக்கான பாதையில் எம்மையும் இணைத்திட நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய இறைவார்த்தைகள் மீண்டும் இயேசுவில் இணைந்திடும் வழியையே காண்பிக்கின்றன. இயேசுவில் உறுதியாக பற்றிக்கொண்டு அவரில் இணைந்து வாழும் வழியை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வுலகத்தில் காணப்படும் சமுக நடைமுறைச் சட்டங்கள், உலக போக்குகள், உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், எம்மைச் சுற்றி நாம் அமைத்திருக்கும் குறுகிய வட்டங்கள், எம்மை சிந்திக்க விடாமல் எம் எண்ணங்களை, எமது சிந்தனைகளை எமது வாழ்வையுமே கட்டுப்படுத்தும் இன்றைய சமுக தொடர்புசாதனங்கள், சினிமாக்கள், சின்னத்திரைகள், எமது அநாகரிக தொடர்பாடல்கள் மேலும் எமது சாதி வரம்புகள் எல்லாமே இன்றைய இயேசுவின் வார்த்தையில் உடைக்கப்பட்டு, மீளவே சிந்திக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றது. உலகத்திற்கு இவைகள் ஒரு வகை ஊந்துதலாயினும், இயேசுவை பின்பற்றும் எமக்கு இவைகள் ஒரு சவாலே. "என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" என்று இயேசுவை நாளும் சுவைக்கும் நாம் இவற்றைக் கடந்து தான் சிந்திக்கவேண்டும்.
ஆகவே, இன்றைய பலியிலே நாம், இயேசுவின் உடலும் இரத்தமும் தரும் வாழ்வுக்கான பாதையை அமைக்க மன்றாடுவோம். அவர் இன்றும் எம்மை அன்பு செய்கின்றார் என்பதை இன்றும் நாம் நாளும் கொண்டாடும் திருப்பலி வழியாக எண்பிக்கின்றார். அவாரோடு இணைந்திருப்போம், அவர் மொழி கற்றிடுவோம், அவரையே உண்டு, பருகி வாழ்ந்திட, வாழ்வித்திட இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - திபா 83:10-11
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் தி செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோலி, முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10
அந்நாள்களில்
தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.
அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, “என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.
அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். -பல்லவி
2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;
சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்;
கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்;
என் காலடிகளை உறுதிப்படுத்தினார். -பல்லவி
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்;
பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். -பல்லவி
17 நானோ ஏழை; எளியவன்;
என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்;
நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே,
எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4
சகோதரர் சகோதரிகளே,
திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இறைமக்கள் மன்றாட்டு
1. வல்லமையுள்ள இறைவா! ஆன்ம தாகம் தீர்க்கவே நீர் உம்மை எமக்கு உணவாக தந்தீர். உம்மை உண்டு, பருகி வாழ்ந்திடும் நாம் எமது புனிதத்தை நாளும் வளர்த்திடச் செய்யும். இதற்காக உமது உடலை உடைத்துத் தரும் உம் பணியாளர்கள் உம்மை என்றும் நேசித்து, அவ் அன்பை எம்மோடும் எம் அயலவரோடும் பகிர்ந்துவாழ செய்தருள வேண்டுமென்று, ...
2. வல்லமையுள்ள இறைவா! இவ்வுலகத்தை இயக்குபவர் நீரே, அதை பராமரிக்கச் செய்பவரும் நீரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இன்று பல்வேறு நாடுகளில் இடம்பெறும் அனர்த்தங்கள், அழிவுகள், விபத்துக்கள் மத்தியில் எம் மக்களை கண்ணோக்கிப் பாரும். தொடர்ந்தும் எங்களை பாதுகாரும், இன்னல்கள் மத்தியில் வழிநடத்தும். நாமும் உம்மை அன்புசெய்வது போல் இவ் இயற்கையையும் அன்புசெய்யக் கற்றுத்தர வேண்டுமென்று, ...
3. வல்லமையுள்ள இறைவா! ஜுபிலி ஆண்டில் பயணிக்கும் நாம், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து உம்மிடம் மன்றாடுகின்றோம். எமது திரு அவையை கறையின்றி பாதுகாத்தருளும், பொய்மைமிகு பேதகங்கள் மத்தியில் அதை வழிநடத்தும், உம் மந்தையாகிய மக்களின் ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுசெல்லும் வழியில் அதற்காக உழைக்கும் அனைவரையும் உமது அன்பால் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...
4. வல்லமையுள்ள இறைவா! எமது குடும்பத்திற்காக மன்றாடுகின்றோம். நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எமது பாசமிகு பெற்றோர்கள் என்றும் எப்பொழுதும் உம்மால் அன்புசெய்யப்படவும் அவர்கள் தொழில்துறைகள் அனைத்தும் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுகின்றோம். இவர்களை மதிக்கும், அன்புசெய்யும், இவர்களுக்காக செபிக்கும் நல்ல பிள்ளைகள் உருவாகவும், புதிய தலைமுறை உருவாக நல் விழுமியங்களையும் இவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - திபா 129:7
இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
அல்லது யோவா 6:51-52
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment