Wednesday, 16 July 2025

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் 10/08/2025

 பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் 


திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்து, இறை பலியில் கலந்து இறை அருளைப் பெற கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் நிலைவாழ்வு தரும் உணவிலே எம்மை உள்ளத்து தூய்மையோடும், உண்மை உணர்வோடும் பங்கேற்க இன்றைய நாள் அழைத்து நிற்கின்றது. 

"ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்" எனும் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து வரிகள் அனுபவ வரிகளாக, ஆழமான எண்ணங்களாக, தெளிவான வார்த்தைகளாக அனைத்து இறைவார்த்தைப் பகுதிகளையும் ஒன்றிணைத்து கொடுக்கப்படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களாகியும் இயேசுவை, எம் இறைவனை, திருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய அவரை நாம் உண்மை உண்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றோம்  என்றால் நாம் பெறுபெற்றவர்களே. 

இயேசுவை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அவரே எம் வாழ்வு, அவரே நம் உயிர் என அனைத்தையும் அவருக்காகவே வாழ்ந்திடும் வாழ்வை கொண்டிருக்க இன்றைய இறைவார்த்தைகள் எம்மை அழைக்கின்றன. நாம் வாழும் இவ் அழகிய வாழ்விலே, மறைந்திருக்கும் அதிசயங்களில் ஒன்று இந்த இயேசுவே. இந்த இயேசுவை நாம் தொட்டுப் பார்க்கவும், சுவைத்துப் பார்க்கவும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நுகர்ந்து பார்க்கவும் முடியும் என்றால், நான் இயேசுவையே அணிந்துகொள்ளும் அழகிய கருவியாக மாறுகின்றேன். என்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வோம், நற்கருணையின் சாயல் என் வாழ்வு முழுவதும் மிளிர்ந்திட மன்றாடுவோம். இயேசு என்னை அன்புசெய்வது மாத்திரம் அல்ல, நானும் அவரை உண்டு, அவரில் என்னை மாற்றிக்கொள்ளவும் மன்றாடுவோம். 

இவ் அழகிய சிந்தனைகளுடன் தொடரும் இப்பலியில் முழுமையாக பங்கேற்று இறைவரம் வேண்டி நிற்போம். 


வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும் உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை நாடும் குரலை மறவாதேயும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9

எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.


1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்;

நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;

அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். -பல்லவி


18 தமக்கு அஞ்சி நடப்போரையும்

தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;

அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி


20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-19

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-12

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 24: 42,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப் படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


அல்லது குறுகிய வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. நற்கருணையின் ஆண்டவரே! உம்மை தம் அபிஷேக கரங்களால் அர்ச்சித்து, இவ்வுலகின் ஆன்ம உணவாக நாளும் அளிக்கும் எம் குருக்கள், இக்குருத்துவத்தின் உன்னத மேன்மையை உணர்ந்து, தமது தகுதியின்மையிலும், தகுதியாக அழைத்த இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், திரு அவையின் சிறந்த மேய்ப்பர்களாக திகழ்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...


2. நற்கருணையின் ஆண்டவரே! நம்பிக்கை இழந்து, திரு அவையின் கோட்பாடுகளை எதிர்த்து, உம்மையே மறந்து வாழும் மக்களின் அறியாமையை கண்ணோக்கும். உம்மை உணவாக உண்ணும் பாக்கியம் இழந்துபோகும் இவர்களுக்கு, நீரே உன்னதர், நீரே தூயவர், நீரே வாழ்வளிப்பவர் என்பதை தமது உள்ளார்ந்த நம்பிக்கையாக கொண்டு வாழ வரமளித்தருள வேண்டுமென்று, ...


3. நற்கருணையின் ஆண்டவரே! இஸ்ராயேல் மக்களின் வாழ்வு முழுவதிலும் உமது உடனிருப்பும், பிரசன்னமும் இருந்தது போல, இன்று நாம் சந்திக்கும் அனைத்து விதமான போராட்டங்களிலும், துயரங்களிலும், தீமைகளிலும் எம்முடனிருந்து எம்மை நேரிய வழியில் நடத்திட வேண்டுமென்று, ...


4. நற்கருணையின் ஆண்டவரே! எமது பங்கின் ஆன்ம வழிநடத்தல் வழியாக, எமது மறைமாவட்டத்தின் உயரிய நோக்கத்தின் வழியாக, இன்றும் எம்மை அன்பு செய்து பராமரித்து வருகின்றீர். இதற்காக உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். தமது வாழ்வையே உமது நோக்காக, திரு அவையின் உயரிய க்கொள்கையாக கொண்டு வாழும் எம் ஆயர், குருக்கள், துறவறத்தார் மேலும் தன்னார்வ பாணியாளர்கள் அனைவருக்கும் உமது அன்பையும், ஆசீரையும், பாதுகாப்பையும் கொடுத்து வழிநடத்தவேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்தப் பல்லவி 

எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக! நான் அளிக்கும் உணவு வழி மரபினர் வாழ்வதற்கான எனது சதை, என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக, எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...