Friday, 28 February 2025

தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 05-03-2025

 தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 05-03-2025



முன்னுரை

நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். 

என் அன்புக்கினிய இறைமக்களே! வழிபாட்டுக் காலங்களில் ஒரு புதிய காலமாகிய தவக்காலத்தினை இன்று ஆரம்பிக்கின்றோம். திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகும் இக்காலம் எம்மை புதிய பாதையில் வழிநடத்த அழைக்கின்றது. 'மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்' என்று ஒவ்வொருவர் நெற்றியிலும் சாம்பலை பூசி கொடுக்கப்படும் இவ் அழைப்பு எம் ஒவ்வொருவர் இதயத்தின் ஆழத்திற்குச் சென்று ஊடுறுவிப் பார்த்து, கிறிஸ்துவின் பாடுகளோடும், மரணத்தோடும் மேலும் அவர் உயிர்ப்போடும் ஒன்றித்து பயணிக்கவும் அழைக்கின்றது. 

தனது சாயலாக பாவனையாக எம்மைப் படைத்தவர், எமது இதயத்தையே அதிகம் அன்புசெய்யும் இறைவனாக இருக்கின்றார். ஏனெனில், 'அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்;' எனவே, இன்றிலிருந்து நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எமது இதயத்தின் வெளிச்சமாக இருப்பதாக. 

இதயத்தின் மனமாற்றம் இல்லாத ஒவ்வொரு மனிதனும்  இவ்வுலகத்தின் தீமைகளை நயவஞ்சமாக பரப்பிக்கொண்டே இருக்கின்றான். யுத்தங்களை தொடுத்தும், உரிமைகளை பறித்தும், பணத்தால் அடிமையாகியும், ஆயுதக் கலாசாரத்தை அலங்கரித்தும், மனிதனின் இயற்கைச் சட்டத்தை மீறி திருமணத்தை இல்லாமலே ஆக்குகிறான். இவ்வளவு கொடூரங்களை புரியும் இம்மானுடம் மனமாற வேண்டும், எம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்துத் தீமைகளும் தகர்த்தெறியப்பட வேண்டும். பாவங்கள் அனைத்துமே கிறிஸ்துவின் உயிர்ப்பில் அழிக்கப்பட்டு இவ்வுலகம் புதுப்பிக்கப்பட இத் தவக்காலத்தை பயனுள்ள ஒரு காலமாக மாற்றுவோம். 

நாம் இன்று ஒப்புக்கொடுக்கும் இப் இப்பலியில் இவ் அனைத்து விண்ணப்பங்களுக்காகவும் மன்றாடுவோம். இறைவன் விரும்பும் எம் இதயத்திற்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இறைவன் ஆசீர்வதிக்கவும், அதற்கான பாதைகளை அமைத்துத் தரவும் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி      காண். சாஞா 11:24, 25, 27

ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

1ம் இறைவாக்கு

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம்  2: 12-18

நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?

சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.

ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?

அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்  திபா 51

பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;

உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;

என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி


3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;

என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4a உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;

உம் பார்வையில் தீயது செய்தேன். -பல்லவி


10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;

உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;

உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி


12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;

தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;

அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி


2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்..

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           திபா 95

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.


நற்செய்தி இறைவாக்கு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

அக்காலத்தில்,

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."


திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்


அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.

இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் ஓ அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள். பதில் : ஆமென்.

அல்லது

இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் † புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.


ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது: மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

அல்லது

நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: ஆண்டவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; ஆகவே, நாம் ஆரம்பிக்கும் இப்புதிய வாழ்வுக்கான நிறையாசீர் கேட்டு மான்றாடுவோம்.

1. உங்கள் முழு இதயத்தோடு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.

எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! இன்று உம்மிடம் திரும்பி வர, திருந்த்தி வர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதியும். இம்முயற்சியின் வெளிச்சத்தை எமக்கு காண்பிக்கும் அனைத்துத் திரு அவைப் பணியாளர்களும் எம்மை நிறைவான பாதையில் வழிநடத்த அருள்புரிய வேண்டுமென்று, ...

2. ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நீர் ஒருவரே எமக்கு மன்னிப்பளிப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை நினைத்து, மனமுருகி, அதற்காக மன்னிப்புக் கேட்கின்றோம். இத் தவக்காலத்தின் ஊடாக எம்மை தூய்மைப்படுத்தி முழுமனிதனாக்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நாம் தவங்கள் புரிந்திடவும், செபங்களில் எம்மை அதிகம் ஈடுபடுத்திடவும், எமது பாவத்திற்காக பரிகாரம் தேடிடவும்  இத் தவக்காலத்தை ஓர் அருளின் காலமாக எமக்கு தந்தருளினீரே! எம்மை தியாகம் செய்து உமது பாடுகளின் பாதையில் எம்மையும் இணைத்துப் பயணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். 

எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! வெளிவேட உலகிலே வாழும் நாம், எமது இதயத்தை தூய்மைப்படுத்த உழைப்போமாக. எமது ஆன்மீகக் கடமைகளில் பிரமாணிக்கமாய் இருக்கவும், எமது ஒறுத்தல் முயற்சிகளால் எமக்கும், இவ்வுலகின் மீட்புக்காகவும் எம்மை அர்ப்பணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

5. ஆண்டவர், அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; 

எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நாம் தொடங்கும் இப் புதிய காலம் எமக்கடுத்திருப்பவர் மீதான அன்பை ஆழப்படுத்துவதாக. பகைமையை மறந்து, பழிப்புரைகளை தவிர்த்து, சந்தேகங்களை விலக்கி, எமது பார்வையை தூய்மைபப்டுத்துவோமாக. இதனால் நாம் பேசும் வார்த்தைகளால், எமது எண்ணங்களால், புதிய உறவு மலர அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: 'தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்' என்று எம்மை தேற்றும் இறைவா. இன்று புதிய காலத்தை ஆரம்பிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து நாம் உமது அருள்வேண்டி இரந்து கேட்கும் விண்ணப்பங்களை இரக்கத்துடன் எமக்கு பெற்றுத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக் இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி காண். திபா 1:2-3

ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Saturday, 22 February 2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாரம் - 02/03/2025

 பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாரம் 



திருப்பலி முன்னுரை 

இயேசு எனும் ஆதவன் கதிர்விரிக்க, இதயம் எனும் மலர்விரித்து மணம் பரப்பி இப்பலியிலே ஒரே சங்கமமாக கூடி வந்திருக்கும் எம் இறை உறவுகளே! பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாரத்தில் நாம் இன்று நுழைகின்றோம். புலர்ந்திருக்கும் இப்புதிய மாதமும் எமக்கு இன்னும் அதிக நலன்களையும், வரங்களையும் பெற்றுத் தரவேண்டும் என்றும் மன்றாடுவோம். 

இன்றைய இறைவார்த்தைகள் இன்று எமக்குத் தரும் படிப்பினைகள் மிக அழகானது, ஆழமானது. நாம் பலவீனர்களாக இருந்துகொண்டு, பாவங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, எதிர்ப்புணர்வுகளையும், எதிர்மறை எண்ணங்களையும் தாங்கிக் கொண்டு மற்றவர்களை விரல்கொண்டு சுட்டிக் காட்டுவது கிறிஸ்துவைப் பின்பற்றும் எமது விழுமியங்கள் அல்ல என்று கிறிஸ்து எடுத்துரைக்கின்றார். எமது உள்ளத்தை கிறிஸ்துவின் உள்ளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் அன்பினாலும் இரக்கத்தினாலும் மன்னிப்பினாலும் மாத்திரமே உருவாக்க முடியும். "ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது" எனும் புனித பவுலின் வார்த்தைகள் எமக்கு ஒரு புதிய எதிர்நோக்கைத் தருகின்றது. 

எனவே, நாம் எம்மை உருவாக்கிக் கொள்ளவேண்டும், எம்மை புதிதாய் மாற்றிக் கொள்ளவேண்டும். இவ் உலகிலே ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தங்கள், அடக்குமுறைகள், துஸ்பிரயோகங்கள், கொலைகள், இயற்கைச் சிந்தனைகளுக்கு அப்பால் தென்படும் புதிய மாற்றங்கள், நவீனம் எனும் அலையில் எமது நம்பிக்கைக்கான கேள்விகள் அனைத்துமே மனித இதயத்தில் இருந்து எழும் தீமைகளே. "இச் சோதனைகளுக்கு உட்படாமல்" இருந்து எம்மை இறை அருளால் வழிநடத்த வேண்டிய அருளைக் கேட்டு இப் பலியிலே மன்றாடிக் கொள்வோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 17:19-20 

ஆண்டவர் என்னைக் காப்பாற்றுபவரானார்; நெருக்கடியிலிருந்து அவர் என்னை வெளிக் கொணர்ந்தார்; அவர் என்னை விரும்பியதால் அவர் என்னை விடுவித்தார்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வுலக நிகழ்வுகளை உமது அமைதியின் வழியில் நீர் நெறிப்படுத்து உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது திரு அவை அமைதியான இறைப்பற்றில் மகிழ்ந்திருக்க அருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.


1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே!

உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.

2 காலையில் உமது பேரன்பையும்

இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. -பல்லவி


12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;

லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.

13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்

நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். -பல்லவி


14 அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்;

என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;

15 ‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை;

அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-58

சகோதரர் சகோதரிகளே,

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?” பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி! எனவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி பிலி 2: 15-16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு 

1. 'நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்' என்று மொழிந்த இறைவா! இன்றைய உலகில் நற்செய்தி அறிவிக்க என நீர் தேர்ந்துகொண்ட உம் அடியார்களாகிய திரு நிலைப் பணியாளர்களையும், பொது நிலைப் பணியாளர்களையும், உம் கரம் தாங்கி அவர்களை ஆசீர்வதித்து, உமது சித்தப்படி அப்பணியை முழு மனதுடன் நிறைவேற்ற வேண்டிய உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார் எனும் புனித பவுலின் அனுபவம் நிறைந்த வார்த்தைகளை ஏற்று, ஓநாய்களிடையே ஆடுகள் போல் தீமைகள் மத்தியில் தியாகிகளாக, சவால்கள் மத்தியில் வீரர்களாக, துணிந்து அழைப்பை பெற்று குருக்களாக, துறவிகளாக, மறைப்பணியாளர்களாக வெவ்வேறு நாடுகளில் பணியாற்றும் அனைவரையும்  இறைவன் தொடர்ந்தும் ஆசீர்வதிக்கவும் தனது வல்லமையால் இவர்களை வழிநடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என்ற புனித பவுலின் உரைக்கல்லிற்கு ஒப்ப, அழைக்கப்பட்ட அனைவரும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கவும், தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யவும், பொய்மை மலிந்த உலகிலே உண்மை நிலைநிற்க அதற்காக உழைக்கவும், தமது அர்ப்பணத்தால் திருஅவை வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நாம் வாழும் சமூகத்தில், ஆரோக்கியமான சமூக விழுமியங்கள் கட்டி எழுப்பப்படவும் ஒருவரை ஒருவர் ஏற்று, அன்புடன் தாங்கி அமைதியில் நிறைவு காணவும், எம்மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வின் நிலைகளை ஏற்று வாழவும், நாம் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான வழிகோலவும், தொழில் துறைகளை ஆசிர்வதிக்கவும், கல்வி வாழ்வை மேம்படுத்தவும், குடும்ப பொறுப்புக்களை சீரமைக்கவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. அன்பும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே! இந்த நவீன உலகிலே கிறிஸ்தவ வாழ்வை சிதைக்கும் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், கருக்கொலைகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் சீர்கேடுகளை அதிகாரத்தோடும், உரிமையோடும், தட்டிக்கேட்கவும், இதனால் பாதிப்புறும் அனைத்து மக்களின் வாழ்வுக்கு ஒரு விடியல் கிடைத்திடவும் நீர் தேர்ந்தெடுக்கின்ற உமது மக்கள் உண்மையை அறிந்து செயற்படவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உமது பெயருக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இறைப்பற்றுள்ள பணியின் காணிக்கைகளை நீரே எங்களுக்கு அளித்துள்ளீர்; அதனால் இப்பலியிலிருந்து நாங்கள் உம் பேறுபயன்களை அடைவதோடு முடிவில்லாக் கைம்மாற்றையும் பெற்றிடக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். திபா 12:6 

எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; 'உன்னதரான ஆண்டவரது பெயரைப் போற்றிப் பாடுவேன்.


அல்லது - மத் 28:20

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த அருளடையாளத்தால் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Sunday, 16 February 2025

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வாரம் - 23/ 02/ 2025

 பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

இறை உறவில் இணைந்து இன்றைய பலியில் வழியாக இறைவரம் வேண்டி கூடி வந்திருக்கும் என் இனிய உறவுகளே! உங்கள் அனைவரையும் இக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். 

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வரத்தில் பயணிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகள் புதிய அர்த்தம் நிறைந்த வாழ்வின் விழுமியங்களை கற்றுத்தருகின்றது. நாம் எமக்காகவும் எமது சுயநல வாழ்வுக்காக சம்பாதிக்கும் அனைத்து நலன்களையும் கடந்து, பிறருக்காகவும், அவர்களது வளர்ச்சிக்காகவும், அவர்களில் நாம் கொள்ளும் அன்பையும் இரக்கத்தையும் கற்றுத்தருகின்றன. எமது தீர்ப்புக்கள், எமது குற்றச்சாட்டுக்கள், அநீதி கூறும் வார்த்தைகள் என அனைத்தும் தவிர்க்கப்பட்டு, அன்பு எனும் உன்னத போர்வையால் அனைவரையும் அரவணைக்கும் பாடத்தையும் வாழ்வின் எடுகோள்களையும் கற்றுத்தருகின்றன. 

எனவே, தூய ஆவியின் பிள்ளைகளுக்கு உரிய இயல்புகளோடு சிந்திப்போம்; இயேசுக் கிறிஸ்து காட்டிச் சென்ற பாதை கடினமானதாய் இருப்பினும் அது தெளிவானதாகவும், உயர்வானதாகவும் இருப்பதால், அதைப் பின்பற்ற வேண்டிய அருளைக் கேட்டு மன்றாடுவோம். இயேசுவின் கண்களோடு இவ்வுலகையும் எம் உறவுகளையும் காண்போம்; அவர் எண்ணங்களையும், சிந்தனைகளையும் சிரமேற்கொண்டு வாழ்ந்துகாட்ட இக் கல்வாரிப் பலியில் வரம்கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி - திபா 12:6 

ஆண்டவரே, நான் உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்தேன்; உமது மீட்பில் என் இதயம் அக்களித்தது; எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் என்றும் நேரியவற்றை எங்கள் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு உகந்தவற்றையே சொல்லாலும் செயலாலும் நிறைவேற்ற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23

அந்நாள்களில்

சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன், அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவரது ஈட்டி தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக் குத்தப் போகிறேன்” என்றான். ஆனால் தாவீதுஅபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.

அவ்வாறே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டபின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவும் இல்லை; அறியவும் இல்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பின்பு தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின்மீது நின்றார். அவர்களுக்கிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. தாவீது மறுமொழியாக, “அரசே, உம் ஈட்டி இதோ உள்ளது; இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டுபோகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கவில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.


1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி


3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;

உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;

அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி


8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;

நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;

நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி


12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ,

அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல்

ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். -பல்லவி


இரண்டாம்  இறைவாக்கு

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49

சகோதரர் சகோதரிகளே,

முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி - யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

  நற்செய்தி இறைவாக்கு

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இறைமக்கள் மன்றாட்டு

1. விண்ணுலகின் தந்தையே!  உமது அரசை உலகமெங்கும் பரப்ப தமது வாழ்வை உமக்காக அர்ப்பணிக்கும் எமது திரு அவைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். தமது பணிவாழ்வில் உம்மை மாத்திரம் தமது அர்ப்பணத்தின் முன்மாதிரிகையாக தெரிந்திடவும், கடினமாக பாதைகள் நடுவிலும், உறுதியாக பயணம் செய்யும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று,...

2. விண்ணுலகின் தந்தையே!   எமது பங்கிலே பணியாற்றும் பங்குத்தந்தை,  குருக்கள், துறவிகள், இறைதொண்டுப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்களின் தாராள மனமும், தளராத உள்ளமும், சோர்ந்திடா உறுதியும், சீரான தீர்மானங்களும் இப்பங்கின் வளர்ச்சிக்கான படிகளே. உமது சிறகில் இவர்களை காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,...

3. விண்ணுலகின் தந்தையே!   எமது பங்கின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைக்கும் மற்றும் ஊதியங்களை அன்பளிப்பாக உவந்தளிக்கும் அனைத்து நன்கொடையாளிகள், நலன்விரும்பிகள் அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். இறைவா! இவர்களின் அகலவிரிந்த இதயங்களையும், தயங்கமறுக்கும் கரங்களையும் ஆசீர்வதியும். தொடர்ந்தும் இவர்களின் இவ்வழகிய அறச்செயலால் இவ்வுலகம் அழகுபெற அருள்புரிய வேண்டுமென்று,...

4. விண்ணுலகின் தந்தையே! உலக அமைதிக்காக மன்றாடுகின்றோம். இவ்வுலகில் தீமைகளை பரப்பி, எதிரிகளை உருவாக்கி, பகைமையை விதைக்கும் இக்காலத்தில், இறை உணர்வை பரப்பவும், பாவத்தில் இருந்து மீண்டுவரவும், அன்பை நிலை நாட்டவும், அயலவரை மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் ஒரு புதிய வழிக்கான மாற்றுக் கலாசாரம் உருவாகிட அருள்புரிய வேண்டுமென்று,... 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மறைநிகழ்வுகளை உரிய முறையில் கொண்டாடும் நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது மாட்சியின் மேன்மைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலி எங்கள் மீட்புக்கும் பயன்படுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி - திபா 9:2-3

வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்; உம்மில் அகமகிழ்ந்து அக்களிப்பேன். உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.

அல்லது - யோவா 11:27

ஆண்டவரே, நீரே உலகிற்கு வந்த வாழும் கடவுளின் மகனாகிய மெசியா என நம்புகிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இம்மறைநிகழ்வுகளின் வழியாக கிறிஸ்துவினுடைய மீட்பின் பிணையைப் பெற்றுக்கொண்டுள்ளோம்; இதன் பயனாக நாங்கள் அவருடைய மீட்பின் பயனைத் துய்த்துணர அருள் புரிவீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரரஜா, அமதி 


Thursday, 13 February 2025

நன்றிச் செபம்

நன்றிச் செபம் 



அன்பும் பரிவிரக்கமும் உள்ள இறைவா!

படைப்புக்களை நீர் உமது ஞானத்தினாலும் வார்த்தையினாலும் உண்டாக்கி

அவற்றை நீர் நல்லது எனக் கண்டுகொண்டீர், அதை வளப்படுத்த மனிதனை

உண்டாக்கினீர். இன்று அதிலே நாம் உமது வல்லமையையும் அருளையும்

கண்டு உம்மை போற்றுகின்றோம், உமக்கு நன்றி சொல்கின்றோம்.

நீர் அன்புகொண்ட மனித இனத்தை உமது இரத்தத்தால் மீட்டு

நாமும் புனித வாழ்வின் வழியை கண்டுகொள்ளச் செய்தீர்.

இதே மகிமையையும் வல்லமையையும் நீர் எமக்கு அளித்த

எமது ஆற்றல்கள் திறமைகளில் உணருகின்றோம்.

இந்த ஆற்றல்களும் திறமைகளும்

எமது கடின உழைப்பிலும் தியாகத்திலும் அதனால் கிடைத்த வெற்றியிலும் உணர்கின்றோம்.

இந்த வெற்றிக்காக எம்மோடு நீர் செயலாற்றியதற்காக நன்றி கூறுகின்றோம்.

இந்த நன்றியின் உணர்வுகளோடு

எமது பெற்றோரை, ஆசான்களை, நண்பர்களை, உதவி செய்தவர்களை

இன்னும் பல வழிகளில் பாசத்தோடும் அன்போடும்

நெறிப்படுத்தியவர்களை எமக்கு பணிபுரிந்தவர்களை

விசேட விதமாக எமது வெற்றியின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளும்

ஆயர்களை குருக்களை நினைக்கின்றோம்.

இறைவா! இந்த நன்றியின் நேரத்திலே, எமது வாழ்வை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

நாம் கற்றவற்றை, அறிந்தவற்றை முழுமனதுடனே அறிவிக்கும் பணியை இக்காலத்தின்

நற்செய்தி அறிவிப்பு பணியாக மாற்றியருளும். ஆழம் காண முடியாத அந்த முத்தான உமது

வார்த்தை எமது வாழ்வாகட்டும். உமது ஆவியின் வரங்களையும், கொடைகளையும்

நிரம்பப் பெற்று நேர்வழி நடக்க துணைபுரியும். இவற்றை எல்லாம்

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகன் கிறீஸ்து

வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

அழைத்தல் வார வழிபாட்டு

 அழைத்தல் வார வழிபாட்டு



முதல்வர் : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே எல்லோரும் : ஆமென்

தூய ஆவியாருக்கு பாடல்:

வானத்திலிருந்து வையம் எழுந்து புனித ஆவியே வருக

ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்றும் மாசற்ற அன்பே வருக - 2

1. உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே உண்மையின் வடிவே வருக - 2 பயிருக்கு மழையே பாதையின் ஒளியே பரமனின் அருளே வருக

2. கீழ்திசை வானில் வாழ்த்திசை பாடும் காலைக் கதிரே வருக

ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆகும் ஆனந்த நிலையே வருக - 2

திங்கட்கிழமை: எமது சிறிய, பெரிய குருமட மாணவர்களுக்காக மன்றாடுவோம். அழைப்பின் குரல் கேட்டு தங்களை அர்ப்பணிக்க வந்திருக்கும் இவர்களை இறைவன் தொடர்ந்தும் ஆசீர்வதிக்க வேண்டி மன்றாடுவோம். 


செவ்வாய்கிழமை: இன்று எமது பெற்றோருக்காக - அம்மா அப்பாவுக்காக மன்றாடுவோம். ஒவ்வொரு தந்தையும் தாயும் இறைவன் கொடுத்த கொடைகள். அவர்கள் மூலமாக ,றைவன் பல திட்டங்களை வகுத்துள்ளார். அவர்களை இறைவன் தொடர்ந்தும் ஆசீர்வதிக்க வேண்டி மன்றாடுவோம்.


புதன்கிழமை: இன்று எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம். இறை அழைத்தலை அவர்கள் மனதில் இறைவன் விதைக்கவும் தூய ஆவியின் தூண்டுதலால் தமது வாழ்வில் இறைவனின் குரலை கேட்கவும் மன்றாடுவோம்.


வியாழக்கிழமை: இன்று எமது அமல மரித் தியாகிகளுக்காய் மன்றாடுவோம். ஒவ்வொரு குருவும் துறவியும் இறைவனில் ஆழமான பற்றுகொண்டு வாழ அவர்களுக்காக மன்றாடுவோம். தங்கள் முதல் வார்த்தைப்பாட்டை மேற்கொண்டு தமது அழைத்தல் வாழ்வை சீர்தூக்கி பார்க்கும் எம் குருக்களுக்கு இறைவன் அருளாசீரை கொடுத்து அவர்களை காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோம். 


வெள்ளிக்கிழமை: எமது பிரிவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும் மன்றாடுவோம். அனைத்து குடும்பங்களும் தமது நிலையிலிருந்து கொண்டே தாம் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு பிரமாணிக்கம் நிறைந்த குடும்பமாக வாழவும் ஒருவர் ஒருவர் மட்டில் உண்மையான உறவு கொண்டு வாழ வரம் வேண்டுவோம்.


சனிக்கிழமை: வெளி நாடுகளில் பணிபுரியும் குருக்கள் துறவிகளுக்காக மன்றாடுவோம். கடல் கடந்து நாடு கடந்து, சொந்தம் துறந்து பணிபுரியும் இவர்களுக்கு தேவையான அருளையும் ஆசீரையும் இறைவன் வழங்க வேண்டி மன்றாடுவோம். 
 

ஞாயிறு;கிழமை: இறந்து போன எமது குருக்கள் துறவிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மன்றாடுவோம். இறைவன் இவர்களுக்கு நித்திய சம்பாவனை கொடுத்து புனிதர்களின் உறவிலே சேர்த்தருள வேண்டுமென்று மன்றாடுவோம்.

(விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லி அறிக்கையிடட பின், சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவோம். அதன் பின் ஒளியின் தேவ இரகசியம் உணர்த்தும் ஒரு காரணிக்கம் கொண்ட திருச்செபமாலை சொல்ல வேண்டும்: 1 விண்ணுலகில் இருக்கின்ற..., 10 அருள் நிறைந்த). 

யோவான் 10:6-10

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் இயேசு கூறியது: 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

 உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

மன்றாட்டு: எமது சொந்த தேவைகளை மன்றாட்டுக்களை அழைத்தலின் தேவனாம் நம் ஆண்டவரிடம் எடுத்துச்ச்சொல்லி மன்றாடுவோம்.

புனித இயூஜின் டி மசனட்டை நோக்கி செபம்

அன்பின் ஆண்டவரே ! எம் அன்பின் ஊற்றும் நற்செய்தியுமான நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவை பின்தொடர என எமது நிறுவுனர் புனித இயூஜின் டி மசனட்டை அழைத்த்தீரே ! அவ்வழைப்பை உணர்ந்து , ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் வாஞ்சையோடும், திருச்சபையின் தேவையறிந்து தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த எமது புனிதரை எமக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம் . இறையரசை பார் எங்கும் பரப்பிடும் பணியில் பல அமலமரித் தியாகிகளை உருவாக்கி மறைபோதக நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் பணி வாழ்வில் நற்செய்திக்கு சாட்சிகளாய் வாழ தினமும் செபித்த இயூஜின் டி மசனட்டே ! உமது பரிந்துரையினால் தூய பிராணிக்கமான வாழ்வுக்கும், அதனூடாக இறைபணிக்கும் அழைக்கும் இயேசுக் கிறிஸ்துவின் மேல் அன்புத் தீ பற்றி எரியச் செய்தருளும் . இதன் அடையாளமாக சிறந்த குடும்பங்களையும் , குழுமங்களையும் கட்டியெழுப்ப செய்தருளும் . இதனால் ஏழைகளுக்கும் , கைவிடப்பட்டோருக்கும் நற்செய்தி அறிவிக்கும் தியாகச் சிந்தையை அளித்தருளும் . இவ்வுலகத்தின் மட்டிலும் அதன் திருச்சபையின் மட்டிலும் அக்கறை உள்ளவர்களாக ஆக்கியருளும் . அன்பின் அம்மா அமல மரியே ! தூய்மையின் ஒளி விளக்கே ! கிறிஸ்துவை நாம் வாழ்ந்திட வழி காட்டும் . உமது தளரா நம்பிக்கையையும் , கீழ்படிதலையும் , இறை விருப்பத்தையும் அறிந்து வாழும் வரம் தாரும் , ஆமென் .

பிரியாவிடை செபம் புனித பேதுரு

 பிரியாவிடை செபம் புனித பேதுரு



அன்பும் தயாபரமும் நிறைந்த புனித பேதுருவே, அடியோர்கள் நாம் உமது பதியிலே அமர்ந்திருந்து, ஈர விழிகளுடன் காத்திருந்து, இறைவனின் அன்புக்காகவும், இரக்கத்திற்காகவும் உமது பரிந்துரை வேண்டி நிற்கின்றோம் புனிதரே. 

அடைக்கலம் தேடுகின்றோமே, ஆதரவு தேடுகின்றோமே, உறவுகள் தேடுகின்றோமே, உரிமையும் தேடுகின்றோமே. நாடு விட்டு நாடு வந்தோம், சொந்தங்கள் விட்டு தூர வந்தோம், உரிமையை தொலைத்துவிட்டு விலகியே வந்தோமே. வேறு வழி தெரியவில்லையே, வெறுமையோடும், விரித்த இரு கரங்களோடு, கண்களில் ஏக்கத்தோடு உள்ளத்தில் நம்பிக்கையோடு சரணடைகின்றோம் எமது காவலரே, புனித பேதுருவே. 

எமது பாதைகள் எப்போதையா இலகுவானதாய் இருந்தது; தோல்களில் எத்தனை சுமைகள், உள்ளத்தில் எத்தனை வடுக்கள், பாதையில் எத்தனை தடைகள், வயிற்றிலே எத்தனை பசிகள். இரவு பகலாக இத்தனை சுமைகளை தாங்கினோம், கடும் குளிரினால் அவதிகளை தாங்கினோம், அவமானங்களைத் தாங்கினோம், இல்லிடமின்றி, தூக்கமின்றி, எம் கண்களில் கண்ணீர் துடைக்க கரங்கள் இன்றி அனைத்தையும் தாங்கியே சென்றோமே. 

இயேசுவுக்காய் அனைத்தையும் துறந்து, மரணம் மட்டும் திரு அவையை காத்து வழிநடத்திய அன்பு மேய்ப்பரே! நீர் நல்ல தலைவராய், எல்லோரையும் அணைப்பவராய், தூய ஆவிக்கு செவிசாய்ப்பவராய் இருந்தீரே. நேரிய பாதையில் எம்மையும் எமது குடும்பங்களையும் இங்குள்ள அனைவரையும் வழிநடத்துவீர் எமது புனிதரே. 

எமது பிள்ளைகளின் வாழ்வைப் பாருமையா. ஞானத்தையும், அறிவையும், இறை அழைத்தலையும் கொடுத்து, உண்மையில் இறைவனை அறிந்துகொண்டு, உள்ளத்தில் அவரை அன்புசெய்து, தமது செயலில் சாட்சியம்தேடிடும் நல்ல விவேகத்தையும் அளித்திட வேண்டிநிற்கின்றோம். 

நாம் பிறந்த எமது நாட்டை ஒப்புக்கொடுக்கின்றோம். இழந்த எம் உறவுகளை திரும்பிப் பார்க்கின்றோம், உடைந்த எம் வீடுகளை திரும்பிப் பார்க்கின்றோம், மறந்த எம் மகிழ்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றோம். பொருளாதார கெடுபிடியால், இயற்கை அணர்த்தத்தால், அரசியல் பிறழ்வுகளால் அவதியுறும் எமது மக்கள், நிரந்தர மகிழ்ச்சியை நாள்தோறும் சுவைத்திட அருள்புரியும் எமது புனிதரே.

இறுதியாக, புனித பேதுருவே, உமது சந்நிதானம் விட்டு பிரிய இருப்பதால், உம்மை பணிந்து வணங்குகின்றோம்.  எம்மை எல்லாம் இயேசுவின் பாதம் கொண்டு சேர்ப்பவரே. பல திசைகளிலும் இருந்து பாரங்களோடும் தேவைகளோடும் வந்திருக்கும் உமது அடியவர்கள நாம் உம்மிடம் இரந்து கேட்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாயும், எமக்காக பரிந்து பேசும், விண்ணக அருளை பொழிந்தருளும். நவின உலகில் நாம் தடுமாறாமலும், குடும்ப உறவில் நிலைகுலையாமலும், தொழில் துறைகளில் எம்மை தொலைக்காமலும், இருக்க வேண்டுகின்றோம்.   'உன் பெயர் பேதுரு, இந்த பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன்' என்று விண்ணகத்தின் திறவுகோளை பெற்ற எம் புனிதரே. இம்மண்ணகத்தில் வாழும் எமக்கு இயேசுவின் பணியைக் கற்றுத்தாரும், இயேசுவின் மனநிலையைக் கற்றுத்தாரும், இயேசுவின் வாஞ்சையைக் கற்றுத்தாரும், இயேசுவின் விருப்பங்கள் அனைத்தையும் எமக்குக் கற்றுத்தாரும். நாளும் நாமும் உமது அன்பிலும் வல்லமையிலும் வளர எமக்காய் பரிந்து பேவீர் புனிதரே, ஆமென். 


வழிபாடு - புனித இயூஜின் டி மசனெட்



முதல்வர் : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே 

எல்லோரும் : ஆமென் 

முதல்வர் : அமலமரி அன்னையின் அன்பர்களே! இறை இயேசுவின் அன்பும் தூய ஆவியாரின் நடப்புறவும் உங்களோடு இருப்பதாக! 

எல்லோரும் : உம் ஆன்மாவோடும் இருப்பதாக. 


(தூய ஆவியாருக்கு பாடல் பாடும் போது நற்செய்தியை வாசிப்பவர்கள் நான்கு மெழுகுவர்திகளை ஏற்றலாம்)

தூய ஆவியாருக்கு பாடல்:

இறைவனின் ஆவி நிழலிடவே 

இகமதில் அவர் புகழ் பரவிடவே 

நம்மை அழைத்தார் அன்பில் பணித்தார் - அவர் 

பணிதனைத் தொடர்ந்திடவே (2)


1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் 

அடிமைகள் விடுதலை அடைந்திடவும் (2) 

ஆண்டவர் அரசில் துயரில்லை என 

வானதிர பறைசாற்றிடவும்


2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும் 

குவலயம் நீதியில் நிலைத்திடவும் (2) 

அருள் நிறை காலம் அவனியிலே 

வருவதை வாழ்வினில் காட்டிடவும்


(அமர்ந்து கொள்ளுவோம்)


முன்னுரை 

முதல்வர் : இறை இயேசுவில் பிரியமுள்ள நண்பர்களே! இறைவனின் பெயரால் உங்களை வரவேற்கின்றேன். எரிகின்ற திரிகளாய் இருங்கள் என்ற புனித இயூஜீனின் எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் நாம் பயணிக்க இருக்கின்றோம். இன்றய இந்த வழிபாட்டு கூட்டத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதனது ஆன்மிக நிலையையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். எமது சாட்சிய வாழ்வு கிறிஸ்துவின் ஒளியிலே இருந்து உலகை அவரது சிலுவையின் கண்களோடு காண்பதேயாகும். ஆகவே, எமது சிந்தனைகள், எண்ணங்கள் செயல்கள் அவர் வழி செல்ல இன்றயை பொழுதில் அவரின் அருள் கேட்டு மன்றாடுவோம்.


அன்பார்ந்தவர்களே! இந்த வழிபாடு ஒழுங்கானது, முதலாவதாக ஒவ்வொருவரும் ஒரு நற்செய்தி பகுதியை எடுத்து வாசிக்க வேண்டும். அதன் பின் அந்த நற்செய்தியின் கருப்பொருளை ஒரு செபத்தோடு கூடிய வேண்டுதலாக ஒப்புக்கொடுப்போம். 


லூக்கா : 4:16-19

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்சி றைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்ஆ ண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்அவர் என்னை அனுப்பியுள்ளார்.'


இது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி

கிறிஸ்துவே உமக்கு புகழ்.


திருப்பாடல் 9:1-9

உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்

வியத்தகு உம்

செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;

உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்


உன்னதரே, உமது பெயரைப்

போற்றிப் பாடுவேன்.

என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;

உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்


நீர் நீதியுள்ள நடுவராய்

அரியணையில் வீற்றிருக்கின்றீர்;

என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.

உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்


ஒடுக்கப்படுவோருக்கு

ஆண்டவரே அடைக்கலம்;

நெருக்கடியான வேளைகளில்

புகலிடம் அவரே.

உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்


மன்றாடுவோமாக: எல்லாம் வல்ல இறைவா! மனிதனை உமது சாயலாகவும் உமது பாவனையாகவும் படைத்து, படைப்புக்களில் சிறந்த படைப்பாக எம்மை படைத்தீரே! எமது பாவ வாழ்வினால் இழந்து போன அருளை மீண்டும் பெற உமது திரு மகனை எமக்கு தந்தீரே. அவரது பாஸ்கா மறை நிகழ்வுகளால் எமது பாவ இயழ்பு அகன்று தூய வாழ்வை எமக்கு பெற்று தந்தீரே. எழைகளின் உள்ளங்களை கண்டுகொள்ளவும், துன்ப துயரங்களால் துவண்டு கிடக்கும் எல்லோரையும் அரவணைக்கவும், வாழ்வில் விடுதலை தேடும் இதயங்களையும், பல நிலைகளில் அடிமைபட்டு பார்வையற்று கிடக்கும் எம்மவரை தேடி விடுவிக்கவும் எமக்கு சக்தியையும் பலத்தையும் தாரும். இதுவே எமது சாட்சிய வாழ்வாகட்டும். இதனால் என்றும் உமது அன்புக்கு சான்று பகிரும் தியாகிகளாய் மிளிர அருள்வீராக. இவற்றை எல்லாம் உம்திரு மகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென். 


மத்தேயு: 5:43-45,48

'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 'இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.


இது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி

கிறிஸ்துவே உமக்கு புகழ்.


திருப்பாடல் 19:1-4

உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்


ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு

அச்செய்தியை அறிவிக்கின்றது;

ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு

அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.

உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்


அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;

அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

ஆயினும், அவற்றின் அறிக்கை

உலகெங்கும் சென்றடைகின்றது; 

உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்


அவை கூறும் செய்தி

உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,

இறைவன் அங்கே கதிரவனுக்கு

ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்


மன்றாடுவோமாக: கருணயின் உற்றே இறைவா! எகிப்திய அடிமை தனத்தில் இருந்த இஸ்ராயேல் மக்களை மோயிசன் வழியாக மீட்டீNர் மன்னாவை கொடுத்து மகிழ்வளித்தீNர் தண்ணீரை கொடுத்து நிறைவளித்தீNர் வாக்களிக்கப்பட்ட நிலத்தை கொடுத்து வாழ்வு தந்தீரே. உமது பராமரிப்பை நன்கு உணர்ந்தவர்களாய், நீர் காட்டிய மாபெரும் அன்பை, சிலுவை தியாகத்தை பாராபட்சம் காட்டாது அனைவரிலும் பகிர்ந்து கொள்ளவும், நீர் செய்கின்ற அளவிட முடியாத நன்மைதனங்களை நாளும் கண்டுகொள்ளவும் அருள் புரிவீராக. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வரம் தருவீராக. இவற்றை எல்லாம் உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென். 


(புனித இயூஜின் டீ மசனட் அவர்களை பற்றி எழுதப்பட்ட நூல்களில் இருந்து சில வரிகளை வாசித்து சிந்திக்கலாம்)

அருகில் இருப்பவர்களின் கரங்களை பற்றிக்கொண்டு பின்வரும் மன்றாட்டுக்களை சொல்லி செபிக்கலாம். 

மன்றாட்டுக்களுக்கு பதிலுரையாக: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்

எம் திருச்சபை அன்பிலும் பிரமாணிக்கதிலும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...

ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்


எமது குடும்பங்கள் அன்பு பிணைப்பால் கட்டப்பட்டு நம்பிக்கையில் நாளும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...

ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்


எமது பிள்ளைகள் ஞானத்திலும் அறிவிலும் தேவ பயத்திலும் நாளும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...

ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்


நாட்டில் நிலையான அமைதி கிடைக்கவும் மகிழ்சியும் மன நிறைவும் ஆசீர்வாதங்களாய் கிடைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...

ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்


குடும்பங்களில் நிலையான நிம்மதி கிடைக்கவும் பொருளாதார சுபீட்சம் பெருகவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...

ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்


விண்ணக தந்தையை நோக்கி செபம்: 


புனித இயூஜின் டி மசனட்டை நோக்கி செபம் 

அன்பின் ஆண்டவரே ! எம் அன்பின் ஊற்றும் நற்செய்தியுமான நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவை பின்தொடர என எமது நிறுவுனர் புனித இயூஜின் டி மசனட்டை அழைத்த்தீரே ! அவ்வழைப்பை உணர்ந்து , ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் வாஞ்சையோடும், திருச்சபையின் தேவையறிந்து தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த எமது புனிதரை எமக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம் . இறையரசை பார் எங்கும் பரப்பிடும் பணியில் பல அமலமரித் தியாகிகளை உருவாக்கி மறைபோதக நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் பணி வாழ்வில் நற்செய்திக்கு சாட்சிகளாய் வாழ தினமும் செபித்த இயூஜின் டி மசனட்டே ! உமது பரிந்துரையினால் தூய பிராணிக்கமான வாழ்வுக்கும், அதனூடாக இறைபணிக்கும் அழைக்கும் இயேசுக் கிறிஸ்துவின் மேல் அன்புத் தீ பற்றி எரியச் செய்தருளும் . இதன் அடையாளமாக சிறந்த குடும்பங்களையும் , குழுமங்களையும் கட்டியெழுப்ப செய்தருளும் . இதனால் ஏழைகளுக்கும் , கைவிடப்பட்டோருக்கும் நற்செய்தி அறிவிக்கும் தியாகச் சிந்தையை அளித்தருளும் . இவ்வுலகத்தின் மட்டிலும் அதன் திருச்சபையின் மட்டிலும் அக்கறை உள்ளவர்களாக ஆக்கியருளும் . அன்பின் அம்மா அமல மரியே ! தூய்மையின் ஒளி விளக்கே ! கிறிஸ்துவை நாம் வாழ்ந்திட வழி காட்டும் . உமது தளரா நம்பிக்கையையும் , கீழ்படிதலையும் , இறை விருப்பத்தையும் அறிந்து வாழும் வரம் தாரும் , ஆமென் .


குருவானவர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!

எல்லோரும் : உம்மோடும் இருப்பாராக.

குருவானவர் :எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதித்து, தனது பாதுகாப்பிலே   உங்களை வழிநடத்தி, உங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் அமைதியும் அருளும் நிறைவாய் பொழிவராக.

குருவானவர்: ஆமென் 

பிரியாவிடைச் செபம் - லூர்து அன்னை



ஓ, அன்னையே! அமல உற்பவியே! லூர்த்து நகர் நாயகியே!


இக்கட்டான எமது வாழ்க்கைப் பயணத்தில் இமைப்பொழுதும் எமை விட்டு விலகாமல் நம்பிக்கையும் பலமுமாய் எம்மோடு கூட இருந்து எம்மை வழி நடத்திவரும் தேவதாயே. கழுமரத்தின் பாடுகளால் வேதனையுற்று துடி துடித்த உமது மகனாகிய எம் ஆண்டவர்  இயேசுவின் துன்பக் கணவாயில் தளராத விசுவாசத்தோடு உறுதியாய் நின்ற உம்மிடம் தாயே எமது உலகிற்காகவும் உலக மக்களிற்காகவும் வேண்டி நிற்கின்றோம்.


அகில உலகிற்கு அன்னையான நீரே உம் பிள்ளைகளின் தேவைகளை நன்கறிவீர். கொரோனா எனும் தொற்று நோயால் உலகமே போராடும் இவ்வேளையில் கண்ணின் கருமணி போல எமைக் காத்து எமை வழிநடாத்தி நம்பிக்கையில் திடப்படுத்திய அமல அன்னையே! இந்நோயிலிருந்தும் தாங்க முடியாத வேதனையிலிருந்தும் எமை மீட்டு இழந்துபோன மகிழ்ச்சியையும், வறட்சி நீக்கி உணவையும், உறங்க உறைவிடமும் தந்து எப்போதும் எங்கணமும் எமக்காக உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசும் அம்மா!


ஓ... இறைவனின் தாயே! லூர்த்து நகர் நாயகியே! உம்மிடம் அடைக்கலம் தேடி வரும் எவரும் கைவிடப்படுவதில்லை என்ற நம்பிக்கையில் உம் திருமகனை ஏந்திய கரங்களால் எம்மையும் தாங்கும் அம்மா. தாயே, நாம் சிறப்பாகக் கொண்டாட இருக்கும் எம் திருத்தல திருவிழாவினூடாக உம்மையே நாடி வரும் மக்களுக்கு  அள்ள அள்ளக் குறையாத உம் வரங்களை கொடுத்து  அதே அருளால் நிறைத்தருளும் எம் தேவ தாயே, ஆமென்.

Tuesday, 11 February 2025

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரம் - 16/02/2025

 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

இயேசுவில் நம்பிக்கை நிறைந்த திருப்பயணிகளாக ஒரு புனித பாதையாம் இப்புதிய ஜுபிலி ஆண்டில், பயணிக்கும் என் அன்பார்ந்த உறவுகளே! பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரத்தில் இன்று நாம் கால்பதிக்கின்றோம். எமது எண்ணங்களும், எமது செயல்களும் இயேசுவில் புதுப்பிக்கப்பெற்று நிறைவுபெற மன்றாடுவோம். 

இன்றைய இறைவார்த்தைகள், படைத்த இறைவனில் முழு நம்பிக்கைக் கொண்டு வாழ அழைக்கின்றது. அதாவது, நம்பிக்கையினால் மனிதர் வாழ்வு அடைவர் எனவும், அந்நம்பிக்கை உயிர்த்த இயேசுவில் நிறைவு காணவேண்டும் எனவும் எம்மை அழைத்து நிற்கின்றன. நற்செய்தியில், அழிந்துபோகும் வாழ்வுக்காக அல்ல மாறாக அழியாத ஆன்மாவுக்காக உழைக்கும் நற் பெறுபேறுகளை ஆர் அழகிய பாடமாக, துன்புறும் இவ்வுலகிற்கான முன் உதாரணமாக இயேசு எடுத்தியம்புகின்றார். 

இன்று நாம் வாழும் இவ்வுலகு, நல்ல மனிதர்களை நசுக்கியும், நல்ல விழுமியங்களை போதிக்க மறுத்தும், உண்மைக்காக நீதிக்காக போராடும் நிலையை எதிர்த்தும், பண்புகள் இல்லாத, பாசமும் அன்பும் இரக்கமும் இல்லா இதயங்களை உருவாக்கியும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றது. இவைகள் இந்நவின காலத்துச் சவால்களே! ஆனால், இத்துன்பங்களை, எதிர்ப்புக்களை, அவமானங்களை தாங்கி, போராடும் நல் உள்ளங்களுக்காக குரல்கொடுக்கும் இயேசுவின் மேன்மையான வார்த்தைகள் எமக்கு ஆறுதலைத் தருகின்றது. 

எனவே, எமது இதயத்தில் விதைக்கப்படும் இயேசுவின் நல்ல விதைகளை இவ்வுலகிற்கு கொண்டுசெல்வோம். மடிந்து தான் பலன் தரும் எனில், நாம் இயேசுவிற்காக இறந்து, வாழ்ந்துகாட்ட் வேண்டிய அருளை, இப்பலி வழியாக இரஞ்சி மன்றாடுவோம். மேலும், தங்களை விதைகளாக்கி பிறரின் வாழ்வுக்காக நாளும் பொழுதும் தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் நினைந்து அவர்களுக்காகவும் இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.  


வருகைப் பல்லவி - 'காண். திபா 30:3-4. 

ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும்; அதனால் நீர் என்னை மீட்டீர்; ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர்; உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர்; எனக்கு உணவு அளிப்பீர்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)

பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.


1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி


3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்;

பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;

தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி


4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;

அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;

பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீணானதே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12,16-20

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?

ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 6: 23a

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26

அக்காலத்தில்

இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. பல்வேறு துன்பங்களால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. இன்றைய பலியை ஒப்புக்கொடுப்போருக்காக மன்றாடுவோம்

இன்றைய நாள் திருப்பலியை சிறப்பிக்கும்  இறைமக்கள் மற்றும்  அனைவரும் இறை இயேசுவின் ஆசீரையும், அருளையும் வல்லமையையும் நிறைவாக அனுபவிப்பார்களாக. தங்களது வாழ்வில் கிடைக்கும் அனைத்து செல்வங்களும் இறைவன் கொடுத்த வரம் என நம்பவும், உறவோடும், உரிமையோடும் உம்மை அநுதினம் நேசிக்கவும் அன்பு செய்யவும் உமது அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். திபா 77:29-30 

அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார்; அவர்களது விருப்பம் வீணாகவில்லை.


அல்லது - யோவா 3:16 

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 6 February 2025

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு வாரம் - 09/01/2025

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு வாரமாகும். பழையன கழிந்து புதியன பிறந்தும் புதுமைகள் நிதமும் நிறைந்த இந்நன் நாளிலே, இறை வல்லமையோடும் அவர் அருளோடும் ஒன்றுகூடியுள்ள என் இனிய இறைமக்களே! உங்கள் அனைவரையும் இக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். 

அழைப்பின் ஆழத்தை உணர்த்தி நிற்கும் இன்றைய இறைவார்த்தைகள் இந்நாளில் புதிய சிந்தனைகளுக்கு எம்மை அழைத்து நிற்கின்றது. நாம் பிறந்த நாள் முதல், தொடரும் எம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் இறைவனால் பொறிக்கப்பட்டவை என்பதை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். “யாரை நான் அனுப்புவேன்?" எனும் இறைவனின் குரல் என்றும் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.  "நமது பணிக்காக யார் போவார்?” எனும் ஆவலும் ஏக்கமும் எமக்கு உருவமும் உயிரும் தந்த இறைவனின் வலுவான இதயத்தின் எதிரொலியாக அமைகின்றது. இன்று இறைபணி என்பது வரையரை கடந்து, எல்லைகள் கடந்து, கலாசாரத்தை கடந்து, நாடுகளைக் கடந்து, தேவையில் தவிக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்பதே இதன் அர்த்தமாகின்றது. “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்று இன்றைய சவால்கள் மத்தியில்,  சிந்தனைக்கு அப்பால் செல்லும் சமூக தொலை தொடர்பு சார் பல்வேறு நெரிசல்கள் மத்தியில், அரசியல் மற்றும் சுய உரிமை எனும் பெயரில் பிறர் வாழ்வை நசுக்கும் கலாசாரம் மத்தியில் இயேசுவை அவர் சிலுவையை சுமந்து செல்லும் வீரமுள்ள மனிதர்களை தரவேண்டும் என்று அழைக்கின்றது இன்றைய இறைவார்த்தைகள். 

உலகம் தரும் எதிர்மறை எண்ணங்களுக்கு அப்பால், நாம் விழுமியங்களை பறைசாற்றும் கருவிகளாக மாறுவோம்; பணத்தினால், அதிகாரத்தால் இவ்வுலகை ஆழமுடியும் எனும் எண்ணங்களுக்கு அப்பால், இயேசுவின் சிலுவை தரும் தாழ்ச்சியே சிறந்தது என்று போதிக்கும் கருவிகளாக மாறுவோம்; இறைவன் கொடுத்த மனிதர்களை அன்புசெய்யவும் அவர்களின் இதயத்தில் இயேசுவின் எண்ணங்கள் சிந்தனைகளை விதைக்கும் கருவிகளாக மாறுவோம்; 

இங்கு குழுமியிருக்கும் அனைவரையும் இப்பலியிலே இணைத்து, நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் இறைவன் இப்பலி வழியாக தரவேண்டுமென்று மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி திபா 94:6-7 

வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம் ஆண்டவராகிய கடவுள்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

இதோ அடியேன் என்னை அனுப்பும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார்.

மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 138: 1-2a. 2bc-3. 4-5. 7c-8 (பல்லவி: 1b)

பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.


1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;

தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி


2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;

ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;

என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி


4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப்

பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.

5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்;

ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி


7c உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;

ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;

உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.

நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 அல்லது குறுகிய வாசகம்

திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 3-8,11

சகோதரர் சகோதரிகளே,

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. அன்பின் இறைவா! எமது திரு அவைப் பணியாளர்கள் தமது வாழ்வை அர்ப்பணத்தோடும், தியாகத்தோடும் இறை அரசை இவ்வுலகம் எல்லாம் பரப்ப வேண்டுமென்றும், எச்சூழ்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும், தமது செப வாழ்வை கைவிட்டுவிடாமல் இறைவனோடு ஒன்றித்திருக்கும் வல்லமையை அளித்திட வேண்டுமென்று,... 

2. அன்பின் இறைவா! எமக்கு நீர் தந்த அழைப்புக்காக நன்றி கூறுகின்றோம். நாம் பெற்றுக்கொண்ட இவ்வழைப்புக்கு பிரமாணிக்கமாக திகழவும், அதன் வழி உமது திட்டம் நிறைவேறவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. அன்பின் இறைவா! இந்த ஜுபிலி ஆண்டிலே, இவ்வுலகம் இறை நம்பிக்கையில் அதிகமாக வளரவும், இயேசுவ பின்பற்றும் உள்ளங்கள் பெருகவும், மனிதனின் உள்ளங்களை, உணர்வுகளை மதித்து அன்புசெய்யும் இதயங்கள் வளரவும், இவ்வுலகம் தேடும் அமைதி நிரந்தரமாக கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

4. அன்பின் இறைவா! எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: பல்வேறு அக, புறக் காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்கள், உடைந்துபோன குடும்பங்கள் அன்பை தொலைத்து நிற்கும் குடும்பங்கள், புரிந்துணர்வற்று தீமைகளை விதைகளாக விதைக்கும் குடும்பங்கள் அனைத்தும் செபத்தினால் தம் குடும்பங்கள் ஒன்றித்து நிலைத்திருக்க முடியும் என உறுதியாக நம்பவும், இந்நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் இருக்க இறைவன் துணைபுரிய வேண்டுமென்று, ...

5. அன்பின் இறைவா! எமது கிரமத்தை நிறைவாய் ஆசீர்வதியும். கடந்துசென்ற எமது வாழ்வுப் பாதையிலே நாம் கண்ட இழப்புக்கள், தோல்விகள், நோய்கள், எதிர்ப்புக்கள், வீண்பழிகள் மத்தியிலும் எம்மை காத்துவந்ததற்காய் நன்றி கூறுகின்றோம். இனிவரும் காலங்களிலும் நாம் எமது குடும்ப உறவிலே நிலைத்திருக்கவும், கிறிஸ்தவ விசுவாச வாழ்விலே தளைத்தூண்றி நிற்கவும் எமது வாழ்வோடு பயணித்தருள வேண்டுமென்று,... 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர்; அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 106:8-9 ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

அல்லது

மத் 5:4,6 துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீரே; அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...