பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்குரிய இறைமக்களே. அன்பின் உயர் மதிப்பாம் சிலுவையில் தனது உயிர் கொடுத்து, அதை தன் நினைவாகச் செய்யுங்கள் என எம்மை பணிக்கும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடங்கள் இன்னும், இன்றும் எம்மை அவர்பால் தொடர்ந்தும் ஈர்க்கின்றது.
இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு விடுக்கும் சவால் புதியதே. புதுமையான உலக வழக்கங்களுக்கும் போக்குகளுக்கும், போதனைகளுக்கும் புதிய திருப்பமாக அமைகின்றன இன்றைய இறைவார்த்தைகள். தூய ஆவியின் துணைகொண்டு செயற்படும் திரு அவை, அனைவருக்கும் உரியதே என முதல் இறைவார்த்தையும், அன்பில் உலகை கட்டுங்கள், அவ் அன்பால் உலகை வெல்லுங்கள் என எம்மை அன்புசெய்யும் இயேசுவின் உள்ளார்ந்த உணர்வுகளை தெளிவுபடுத்துகின்றது இரண்டாம் மற்றும் நற்செய்தி இறைவார்த்தைகள். அமைதியைத் தரும் இயேசுவின் உயிர்ப்பு இக்காலத்தின் தேவையாகின்றது. அன்பும் அமைதியும் செயற்படவேண்டும், அவைகள் உணர்வுகளாக வேண்டும், எமது செயல்களாக வேண்டும். குறிப்பாக யுத்தங்கள் நடைபெறும் நாடுகளை ஒப்புக்கொடுத்து அங்கே விதைக்கப்படுவது இரத்தம் அல்ல மாறாக அன்பைக் கொடுக்கும், அமைதிக்காக ஏங்கும் மனிதமே என்பதை அனைத்து தலைவர்களும் உணர மன்றாடுவோம்.
மலர்களில் மணம் நிறைந்துள்ளது போல், இன்று எம் உறவுகள் இணைவதில் அன்பு மலரவேண்டும். இயேசு அன்பினால் தன்னைக் கொடுத்தார் அவ் அன்பை நாமும் உணர்ந்து வாழ இன்றைய இப்பலியின் வழியாக மான்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண், எசா 48:20
ஆரவாரக் குரலெழுப்பி, முழங்கி அறிவியுங்கள் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மக்களை மீட்டு விட்டார், அல்லேலூயா.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள் புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29
அந்நாள்களில்
யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.
அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.
1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!
ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23
தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது எனும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளுக்கு ஒப்ப நாமும் எம் அயலவர்களை அன்புசெய்ய முன்வருவோம். நாம் மற்றவர்களின் நன்மை கருதி, பிறரின் வாழ்வை வைகறையாக மாற்ற எமது தேவைகளை விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.
1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது திரு அவையை எல்லா கறைகளில் இருந்தும் காத்தருளும். உமது அன்புப் பணி என்றும் தொடரவும் தூய ஆவியால் அதைக் காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,...
2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, குடும்பமாக இணைந்து வாழ்வது பற்றி ஆழமாக கற்பித்திருக்கின்றீர். இன்று எமது குடும்பங்களை ஆசீர்வதியும். எமது குடும்பத்தில் பிரிவுகள் இன்றி ஒன்றிப்பையும், பிளவுகள் இன்றி பாசத்தையும், வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தையும், சந்தேகம் இன்றி புரிந்துணர்வையும், கோபம் இன்றி அன்பையும், நாம் அதன் கனிகளாக விதைத்திட வரமருளவேண்டுமென்று,...
3. மனதில் அமைதி தேடி அலையும் உள்ளங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, பல்வேறு புறக்காரணிகளால் பாதிப்புற்று மன அழுத்தத்தாலும், சொல்லொன்னா துயரத்தாலும், துன்பத்தாலும் வேதனையுற்று தினமும் வாடும் அனைவருக்கும் வாழ்வின் புதிய வழியைக் காட்டியருளும். வாழ்வது நான் அல்ல, எனில் இயேசுவே வாழ்கின்றார் என்று அவரில் பற்றிக்கொண்டு, அனைத்தையும் தாங்கும் மனத்தையும், துன்புறுத்துவோருக்காக செபிக்கும் பண்பையும் எமக்கு தந்தருள வேண்டுமென்று,...
4. எமக்காக மன்றாடுவோம். இறைவா, எமது வாழ்வை ஆசீர்வதித்தருளும். எமது எண்ணங்கள் சீரானவையாக அமைவதாக. எமது தீர்மானங்கள் ஒழுக்கம் நிறைந்தவையாக அமைவதாக. எமது தீர்ப்புக்கள் நீதியானவையாக அமைவதாக. இதனால் நாம் அமைக்கும் குடும்பமும், சமூகமும், எமது பங்கும் சீரான, முதன்மையான புனிதம் நிறைந்த உலகை கட்டியெழுப்ப அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என மொழிந்த இறைவா. உம்மிடம் முழு நம்பிக்கையோடு எமது தேவைகளை ஒப்புக்கொடுக்கின்றோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே எமது அயலான்கள், நண்பர்கள் என உணர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் ஒப்புக்கொடுத்த இவ்வேண்டல்கள் பயன் தருவதாக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - யோவா 14:15-16
நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான்
தந்தையிடம் கேட்பேன், அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்
அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment