Wednesday, 23 April 2025

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு - 27-04-2025

 பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 

இறை இரக்கத்தின் ஞாயிறு




திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே, இயேசுவின் பிரசன்னத்திலே அவரின் உயிர்ப்பை கொண்டாடி மகிழும் இந்நாட்களில் அவருக்கு நன்றி செலுத்தவும்  அவரின் தியாகப்பலியில் கலந்துகொள்ளவும் அவர் பாதம் நாடி வந்திருக்கின்றோம். 

இன்று பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறாகும் அத்தோடு அன்னையாம் திரு அவை இன்றைய நாளை இறை இரக்கத்தின் ஞாயிராகவும் கொண்டாடுகின்றது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜோவான் பவுல் அவர்களே புனித பவுஸ்தினாவை 2000ம் ஆண்டு புனிதையாக உயர்த்தி, அப்புனிதைக்குக் கிடைத்த இறை இரக்கத்தின் வெளிப்பாடுகளை உலகறிய கொணர்ந்தவர். "இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கின்றேன்" என்று நாம் அளிக்கும் நம்பிக்கை அறிக்கையே இன்றைய நாளுக்கான வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

இயேசு இறந்து உயிர்த்தெழுந்து இன்றும் என்றும் வாழ்கின்றார் என்பதனை இன்றைய இறைவார்த்தைகள் எண்பிக்கின்றன. சீடர்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்றது, அவர்களின் அச்சம் நீக்கப்படுகின்றது, இலக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. நாமும் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம். இயேசு மீதுகொண்ட நம்பிக்கை வாழ்வே அவரை உலகறிய எடுத்துரைக்க எமக்கு கொடுக்கப்படும் அழைப்பாகும். எமக்குள் இருக்கும் வெறுமையான கல்லறையான எமது சுயநல எண்ணங்களை மாற்றுவோம், இலக்குகளற்ற பயணங்களை புதுப்பிப்போம், அறியாமையில் இருந்து எமது ஆளுமைகளை மீட்டெடுப்போம், புதிய வாழ்வுக்குள் நுழைவோம். இயேசுவின் இரக்கத்தில் நம்பிக்கைக் கொண்டு தொடரும் கல்வாரிப்பலியில் கலந்து இறையாசீரை பெற மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - 1 பேதுரு 2:2 

புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த  ஆர்வம் உள்ளவராய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளர்வீர்கள், அல்லேலூயா.


அல்லது - 4 எஸ் 2:36-37 

உங்கள் மாட்சியில் பெருமகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் உங்களை விண்ணரசுக்கு அழைத்துள்ளார், அல்லேலூயா.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள இரக்கத்தின் இறைவா, மீண்டும் மீண்டும் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவிலே உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீர் தூண்டுகின்றீர்; நீர் வழங்கிய இவ்வருளைப் பெருக்குகின்றீர்: இவ்வாறு திருமுழுக்கினால் நாங்கள் கழுவப்பட்டுள்ளதையும் தூய ஆவியாரால் நாங்கள் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு.


முதல்  இறைவார்த்தை

ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16

அந்நாள்களில்

மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 118: 2-4. 22-24. 25-27a (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!


2 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என 

ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி


22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;

இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி


25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!

26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!

ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27a ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். -பல்லவி


 இரண்டாம்  இறைவார்த்தை

சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் - 1: 9-11a, 12-13, 17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். “நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.

என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.

நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவார்த்தை

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!' என்று கூறி, இயேசுவில் நம்பிக்கையை உறுதிப்படுத்திய தோமாவைப் போல் நாமும் எமது தேவைகளை எடுத்துரைத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

உயிர்த்த கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் பரப்பிடும் அனைத்து பணியாளர்களையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். மாறிடும் உலகில் மாறாத உம்மை என்றும் பற்றிப்பிடித்து வாழவும், சவால்களை சந்திக்கும் போது, அதை எதிர்த்துபோரிடக் கூடிய மனத் தைரியத்தை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்.

புனித பேதுறுவின் வழி எமது திரு அவையை வழிநடத்தி தமது வாழ்வை இவ்வுலகிற்காய் ஈந்த எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுகின்றோம். தனது எளிமையான வாழ்வாலும், ஆழமான நம்பிக்கையாலும், உண்மையை எதிர்க்கும் உலக விழுமியங்களை கண்டிக்கும் தலைவனாகவும், தாழ்ச்சிக்கான உதாரணமாகவும் திகழ்ந்த இவரை இறைவன் ஏற்று தமது புனிதர்களின் அணியில் இணைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. புதிய திரு அவைத் தலைவருக்காக மன்றாடுவோம். 

எமது கத்தோலிக்க திரு அவையை வழிநடத்த புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் அழகிய பொறுப்பிலே அணிதிரளும் அனைத்து கருதினால்களுக்காக மன்றாடுவோம். தூய ஆவியின் துணையால் ஈர்க்கப்பெற்று, இறை அருளால் வழிநடத்தப்பட்டு அனைத்து இறைவனின் மக்களையும் அவர் வழி நடத்தவேண்டி, புதிய தலைவரை இறைவன் எமக்கு தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம். 

இயேசுவின் உயிர்ப்பை மகிழ்வுடன் கொண்டாடும் நாம், இறைவன் தரும் இம்மகிழ்ச்சியை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்கும் அழைப்பை பெறுவோமாக. சிறுவர்களாக, இளைஞர் யுவாதிகளாக, அன்பின் உறவுகளாக, பகிர்ந்து வாழவும், ஒருவர் ஒருவருக்காக விட்டுக்கொடுக்காவும், செபித்து வாழவும் வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: வல்லமையின் இறைவா, உமது உயிர்ப்பிலே நாம் கொண்டாடும் மகிழ்ச்சியை, அருளை, வல்லமையை, மன்னிப்பை மற்றும் இரக்கத்தை என்றும் எப்பொழுதும் அனுபவிக்கச் செய்தருளும். உமது பிள்ளைகள் நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் எமக்கு நிறைவைத் தருவதாக. எங்கள்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 20:27

உன் கையை இடு, ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்: ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்; அதனால் அதன் ஆற்றல் எங்களுடைய உள்ளங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள். 


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Sunday, 13 April 2025

புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு - 19/04/2025

 புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு



முன்னுரை 

இறை இயேசுவில் பிரியமுள்ள உறவுகளே! இன்று கிறிஸ்து இயேசு இவ்வுலகின் பாவ இருளை வென்று உலகிற்கு ஒளியைக் கொடுத்த நாள். அதுவே கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகும். இது அனைத்து வழிபாடுகளிலும் ஒர் உயர்ந்த வழிபாடாகும். அனைத்து ஞாயிறிலும் முதன்மையான ஞாயிறாகும். 

இன்று நாம் கொண்டாட இருக்கும் இவ்விரவு ஒரு புனித இரவு. எமக்கு நம்பிக்கை எனும் வெளிச்சத்தை தந்த இரவு, இதுவே பாஸ்கா இரவு ஆகும். எகிப்தியரின் உலகிற்குள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களை ஒரு சுதந்திர மக்களாக கொணர்ந்த இரவு, முழு மனித விடுதலையை பெற்று இறைவனின் சுவிகார மக்களாக மாற்றிய இரவு, சுதந்திரமாக வழிபடவென இஸ்ராயேல் மக்களை அழைத்துச்சென்ற இவ்விரவே பாஸ்கா இரவு ஆகும். இயேசுவின் உயிர்ப்பு நாளில் அகமகிழும் திரு அவை மக்களாகிய நாம் எமை சூழ்ந்திருக்கும் பாவ இருளை அகற்றி கிறிஸ்துவே ஒளியாக இவ்வுலகிற்கு கொண்டு வருவோம். தொடரும் இவ் அழகிய வழிபாட்டில் முழுமையாக பங்குபெறுவோம். 


திரு ஒளி வழிபாடு
தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்

1. ஒளியின் வழிபாடு

இப்பொழுது ஒளியின் வழிபாடு ஆரம்பமாகின்றது. கடவுள் இவ்வுலகைப் படைத்தபோது, ஒளியை தனது முதற்படைப்பாக படைத்தார். ஒளி இருக்கும் இடத்தில் இருள் ஆட்சிசெலுத்த முடியாது. இன்று இவ்வொளி புது ஒளியாக ஏற்றப்படுகின்றது. தேனிக்களின் முயற்சியினால் ஆன மெழுகுதிரியைக் கொண்டு இவ்வொளி ஏற்றப்படுகின்றது. இதுவே தாய்த் திரியாக உலகிற்கு ஒளியாக திகழும் இயேசுவை எண்பிக்கின்றது. கடவுள் இஸ்ராயேல் மக்களை ஒளியிலும், மேகத் தூணிலும் நடத்திச் சென்றார். இயேசுவின் உயிர்ப்பின் ஒளி இன்று எம்மை அழைத்துச் செல்கின்றது. 

இதோ ஒளியின் பவனி ஆரம்பமாகின்றது. குருவானவர் பாஸ்கா மெழுகுதிரியை ஏந்திச் செல்வார். 'கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று அழைக்க, நாம் 'இறைவனுக்கு நன்றி' என்று பதிலுரைப்போம், அவரை பின் தொடர்ந்து ஒரே நுழைவாயிலின் வழியே ஆலயம் செல்லுவோம். 

குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்ற புனிதமிக்க இவ்விரவில் திரு அவை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை விழித்திருக்கவும் மன்றாடவும் ஒன்றுகூடுமாறு அழைக்கின்றது. இவ்வாறு இறைவார்த்தையைக் கேட்டும் அவருடைய மறைநிகழ்வுகளைக் கொண்டாடியும் அவருடைய பாஸ்காவை நாம் நினைவுகூர்ந்தால், சாவின் மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுவோம், அவரோடு இறைவனில் வாழ்வோம் என்னும் எதிர்நோக்கைக் கொண்டிருப்போம்.

  • பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத்தீயின் மீது ஆசி வழங்கிச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக. 

இறைவா, உம் திருமகன் வழியாக, நம்பிக்கையாளர் மீது உமது மாட்சியின் பேரொளி சுடர்ந்திடச் செய்தீரே; இப்புதுத் தீயைப் + புனிதப்படுத்தியருளும்; இவ்வாறு இப்பாஸ்கா திருவிழா வழியாக விண்ணகத்தின் மீது கொண்ட ஆவலால் நாங்கள் பற்றியெரிவோமாக; அதனால் தூய்மையான உள்ளத்தோடு முடிவில்லா மாட்சியின் விழாவுக்கு வந்து சேரும் வலிமை பெறுவோம்" எங்கள்.


  • புதுத் தீயைப் புனிதப்படுத்தியபின் பணியாளர்களுள் ஒருவர் பாஸ்கா திரியை அருள்பணியாளரிடம் கொண்டுவர, அருள்பணியாளர் எழுத்தாணி கொண்டு அதில் சிலுவை அடையாளம் வரைகின்றார்; 

1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர் கோட்டை வரைகின்றார்)

2. முதலும் முடிவும் (குருக்குக் கோட்டை வரைகின்றார்)

3. அகரமும் (நேர் கோட்டுக்கு மேல் 'அ' என்னும் எழுத்தை எழுதுகிறார்)

4. னகரமும் (நேர்க்கோட்டுக்குக் கீழே 'ன' எனும் எழுத்தை எழுதுகின்றார்);

5. நேரங்கள் அவருடையன (நிகழும் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);

6. காலங்களும் அவருடையன (நிகழும் ஆண்டின் இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);

7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே ( நிகழும் ஆண்டின் மூன்றாம் எண்ணைச் 'சிலுவையின் இடப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்);

8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென். (நிகழும் ஆண்டின் நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்).

12 சிலுவை அடையாளத்தையும் எழுத்து, எண் குறிகளையும் இவ்வாறு பாஸ்கா தாயின்மீது வரைந்தபின், அதில் ஐந்து சாம்பிராணி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்கின்றார்:


1. தம்முடைய தூய

2. மாட்சிக்கு உரிய காயங்களால்

3. ஆண்டவராகிய கிறிஸ்து

4. நம்மைக் கண்காணித்துப்

5. பேணிக் காப்பாராக. ஆமென்.


மாட்சியுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி

இதயத்திலும் மனதிலும் இருள் அகற்றுவதாக.

  • திரி ஏற்றப்பட்டவுடன், பணியாளர்களுள் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் தீக் கங்குகளைத் தீயிலிருந்து எடுத்துத் தூபக் கலத்தில் இடுகின்றார். 
  • அருள்பணியாளர் வழக்கம் போல அதனுள் சாம்பிராணி இடுகின்றார். 
  • திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - தகுதியான வேறொரு பணியாளர் பாஸ்கா திரியை எடுத்துக் கொள்கின்றார். 
  • பவனி தொடங்குகின்றது. 
  • தூபக் கலத்தை ஏந்தி இருப்பவர் பாஸ்கா திரியை ஏந்திச் செல்லும் திருத்தொண்டரின் அல்லது வேறொரு பணியாளரின்முன் புகையும் தூபக் கலத்துடன் செல்கின்றார். அவர்களை அருள் பணியாளர் ஏற்றப்படாத திரிகளை வைத்திருக்கும் பணியாளர்களுடனும் மக்களுடனும் பின்தொடர்கின்றார். 
  • பின் திருத்தொண்டர், கோவில் வாயிலில் நின்று பாஸ்கா திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு பாடுகின்றார்:


கிறிஸ் து வின் ஒளி இதோ!

இறைவ னுக் கு நன் றி.


பாஸ்கா புகழுரை

பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;

இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;

மாபெரும் மன்னரது வெற்றிக்காக

எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.

இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:

முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி,

தன்னைச் சூழ்ந்த இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.

இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று

அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.

எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்

இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.


(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்

சூழ்ந்து நிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,

உங்களை வேண்டுகின்றேன். என்னுடன் சேர்ந்து,

எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவீர்களாக.

தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திட

அருள்கூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என் மீது வீசி

இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்

அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்

இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.


ஆதாமினால் வந்த கடனைக்

கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,

பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்

தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.


ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:

இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;

அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.


முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை

நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்

செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.


'நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்

பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.


பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை

உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,

அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்

இந்த இரவேதான்.


சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,

கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்

இந்த இரவிலேதான்.


ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,

பிறந்ததால் எப்பயனும் இல்லையே.


நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்

எத்துணை வியப்புக்கு உரியது!

அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த

அளவில்லா அன்புப் பெருக்கே!


ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்

கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!


இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்

பேறுபெற்ற குற்றமே!


ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!

பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த

காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!


இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும்

என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.


ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி

தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;

தவறினோருக்கு மாசின்மையையும்

துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;

பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;

மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.


ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்

நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;

தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்

புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்

மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.


இறைவனின் மாட்சிக்காகச் செந்தழலாய்ச் சுடர்விட்டெரியும்

இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்:

இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,

தன் ஒளியிலிருந்து பங்கு கொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை;

ஏனெனில் தாய்த் தேனீ தந்த மெழுகு உருகுவதால்

உயர்மதிப்புள்ள தீ வளர்க்கப்படுகின்றது.


விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்

கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது

மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்


எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:

உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,

இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,

குறைவுபடாமல் நின்று எரிவதாக.


இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,

விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.

விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.

ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி

உம் திருமகன் கிறிஸ்துவேதான்;

பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,

மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.


இரண்டாம் பகுதி
வார்த்தை வழிபாடு

முன்னுரை

கடவுளின் திட்டம் என்பது அவரது படைப்பின் தொடக்கம் முதல் இன்றுவரை நிறைவேறிக்கொண்டே இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு இவற்றை செவ்வனே தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் பாவத்தின் விளைவாக கடவுள் எமை மீட்க திட்டம் கொண்டார். இத்திட்டம் தனது மகன் இயேசுக் கிறிஸ்து வழியாக நிறைவேறுகின்றது. இதனையே ஒவ்வொரு இறைவார்த்தையும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, அனைவரும் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளுக்கு பக்தியுடன் செவிமெடுப்போம். 

முதலாம் இறைவாக்கு: 

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1 - 2: 2 

பதிலுரைப் பாடல் திபா 104: 1-2ய. 5-6. 10,12. 13-14. 24,35உ (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது

திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22 (பல்லவி: 5டி)

பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.


மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

உம்முடைய செயல்கள் அனைத்தையும்

நீர் வியப்புக்கு உரிய வகையில் சீர்படுத்துகின்றீர்;

தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே;

இறுதி நாள்களில் எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியானார் என்பது

அதைவிட மாபெரும் செயல் ஆகும்:

மீட்பு அடைந்த உம் மக்கள் இதைக் கண்டுணரச் செய்வீராக.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக

உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.


அல்லது (மனிதப் படைப்பு)


இறைவா,

மனிதரை வியத்தகு முறையில் படைத்தீர்,

அதனினும் வியத்தகு முறையில் மீட்டருளினீர்;

நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று

முடிவில்லா மகிழ்ச்சிக்கு வந்து சேரும் தகுதி பெற அருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


இரண்டாம் இறைவாக்கு: 

நம் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18

பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.


மன்றாடுவோமாக.

இறைவா, நம்பிக்கையாளரின் உன்னதத் தந்தையே,

உமது வாக்குறுதியால் நீர் சொந்த மக்களாக்கிக் கொண்டவர்களை

உலகம் முழுவதிலும் பெருகச் செய்தீர்;

உம் ஊழியராகிய ஆபிரகாம்

அனைத்துலக மக்களின் தந்தையாவார் எனும் உமது உறுதிமொழியை

நீர் வாக்களித்தபடி பாஸ்கா மறைபொருளின் வழியாக நிறைவேற்றினார்:

உம் மக்கள் உமது அழைப்பின் அருளைப் பெற்றுக்கொள் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.


மூன்றாம் இறைவாக்கு: 

இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15 - 15:1

பதிலுரைப் பாடல் விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.


மன்றாடுவோமாக.

இறைவா, நீர் முற்காலத்தில் ஆற்றிய அருஞ்செயல்கள்

எங்கள் காலத்திலும் தொடர்வதை உணர்கின்றோம்:

உமது வலக் கையின் ஆற்றலால்

ஓர் இனத்தாரைப் பார்வோனின் கொடுமையிலிருந்து விடுவித்தீர்;

அவ்வாறே புதுப் பிறப்பு அளிக்கும் நீரினால்

பிற இனத்தாருக்கு மீட்பு அளித்து வருகின்றீர்;

எனவே உலக மாந்தர் அனைவரும்

உமது அருளினால் ஆபிரகாமின் மக்களாகி,

இஸ்ரயேல் இனத்தாருக்கு உரிய மேன்மையின் முழுமையை அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


அல்லது


இறைவா, முற்காலத்தில் நிறைவேற்றிய அருஞ்செயல்களைப்

புதிய உடன்படிக்கையின் ஒளியால் தெளிவுபடுத்தினீர்:

இவ்வாறு திருமுழுக்கு நீரின் சாயலாகச் செங்கடல் விளங்கவும்

அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பெற்ற மக்கள்

கிறிஸ்தவ மக்களின் முன்னடையாளமாகத் திகழவும் செய்தீர்;

இஸ்ரயேல் மக்கள் பெற்ற சிறப்பு உரிமையை

எல்லா மக்கள் இனத்தாரும் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டு

உம் தூய ஆவியார் வழியாகப் புதுப் பிறப்பு அடையச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


நான்காம் இறைவாக்கு: 

என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14

பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11ய,12டி (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கிவிட்டீர்.


மன்றாடுவோமாக. 

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

உமது பெயரின் மாட்சிக்காக,

எங்கள் மூதாதையரது நம்பிக்கையின் பொருட்டு நீர் வாக்களித்ததையும்

உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட

உமது வாக்குறுதியின் மக்களுடைய எண்ணிக்கையையும்

நீர் பெருகச் செய்தருளும்;

அதனால் எங்கள் முற்காலப் புனிதர்கள்

ஐயமின்றி எதிர்பார்த்திருந்தவை அனைத்தும்

எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


ஐந்தாம் இறைவாக்கு: 

என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4டி9உன. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.


மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

உலகின் ஒரே எதிர்நோக்கு நீரே.

இக்காலத்தில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகளை

உம் இறைவாக்கினர்களின் வழியாக முன்னறிவித்தீர்;

இன்றைய காலங்களின் மறைநிகழ்வையும் வெளிப்படுத்தினீர்;

உமது தூண்டுதலால் அன்றி

உம் நம்பிக்கையாளரின் எந்த விதமான நற்பண்பும் வளம் பெறாது என்பதால்,

உம் மக்களில் இறை ஆவல்களைக் கனிவுடன் பெருகச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


ஆறாம் இறைவாக்கு: 

ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32-4: 4

பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)

பல்லவி: ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.


மன்றாடுவோமாக.

இறைவா, உமது திரு அவையை என்றும் வளரச் செய்கின்றீர்;

திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெறும் மக்களை

நீர் இடையறாது பராமரித்துக் காத்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


ஏழாம் இறைவாக்கு: 

நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17ய, 18-28

பதிலுரைப் பாடல் திபா 42: 2,4யடிஉ; 43: 3. 4 (பல்லவி: 42: 1)

பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

  • இத்திருவிழிப்பின்போது திருமுழுக்கு நடைபெறுமானால், ஐந்தாம் வாசகத்துக்குப் பின்னர் வரும் பதிலுரைப் பாடலைப் பயன்படுத்தவும்.  

திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.


மன்றாடுவோமாக.

இறைவா, என்றும் மாறாத ஆற்றலும் நிலையான ஒளியுமானவரே,

வியத்தகு அருளடையாளமாகிய திரு அவை முழுவதையும் கனிவுடன் கண்ணோக்கியருளும்:

முடிவில்லா ஏற்பாட்டின்படி மனிதரை மீட்கும் அதன் பணி

அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்;

வீழ்ச்சியுற்றவை எழுச்சி அடைவதையும்

பழமையானவை புதுப்பிக்கப்பெறுவதையும்

கிறிஸ்துவில் தொடங்கிய அனைத்தும்

அவர் வழியாகவே முழுமை அடைவதையும் உலகம் கண்டுணர்வதாக.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


அல்லது

இறைவா, பாஸ்கா மறையுண்மையைக் கொண்டாட

இரு உடன்படிக்கை நூல்களிலிருந்தும் எங்களுக்குக் கற்பிக்கின்றீர்;

உமது இரக்கத்தைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியருளும்;

இவ்வாறு இக்காலத்தில் உம் அருள்கொடைகளை அறிந்துகொள்ளும் நாங்கள்

வரவிருக்கும் கொடைகளை உறுதியாய் எதிர்பார்த்திருக்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


முன்னுரை

இப்பொழுது வானவர் கீதம் பாடப்படும், ஆலய மணிகள் ஒலிக்கப்படும், பீடத்தின் மீது காணப்படும் விளக்குகள் ஒளி ஏற்றப்படும். பாவத்தை வென்று, இயேசு வெற்றி வீரனாக  உயிர்த்தார் என்பதன் அளவற்ற மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்து எமது இதயங்களில் ஒளிர்வாராக. 

  • வானவர் கீதம் இடம்பெறும்
  • மணிகள் ஒலிக்கும்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதமிக்க இந்த இரவை ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;. உமது திரு அவையில் அனைவரும் உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்: அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.


எட்டாம் இறைவாக்கு: திருமுகம்

இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11

பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16யடி-17. 22-23

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 


ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.

ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி


ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;

ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;

ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். -பல்லவி


கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி


நற்செய்தி இறைவாக்கு

சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-7

அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.


மூன்றாம் பகுதி

திருமுழுக்கு வழிபாடு

திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும்.

முன்னுரை

இப்பொழுது திருமுழுக்கு வாழிபாடு ஆரம்பமாகின்றது. திருமுழுக்கு பெறும் புகுமுக நிலையினருக்காக மன்றாடும் அதேவேளை, திருமுழுக்கு பெற்ற நாமும் அதன் வாக்குறுதிகளை புதுப்பித்து இறைவனிலே புதிய உறவை மேம்படுத்துவோம். தண்ணீரின் வழியாக புதுப்பிறப்படைந்து, தூய ஆவியினால் புதுவாழ்வு பெற்றவர்களாய் அவரிலே ஒன்றித்து வாழ்வோம். நாம் அவர் பிள்ளைகள் என்பதே எமது மகிழ்ச்சி.  இம்மகிழ்ச்சியை நாம் இரட்டிப்பாக்குவோம். பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 


குரு: அன்புமிக்கவர்களே, நம் சகோதரர் சகோதரிகளுக்குப் புனித எதிர்நோக்கு உண்டாக நமது ஒருமித்த வேண்டலினால் துணை புரிவோமாக. அதனால் புதுப் பிறப்பு அளிக்கும் ஊற்றை நோக்கிச் செல்லும் இவர்களுக்கு எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் தமது உதவி அனைத்தையும் அளிப்பாராக.


ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்மாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.


புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனிதத் திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித அந்திரேயாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித ஸ்தேவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித கிரகோரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அகுஸ்தினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அத்தனாசியுஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பேசிலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மார்ட்டினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெனடிக்டே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித வியான்னி மரிய ஜானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித சியன்னா கத்தரீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அவிலா தெரேசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.


கனிவு கூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தூய ஆவியாரின் வருகையினாலேஎங்களை மீட்டருளும் ஆண்டவரே.


பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட் ட ரு ளும்.


  • (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்):

தேர்ந்து கொள்ளப்பெற்ற இவர்கள் திருமுழுக்கின் அருளினால்

புதுப் பிறப்பு அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


  • (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்):

உம் மக்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை

உமது அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம் -

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் -

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


கிறிஸ் துவே, எங்களுக்குச் செவி சாய்த் தருளும்.

கிறிஸ் துவே, க னி வாய்ச் செவி சாய்த் தருளும்.


  • திருமுழுக்குப் பெறுவோர் அங்கு இருந்தால், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் ஊற்று உமக்கு ஈன்றெடுக்கும் மக்களைப் புதிய மக்களாக மீண்டும் படைக்க உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களில் நீர் உடனிருப்பீராக; மனிதரை உம் பிள்ளைகளாக்கும் ஆவியாரை அனுப்புவீராக: இவ்வாறு எளியவராகிய நாங்கள் செய்யவேண்டிய திருப்பணி உமது ஆற்றலால் நிறை பயன் தருவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

  • பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகின்றார்:


இறைவா, அருளடையாளங்கள் வியத்தகு முறையில் பயனளிக்கக்

கண்ணுக்குப் புலப்படாத வலிமையால் செயலாற்றுகின்றீர்:

திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்டப்

"இப்புப் பொருளாகிய தண்ணீரைப் பல வகையில் தயார் செய்தீர்;

இறைவா, தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு

உலகின் தொடக்கத்திலேயே உமது ஆவியார் அதன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்;


இறைவா, பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாள மாக்கி,

மறைபொருளாகிய அதே தண்ணீரால் குற்றங்கள் முடிவுறவும்

நற்பண்புகள் தொடங்கவும் செய்தீர்;

இறைவா, பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற

ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து,

திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்;

இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவானால் திருமுழுக்குப் பெற்று,

தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார்;

சிலுவையில் அவர் தொங்கியபொழுது,

தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்;

தமது உயிர்ப்புக்குப்பின் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் கற்பித்து

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்

அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்' என்று

சீடர்களுக்குக் கட்டளையிட்டார்;

உமது திரு அவையைக் கண்ணோக்கி,

அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்;

இந்தத் தண்ணீர் உம் ஒரே திருமகனின் அருளைத்

தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்;

இவ்வாறு உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்

திருமுழுக்கு அருளடையாளத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று,

தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்து எழும் தகுதி பெறுவார்களாக.


  • அருள்பணியாளர் தேவைக்கு ஏற்பப் பாஸ்கா திரியை ஒரு முறை அல்லது மும்முறை தண்ணீரில் இறக்கிச் சொல்வதாவது:


ஆண்டவரே, இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதிலும்

தூய ஆவியாரின் ஆற்றல் உம் திருமகன் வழியாக இறங்க உம்மை வேண்டுகின்றோம்.


  • திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:


இவ்வாறு திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் இறந்து

அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழுவார்களாக.

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து

ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.


  • திருமுழுக்கு அளித்தலோ திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்தலோ நடைபெறவில்லை எனில், அருள்பணியாளர் நம்பிக்கையாளரைத் தண்ணீருக்கு ஆசி வழங்கும் சடங்குக்கு இட்டுச் சென்று சொல்கின்றார்:


அன்புமிக்க சகோதர சகோதரிகளே,

நம் திருமுழுக்கின் நினைவாக

நம்மீது தெளிக்கப்படும் படைப்புப் பொருளான இத்தண்ணீருக்குக்

கனிவுடன் ஆசி வழங்க நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியாருக்கு

உண்மையுள்ளவர்களாக இருக்க அவர் நம்மைப் புதுப்பிப்பாராக.


  • சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்து:


ஆண்டவரே எங்கள் இறைவா,

இப்புனிதமிக்க இரவில் கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்களுடன்

கனிவாய்த் தங்கியருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் எனவும்

அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் எனவும்

நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர் மீது உமது ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும்.

ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும்

எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்;

உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்;


எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக

உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்;

பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர்.

அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த

புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்;

இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப்

பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப்

புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர்.

ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட

திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக.

பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு

நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தருளும். எங்கள்.

பதில்: ஆமென்.


திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்

  • திருமுழுக்கு (உறுதிப்பூசுதல் ஆகிய) சடங்குகள் முடிந்தபின் அல்லது - அவை இல்லை எனில் - தண்ணீருக்கு ஆசி வழங்கிய பின், பின்வரும் வாக்குறுதிகள் திருமுழுக்குப் பெற்றவரோடு சேர்ந்து புதுப்பிக்கப்படாதிருந்தால், அனைவரும் எழுந்து நின்று, எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றனர்


அன்புமிக்க சகோதர சகோதரிகளே,

பாஸ்கா மறைநிகழ்வு வழியாக நாம் புது வாழ்வு பெற்றுக்

கிறிஸ்துவோடு வாழுமாறு புனிதத் திருமுழுக்கில்

நாம் அவரோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளோம்.

ஆகவே தவக் காலச் செயல்பாடுகள் முடிவடைந்திருக்கும் இவ்வேளையில்

சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும்

புனிதக் கத்தோலிக்கத் திரு அவையில் இறைவனுக்கு ஊழியம் புரிவதாகவும்

முன்பு திருமுழுக்கின்போது நாம் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது புதுப்பிப்போம்.

எனவே,


அ.ப. : சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப.: அவன் செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. அவன் ஆரவாரங்களை விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.


அல்லது

அ.ப.: கடவுளின் பிள்ளைகளுக்கு உரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.

அ.ப. : பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?

எல். : விட்டுவிடுகின்றேன்.


  • தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் பேரவை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் அருள்பணியாளர் தொடர்கின்றார்:


அ.ப. : விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?

எல். : நம்புகின்றேன்.

அ.ப. : அவருடைய ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடு பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றவருமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?

எல். : நம்புகின்றேன்.

அ.ப. : தூய ஆவியாரையும் புனிதக் கத்தோலிக்கத் திரு அவையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும் நிலைவாழ்வையும் நம்புகின்றீர்களா?

எல். : நம்புகின்றேன்.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், தண்ணீராலும் தூய ஆவியாராலும் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துப் பாவ மன்னிப்பு வழங்கியவரும் எல்லாம் வல்ல தந்தையுமாகிய கடவுளே தமது அருளால் நாம் நிலைவாழ்வு பெறும் பொருட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்மைப் பாதுகாப்பாராக.

பதில்: ஆமென்.


கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயர்

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ

அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.


நம்பிக்கையாளர் மன்றாட்டு

குரு. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் எமக்கு இது மகிழ்ச்சியே. இயேசுவின் தியாகம் நிறைந்த அவரின் பாடுகள் மரணம் அனைத்துமே அவரின் உயிர்ப்பிலே நிறைவேறுகின்றது. எமக்கு விடுதலை பெற்றுத் தந்த இயேசுவின் பாதத்தில் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம். 


1. திரு அவைக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா, உமது உயிர்ப்பை அகிலம் எங்கும் கொண்டாடும் எமது திரு அவை, உம்மை அதிகம் அன்பு செய்து வாழ்வதாக. இம்மகிழ்ச்சியை பரப்பிடும் வாஞ்சைகொண்ட பணியாளர்கள் அதிகம் உருவாகிடவும், உமது உயிர்ப்பின் மக்களாக, பணியாளர்களாக நாளும் திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று... 


2. எம் மக்களுக்காக மன்றாடுவோம்

அன்பின் இறைவா, நீர் உருவாக்கிய இப்பூமியிலே சமாதானம் மலரவும், மகிழ்ச்சி நிலைத்தோங்கவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், சிதறுண்ட மக்கள் ஒன்று சேரவும், நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் மக்கள் எதிர்பார்க்கும் விழுமியங்கள் மனதிலே விதைக்கப்படவும் வரமருளவேண்டுமென்று...


3. ஜுபிலி ஆண்டிற்காக மன்றாடுவோம்

அன்பின் ஆண்டவரே, இறைவேண்டலின் ஆண்டில் பயணிக்கும் நாம், எமது திரு அவையின் சமகால தேவைகளை கருத்தில்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய அருளை கேட்டு மன்றாடுகின்றோம். விவேகத்தோடும், பொதுநலத்தோடும், ஒன்றிப்போடும் செயற்படும் திரு அவையாக நாம் மாறவேண்டிய அருளை பொழிந்தருளவேண்டும்மென்று...


4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

அன்பின் ஆண்டவரே, அன்பை சுயநலனாக்கி, வாழ்வை கசக்கி பிழிந்து பொருளாதார கெடுபிடிகளால் நிலை இழந்து வாழும் எம் மக்கள் தொலைந்திடாமல், தூர விலகிடாமல் தொடுவானமாம் எம் உயிர்ப்பின் இயேசுவுடம் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டுவாழ வாரமருளவேண்டுமென்று...


திருமுழுக்கு இடம்பெற்றால்

5. திரு அவையின் புது உறவுகளுக்காக மன்றாடுவோம். 

அன்பின் ஆண்டவரே, இன்று திருமுழுக்கு எனும் திருவருட்சாதனத்தை பெற்று புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள், உலகின் ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. கிறிஸ்துவை அச்சாரமாகக் கொண்டு படைப்பின் நற்செய்தி அறிவிப்பார்களாக. உலகை தம்பால் ஈர்க்கும் உண்மைச் சக்திகளாக திகழவேண்டுமென்று...

குரு. இறைவா, நீர் எமக்கு தந்த விடுதலை வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். சாவை வென்று வாழ்வை தந்தீர். தீமைகள் எமக்குள்ளே அகன்று தூய வாழ்வை நாம் அணிந்துகொள்வோமாக. நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் இத்தேவைகள் எமக்கு தேவையான அருளைப் பெற்றுத் தருவதாக. எங்கள்...


நற்கருணை வழிபாடு


திருவிருந்துப் பல்லவி - 1 கொரி 5:7-8 

நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடு வோமாக. அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.


சிறப்பு ஆசி

எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக.

பதில்: ஆமென்.

அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி என்றும் தங்குவதாக.

சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.


அல்லது

அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.

எல்.' இறைவனுக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா.



அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Friday, 11 April 2025

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி - 18/04/2025

 ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி



புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும் 

  • மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.
  • இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.
  • சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.
  • ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

முன்னுரை

'திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு' என்று சிலுவையை திரும்பிப் பார்க்க வைத்த நாள் இன்று; ஒரு தனி மனிதனின் வீர மரணம் இவ்வுலக வரலாற்றுக்கு ஓர் அழகிய பாடத்தைச் சொல்லித்தந்த நாள் இன்று; தியாகத்தாலும், அர்ப்பணத்தாலும் அதன் வழி எமக்கு காட்டி நிற்கும் அன்பாலும் அனைத்து மனித குலத்திற்குமே மாண்பைக் கொடுக்க முடியும் என சொல்லித்தந்த நாள் இன்றைய பெரிய வெள்ளி. யூத பாரம்பரிய சிந்தனைகளுக்கு அப்பால், பாஸ்கா வழிபாட்டில் இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுக்கும் முறைமையில் இருந்து வேறுபடுத்தி, தன்னை பலியாக்கியதன் மூலம் அவரே தன்னை பலியாகவும்,  பலிப்பொருளாகவும், பலிப்பீடமாகவும் ஒப்புக்கொடுத்து வாழ்வின் புதிய நெறியை காட்டிச்சென்றார். இன்று நாமும் இப்பெரும் உண்மையைக் கொண்டாட கூடிவந்துள்ளோம். 

'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை' (யோவான் 15:13), என்று இவ்வுலகில் அன்பே தலை சிறந்தது என்று மெய்ப்பித்துக் காட்டிய அழகான நாள். இயேசுவின் பாடுகள் எமக்கு வாழ்வின் அர்த்தத்தை காட்ட வல்லது. அவரது இரத்தம் எமக்கு மன்னிப்பின் பாணமாக மாற வல்லது. அவரது இறப்பு எமக்கு மீட்பை தரவல்லது. 

இன்றைய வழிபாடு நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதல் பகுதி - இறைவாக்கு வழிபாடாகவும்

இரண்டாம் பகுதி பொது மன்றாட்டாகவும்

மூன்றாம் பகுதி திருச்சிலுவை ஆராதனையாகவும்

நான்காம் பகுதி திருவிருந்தாகவும் இடம்பெறும்.

இன்று திரு அவைக்கு தேவையான அருள் ஆசீர்கள் அனைத்தும் அந்த சிலுவையில் இருந்து தான் ஊற்றெடுக்கின்றன. சிலுவையில் காணப்பட்ட பலி வாழ்வு, பணி வாழ்வாகின்றது; சிலுவையின் துன்பங்கள், வலிகள், கைவிடப்பட்ட நிலைகள், இரத்தம் சிந்தும் நிலை கூட, ஏன் மரணம் கூட இன்றைய திரு அவையின் வாழ்வியல் நிலையாகின்றது. அத்தோடு, சிலுவையிலே சொல்லப்பட்ட செபம், திரு அவைக்கு தேவையாகின்றது; அது சுகமளிக்கும் அருமருந்தாகின்றது.

சிலுவையில் இயேசுவின் கண்களோடு ஏழைகளை திரு அவை பார்க்க வேண்டும், செவிமெடுக்க வேண்டும், ஆறுதல்படுத்த வேண்டும், உருகும் இதயம் கொண்டு வாழ வேண்டும். இயேசுவின் வார்த்தைகள் எமது வாழ்வை குத்தி ஊடுறுவட்டும், இயேசுவின் அர்ப்பணம் எமது வாழ்வின் நிலைகளை தொடட்டும், இயேசுவின் இறப்பு எமது வாழ்வுக்கு ஆதாரமாய் அமையட்டும்.


மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள்.


இறைவாக்கு வழிபாடு

முதலாம் இறைவாக்கு: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்  52: 13 - 53: 12

பதிலுரைப் பாடல்  திபா 31

பல்லவி: 'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.'

இரண்டாம் இறைவாக்கு: எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம்  4: 14-16; 5: 7-9

நற்செய்திக்கு முன் வழ்த்தொலி: பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1 - 19: 42

மறையுரை


பொது மன்றாட்டு

  • இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். 
  • இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.


முன்னுரை

இப்பொழுது திருவழிபாட்டின் பொது முன்னுரை இடம்பெறும். திரு அவையில் காணப்படும் ஒவ்வொரு நிலையில் இருப்போருக்காகவும், அதன் வளர்ச்சியில் பயன்களாக அமைய இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் மன்றாடுகின்றோம். தொடக்கக் காலத்தில் இருந்தே எமது திரு அவை சந்தித்த துன்பங்கள், இழப்புக்கள், சிந்திய இரத்தத் துளிகள், போலியான, முறனான கொள்கைகள் மட்டில் போராடும் திரு அவையாகவே இதை நாம் சந்திக்கின்றோம். நாம் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் எமது மன்றாட்டுக்கள் இன்று திரு அவைக்கு அணிசேர்ப்பதாக. பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 


01. புனிதத் திரு அவைக்காக

02. திருத்தந்தைக்காக

03. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

04. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

05. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

06. யூத மக்களுக்காக

07. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

08. கடவுளை நம்பாதவர்களுக்காக

09. நாடுகளை ஆள்வோருக்காக

10. துன்புறுவோருக்காக


திருச்சிலுவை ஆராதனை

முன்னுரை

இப்பொழுது திருச்சிலுவை ஆராதனை இடம்பெறும். அவமானத்தின் சின்னமாய் இருந்த சிலுவை இன்று ஆராதனைக்குரியதாய் மாறுகின்றது. இதுவே சிலுவை, இதிலே தான் தொங்கியது உலகத்தின் மீட்பு என்று சிலுவையை மும்முறை உயர்த்திக் காட்டி அதை உலகிற்கான விடுதலையின் சின்னமாக எண்பிக்கின்றார். குருவானவர் இச்சிலுவையை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் அனைவரும் முழந்தாற்படியிட்டு அதை ஆராதிப்பர். உயரிய மதிப்பும், ஆராதனையும் அதை முத்திசெய்யும்போது அளிப்பர். தாழ்ந்துகிடந்த எனது வாழ்வை உயர்த்திவிட்ட சிலுவை, அடிமைப்பட்டிருந்த எனது வாழ்வின் தளைகளை உடைத்தெறிந்த சிலுவை எனக்கு வாழ்வு அளிப்பதாக.  முழந்தாற்படியிடுவோம். 


திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

  • பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.
  • பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, 'திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். மக்கள் எல்லாரும், 'வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். 
  • பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள். இது மூன்று தடவைகள் இடம்பெறும்.


திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.

  • திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.


திருவிருந்து

  • பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. 
  • அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். 
  • இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.
  • திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.
  • விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே செபம் சொல்லப்படுகின்றது.

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள். பதில்: ஆமென்.

  • அருள் பணியாளர் 'இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக' என அழைப்பு விடுக்கின்றார்.

ஆண்டவரே, தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில் உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக் அவர்கள் ஆறுதல் அடைவார்களாக் புனித நம்பிக்கை வளர்வதாக் நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள். பதில்: ஆமென்.

  • கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Monday, 7 April 2025

புனித வியாழன் - ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி - 17/04/2025

 புனித வியாழன் 
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி



முன்னுரை 

இறை உறவில் இதம் மகிழ இனிதே கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே! 

இன்று புனித வாரத்தின் பெரிய வியாழன். வரலாறு காணமுடியாத தன் வாழ்வின் உயரிய செயலை இயேசு இன்று எமக்கு விட்டுச் செல்கின்றார். தன்னை உடைத்துக் கொடுத்து, மாதிரி காட்டிச் சென்று இரு பெரும் அருட்க்கொடைகள் வழியாக தன்னை தினமும் பலியாக்கி, பலிப்பொருளாக்கி, பலிப்பீடத்தின் வழியாக நற்கருணையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இதை என் நினைவாகச் செய்யுங்கள் எனும் இயேசுவின் வல்லமைமிகு வார்த்தைகள் இன்றும் திருப்பலியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இயேசு, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானவர், தான் அழைத்துத், தேர்ந்தெடுத்து, தன்னோடு இருக்க தம் பணிப்பொறுப்பையே கொடுத்தவர், அவர்களின் கால்களைக் கழுவி குருத்துவ அருட்கொடைக்குரிய பொருளையும் உணர்த்திவிட்டார். 

இவ் அழகிய அருட்கொடைகள் வழியாக, கிறிஸ்து இன்றும் வாழும் இறைவனாக தன்னை எண்பித்துவிட்டார், அதேவேளை இவ் இரு அருட்கொடைகள் வழியாக திரு அவை இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது, எமக்குத் தேவையாக அருட்கொடைகளும் நிறைவாகப் பொழியப்படுகின்றன. எனவே, எம் இதயத்தை நற்கருணையில் வாழும் கிறிஸ்துவின் ஆலயமாக மாற்றுவோம். அம் மகிழ்ச்சியை உலகெங்கும் பரப்பும் கருவியாக எம்மை மாற்றிக்கொள்ள வரங்கேட்போம். மேலும், தம்மை தியாகியாக்கி, தமது வாழ்வால் கிறிஸ்துவை உலகறிவிக்கும் குருக்களுக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். கலா 6:14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ளவேண்டும்; அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.

"உன்னதங்களிலே" பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் "உன்னதங்களிலே" பாடும்வரை மணிகள் ஒலிக்காது.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.


இறைவார்த்தை வழிபாடு

முதல் இறைவாக்கு 

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:

அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.


திலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)

பல்லவி:கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.


12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,

ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.- பல்லவி


15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.

16 ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்;

நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்;

என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.- பல்லவி


17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;

ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!

உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.- பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வசனம் யோவா 13: 34

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி இறைவாக்கு

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


மறையுரை

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படுவதில்லை.


பாதங்கழுவும் சடங்கு 

இப்பொழுது பாதம் கழுவும் சடங்கு ஆரம்பமாகின்றது. 'இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.' இப்புனித செயல், பணிவிடை பெறவன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்பதன் உள் அர்த்தத்தை எண்பிக்கின்றது. குருத்துவ அருட்சாதனத்தின் அடிநாதமாகிய இச்செயல் அதன் வழிநடக்கின்ற அனைத்து குருக்களின் தார்மிக அழைத்தலை உணர்த்துகின்றது. பக்தியோடு இச்சடங்கில் பங்கேற்போம். 


பாடல்

உங்களுக்கன்பு நான் செய்தது போலவே

அன்பொருவருக்கொருவர் செய்வீர் - 2


சரணம்

1. தாம் உலகில் நின்று தந்தையிடம் செல்லும்

நேரம் வந்ததை அறிந்த இயேசு

தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர்

இறுதிவரையும் அன்பு கூர்ந்தார்


2. பாஸ்கா விழாவிற்கு சீடருடன் இயேசு

பந்தி இரவில் அமர்ந்தபோது

எழுந்து சீடர்களின் பாதம் கழுவி

துணியினால் அவர் துடைத்தாரே


3. போதகர் ஆண்டவர் ஆகிய நானே

சாதனை இன்றுங்களுக்களித்தேன்

நீங்களும் ஒருவர் ஒருவர் பாதங்கள் 

கழுவவேண்டுமெனப்பணித்தேன்


4. உங்களுக்கே ஒரு புதிய கட்டளை

இன்று நான் கொடுக்கிறேன் இதோ

உங்களுக்கன்பு நான் செய்தது போலவே 

அன்பொருவருக்கொருவர் செய்வீர்


5. இத்தகைய அன்பு கொண்டிருந்தாலோ நீங்கள்

என் சீடரென்றெல்லோரும் அறிவர்

இவ்வாறு அன்புடன் அன்றிரவே – தம்

சீடருக்கே இயேசு பணித்தார்


6. சாகுமுன் எமக்குச் சாதகமாகவே 

சோதர அன்பினையே புகட்டி

நற்கருணை மூலம் அற்புதமாய் அதை

தற்பர அன்புடன் இணைத்தாரே 


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று இயேசு எம்மை அவர் சீடராக மாற அழைக்கின்றார். சீடத்துவ வாழ்வின் உயிர்நாடி, நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம். 

1. தமது குருத்துவத்தை நினைவுகூர்ந்து கொண்டாடும் அனைத்து திருநிலைப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். இயேசுவை சொந்தமாக்கிகொண்டு, அவர் பணியை சிரமேற்கொண்டு, தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து குருக்களும் இயேசுவின் அழைப்பை ஏற்று இறை மக்களுக்காகவே வாழ்ந்து, இறை அருளை இரஞ்சும் கருவிகளாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. சீடர்களுக்கு மாதிரிகாட்டி ஆசிரியரும், குருவுமாக திகழும் இறைவா, எமது நாளந்த வாழ்விலே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கற்றுக்கொள்ள வரமருளும். எம்மைக் கடந்துசென்ற காலங்களில் இத்திரு அவைக்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த அனைத்து பணியாளர்களையும் நன்றியோடு நினைக்கச் செய்தருளும். இவர்களின் நம்பிக்கை வாழ்வு எமக்கு ஒரு சான்றாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது திரு அவையில் நற்கருணை மட்டில் வாஞ்சையோடும் தாகத்தோடும் தவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். ஒவ்வொரு திருப்பலியின் போதும் அருட்சாதன முறையில் உட்கொள்ளும் இயேசுவின் உடலும் இரத்தமும் எமது வாழ்வுக்கான அருமருந்தாக அமையவும், எமது நாளாந்த வாழ்வை தாங்கிக் செல்லவும், புனித வாழ்வுக்கு எம்மை அழைத்து நாளும் புதுப்பிக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. இன்றைய சூழலில், மிகுந்த அச்சத்தோடும், தீராத நோவுகளோடும், முடிவில்லாத கவலையோடும் வாழும் அனைவரையும் நினைத்துக்கொள்வோம். துன்பங்கள் வாழ்வின் சுமைகளன்று, சவால்கள் அதன் எல்லைகளன்று, மாறாக இயேசுவோடு இணைந்து பயணிக்கும் அருள்கிடைக்கவும், தீமைகளை நாடிச்செல்லாத மனதை உருவாக்கி, இயேசுவின் மனநிலை கொண்டு வாழும் அருள்கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் போர்கள் நிறுத்தப்படவும்,  வன்முறைகள் ஒழிக்கப்படவும் மன்றாடுவோம். தனி மனித சுயநலத்தால் எமக்கு முன்பே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை இறைவன் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டுமென்று மன்றாடுவோம். நாளும் மாண்டுகொண்டிருக்கும் மனித மாண்பு காக்கப்படவும், நாம் விரும்பும் சுதந்திரம் நிலைநாட்டப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா, நீர் நல்லவர், எமக்கு வாழ்வு கொடுப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். இன்றைய நாளில் நீர் எமக்கு தந்திருக்கும் இவ்வழகிய அருட்கொடைகளுக்காக நன்றி கூறுகின்றோம். இவைகள் வழியாக இத்திரு அவையை நிலைநாட்ட நாம் உழைப்போமாக. எமது தேவைகள், எமது விண்ணப்பங்கள் இவ்வுலகின் வாழ்வுக்கான அருளையும் ஆசீரையும் உம்மிடமிருந்து பெற்றுக்கொடுப்பதாக. இவற்றை எல்லாம் என்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் உம் திருமகன் இயேசுக் கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.  


நற்கருணை வழிபாடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.


தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்.

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்

நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்;

மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக

முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,

தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.

எங்களுக்காகப் பலியான அவருடைய

திரு உடலை உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.

அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம்

நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.


ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,

அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்

வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி - 1 கொரி 11:24-25 

"இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்; புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்யுங்கள்" என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்

  • திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார். 
  • எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும். 
  • கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது. 
  • எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற பணியாலர் முன்னின்று வழிநடத்துகின்றார்.
  • எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார். 
  • அவ்வேளையில் 'பாடுவாய் என் நாவே'  அல்லது வேறு நற்கருணைப் பாடல் 'பாடப்படுகின்றது.
  • நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் - தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் - நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும். 
  • பின் முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது 'மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும். 
  • பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.
  • பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.

முன்னுரை

இப்பொழுது தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம் செய்யப்படுகின்றது. இயேசு தனது தந்தையின் விருப்பத்தை சிரமேற்கொண்டு தனது பாடுகள் மரணத்தில் பங்கேற்கின்றார். இயேசுவின் இந்த பாஸ்கா மறைபொருளை சிந்திக்க அழைக்கும் நேரமிது. விழித்திருந்து செபியுங்கள் என்று எமக்கு அழைப்புவிடுக்கும் இயேசுவின் உணர்வுகளோடு இன்று பயணிப்போம். நற்கருணையாக உடைக்கப்பட்டு இன்று எமக்காக பாடுகளை தாங்கும் இயேசுவில் எம்மையும் இணைத்து இவ்வழிபாட்டில் கலந்துகொள்வோம். 


நற்கருணை பவனிக்கான பாடல்

1. பாடுவாய் என் நாவே மாண்பு

மிக்க உடலின் இரகசியத்தை

பாரின் அரசர் சீருயர்ந்த

வயிற்றுதித்த கனியவர் தாம்

பூதலத்தை மீட்கச் சிந்தும்

விலைமதிப்பில்லாதுயர்ந்த

தேவ இரத்த இரகசியத்தை

எந்தன் நாவே பாடுவாயே


2. அவர் நமக்காய் அளிக்கப்படவே

மாசில்லாத கன்னி நின்று

நமக் கென்றே பிறக்கலானார்

அவனி மீதில் அவர் வதிந்து

அரிய தேவ வார்த்தையான

வித்து அதனை விதைத்த பின்னர்

உலக வாழ்வின் நாளை மிகவே

வியக்கும் முறையில் முடிக்கலானார்


3. இறுதி உணவை அருந்த இரவில்

சகோதரர்கள் யாவரோடும்

அவரமர்ந்து நியமனத்தின்

உணவை உண்டு நியமனங்கள்

அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்

பன்னிரண்டு சீடருக்கு

தம்மைத் தாமே திவ்விய உணவாய்

தம் கையாலே அருளினாரே


பவனி முடிந்த பின்பு

4. மாண்புயர் இவ்வருட் அனுமானத்தை

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்

இனி மறைந்து முடிவு பெறுக

புதிய நியம முறைகள் வருக

புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறைகள் நீக்க

விசுவாசத்தின் உதவி பெறுக


5. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

இருவரிடமாய் வருகின்றவராம்

தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சம புகழ்ச்சி

என்றுமே உண்டாகுக, ஆமென்.


அருட்தந்தை ச. ஜே. சுரேந்திரராஜா, அமதி 

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...