Tuesday, 27 August 2024

பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம் - 01/09/2024


பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம்  

திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் பிரியமான என் உறவுகளே! இயேசுவின் பொன்மொழி கேட்டு, அவரின் உணர்வுகளில் உடனிருந்து, எம் ஐம்புலன்களால் அவரை அநுதினம் அனுபவித்திடவும், நாம் வாழும் இவ்வுலகத்தை, இயேசுவின் கண்களினூடாக காணவும், அவரை இவ்வுலகிற்கு எடுத்தியம்பவும் இன்று நாம் கூடிவந்துள்ளோம்.  பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம் இன்று எங்களுக்கு புதிய அர்த்தங்கள் தரும் வாழ்வையும், செல்லும் பாதைக்கான தெளிவையும் எமக்கு தர இருக்கின்றது. 

இன்றைய இறைவார்த்தைகள் எமது சிந்தனைக்கு அப்பால், நாளாந்த வாழ்வுக்கு அப்பால், எமக்கு முன்னால் கிடக்கும் பல்வேறு தடைகளுக்கு அப்பால் சிந்திக்க அழைக்கின்றது. இணைச்சட்ட நூலிலிருந்து கொடுக்கப்படும் இன்றைய முதலாம் இறைவாக்கு கடவுளின் வார்த்தைக்கும், அவரது நியமங்களுக்கும் பிரமாணிக்கமாக இருக்கவேண்டிய தேவையையும் கடமையையும் தெளிவுபடுத்துகின்றது. அழைத்த கடவுள், அனைத்தையும் அறிந்தே செயற்படுகின்றார் என்பதை தெளிவாக காட்டுகின்றது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்தில் "இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்" எனும் வேண்டுகோள் கடவுளின் அழைப்பு மட்டும் அல்ல, அதுவே அவர் அழைத்த மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அவரது தூய்மையின் உணர்வுகளாகும். மாற்கு எழுதிய நற்செய்தியில் இரண்டுவகை மனிதர்களை புடமிட்டுக் காட்டுகின்றார். அதிலே, வெளிவேடம் நிறைந்த வாழ்வை, தீமையின் ஊற்றாக சுட்டிக்காட்டுகின்றார். அதாவது, பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு என்பன தீமையின் வெளிப்பாடு எனவும், இவை மனிதரில் காணப்படும் போது இறை அருள் இழந்த மனிதனாக, இவ்வுலகை தீமையாகவே மாற்றுகின்ற எண்ணங்களையும் சிந்தனைகளையும், செயல்களையும் விதைக்கின்றன எனும் ஒரு சவாலை முன்னிருத்திக் காட்டுகின்றார் இன்றைய நற்செய்தியாளர். 

இன்றைய வாசகங்கள் எம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒரு மனிதனாக, முழுமையான கிறிஸ்தவனாக, புனிதனாக நாம் வாழும் வாழ்வை எமக்கு சொல்லித் தரும் இன்றைய இறைவார்த்தைகள் எமக்குள் ஆழமாக ஊடுருவவேண்டும். நாம் காணும் யுத்தங்கள், அழிவுகள், சுயநல வாழ்வு, அரசியல் மந்தநிலை, பொருளாதார பின்னடைவுகள் அனைத்துமே இவ் வெளிவேடக்காரர்களின் வெளிச்சமே. இந்நிழலில் நாம் வாழ்ந்து எம்மையும் காத்துக்கொள்ளவேண்டுமா என்பது இன்றைய கேள்வியே. ஆசைகள் மேலோங்கி, உரிமைகளை விலங்கிடும் அதிகாரம் பெருகி, பணவெறியில் வாழும் எம் சமுகம் இவ்வெளிவேடக்கார்களே. நாம் மாறவேண்டி எமக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவின் தியாகம் மிகப் பெரியதே. இதை அதிகமாக உணர்ந்துகொள்வோம். இப்பலியில் நாம் உட்கொள்ளும் அவரின் உடலும் இரத்தமும் எம் வாழ்வை மாற்றவேண்டி மன்றாடுவோம். எம்மையும் இணைத்து எமக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் தொடர்ந்து மன்றாடுவோம். எம்மை அழைத்த இறைவன் எம்மை தொடர்ந்தும் வழிநடத்துவாராக. இச் சிந்தனைகளோடு இப்பலியில் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் இனியவர், பரிவுள்ளவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆற்றல் வாய்ந்த இறைவா, சிறந்தவை அனைத்தும் நிறைந்தவரே, உம்மீது நாங்கள் உள்ளார்ந்த அன்புகொள்ளச் செய்தருளும்; அதனால் எங்களது சமயப்பற்றை வளர்த்து நன்மைகளைப் பெருகச் செய்து நீர் எங்களில் கருத்துடன் உருவாக்கியதைப் பராமரித்துக் காத்தருள்வீராக.  உம்மோடு. 

முதல் இறைவாக்கு

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2,6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?


2 மாசற்றவராய் நடப்போரே!

இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;

உளமார உண்மை பேசுவர்;

3a தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி


3bc தம் தோழருக்குத் தீங்கிழையார்;

தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4ab நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;

ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி


5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;

மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;

இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27

சகோதரர் சகோதரிகளே,

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி



இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! கிறிஸ்துவின் விழுமியங்களை இவ்வுலகமெங்கும் கொண்டுசெல்லும் எம் பணியாளர்கள் தமது குருத்துவ அர்ப்பணத்தின் வழியாக அவருக்கு முழுமையாக சான்றுபகர வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. எமது மறைமாவட்டத்திற்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், அவருடன் உடன் பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் அனைவரும் நற்செய்தியின் ஒளியில் இவ்வுலகை தாங்கிக்கொள்ளவும், திரு அவையின் உயர்வுக்காக தம்மை அர்ப்பணிக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! ஒன்றிப்பை உயர்ந்த பண்பாக எமக்கு தந்தருளினீரே. எமது குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வொன்றிப்பை தமது இதயத்தில் எற்று, அனைவரையும் அன்பு செய்து வாழவும், குடும்ப செபத்தில் ஒருவரை ஒருவர் தாங்கிவாழும் வரத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. திரு அவையில் துன்புறும் உறவுகளுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் தமது உடலிலும் உள்ளத்திலும் துன்பங்களை தாங்கி சாட்சிய வாழ்வு வாழும் அனைவரையும் நீர் அரவணைத்து, அவர்களின் துன்பப் பாதையில் நீர் உடனிருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்கு முன் இறந்தவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! இவ்வுலகில் வாழ்ந்து, எம் வாழ்வுக்கான வழியைக் காட்டிசென்ற பலநூறு உறவுகளை நன்றியோடு நினைவிற்கொண்டு, அவர்களுக்கு உமது விண்ணக பரிசை அளித்திடவும், புனிதர்களின் வரிசையில் சேர்த்திடவும் அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. எமது அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பிறருக்காக பணிபுரிந்து அவர்களுக்காகவே வாழும் நற்பணியை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றீர். தமது வாழ்விலே இதை மிக அதிகமாகவே உணரும் வலிமையை அவர்களுக்கு கொடுக்கவும், தூய்மையான தலைமைத்துவத்தை எமக்கு தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, என்றும் புனிதமான இக்காணிக்கை மீட்பு அளிக்கும் ஆசியை எங்கள் மீது பொழிவதாக; இவ்வாறு அருளடையாள முறையில் நிகழும் இப்பலி உமது ஆற்றலால் நிறைவு பெறுவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

திபா 30:20 உமது அருள் எத்துணை ஆண்டவரே, உமக்கு அஞ்சுவோருக்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் மிகுதி.


அல்லது      மத் 5:9-10

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இந்த அன்பின் உணவு எங்கள் இதயங்களை உறுதிப்படுத்தி எங்கள் சகோதரர் சகோதரிகளில் உமக்குப் பணிபுரிய எங்களைத் தூண்டியெழுப்புவதாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 22 August 2024

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் - 25/08/2024


பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்ணங்களோடும் இத்திருப் பீடம் நாடி வந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி ஒறாம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகளின் ஆன்மிகத்தோடு சிந்திக்க இருக்கின்றோம். 

இன்றைய முதலாம் இறைவாக்காக யோசுவா நூலில் இருந்து தரப்படுகின்றது. மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. முன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக்கருத்தாகும். அனைத்து மக்களினமும், தம்மை அழைத்துவந்த இறைவனுக்கே பணிபுரிவோம் எனும் வாக்கை உறுதிமொழியாக அளிப்பதை இன்றைய இறைவாக்கு தெளிவுபடுத்துகின்றது. புனித பவுலின் எபேசியருக்கு எழுதிய நூல், இன்றைய இரண்டாம் இறைவாக்காக  கொடுக்கப்படுகின்றது. திருமணத்தில் கணவன் - மனைவியின் உன்னத உறவை, கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையில் உள்ள உறவில் தெளிவுபடுத்துகின்றார். யோவான் எழுதிய  நற்செய்தியில், "வாழ்வு தருவது தூய ஆவியே" என்பதை ஆணித்தரமாகவும், உறுதியாகவும் கூறும் இயேசு, தனது சீடர்களின்  நம்பிக்கையையும், பிரமாணிக்கத்தையும் சோதிக்கின்றார்.

நமக்கு முன்பே தெரியும் வாழ்வு மிக சாதாரணமானது அல்ல, மிக இலகுவானதும் அல்ல. சோதனைகளுக்குள் அதிகம் சிக்கி தாடுமாறும் காலம். ஏமாற்றங்களை எதிர்பார்த்து, வெறுப்புக்களை சம்பாதித்து, சுய மரியாதைகளை இழந்து, மற்றவர்களின் கடும் சினத்திற்கு உள்ளாகும் ஒரு விசித்திர வாழ்வைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதைத்தவிர, தொலைத் தொடர்பு சாதனங்களால் சூழப்பட்டு, எது சரி எது பிழை தெரியாதமல், பிறர் பெயருக்கு பங்கம் விளைவித்தும் வாழும் இவ்வாழ்விலே,  தூய ஆவியை தொலைத்து தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

எமது இறை உறவை பலப்படுத்தவும், எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு பணிபுரியவும், திரு அவையை  அன்புசெய்து வாழவும் இறைவார்த்தை விடுக்கும் சவால் இன்று  எமக்கு கொடுக்கப்படும் அழைப்பே. நாம் இறைவனில் தொடர்ந்தும் வாழவே, தூய ஆவி எம்மை வலுவூட்டுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழியாக தூய ஆவிக்கு செவிமெடுப்போம், தூய ஆவியின் துணைவேண்டி நிற்போம், அவரின் அழைப்பில் எம்மையும் இணைத்து இப் பலியில் கலந்திடுவோம். 

வருகைப் பல்லவி   'காண். திபா 85:1

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்து, என் மன்றாட்டை. கேட்டருளும்; என் கடவுளே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள உம் ஊழியனை மீட்டருளும்; ஆண்டவரே! என் மேல் இரக்கமாயிரும் ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன்.

திருக்குழும மன்றாட்டு

நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

நாங்களும் அவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-2a,15-17,18b

அந்நாள்களில்

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது:

“ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.”

மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;

அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;

அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி


17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;

அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;

நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி


19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;

அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;

அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி


21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;

நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;

ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-32

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.

“இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்” என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில்

இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர்.

இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. இயற்கை அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக்கொண்டீரே; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15 'ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.


அல்லது

யோவா 6:54 எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என் கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி 


Friday, 16 August 2024

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம் 18/08/2024


பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை அன்பில் என்றும் இணைந்திருக்கும் என் இனிய உள்ளங்களே! உங்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு அழைத்து நிற்கின்றோம். பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், இறை அனுபவம் பெற்று, இறை திட்டத்தில் இணைந்து, புதிய வாழ்வுக்கான பாதையில் எம்மையும் இணைத்திட நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 

இன்றைய இறைவார்த்தைகள் மீண்டும் இயேசுவில் இணைந்திடும் வழியையே காண்பிக்கின்றன. இயேசுவின் உடலை உண்டு, அவர் இரத்தத்தில் பருகினால் மாத்திரமே நிலை வாழ்வு பெறுவதற்கான வழி கிடைக்கப்பெறுகின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றது இன்றைய நற்செய்தி. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே" எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் யூதர்களுக்கு ஒரு பெரும் சவாலே! யூதர்களுக்கு விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு என்பது விவிலியத்தில் காணப்படும் முதல் ஐந்து நூல்களுமே. இதையே தோரா என்று அழைப்பர். ஆனால் இயேசு தன்னை விண்ணக உணவாகக் எண்பிக்கும் போது அது யூதர்களுக்கு, யூத சட்டங்களுக்கு, சமய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றே கருதினர். 

இவ்வுலகத்தில் காணப்படும் சமுக நடைமுறைச் சட்டங்கள், உலக போக்குகள், உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், எம்மைச் சுற்றி நாம் அமைத்திருக்கும் குறுகிய வட்டங்கள், எம்மை சிந்திக்க விடாமல் எம் எண்ணங்களை, எமது சிந்தனைகளை எமது வாழ்வையுமே கட்டுப்படுத்தும் இன்றைய சமுக தொடர்புசாதனங்கள், சினிமாக்கள், சின்னத்திரைகள், எமது அநாகரிக தொடர்பாடல்கள் மேலும் எமது சாதி வரம்புகள் எல்லாமே இன்றைய இயேசுவின் வார்த்தையில் உடைக்கப்பட்டு, மீளவே சிந்திக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றது. உலகத்திற்கு இவைகள் ஒரு வகை ஊந்துதலாயினும், இயேசுவை பின்பற்றும் எமக்கு இவைகள் ஒரு சவாலே. "என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" என்று இயேசுவை நாளும் சுவைக்கும் நாம் இவற்றைக் கடந்து தான் சிந்திக்கவேண்டும். 

ஆகவே, இன்றைய பலியிலே நாம், இயேசுவின் உடலும் இரத்தமும் தரும் வாழ்வுக்கான பாதையை அமைக்க மன்றாடுவோம். அவர் இன்றும் எம்மை அன்பு செய்கின்றார் என்பதை இன்றும் நாம் நாளும் கொண்டாடும் திருப்பலி வழியாக எண்பிக்கின்றார். அவாரோடு இணைந்திருப்போம், அவர் மொழி கற்றிடுவோம், அவரையே உண்டு, பருகி வாழ்ந்திட, வாழ்வித்திட இப்பலியில் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

திபா 83:10-11

எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் தி செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோலி, முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது. பாக்கம்: நீர் திருப்பொழிவு வடன் பாரும்; ஏனெனில்


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6

ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்;

அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,

ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி


11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்!

ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?

வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி


13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு;

வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!

14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்;

நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.

திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 56

அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. வல்லமையுள்ள இறைவா! ஆன்ம தாகம் தீர்க்கவே நீர் உம்மை எமக்கு உணவாக தந்தீர். உம்மை உண்டு, பருகி வாழ்ந்திடும் நாம் எமது புனிதத்தை  நாளும் வளர்த்திடச் செய்யும். இதற்காக உமது உடலை உடைத்துத் தரும் உம் பணியாளர்கள் உம்மை என்றும் நேசித்து, அவ் அன்பை எம்மோடும் எம் அயலவரோடும் பகிர்ந்துவாழ செய்தருள வேண்டுமென்று, ...

2. வல்லமையுள்ள இறைவா! இவ்வுலகத்தை இயக்குபவர் நீரே, அதை பராமரிக்கச் செய்பவரும் நீரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இன்று பல்வேறு நாடுகளில் இடம்பெறும் அனர்த்தங்கள், அழிவுகள், விபத்துக்கள் மத்தியில் எம் மக்களை கண்ணோக்கிப் பாரும். தொடர்ந்தும் எங்களை பாதுகாரும், இன்னல்கள் மத்தியில் வழிநடத்தும். நாமும் உம்மை அன்புசெய்வது போல் இவ் இயற்கையையும் அன்புசெய்யக் கற்றுத்தர வேண்டுமென்று, ...

3. வல்லமையுள்ள இறைவா! ஜுபிலி ஆண்டில் பயணிக்கும் நாம், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து உம்மிடம் மன்றாடுகின்றோம். எமது திரு அவையை கறையின்றி பாதுகாத்தருளும், பொய்மைமிகு பேதகங்கள் மத்தியில் அதை வழிநடத்தும், உம் மந்தையாகிய மக்களின் ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுசெல்லும் வழியில் அதற்காக உழைக்கும் அனைவரையும் உமது அன்பால் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...

4. வல்லமையுள்ள இறைவா! எமது குடும்பத்திற்காக மன்றாடுகின்றோம். நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எமது பாசமிகு பெற்றோர்கள் என்றும் எப்பொழுதும் உம்மால் அன்புசெய்யப்படவும் அவர்கள் தொழில்துறைகள் அனைத்தும் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுகின்றோம். இவர்களை மதிக்கும், அன்புசெய்யும், இவர்களுக்காக செபிக்கும் நல்ல பிள்ளைகள் உருவாகவும், புதிய தலைமுறை உருவாக நல் விழுமியங்களையும் இவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று, ... 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

திபா 129:7 இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

அல்லது  யோவா 6:51-52

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Wednesday, 14 August 2024

திருமணம்

 


திருமணத் திருப்பலி

திருமண திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய உறவுகளே! 

இறைவன் இவ்வுலகை படைத்தபோது அவற்றை நல்லது எனக் கண்டார், மனிதனை தனது சாயலாக பாவனையாக, தனது உயிர் மூச்சைக் கொண்டு உருவாக்கி, நல்லது எனக் கண்ட இவ்வுலகை, அவர்களுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். இது ஓர் அன்பின் பரிசு, உன்னத உறவின் பரிசு, இருமன ஒன்றிப்பின் முன் அடையாளம். இவ் அன்பை இன்று முழுமையாக சுவைக்க, அனுபவிக்க தமது முழு வாழ்வையுமே திருமண திருவருட் சாதனத்தின் வழியாக அர்ப்பணிக்க வந்திருக்கும் திருமண தம்பதினராகிய ............. இவர்களை திரு அவையின் பெயரால் வரவேற்கின்றோம். 

உறவுகள் ஒன்றித்து உயிராக, உணர்வாக பகிர்ந்துகொண்டு,

உள்ளத்தை தொட்டுப் பேசும் உன்னத அன்பை கொடையாகக் கொண்டு,

உலகிற்கு புது உருக்கொடுக்கும் புதிய விழா இது.

இயேசுவை உடைத்துக் கொடுக்கும் போது, 

பலியில் உடைந்திடும் இயேசுவையே நாளும் வாழும் உன்னத குடும்பம் இது.

இவர்கள் இணையும் இவ்வாழ்வு குடும்பத்தை உருவாக்கும் புதிய அருட்கொடையே. 

இன்று இத் திருமண திருவருட்சாதனத்தின் வழியாக இணைந்திடும் இவர்களை இயேசுவின் பாதத்தில் ஒப்புக்கொடுத்து செபிப்போம். 

படைப்பை பாதுக்காக்கும் இறைவன், இவர்கள் அன்பை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

ஒன்றிப்பை எப்பொழுதும் விரும்பும் இறைவன், இவர்களின் இணைந்த வாழ்வை என்றும் எப்பொழுதும் ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

இவ் உலகம் தரும் விழுமியங்களை அல்ல, இவர்கள் சந்திக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் தாங்கி, புதிய பாதை அமைத்திட மன்றாடுகின்றோம்;

இவ்வுலகை பல்கிபெருக ஆசித்த இறைவன், இவர்களுக்கு குழந்தைச் செல்வங்களைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

குடும்ப உறவிலே இணையும் இவர்களை எம் பங்கின் காவலியாம், குடும்பங்களின் ஒளிவிழக்காம் அன்னை மரியிடம் இவர்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். தனது திருக்குடும்பத்தை அறிந்து, ஆழமாக அன்புசெய்து, இறை விருப்பத்தின் படி வழிநடத்தியது போல, புதிய வாழ்வின் பாதையில் பயணிக்க இருக்கும் இக்குடும்பத்தை தாங்கிச் சென்று, ஆசீர்வதித்து, இவர்களுக்காக பரிந்துபேசி இவர்களுடனே உடன் பயனித்திடவேண்டி இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 

இறைமக்கள் மன்றாட்டு

1. நல்ல ஆயனே இறைவா! நீர் உமது திரு அவையை உமது சொந்த உயிராக, உடலாக பேணி பாதுகாத்து வருகின்றீர். திருமண ஒன்றிப்பை, திரு அவைமேல் கொண்ட உமது அன்பினால் எமக்கு எண்பிக்கின்றீர். இத் திரு அவையை களங்கம் இல்லாமல் பாதுகாக்கவும், இதன் வழியாக மக்கள் மீட்படையவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


2. நல்ல ஆயனே இறைவா! இன்று இத் திருமண திருவருட்சாதனத்தின் வழியாக இணைந்திருக்கும் திரு. திருமதி ... இவர்களை ஆசீர்வதியும். உமது ஆவியின் வல்லமையால் இவர்களை நிறைத்து, தாங்கள் தொடங்கும் இப்புதிய வாழ்வில் என்றும் எப்பொழுதும் நிலைத்து வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...


3. நல்ல ஆயனே இறைவா! இன்று இப்புதிய குடும்பத்தை எம் திரு அவைக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர் காட்டிய திருக்குடும்பத்தின் மாதிரி, இவர்களின் குடும்பத்திலும் செழித்தோங்கவும், ஒருவர் மற்றவரை தாங்கிவாழவும், ஒருவர் மற்றவருக்காக விட்டுக்கொடுத்து வாழவும், ஒருவர் மற்றவரில் பரஸ்பர அன்பை கண்டு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


4. நல்ல ஆயனே இறைவா! புதிய வாழ்வைத் தொடங்கும் இவர்களுக்கு குழந்தைச் செல்வங்களை அளித்தருளும். இவர்கள் வழியாக ஒரு புதிய தலைமுறையை உருவாக்கவும், இவ்வுலகம் விட்டுச்சென்ற நல்ல, அழகிய விழுமியங்கள் இவர்களின் வாழ்வில் துளங்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...

Tuesday, 13 August 2024

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு - பெருவிழா 15/08/2024

 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு


திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் பிரியமான இறை உறவுகளே! 

இன்று எமது தாய் திரு அவை அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றாள். அன்னை மரியைக் குறித்து உருவாக்கப்பட்ட கத்தோலிக்க திரு அவையின் நான்கு மறை சத்தியங்களில் இதுவும் ஒன்றாகும். திருத்தந்தை பன்னிரன்டாம் பத்தினாதர் 1950ம் ஆண்டு கார்த்திகை மாதம் முதலாம் திகதி, அன்னை மரியாள் இவ்வுலகின் வாழ்வை நிறைவுசெய்தபின், தனது உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் எனும் சத்தியத்தை பிரகடணப்படுத்தினார். இன்று நாமும் இதை முழு மனதுடனே அறிக்கையிடுகின்றோம், நம்புகின்றோம், இதையே எமது நம்பிக்கையின் வாழ்வாக மாற்றுகின்றோம். 

அன்னை மரியாவுக்கு விழா எடுத்து, அவளுக்கு அதி வணக்கம் செய்வது மிகச் சிறந்ததே. உலகெல்லாம் அன்னைக்காக விழா எடுத்து அவளின் பரிந்துரை கேட்டு மன்றாடுவது  இன்று  மட்டுமல்ல, திரு அவையின் தொடக்க காலத்திலிருந்தே வருகின்ற அதன் பாரம்பரியமாகும். ஆயிரம் ஆயிரம் பெயர்கள் கொண்டு, ஆயிரம் ஆயிரம் கோவில்களில் குடியிருக்கும் எமது அன்னை இன்றும் எமக்கு பாதுகாவலியே. உலகில் நடந்தேறிய யுத்தங்கள் மத்தியிலும், அணர்த்தங்கள் மத்தியிலும், நோய்கள் மத்தியிலும் குண்றா மகிமையோடு, எம் குலத்தின் தாயாக என்றும் எப்பொழுதும் பரிந்துபேசும் தாயை எமக்கு தந்த இறைவனுக்கு நன்றி கூறி இப்பலியில் எம் அனைவருக்காகவும் மன்றாடுவோம். 

உள்ளம் கலங்கி நான் உன் பாதம் நிற்கின்றேன்

உன் அருள் வேண்டி நான் உன் கண்கள் பார்க்கின்றேன்

உருண்டோடிடும் நாள்களும் நேரமும் - உன்னை மறந்ததில்லை அம்மா, 

உலகத்தை நம்பும் எமக்கு - உன் உதிரம் தந்த மகனை நம்பச் செய்யும்

உண்மை இதுவே என்று எம்மை பணியச் செய்யும்

உம் திருமகன் அருள் தந்து எமைக் காக்க - என்றும் கண்விழித்து

உம் பரிந்துரை தாரும் அம்மா...

வருகைப் பல்லவி

காண். திவெ 12:1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண் மீன்களைத் தலை மீது முடியாகச் சூடியிருந்தார். அல்லது கன்னி மரியாவைப் பெருமைப்படுத்தி, விழா எடுக்கும் நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக. அவரது விண்ணேற்பில் வானதூதர் மகிழ்கின்றனர். இறைமகனைப் போற்றிப் புகழ்கின்றனர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் அன்னையாகிய மாசற்ற கன்னி மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுத்துக்கொண்டீரே; நாங்கள் விண்ணகத்துக்கு உரியவற்றை என்றும் நாடி அவரது மாட்சியில் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 1 9a; 12: 1-6,1 0ab

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!


9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்;

ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! -பல்லவி


10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.

11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்;

உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! -பல்லவி


15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது

அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அந்நாள்களில்

மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு

1. அன்பின் ஆண்டவரே! அன்னைக்கு விழா எடுக்கும் நாம் உமது திரு அவைக்காக மன்றாடுகின்றோம். உமது உடலை தாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் உடைத்துக்கொடுத்து, நாளும் திரு அவையின் புனிதத்திற்காக உழைக்கும் உம் ஊழியர்கள், தமது எண்ணங்களில், சிந்தனைகளில், வார்த்தைகளில், செயல்களில் திரு அவைக்கு அணிசேர்க்க வேண்டுமென்று, ...

2. அன்பின் ஆண்டவரே! இன்றைய அன்னையின் விழாவில், அவளின் நிறை ஆசீருக்காக இரஞ்சி நிற்கும் உம் அடியார்கள் அனைவரும், அன்னையின் வாழ்வால் ஈர்க்கப்படவும், அவளின் அன்பால் வழிநடத்தப்படவும், அவள் காட்டும் பாதையாகிய இயேசுவில் தினமும் எமது வாழ்வை கொண்டு நடத்திட வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று, ...

3. அன்பின் ஆண்டவரே! இன்று உலகெல்லாம் போற்றும் அன்னையை எமக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். மாறிடும் உலகிலே, மாறாத உம் அன்பை தாங்கும் அன்னையின் பக்தர்கள் எம்மை கண்ணோக்கும். எமது பாவங்களை மன்னியும், எமது குற்றங்களில் இருந்து எமக்கு விடுதலை தாரும், எமது இயலாமைகள் அனைத்தையும் நீக்கும், பகைமைகளை தகர்தெறிந்திடும், உறவுகளை மதிக்க கற்றுத்தாரும், ஏழைகளை அரவணைக்க, வறியோரை ஆதரிக்க எமக்கு அருள்புரிய வேண்டுமென்று, ...

4. அன்பின் ஆண்டவரே! உலகிலே நடந்தேறும் கொடிய யுத்தங்கள் நிறைவுபெற உம் அன்னை வழியாக மன்றாடுகின்றோம். மரணங்கள் எமக்கு தேவையில்லை, அநீதிகள், பொய்மைகள், போலி வாழ்க்கைகள் எமது தொலைதூரமாகிட மன்றாடுகின்றோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் இவ்வுலகம் மதிக்கவும், அன்பு செய்யவும், அரவணைக்கவும் அன்னை எம்மை தொடர்ந்தும் தம் இதயத்தில் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இறைப்பற்றுடன் நாங்கள் அளிக்கும் காணிக்கை உம்மிடம் வந்து சேர்வதாக; விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், எங்கள் இதயங்கள் அன்புத் தீயால் பற்றியெரிந்து என்றென்றும் உம்மை நாடுவனவாக. எங்கள்.


தொடக்கவுரை: மரியாவினுடைய விண்ணேற்பின் மாட்சி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


எனெனில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா

இன்று விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

உமது திரு அவை அடைய இருக்கின்ற நிறைவின்

தொடக்கமும் சாயலு மாக இந்த விண்ணேற்புத் திகழ்கின்றது;

இவ்வுலகில் பயணம் செய்யும் மக்களுக்கு

உறுதியான நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும்

முன்னடையாளமாகவும் அது விளங்குகின்றது.


ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச்

சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்து

அவரைப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை

நீர் கல்லறையில் அழிவுறாமல் காத்தது மிகப் பொருத்தமே.


ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,

நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,

மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.


திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளங்களில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் உயிர்ப்பின் மாட்சிக்கு வந்து சேர்வோமாக. எங்கள்.


அருட்ததை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி

Thursday, 8 August 2024

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் - 11/08/2024



பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம்

திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்து, இறை பலியில் கலந்து இறை அருளைப் பெற கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் நிலைவாழ்வு தரும் உணவிலே எம்மை உள்ளத்து தூய்மையோடும், உண்மை உணர்வோடும் பங்கேற்க இன்றைய நாள் அழைத்து நிற்கின்றது. 

"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" எனும் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து வரிகள் அனுபவ வரிகளாக, ஆழமான எண்ணங்களாக, தெளிவான வார்த்தைகளாக அனைத்து இறைவார்த்தைப் பகுதிகளையும் ஒன்றிணைத்து கொடுக்கப்படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களாகியும் இயேசுவை, எம் இறைவனை, திருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய அவரை நாம் உண்மை உணவாக உட்கொள்கின்றோம் என்றால் நாம் பெறுபெற்றவர்களே. 

மாண்டு போகவே இருந்த மனுக்குலமாகிய இஸ்ராயேல் மக்களுக்கு புதிய வாழ்வின்  ஆரம்பத்தை கொடுத்தது இந்த உணவு. கடவுளின் வல்லமையுள்ள பிரசன்னமாக மக்களுடனே உடன் சென்றது இந்த உணவு. பிரிந்து போன மக்களுக்கு ஒன்றிப்பின் புதிய அர்த்தத்தைக் கொடுத்தது இந்த உணவு. கடவுள் எவ்வளவிற்கு இவ்வுலகத்தின் மேல் அன்புகொண்டார் என்பதை தினமும் கொண்டாடும் அதே கல்வாரிப் பலியாக தன்னை புதுப்பிப்பதும் இந்த உணவு. மனிதனுக்கு மன்னிப்பை அளித்து, இறை அன்பை சுவைக்க அநுதினம் புதிய  எருசலேமுக்கு அழைத்து நிற்பதும் இவ்வுணவே. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்று தன்னையே கொடுக்கும் உன்னத இயேசுவை இன்று நாம் அதிகமாக சுவைக்க இருக்கின்றோம். 

நாம் வாழும் இவ் அழகிய வாழ்விலே, மறைந்திருக்கும் அதிசயங்களில் ஒன்று இந்த இயேசுவே. இந்த இயேசுவை நாம் தொட்டுப் பார்க்கவும், சுவைத்துப் பார்க்கவும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நுகர்ந்து பார்க்கவும் முடியும் என்றால், நான் இயேசுவையே அணிந்துகொள்ளும் அழகிய கருவியாக மாறுகின்றேன். என்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வோம், நற்கருணையின் சாயல் என் வாழ்வு முழுவதும் மிளிர்ந்திட மன்றாடுவோம். இயேசு என்னை அன்புசெய்வது மாத்திரம் அல்ல, நானும் அவரை உண்டு, அவரில் என்னை மாற்றிக்கொள்ளவும் மன்றாடுவோம். 

இவ் அழகிய சிந்தனைகளுடன் தொடரும் இப்பலியில் முழுமையாக பங்கேற்று இறைவரம் வேண்டி நிற்போம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும் உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை நாடும் குரலை மறவாதேயும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;

அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;

அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;

எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி


5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;

அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி


7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;

அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30 - 5: 2

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 51

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

அக்காலத்தில்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. நற்கருணையின் ஆண்டவரே! உம்மை தம் அபிஷேக கரங்களால் அர்ச்சித்து, இவ்வுலகின் ஆன்ம உணவாக நாளும் அளிக்கும் எம் குருக்கள், இக்குருத்துவத்தின் உன்னத மேன்மையை உணர்ந்து, தமது தகுதியின்மையிலும், தகுதியாக அழைத்த இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், திரு அவையின் சிறந்த மேய்ப்பர்களாக திகழ்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

2. நற்கருணையின் ஆண்டவரே! நம்பிக்கை இழந்து, திரு அவையின் கோட்பாடுகளை எதிர்த்து, உம்மையே மறந்து வாழும் மக்களின் அறியாமையை கண்ணோக்கும். உம்மை உணவாக உண்ணும் பாக்கியம் இழந்துபோகும் இவர்களுக்கு, நீரே உன்னதர், நீரே தூயவர், நீரே வாழ்வளிப்பவர் என்பதை தமது உள்ளார்ந்த நம்பிக்கையாக கொண்டு வாழ வரமளித்தருள வேண்டுமென்று, ...

3. நற்கருணையின் ஆண்டவரே! இஸ்ராயேல் மக்களின் வாழ்வு முழுவதிலும் உமது உடனிருப்பும், பிரசன்னமும் இருந்தது போல, இன்று நாம் சந்திக்கும் அனைத்து விதமான போராட்டங்களிலும், துயரங்களிலும், தீமைகளிலும் எம்முடனிருந்து எம்மை நேரிய வழியில் நடத்திட வேண்டுமென்று, ...

4. நற்கருணையின் ஆண்டவரே! எமது பங்கின் ஆன்ம வழிநடத்தல் வழியாக, எமது மறைமாவட்டத்தின் உயரிய நோக்கத்தின் வழியாக, இன்றும் எம்மை அன்பு செய்து பராமரித்து வருகின்றீர். இதற்காக உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். தமது வாழ்வையே உமது நோக்காக, திரு அவையின் உயரிய க்கொள்கையாக கொண்டு வாழும் எம் ஆயர், குருக்கள், துறவறத்தார் மேலும் தன்னார்வ பாணியாளர்கள் அனைவருக்கும் உமது அன்பையும், ஆசீரையும், பாதுகாப்பையும் கொடுத்து வழிநடத்தவேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்தப் பல்லவி

திபா 1472 எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக! நான் அளிக்கும் உணவு வழி மரபினர் வாழ்வதற்கான எனது சதை, என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக, எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Friday, 2 August 2024

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரம் 04/08/2024

 

பதினெட்டாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! 

இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவர் தரும் ஆன்மிக உணவை உண்டு, அவர் இரத்தத்தில் பருகி எமது வாழ்வை புதுப்பித்துக்கொள்ள ஒன்றுகூடிவந்துள்ளோம். ஒவ்வொரு திருப்பலியும் என்னையும் இறைவனையும், என்னையும் அயலவரையும், என்னையும் இவ் இயற்கையையும் இணைக்கும் ஓர் ஊடகமே. தன்னை தாழ்த்தி வந்த இயேசுவிடம், எம்மையும் தாழ்த்தி அவர் ஆசீரையும் வல்லமையையும் இரஞ்சி நிற்போம்.

இன்றைய முதலாவது இறைவார்த்தையானது விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தின் இரண்டாவது நூலாகிய இவ்விடுதலைப் பயணத்தில், கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை விரித்துரைக்கின்றது. இருப்பினும் மக்கள் சௌகரியங்களையும் இன்பங்களையும் எகிப்து நாட்டில் அனுபவித்தவர்களாக உள்ளார்ந்த விடுதலை நோக்கி செல்ல விருப்பம் இல்லாத நிலையை இந்நூல் இன்று விபரிக்கின்றது. இறை நம்பிக்கையை இழந்தமை இறை அன்பை இழந்தமைக்கு சமன் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. இறைவனே உயிருள்ள உணவு என்பதை அனுபவம் வழியாக காண்பிக்கின்றார். புனித பவுலின் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இயேசுவை அறிந்து, வாழும் நாம் மற்றவர்களைபோல் வாழக்கூடாது எனவும், இயேசுவை எமது உள்ளத்திலும் உணர்விலும் ஏற்று வாழ அழைப்புவிடுக்கின்றார். யோவான் நற்செய்தியில், இயேசுவே வாழ்வு தரும் உயிருள்ள உணவு, இயேசுவே தாகம் தணிக்கும் ஆன்ம ஊற்று, இயேசுவே நாம் செல்வதற்கான வழி என்பதை தெளிவாக விளக்குகின்றார். 

இவ் இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, இவ்வுலகத்திலே, கடவுளை மீறி மனிதனின் அறிவும், அவனது திறமையும், அவனது ஆசைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உணர்வுக்கும் அவர்களது  இருப்புக்கும் உரிமைகொண்டாடும் இவ்வுலகில், அதன் நோக்கம் தவறிப்போவதை அறியாது, இறைபராமரிப்பில் நம்பிக்கை கொள்ளாது, கடவுளுக்குக் கூட இடங்கொடாது வாழும் போது, இவ்வுலகும் ஒரு நினிவே மாநரம் தான். இருப்பினும் மனமாற்றத்திற்கு எப்பொழுதும் இடமுண்டு. இதன் மத்தியில் நாம் எங்கே? என்பதை இன்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

இயற்கைச் சட்டத்திற்கு எதிராக செல்லும் அனைத்து மனிதனும் இறைவனுக்கு எதிராகவே செயற்படுகின்றனர்;

எது சரி, பிழை என அறிய விரும்பாத அனைவரும், இறைவன் பேசும் குரலை தொலைத்துவிடுகின்றனர்;

உடலை விற்று, எதிர்காலம் தொலைத்து ஆன்ம பசியைத் தொலைத்து வாழும் பலருக்கு இயேசு ஒரு சிலை தான்;

இயேசுவே என் வழி என்று நாம் செல்லும் பதை இன்று ஆரம்பமாகட்டும், ஒவ்வொரு நாளும் நான் தேடும் உயிருள்ள உணவாகட்டும். எம்மை கருவில் இருந்து உருவாக்கி, உயிராக்கி, உலகறிய காட்டிய இயேசுவை என்றும் எம் வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். இதற்காக வரம்கேட்டு இப்பலியில் இணைந்திடுவோம். 


வருகைப் பல்லவி

கடவுளே! எனக்குத் துணை யாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை ; நீரே

என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.


திருக்குழும மன்றாட்டு 

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15

அந்நாள்களில், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.

இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.

மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 78: 3,4bc. 23-24. 25,54 (பல்லவி: 24b)

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.


3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,

எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.

4bc வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு,

வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். -பல்லவி


23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்;

விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்;

அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். -பல்லவி


25 வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்;

அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.

54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24


சகோதரர் சகோதரிகளே,

நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.


 நற்செய்தி வாசகம்

என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35

அக்காலத்தில், 

இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார்.

அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார். அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. கருணையின் இறைவா! உமது திரு அவையை ஆசீர்வதியும். இறை நம்பிக்கை இழந்து, பொய்மையை உண்மையாக மாற்றி உழைத்திடும் மக்கள் மத்தியில் இயேசுவை உலகறிய கொண்டுசெல்ல உழைக்கும் திரு அவையின் பணியாளர்களை நீர் தாங்கிச்செல்லவும் வழிநடத்தவும் வேண்டுமென்று,...

2. கருணையின் இறைவா! திவ்ய நற்கருணையில் வீற்றிருந்து, ஆன்ம உணவாக எம் இதயத்தில் வருவதற்காய் உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். திருமுழுக்கு பெற்ற அனைத்து மக்களும் இதன் ஆழத்தை உணர்ந்து வாழவும், உம் வழியாக உண்மை வாழ்வுக்கு செல்லும் வழியை நாளும் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று,... 

3. கருணையின் இறைவா! எமது திருநாட்டில் எமது மக்களின் கண்ணீரையும், உள்ளத்து உணர்வுகளையும், முடங்கிக் கிடக்கும் எதிர்கால கனவுகளையும் நீர் கண்ணோக்கும். அரசியல் மாற்றங்களாலும், அதிகார அடக்குமுறைகளாலும், அலட்சியபோக்குகளாலும், பொருளாதார கெடுபிடிகளாலும் அவதிப்ப்படும் எம் மக்கள் அனைவர் உள்ளத்திலும் மாற்றங்கள் நிகழவும், நம்பிக்கையும், துணிவும் நாம் அனைவரும் சம்பாதிக்கும் விளைநிலங்களாகிட அருள்புரிய வேண்டுமென்று,...

4. கருணையின் இறைவா! அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் நலனுக்காக உழப்பவர்கள் அனைவரும் நேர்மையையும் உண்மையையும் அணிகலனாகக் கொண்டு உழைக்கவும், பணம் பதவிக்காக அல்ல, மக்கள் அனைவரும் தேடும் மகிழ்ச்சியையும், அமைதியையும் இவர்கள் தமது உழைப்பால் பெற்றுக் கொடுத்திட வரமருளவேண்டுமென்று,...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

சா.ஞா. 16:20 ஆண்டவரே, எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.

அல்லது

யோவான் 6:35 வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது ; என்னிடம் நம்பிக்கை

கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக. எங்கள்.

அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...