Thursday, 30 May 2024

புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த - விழா - 31/05/2024



திருப்பலி முன்னுரை 

  'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'

இயேசுக் கிறிஸ்துவில் அன்பு இறைமக்களே! இயேசுவை கருவில் சுமந்த தாய் அன்னை மரியாவின் மகிழ்வில் நாமும் இன்று இணைந்து அதை பார் உலகமெங்கும் பரப்பிட கூடிவந்துள்ளோம். இன்று அன்னையாம் திரு அவை அன்னை மரியாள் எலிசபேத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடுகின்றாள். இவ்விழா பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே வழிபாட்டிற்குள் இணைத்து கொண்டாடப்படுகின்றது. திருத்தந்தை ஆறாம் உர்பான் இவ்விழாவிற்கான சிறப்பு தனித்துவத்தை அளித்து அதை இறைமக்கள் அனைவரும் கொண்டாடும்படி அழைத்தார். எலிசபேத் அம்மாள் அன்னை மரியாளை, பெண்களுள் ஆசீர் பெற்றவள் என்றும், ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டதால், அவள் பேறுபெற்றவள் என்றும் வாழ்த்தி அன்னை மரியாளை உலகின் நட்சத்திரமாக எண்பிக்கின்றாள். இன்று நாம் கொண்டாடும் இவ்விழாவில் எம்மையும் இணைத்துக் கொள்வோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவர் வார்த்தையில் நிலைத்து நிற்கும் நாம் ஒவ்வொருவரும் பெறுபெற்றவர்களே! இவ்வாசீரில், அன்னையும் எம்மோடு சேர்ந்து பயணிக்கின்றாள். அன்னையின் மகிழ்வில், இவ்வுலகம் ஒரு புதிய வரலாற்றை கண்டது, அவளின் சந்திப்பில், ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது, அவளின் தூய்மையில், இறைவன் புதிய வாழ்வைக் எமக்குக் கொடுத்தார். இந்த சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் வரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண், திபா 6:1:16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, அனைவரும் வாரீர் கேளீர்! ஆண்டவர் என ஆன்மாவுக்குச் செய்தது எத்துணை என்பதை எடுத்துரைப்பேன் 

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனைக் கருத்தாங்கிய புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கத் தூண்டுதல் தந்தீNர் அதனால் நாங்கள் தூய ஆவியாரின் ஏவுதலுக்குப் பணிந்து, அந்த அன்னையோடு உம்மை என்றும் போற்றிப் பெருமைப்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 
3: 14-18

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

பதிலுரைப் பாடல்: எசாயா: 12 

பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

நற்செய்தி இறைவாக்கு

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
1: 39-56

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

இறைமக்கள் மன்றாட்டு

குரு. அன்னையின் அன்பு சந்திப்பில் எமது தேவைகளை அவள் வழியாக இறை தந்தையிடம் எடுத்துச் சொல்லி மன்றாடுவோம். எமக்காக இன்றும் பரிந்துபேசும் தாய், எம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள் எனும் நம்பிக்கையில் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.   

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: இறைவனின் அரசை இவ்வுலகெங்கும் பரப்பி, இயேசுவின் நற்செய்திற்கு பிரமாணிக்கமாய் வாழும் அனைவரையும், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டால் ஊந்தப்பட்டு, தொடர்ந்து பணியாற்றிடும் அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: இறைவா, அன்னை மரியாவையும் புனித வளனாரையும் கொண்டு அழகிய குடும்பம உணர்வையும், விழுமியத்தையும், அன்பையும் எமக்கு காட்டினீரே.  குடும்பம் என்பது நீர் கொடுத்த கொடை, அதை உருவாக்கி, உறவுகொண்டாட செய்தவர் நீர் என உணரவும், குடும்பம் தருகின்ற பண்புகள், விழுமியங்கள், புன்னியங்கள், ஒழுக்கங்கள் என்பன அதன் அத்திவாரமாக இருப்பதாக. எமது தாயும் தந்தையும் இப்பண்புகளால் எமை அழகுபடுத்தி, இவ்வுலகு அறியச் செய்பவர்களாக மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்னையின் பக்தர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, உமது அன்னையை எமக்கு தாயாக தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அன்னையின் வழி நடந்து, அவள் கூறும் செய்திகளைக் கேட்டு, அவளின் உண்மையான உணர்வுகளுக்கு செவிசாய்த்து, தினமும் திருச்செபமாலையை அன்பின், புனிதத்தின், வாழ்வின் செபமாகச் சொல்லி அவளின் வழி உம்மிடம் வந்துசேரும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. நலிவுற்ற குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, இன்று பண ஆசை, பொருள் ஆசை மீது நாட்டம் கொண்டு குடும்ப பலம் இழந்து, குடும்ப அன்பு இழந்து, குடும்ப ஒன்றிப்பு இழந்து வாழும் எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். குடும்ப சச்சரவுகளால், பிரட்சனைகளால், பொருளாதார நெருக்கடியினால், சந்தேகங்களினால், பண மோகங்களால், விவாகரத்து வரைக்கும் பிரிந்து சென்ற குடும்ப தம்பதியினர், குடும்பங்களை இணைத்து வைத்தவர் இயேசு என்பதை முழுமையாக அறிந்து தமது வாழ்வின் உயர் பொறுப்பாகிய குடும்பங்களை கட்டிக்காக்கும் வல்லமை கிடைக்கவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா! உம் தாயாகிய அன்னை மரியாவை எமக்கு ஒரு வரலாற்றின் தாயாக தந்தீரே, உமக்கு நன்றி கூறுகின்றோம். அத்தாய் குடும்பத்தை பக்குவமாக பேணிப் பாதுகாத்து, பராமரித்து, இறைதிட்டத்திற்கு ஏற்ப இயேசுவை வளர்த்து கையளித்தது போல, எமது குடும்பங்கள் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் உம் பாதம் வந்து சேர்வனவாக. குடும்பங்கள் இவ்வுலகிற்கு கொடுக்கும் உயரிய கொடையாகிய பிள்ளைகளை ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து அவர்களுக்கு தேவையான வழி நடத்துதலை கொடுத்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் புனிதமிக்க அன்னை புரிந்த அன்புப் பணி உமக்கு ஏற்புடையதாய் இருந்தது; அது போல நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலி உமது மாட்சிக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பது அவரது பெயர்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு அரும்பெரும் செயல் செய்யும் உம்மை உமது திரு அவை போற்றிப் பெருமைப்படுத்துவதாக் மரியாவின் வயிற்றில் இருந்த இயேசுவைப் புனித யோவான் அக்களிப்போடு கண்டுகொண்டது போல், என்றும் வாழும் அதே இயேசுவை உமது திரு அவை இவ்வருளடையாளத்தில் பேரின்பத்துடன் கண்டுகொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Friday, 24 May 2024

தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா - 26/05/2024



திருப்பலி முன்னுரை 

'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்'

இறை அன்பில் இணைந்திடும் இறை குலமே, இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம். பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்துவரும் ஞாயிறு, அதாவது இன்று நாம் தூய்மை மிகு மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 

படைப்பின் தொடக்கத்திலே இருந்து இவ் இறைபிரசன்னம் இன்றும் எம்மோடு இருக்கின்றது. கபிரியேல் தூதர், அன்னை  மரியாவுக்கு இறைவார்த்தை அறிவித்த போது, இயேசுவின் திருமுழுக்கின் போது என இத்திரித்துவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பதை காணலாம். திரு அவை வரலாற்றிலே காணப்பட்ட பல்வேறு வகையான பேதகங்கள் மத்தியில் அதற்கான பதிலடியாக சங்கங்கள் கூட்டப்பட்டு, பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவைகள் செபங்களாக, விழாக்களாக வழிபாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. பதின்னான்காம் நூற்றாண்டில் தான் இதை ஒரு பெருவிழாவாக கொண்டாடும் படி திரு அவையின் நாட்காட்டியிலே சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

இன்று இப்பெருவிழா எம்மை இறை நம்பிக்கையில் வாழ, வளர அழைக்கின்றது. 'என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்' எனும் இயேசுவின் வார்த்தைகள் இன்று இத் திரித்துவத்தை முழுமையாக பற்றுக்கொண்டு வாழ அழைக்கின்றது. இயேசுவை முழுமையாக நற்கருணை வழியாக, அவர் வார்த்தை வழியாக அனுபவிக்கின்ற நாங்கள், இத் திரித்துவத்தையும் முழுமையாக அனுபவிக்கின்றோம் என்பதே உண்மை. 

ஆகவே, நாம் பெற்றுக்கொண்ட அனைத்து அருட்கொடைகள் வழியாக இத்திருத்துவத்தின் பிரசன்னம் எம்மில் செயலாற்றுகின்றது, இதற்காக நாம் நன்றி சொல்லுவோம். இவ்வுலகை வியாபித்திருக்கும் அப்பிரசன்னம், அதை அனைத்து கறைகளில் இருந்தும் காத்து, புனிதப்படுத்தி, இவ்வுலகமும் அதில் வாழும் நாமும், மூவொரு கடவுளை போற்றி, புகழ்ந்து இவ்வுலகமெங்கும் பறைசாற்றிட அருள் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். திரு அவையோடு இணைந்து இப்பெருவிழாவின் பொருள் உணர்ந்து, இவழிபாட்டில் வாழ்வாகிட வரம்கேட்போம்.

வருகைப் பல்லவி

தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக் ஏனெனில் அவர் நம்மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.

திருக்குழும மன்றாட்டு

தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக.

முதலாம் இறைவாக்கு

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.

பதிலுரைப் பாடல்: 33 

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

நற்செய்தி இறைவாக்கு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

இறைமக்கள் மன்றாட்டு

குரு. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டதால் நாம், கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். இந்த உரிமையோடு, நாம் எமது தேவைகள் விண்ணப்பங்களை அவர் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவையின் வாழ்வு மலரவும், அதன் புனிதத்துவம் காத்திடவும், உலகின் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகிட உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. எமது பங்கு சமூகம், தங்கள் வாழ்வில் திருத்துவத்தின் பிரசன்னத்தை அறிந்து, அனுபவித்து, பறைசாற்றிட, மகிழ்ச்சியும், நிறை அமைதியும் மிளிர்ந்திட, அதை அனைவரோடும் பகிர்ந்து வாழும் வரமருள வேண்டுமென்று, ...

3. ஜுபிலி ஆண்டை நோக்கி நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் பலனளிக்கவும், ஜுபிலி ஆண்டு வேண்டிநிற்கும் உலக அமைதி, மனித சமத்துவம், உரிமை வாழ்வு, ஏழைகளின் மான்பும் மகத்துவமும், மேலும் யுத்த நிறுத்தம் என அனைத்தும் வெற்றி காண அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கவும், பல்வேறு காலநிலை பிறழ்வுகளில் இருந்து அனைவரையும் காக்கவும், முன்னெடுக்கும் எம் மக்களின் முயற்சிகள் கைகூடவும், பசியும், பட்டினியும் அகலவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

5. பல்வேறு காரணங்களால் நேய்க்குள்ளாகி, நம்பிக்கையின் விளிம்பில் பல்வேறு கோணங்களில், வைத்தியசாலைகளில், இல்லங்களில் தவிக்கும் அனைத்து நோயாளிகளும் நலம்பெறவும், தமது வாழ்வில் பிறக்கும் நம்பிக்கையால் புதிய பாதை அமைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: அன்பும் வல்லமையும் நிறைந்த இறைவா! இவ்விலகில் சிறந்தவர் நீர் ஒருவரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இத் திரித்துவ பெருவிழாவில் மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். உமது பிரசன்னம் எம்மில் செயலாற்றுவதை இட்டு நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று உம் அன்பு பிள்ளைகளாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளும் உமது திருவுளத்தால் நிறைவேறிட எமக்கு அருள்புரிவீராக. எங்கள்.  அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கலா 4: நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா. தந்தையே' எனக் கூப்பிடுகிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Saturday, 18 May 2024

தூய ஆவி ஞாயிறு - பெந்தக்கோஸ்து பெருவிழா - 19/05/2024


திருப்பலி முன்னுரை 

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இறை அன்பில் நிலைத்திருந்து, நாளும் பொழுதும் அவர் புகழ்பாடவும், அவர் அருள்தனை பெற்று, தூய உள்ளத்தினராய் அவரோடு வாழவும், இறைவரம் வேண்டி, வந்திருக்கும் என் அன்பு உறவுகளே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பெந்தக்கோஸ்து ஞாயிறு தினமாகும். தூய ஆவியின் வருகைதான் எமது திரு அவையின் பிறந்ததினமாகும். இன்றைய நாளை நாம் பெருமகிழ்வுடன் வரவேற்போம். 

திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவி, இன்று உலகமெல்லாம் வியாபித்து, திரு அவைக்கும் இவ்வுலக மாந்தருக்கும் தேவையான அருளையும், கொடைகளையும் கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். திரு அருட்கொடைகளை எமக்கு அளித்து, அதன் வழி, உலகை புனிதப்படுத்தியும், அபிஷேகித்தும், இன்றும் என்றும் எமக்கு வல்லமை அளித்துக்கொண்டிருக்கின்றார். நாம் பலராயினும், பல மொழியினராயினும், நாம் நம்பும் தூய ஆவி ஒன்றே, அவர் அருளும் வல்லமையும், கொடைகளும் ஒன்றே. தூய ஆவியைப் பெற்றே, திருத்தூரத்கள் துணிந்து சென்றனர், தூய ஆவியினாலே பல தீமைகளை வென்றனர், பல தீயவர்களை துணிந்து எதிர்த்தனர். 

இன்று தூய ஆவியைப் பெற்ற இறைமக்களாக இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம். நாம் தூயோராய் வாழ்ந்து, இறை நம்பிக்கையின் தூண்களாய் மிளிர்ந்து, திரு அவையின் புனிதம் காத்து வாழ்ந்திட மன்றாடுவோம். அக்கினியின் வல்லமை எல்லார் மேலும் பொழியப்பட்டு புது உலகம் படைத்திட மன்றாடுவோம், நாம் செல்லும் பாதைகள் தெளிவற்றதாயினும், பொருளற்றதாயினும், பண்பற்றதாயினும், உறவற்றதாயினும், இயேசு ஒருவருக்கே சான்றுபகரும் பணியில், உயிருள்ள ஆற்றல் தரும் தூய ஆவி எமக்கு துணை நிற்க மன்றாடுவோம். உலகெங்கும் போரிடும் படைகளுக்கு ஆயுதங்கள் பலமாயினும், எமது நம்பிக்கையின் வாழ்வுப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தூய ஆவி எம்மை தாங்கி, வழி நடத்த இப்பலி வழியாக வரங்கேட்டு மன்றாடுவோம். 

விருப்பமானால் இதை முன்னுரையோடு இணைத்துக்கொள்ளலாம் ...

எமது திருத்தந்தை 2025ம் ஆண்டை ஜுபிலி ஆண்டாக பிரகடணப்படுத்தியுள்ளார். இவ்வாண்டு எமது கிறிஸ்தவ வாழ்வுக்கும், கத்தோலிக்க திரு அவைக்கும், ஏன் இவ்வுலகிற்குமே கொடுக்கப்படும் ஒரு சவாலாகும். மாறுபட்ட விசுவாச விழுமியக் கொள்கைகள் மத்தியில், போதை கலாசாரம் மற்றும் பொய்மையான வாழ்க்கை மத்தியிலும்,  இயற்கைக்கு எதிரான மனித சிந்தனைகள் மத்தியிலும், அரசியல் சுயலாபங்களுக்காக நடத்தப்படும் போர்கள் மத்தியிலும், வேலையற்ற, அமைதி, நீதி தேடி அலையும் நிலமை மத்தியிலும், நாடு விட்டு நாடு செல்லும் புலம்பெயர் அகதிகள் மத்தியிலும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வன்முறையான மனிதப்பண்பு படுகொலை மத்தியிலும், இந்த ஜுபிலி ஆண்டு ஓர் அழகிய பாடத்தை இவ்வுலகிற்கு கற்றுத்தர இருக்கின்றது. இவைகள் மாற்றங்காண திருத்தந்தை எடுக்கும் இவ்வழகிய முயற்சியை வரவேற்று அதற்காக இப்பலியின் வழியாக மன்றாடுவோம். 


இறைமக்கள் மன்றாட்டு

குரு. இறை இயேசுவில் என் அன்பு பிள்ளைகளே! இன்று நாம் பெரு மகிழ்வோடு இத் தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் அருளினால் நாம் அவர் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். அவர் தூண்டுதலால், நாம் அவரின் உரிமைப் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரிடம் எமது விண்ணப்பங்கள் வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் பிறந்திருக்கும் எமது திரு அவை இன்று மகிழ்கின்றாள். இது கடந்துவந்த பல பேதகங்கள் மத்தியிலும், போர்கள் மத்தியிலும், பல அரசியல் கெடுபிடிகள் மத்தியிலும், அழிவுகள் மத்தியிலும் இன்றும் அதன் புனிதம், மகிமை குன்றா, தொடர்ந்தும் வழிநடத்தி வரும் இறை ஆவிக்கு நன்றி கூறுகின்றோம். தொடர்ந்தும், இவ் இறைபணி இத்திரு அவையில் வளர்ச்சிகாணவும், அதற்காக பலர் தம்மை அர்ப்பணிக்கவும் வரம்வேண்டி, ...

2. எமது கிறிஸ்தவ வாழ்வுக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் புதுப்படைப்பாக பிறந்துள்ள நாம், அவர் ஞானம் நிறைந்த வார்த்தைகளால் தூண்டப்பெற்று, அமைதியும் மகிழ்ச்சியும் தரும் அவர் உடனிருப்பால் ஆறுதல்பெற்று, வாழ்வின் அதிசயங்கள் தரும் பாடங்களாக அவர் கொடைகள் மாற்றம் பெற்று, தெய்வபயம் என்றும் எப்பொழுது எமக்குள் ஊற்றெடுத்து இறைவனையே பற்றிக்கொண்டு அவரை விட்டு விலகிடா மனம் தர வேண்டுமென்று, ... 

3. எமது பங்கிற்காக மன்றாடுவோம்.  படைப்பிலே மூவொரு கடவுளாய் ஒன்றித்து செயற்பட்டது போல, உலகம் முடிவுவரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்று உறுதிமொழி அளித்து தூய ஆவியை பொழிந்தது போல, எமது பங்கிலும் உமது வல்லமை பெருகட்டும். பிளவுகள் அகன்று, தவறுகள் களைந்து, வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இல்லாதொழிந்து, பகைமையை தகர்த்தெறிந்து புதிய வழி காணும் மக்களாக எமை மாற்றும். நாம் திருமுழுக்கிலே கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருந்து தொடர்ந்தும் செயற்பட அருள்புரியவேண்டுமென்று, ... 

4. ஜுபிலி ஆண்டுக்காக மன்றாடுவோம்.  திருத்தந்தையோடு இணைந்து, ஜுபிபி ஆண்டை முன்னோக்கி செல்லும் எமது திரு அவை, குறிப்பாக எமது மறைமாவட்டம் முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை ஆசீர்வதியும். ஏழைகள் இனங்காணப்படவும், அடிமைகள் தகர்த்தேறியப்படவும், அமைதியற்ற சூழல் மாற்றம் பெறவும், வன்முறைகள் ஒழியவும், சமத்துவம் எங்கும் எப்பொழுதும் வியாபித்திருக்கவும், தூய ஆவியின் துணை எம் அனைவருக்கும் கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: எல்லாம் வல்ல இறைவா, நீர் வாக்களித்தபடியே உமது ஆவியை எமக்கு அளித்து எம்மை உமது சுவிகார பிள்ளைகளாக, அரச, குருத்துவ திருக்கூட்டமாக மாற்றினீரே. உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நாம் எப்பொழுதும் தூய ஆவியால் வரம்பெற்று, அவர் தரும் வார்த்தைக்கு அடிபணிந்து செயற்படுவோமாக. எமது உள்ளத்தில் இருப்பவை, எமக்கு முன் வைக்கப்படும் தேவைகள் அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவற்றை ஏற்று, உமது உல்லமையால் எம்மை நிறைத்தருள்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI

Friday, 17 May 2024

யுத்தத்தின் இறுதி நாள் நினைவாக - 18/05/2024


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்பார்ந்த இறை உள்ளங்களே. கடந்துசென்ற காலங்களில், எம்மை கடந்துசென்ற ஆயிரம் ஆயிரம் உறவுகள், தமது தியாகத்தால், மொழி, இனப் பற்றால், போர் கொண்ட காலங்களில், எம்மை விட்டு மரித்துப் போன எமது தியாக உள்ளங்களுக்காக செபித்து, பலி ஒப்புக்கொடுக்க கூடிவந்துள்ளோம். 

இரத்தம் தோய்ந்த நாள் அது, இதயத் துடிப்பின்றி சென்ற நாள் அது. வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை, வெறுங்கையாய் வீசி எறியப்பட்ட நாள் அது. பசியும், பாசமும் மாறி மாறி பாடம் தந்த நாள் அது. பார்த்தவர்கள் முன்னால் சிதறிப்போன நாள் அது. இவர்கள், இவைகள் எங்கள் இதயத்தில் இன்னும்  ஆழமாய் தேங்கிக் கிடக்கின்றன. 

'என் அன்பில் நிலைத்திருங்கள்.' யோவா: 15:9 எனும் இயேசுவின் அழகிய வார்த்தை இன்று எமக்கு அழகிய, ஆழமான இறையியல் அனுபவத்தைத் தருகின்றது. நாம் உறவுகளை இழந்திருக்காலாம் ஆனால் அன்பை இழக்கவில்லை, நாம் உரிமையை இழந்திருக்கலாம் ஆனால் தனிச் சுதந்திரத்தையும் தைரியத்தையும் இழக்கவில்லை, சொத்துக்கள், உடமைகளை இழந்திருக்கலாம், ஆனால் இறை நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று தியாக உள்ளங்களாக, உறவுகளாக, சொந்தங்களாக மரித்துப் போன அனைவருக்காகவும் இத் திருப்பலி வழியாக மன்றாடுவோம்.  இறைவன் இவர்கள் ஆன்மாவை ஏற்று, புனிதர்களின் வரிசையில் இடமளிப்பாராக. இவர்களின் இழப்பால் துயருறும் அனைத்து சொந்தங்களும் ஆறுதலும், நம்பிக்கையும் அடைவார்களாக. இறந்த இவர்கள் அனைவரும்; கொண்டிருந்த தூர நோக்கு, எமது வாழ்வுக்கான வழியாகவும், அச்சாரமாகவும் திகழ்வதாக. இன்றும் பல்வேறு அரசியல் நெருக்கீடுகளால் துயருறும் எமது மக்கள், தாங்கள் விரும்பும் அமைதியையும், மகிழ்வையும், நீதியோடு கூடிய சம உரிமை உணர்வையும் அனுபவிப்பார்களாக. காற்றில் இயங்கும் கடல் அலைபோல, எம்மை இயக்கும் இயேசுவின் அன்பு எமக்குள் கிடக்கும் காயங்களுக்கு குணமளிப்பதாக, பிறர் மனம் தேடும் உள்ளங்களை உருவாக்குவதாக, நம்பிக்கை தளராமல், அமைதி தொலைத்திடாமல், அநுதினம் கரங்கள் கோர்த்து இலக்கை அடையும் வரம் கேட்போம்.  இதற்கான வரங்களை கேட்டு இப்பலியிலே தொடர்ந்தும் மன்றாடுவோம். 

இறைமக்கள் மன்றாட்டு 

குரு: அன்பார்ந்தவர்களே! இன்று நாம் அனைவரும், எமது சொந்தங்கள், உறவுகள், எமது உரிமை வாழ்வுக்கு துணைநின்றவர்கள், தூய நோக்கத்திற்காக உயிர் நீத்தவர்கள் அனைவருக்காகவும் செபித்துக்கொண்டிருக்கின்றோம். நன்மைத்தனங்களின் ஊற்றாகிய இறைவன் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து வேண்டுதல்களையும் ஏற்றுக்கொள்வார் எனும் நம்பிக்கையில், எமது தேவைகளை அவர் பாதம் சமர்ப்பிப்போம். 

1. அன்பின் ஆண்டவரே, எமது திரு அவையிலே பணிபுரியும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும் உமது பாதையில் தொடர்ந்து நடந்திடவும், தூய வழியில் உம் மக்களை நடாத்திடவும், தியாகமும், வாஞ்சையும் கொண்டு பணியாற்றிடவும் தேவையான அருளை பொழிந்திட வேண்டுமென்று ...

2. திரு அவையில் உம் மக்களுக்காக பணிபுரிந்து, நீதிக்காக குரல்கொடுத்து, உரிமைக்காக, உறவுக்காக வாழ்ந்து மரித்த அனைத்து குருக்கள் துறவிகளும், உமதண்டை வந்துசேரவும்;, அவர்கள் வழி அனைவரும் நடந்திடவும் அருள்புரிய வேண்டுமென்று ...

3. அன்பின் ஆண்டவரே, எமது இலங்கை திரு நாட்டில் நடைபெற்ற யுத்தத்திலே மரித்துப் போன எமது மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களை உமது சாந்நிதானத்தில் ஏற்றருளும். இவர்களின் பாவங்களை அல்ல மாறாக இவார்களின் தியாகத்தையும், உரிமைக்காக   இவர்கள் சிந்திய இரத்த துளிகளையும் கண்ணோக்கி, நித்திய அமைதியை அளித்தருள வேண்டுமென்று...

4. நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என மொழிந்த இறைவா! கடந்த போரிலே பாதிப்புற்று, தமது அங்கங்களை இழந்தவர்கள், கணவன், மனைவி, பிள்ளைகளை இழந்து தவிப்பவர்கள் அனைவரும் ஆறுதல் பெறவும், இவர்களின் துயரங்கள் துடைக்கும் கரங்கள் ஆசீர்பெறவும் வேண்டுமென்று ...

5. வல்லமையின் இறைவா, நீதிக்காக, தமது உரிமைக்காக குரல்கொடுக்கும் அனைத்து முயற்சிகளும் கைகூடவும், மனிதம் வளரவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், நீதி செழித்தோங்கவும், இதற்காக பாடுபடும் அனைத்து உள்ளங்களும் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று ...

குரு: வல்லமையுள்ள இறைவா! இன்று நாம் அனைவரும் எமது உள்ளத்தில் பொதிந்துகிடக்கும் அனைத்து தேவைகளையும்  உமது பாதம் கண்ணீரோடு ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை நீர் ஏற்றுக்கொள்வீராக. எமது நாட்டின் நல் வாழ்வுக்காக, எமக்கு முன் இரத்தம் சிந்தி மரித்தவர்கள் தங்கள் வாழ்வில் காட்டிய அனைத்து முன்மாதிரிகைகளையும் நாம் ஏற்று நடத்தச் செய்தருளும். நாம் இன்னும் அதிகமாக அன்பையும், நீதியையும், பிறரன்பையும், சம உரிமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளச் செய்தருளும். எமது தேவைகளை ஏற்று அவற்றை நிறைவுசெய்வீராக. எங்கள். 

இறைவார்த்தை (விருப்பமானால்)

முதலாம் இறைவார்த்தை - 1 கொரிந்தியர் 13: 1-13

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க்காண்கிறோம்;

ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருப்பாடல் : 9:1-2, 8-9, 11, 16

பல்லவி: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை அறிவியுங்கள்; 

ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.

உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.

சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்; ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்; பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர்.

நற்செய்தி வாழ்த்தொலி 

யோவான்: 15:12-13

'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 

நற்செய்தி இறைவார்த்தை 

யோவான்: 15: 7-9, 16:19-24

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால், நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

Saturday, 11 May 2024

பாஸ்கா காலம் ஏழாம் வாரம் - 12/05/2024


திருப்பலி முன்னுரை

உமது வார்த்தையே உண்மை. 

இறை இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே! பாஸ்கா காலம் ஏழாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். மீண்டும் இயேசுவின் அன்பு பெறுமதியானது, ஆழமானது, தனித்துவம் நிறைந்தது என இன்றைய மூன்று இறைவார்த்தைகளும்  சான்றுபகிர்கின்றன. இந்த உலகத்திலே, பலர் இறக்கின்றனர், பல குழந்தைகள் பிறக்கின்றன, பல தலைமுறை புதிதாக உருவாகின்றன, பல தலைமுறை இல்லாமலே போகின்றன. ஆனால், இயேசுவின் அன்பு இன்னும் இன்றும் மாறாமலே இருக்கின்றது. அவரது இரக்கம் பொங்கிவழியும் ஊற்றாக திகழ்கின்றது. அவரது அருள் எமக்கு நிறைவாகவே கிடைக்கின்றன. 

மாறுபட்ட எண்ணங்கள், விதண்டா வார்த்தைகள், பொறாமையோடு கூடிய பழிவாங்கல்கள், பிறர்வாழ்வை தடம்புறழ வைக்கும் சூழ்ச்சிகள், நம்மைச் சுற்றி அமைக்கும் குட்டி அதிகாரங்கள், அளவுக்குமீறிய ஆசைகள், பிறருக்காக ஏந்தாத கைகள், சுயநல செபங்கள் என எமது வாழ்வு இன்று முடக்கப்பட்டுவிட்டது. கடவுள் அன்பாய் இருக்கிறார், அந்த அன்பில் உறவு இருக்கின்றது என்பதை தனது சாவினால், உயிர்ப்பினால் எண்பித்தவர் இயேசு. 

அயலாருக்கு எதிரானப் பாவம் கடவுளுக்கும் எதிரானது என்பதை திருத்தந்தை தனது சந்திப்பின் போது கூறியிருந்தார். இன்று நாமும் இயேசுவின் அன்பை அவரது பாஸ்கா மறைபொருளில் காணவேண்டும். அவரது அழியா உணவாகிய உடலிலும் இரத்தத்திலும் காணவேண்டும். எம்மை சந்திக்கும் உறவுகளில் காணவேண்டும், இயற்கையை உவந்தளிக்கும் இவ்வுலகில் காணவேண்டும். இச் சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம். . 

வருகைப் பல்லவி

காண். திபா 26:7-9 'ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும்; என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும். அல்லேலூயா..

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் கெஞ்சி மன்றாடுவதைக் கனிவுடன் எங்களுக்குத் தந்தருள்வீராக் அதனால் மனிதக் குல மீட்பர் உமது மாட்சியில் உம்மோடு இருக்கின்றார் என நம்பும் நாங்கள் அவர் வாக்களித்தபடி உலக முடிவுவரை எங்களோடும் இருக்கின்றார் எனக் கண்டுணரச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

முதலாம் இறைவாக்கு

திருத்தூதர் பணிகள் நூல்: 
1: 15-17, 20ய, 20உ-26

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ளத் தேவையாயிற்று.

பதிலுரைப் பாடல்: 103 

பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.

இரண்டாம் இறைவாக்கு

யோவான் எழுதிய முதல் திருமுகம்: 4: 11-16

அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்..

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தி: 17: 11-19

நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.

இறைமக்கள் மன்றாட்டு

குரு. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளில் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  

1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். அன்பின் இறைவா! நீர் அழைத்தவர்களை தேர்ந்தெடுத்து, உமது பணிக்காக இவ்வுலகிற்கு அனுப்புகின்றீர். உம்மை எதிர்ப்பவர்கள் மத்தியில், உம்மைவிட்டு தவறி போகின்றவர்கள் மத்தியில், பொய்யான விழுமியங்கள், போதனைகள் மத்தியில், உம்மை ஒளியாக தாங்கிக்கொண்டு, உப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் உமது அருளை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. உலக சமாதானத்திற்காக மன்றாடுவோம்;. வழிநடத்தும் இறைவா! உலகின் பல்வேறு கோணங்களிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களால் பாதிக்கப்பட்டு, இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகள், தமது நீதியையும், சுதந்திரத்தையும், உரிமையையும் இழந்துவிடாமல் காத்திட, அருள்புரிய வேண்டுமென்று ...

3. இப்போர்களிலே, பசி, வறுமை, கைவிடப்பட்ட நிலை, நோய், அதிகமான குளிர் என பல்வேறு புறக்காரணிகளால் அவதியுறும் எம் உறவுகள், பல்வேறு உதவும் கரங்களால் காக்கப்படவும், எவ்வித இடையூறும் இன்றி உம்மை தொடர்ந்தும் பற்றிக்கொண்டு வாழ அருள்புரியவேண்டுமென்று ... 

4. இறை அழைத்தலுக்காக மன்றாடுவோம்.  அழைத்தலின் ஆண்டவரே, உம்மிலே அதீத நம்பிக்கைகொண்டு, இவ்வுலகின் வாழ்வுக்காக, அதன் புனிதத்துவத்திற்காக, அதன் உயர்ச்சிக்காக முன்வரும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். தமது சுயநலனை அன்று பிறருக்காகவே வாழ்ந்து சான்றுபகரும் வல்லமையை அளித்திடவேண்டுமென்று ...

5. எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். எமது பங்கிலே நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், மன உழைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இயலாமையில் தவிப்பவர்கள் என அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா குணப்படுத்தும் வல்லமையால் இவர்களை ஆற்றியருளும், தமக்கு முன் தெரியும் அனைத்து தடைகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ....

குரு: அன்பின் ஆண்டவரே, நீரே ஏமது உறைவிடம், நீரே எமது அடைக்கலம் என உம்மையே நாம் நாடி வந்திருக்கின்றோம். உம்மிடம் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. எங்கள்.   

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியினால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:22 - தந்தையே, நாம் ஒன்றாய் இருப்பது போல, அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு வேண்டுகிறேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, எங்கள் மீட்பரே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் தலையாகிய கிறிஸ்துவோடு அவரது உடலாகிய முழுத் திரு அவையும் புனிதமிக்க மறைநிகழ்வுகள் வழியாக இணைந்திருக்கின்றது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள அருள்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

Saturday, 4 May 2024

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வாரம் - 05/-5/2024

 


திருப்பலி முன்னுரை 

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். 

கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்குரிய இறைமக்களே. அன்பின் உயர் மதிப்பாம் சிலுவையில் தனது உயிர் கொடுத்து, அதை தன் நினைவாகச் செய்யுங்கள் என எம்மை பணிக்கும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடங்கள் இன்னும், இன்றும் எம்மை அவர்பால் தொடர்ந்தும் ஈர்க்கின்றது. 

இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு விடுக்கும் சவால் புதியதே. புதுமையான உலக வழக்கங்களுக்கும் போக்குகளுக்கும், போதனைகளுக்கும் புதிய திருப்பமாக அமைகின்றன இன்றைய இறைவார்த்தைகள். தூய ஆவியின் துணைகொண்டு செயற்படும் திரு அவை, அனைவருக்கும் உரியதே என முதல் இறைவார்த்தையும், அன்பில் உலகை கட்டுங்கள், அவ் அன்பால் உலகை வெல்லுங்கள் என எம்மை அன்புசெய்யும் இயேசுவின் உள்ளார்ந்த உணர்வுகளை தெளிவுபடுத்துகின்றது இரண்டாம் மற்றும் நற்செய்தி இறைவார்த்தைகள். அன்பு செயற்படவேண்டும், அன்பு உணர்வுகளாக வேண்டும், அன்பு எமது செயல்களாக வேண்டும். 

மலர்களில் மணம் நிறைந்துள்ளது போல், இன்று எம் உறவுகள் இணைவதில் அன்பு மலரவேண்டும். இயேசு அன்பினால் தன்னைக் கொடுத்தார் அவ் அன்பை நாமும் உணர்ந்து வாழ இன்றைய இப்பலியின் வழியாக மான்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண், எசா 48:20

ஆரவாரக் குரலெழுப்பி, முழங்கி அறிவியுங்கள்: எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மக்களை மீட்டு விட்டார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள்புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக.  உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

திருத்தூதர் பணிகள் நூல்: 
10: 25-26,34-35,44-48

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டது.

இரண்டாம் இறைவாக்கு

யோவான் எழுதிய முதல் திருமுகம்: 4: 07-10

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தி: 15: 9-17

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

பதிலுரைப் பாடல்: 98 

பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம்  நீதியை  வெளிப்படுத்தினார்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது எனும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளுக்கு ஒப்ப நாமும் எம் அயலவர்களை அன்புசெய்ய முன்வருவோம்.  நாம் மற்றவர்களின் நன்மை கருதி, பிறரின் வாழ்வை வைகறையாக மாற்ற எமது தேவைகளை விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம். 

1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது திரு அவையை எல்லா கறைகளில் இருந்தும் காத்தருளும். உமது அன்புப் பணி என்றும் தொடரவும் தூய ஆவியால் அதைக் காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,... 

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, குடும்பமாக இணைந்து வாழ்வது பற்றி ஆழமாக கற்பித்திருக்கின்றீர். இன்று எமது குடும்பங்களை ஆசீர்வதியும். எமது குடும்பத்தில் பிரிவுகள் இன்றி ஒன்றிப்பையும், பிளவுகள் இன்றி பாசத்தையும், வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தையும், சந்தேகம் இன்றி புரிந்துணர்வையும், கோபம் இன்றி அன்பையும், நாம் அதன் கனிகளாக விதைத்திட வரமருளவேண்டுமென்று,...

3. மனதில் அமைதி தேடி அலையும் உள்ளங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, பல்வேறு புறக்காரணிகளால் பாதிப்புற்று மன அழுத்தத்தாலும், சொல்லொன்னா துயரத்தாலும், துன்பத்தாலும் வேதனையுற்று தினமும் வாடும் அனைவருக்கும் வாழ்வின் புதிய வழியைக் காட்டியருளும். வாழ்வது நான் அல்ல, எனில் இயேசுவே வாழ்கின்றார் என்று அவரில் பற்றிக்கொண்டு, அனைத்தையும் தாங்கும் மனத்தையும், துன்புறுத்துவோருக்காக செபிக்கும் பண்பையும் எமக்கு தந்தருள வேண்டுமென்று,...

4. எமக்காக மன்றாடுவோம். இறைவா, எமது வாழ்வை ஆசீர்வதித்தருளும். எமது எண்ணங்கள் சீரானவையாக அமைவதாக. எமது தீர்மானங்கள் ஒழுக்கம் நிறைந்தவையாக அமைவதாக. எமது தீர்ப்புக்கள் நீதியானவையாக அமைவதாக. இதனால் நாம் அமைக்கும் குடும்பமும், சமூகமும், எமது பங்கும் சீரான, முதன்மையான புனிதம் நிறைந்த உலகை கட்டியெழுப்ப அருள்புரிய வேண்டுமென்று, ...

விருப்பமானால்

5. அன்னையின் பரிந்துரைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது நன்மையால் எமது பங்கிற்கும் மறைமாவட்டத்திற்கும் உமது அன்னையாம் மடு அன்னையை அளித்ததற்காக நன்றி கூறுகின்றோம். அத்தாயின் வருகையால் எமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நன்மைத்தனங்களும் ஆசீர்வாதங்களும் கிடைக்கச் செய்தருளும். அவளின் பரிந்துரை என்றும் எமக்காக இருக்கவேண்டுமென்று,...

குரு: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என மொழிந்த இறைவா. உம்மிடம் முழு நம்பிக்கையோடு எமது தேவைகளை ஒப்புக்கொடுக்கின்றோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே எமது அயலான்கள், நண்பர்கள் என உணர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் ஒப்புக்கொடுத்த இவ்வேண்டல்கள் பயன் தருவதாக. எங்கள்.  

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக் இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:15-16 
நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...