திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு - 07/12/2025

  திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணைந்து, அவர் அருளில் நனைந்து, அவரின் பாதம் நாடி வந்திருக்கும் எம் இனிய இறைமக்களே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு, இயேசுவின் வருகைக்கான ஆயத்தத்தை நினைவுபடுத்தி அழைத்து நிற்கின்றது. 

திருவருகைக் காலம் என்பது, எமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய அழைப்பாகும். எமது வாழ்வுக்குள் சென்று, இயேசு எனும் உன்னத கடவுளின் பிறப்பில் மகிழ்ந்திருக்க கொடுக்கப்படும் ஓர் ஆயத்தமாகும். விவிலியத்தில் எதிரொலிக்கப்பட்டு, அறைகூவலிடப்பட்டு, மேலும் இறைவாக்குரைக்கப்பட்ட ஓர் அழகிய நிகழ்வே கிறிஸ்துவின் பிறப்பாகும். இவ்வாயத்தம் இன்றும், இங்கேயும் நடந்தேறுகின்றது. 

இன்றைய இறைவார்த்தைகளின் எழுகுரல் ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் ஆழத்தை தொட்டுச் சென்று, தெளிவற்ற வாழ்வுக்கு, தீர்வற்ற துன்பங்களுக்கு, ஒளியற்ற உலகிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கின்றது. புனித லூக்கா நற்செய்தி நாம் எவ்வகையான ஆயத்தத்திற்கு தயாராக வேண்டும் என்று புனித திருமுழுக்கு யோவானின் அறைகூவல் வழியாக நினைவுபடுத்துகின்றார். 

கிறிஸ்துவை வரவேற்க நாம் எம்மை ஆயத்தம் செய்யவேண்டும்! உலகின் பல கோணங்களில், இன்று அமைதியை தொலைத்த மக்கள் அதிகமாகின்றனர், அவ் அமைதிக்காய் ஏங்குகின்றனர். உள்ளத்தை சுருக்கிக் கொண்டு, கைகளை விரித்து உதவாமல், கண்களை தூரநோக்கில் பார்க்க விரும்பாமல், கால்களை முடக்கிக் கொண்டு வாழும் பலர் மத்தியிலும், கடந்த நாட்களிலே, இயற்கை அணர்த்தங்களின் போது, பலர் செய்த உதவிகள், பலரின் ஆழமான செபங்கள், பலரின் பரிவுள்ளம் தந்த அமைதியும் சந்தோசமும், அவர் வருகையை தகுந்த முறையில் கொண்டாட மேற்கொள்ளப்பட்ட நல் முயற்சிகளே. 

தேங்கிக் கிடக்கும் சேற்று நீர் போல் அல்லாமல், ஓடும் நீரில் உலகம் காணும் பயன்கள்போல், நாமும் எமக்குள் இருக்கும் சந்தோஷத்தைத் தொலைத்துவிடாமல், புதிய மனிதனாய் வாழ ஆரம்பிப்போம். எம்மை முழு ஆயத்தம் செய்ய நாம் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும் வெற்றிக்கான பாதையாக வேண்டுவோம். எமது நல் வாழ்வுக்காக, புனித திருமுழுக்கு யோவான்போல் தம்மை தியாகம்செய்து அர்ப்பணிக்கும் பலருக்காகவும் இன்றைய திருப்பலியில் வரம்கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி - காண். எசா 30:19,30 

சீயோன்வாழ் மக்களே, இதோ மக்களினத்தாரை மீட்பதற்காக அவர் வருவார். உங்கள் இதயங்களின் மகிழ்வில் ஆண்டவர் தமது குரலைக் கேட்கச் செய்வார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகனை எதிர்கொள்ள விரைந்து செல்வோரை உலகம் சார்ந்த செயல்கள் எவையும் தடைசெய்யாதிருப்பனவாக; விண்ணக ஞானத்தின் படிப்பினையோ எங்களை அவருடன் தோழமை கொள்ளச் செய்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.


1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;

அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!

உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி


7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;

நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;

பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி


12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;

ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி


17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!

கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!

அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக!

எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 3: 4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-12

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு

1. அன்பின் பரம்பொருளே இறைவா! எமது திரு அவைக்காக மன்றாடுகின்றோம். திருமுழுக்கு யோவானைப் போல இவ்வுலகின் மக்களை தகுந்த முறையில் ஆயத்தம் செய்யும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். நீதிக்காக, திரு அவையின் தூய்மைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக, வறுமையை எதிர்த்து ஒலிக்கும் குரலாக, அடிமைத்தளையை தகர்க்கும் உரிமைக்கரங்களாக அர்ப்பணிக்கும் அனைவரையும் நிறை ஆசீர்கொண்டு வழிநடத்தியருள வேண்டுமென்று, ...

2. வல்லமையின் இறைவா! உமது வருகைக்காக ஆயத்தம் செய்யும் எங்களை ஆசீர்வதியும். நாமும் எமக்குள் இருக்கும் பாவங்களை தகர்த்தெறிந்து, அன்பை பகிரும் கருவிகளாக, இறை ஆசீரை வழங்கும் நல் உள்ளங்களாக, அழகிய விழுமியங்களை தாங்கும் சிறந்த உதாரணங்களாக, பிறர் உறவை கட்டியெழுப்பும் உழைப்பாளிகளாக நாம் மாற அருள்புரிய வேண்டுமென்று, ...

3. அன்பின் இறைவா! எமது நாட்டுக்காக மன்றாடுகின்றோம். பல்வேறு இயற்கை அணர்த்தங்களில் இருந்து எமது நாட்டை வழிநடத்தும். மேலும் இந்நாட்டுக்காக கரங்கொடுத்து உழைக்கும் நீதியுள்ள தலைவர்களை உருவாக்கும். உமது இறை ஆட்சியை எங்கும் நிலைநாட்ட அர்ப்பணிக்கும் நல்ல குருக்கள் துறவிகளையும் அளித்தருளும். என்றும் எப்பொழுதும் உண்மையை, உயர்வை நோக்கிச் செல்லும் கருவிகளாக இவர்களை உருவாக்கியருள வேண்டுமென்று, ...

அல்லது

இரக்கத்தின் இறைவா! இயற்கை அணர்த்தத்தால் பாதுக்கப்பட்டு வாழ்வாதாரத்தையும், உறவுகளையும் தங்கள் இருப்பிடத்தையும் இழந்து தவிக்கும் அனைத்து மக்களையும் உமது பாதத்தில் கொண்டுவருகின்றோம். என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கும் மக்களின் மனதில் நம்பிக்கையை அளித்தருளும். இறந்த உம் மக்களுக்கு உமது இரக்கத்தால் நித்திய ஒளியில் இளைப்பாறச் செய்தருளும், உறவுகளை, உடமைகளை இழந்து தவிப்போருக்கு உதவிடும் கரங்களை அளித்திட வேண்டுமென்று, ...

4. ஞானத்தின் இறைவா! பரிட்சையை எதிர்நோக்கும் எமது பிள்ளைகளுக்காக மன்றாடுகின்றோம். தமது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் இவர்கள், தங்களை தகுந்த முறையில் ஆயத்தம் செய்யவும், இதனால் இவர்கள் கற்றுக்கொள்ளும் அறிவும், ஆற்றல்களும் இச்சமுகத்தின், இந்நாட்டின் மேலும் இவ்வுலகின் உயர்வுக்கு பயன்தர வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி : பாரூ 5:5; 4:36 

எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில்; உன் கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments