Thursday, 12 June 2025

தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா - 15/06/2025

 தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா


திருப்பலி முன்னுரை 

'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்'

இறை அன்பில் இணைந்திடும் இறை குலமே, இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம். பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்துவரும் ஞாயிறு, அதாவது இன்று நாம் தூய்மை மிகு மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 

படைப்பின் தொடக்கத்திலே இருந்து இவ் இறைபிரசன்னம் இன்றும் எம்மோடு இருக்கின்றது. கபிரியேல் தூதர், அன்னை  மரியாவுக்கு இறைவார்த்தை அறிவித்த போது, இயேசுவின் திருமுழுக்கின் போது என இத்திரித்துவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பதை காணலாம். திரு அவை வரலாற்றிலே காணப்பட்ட பல்வேறு வகையான பேதகங்கள் மத்தியில் அதற்கான பதிலடியாக சங்கங்கள் கூட்டப்பட்டு, பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவைகள் செபங்களாக, விழாக்களாக வழிபாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. பதின்னான்காம் நூற்றாண்டில் தான் இதை ஒரு பெருவிழாவாக கொண்டாடும் படி திரு அவையின் நாட்காட்டியிலே சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

இன்று இப்பெருவிழா எம்மை இறை நம்பிக்கையில் வாழ, வளர அழைக்கின்றது. 'தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' எனும் இயேசுவின் வார்த்தைகள் இன்று இத் திரித்துவத்தை முழுமையாக பற்றுக்கொண்டு வாழ அழைக்கின்றது. இயேசுவை முழுமையாக நற்கருணை வழியாக, அவர் வார்த்தை வழியாக அனுபவிக்கின்ற நாங்கள், இத் திரித்துவத்தையும் முழுமையாக அனுபவிக்கின்றோம் என்பதே உண்மை. 

ஆகவே, நாம் பெற்றுக்கொண்ட அனைத்து அருட்கொடைகள் வழியாக இத்திருத்துவத்தின் பிரசன்னம் எம்மில் செயலாற்றுகின்றது, இதற்காக நாம் நன்றி சொல்லுவோம். இவ்வுலகை வியாபித்திருக்கும் அப்பிரசன்னம், அதை அனைத்து கறைகளில் இருந்தும் காத்து, புனிதப்படுத்தி, இவ்வுலகமும் அதில் வாழும் நாமும், மூவொரு கடவுளை போற்றி, புகழ்ந்து இவ்வுலகமெங்கும் பறைசாற்றிட அருள் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். திரு அவையோடு இணைந்து இப்பெருவிழாவின் பொருள் உணர்ந்து, இவழிபாட்டில் வாழ்வாகிட வரம்கேட்போம்.


வருகைப் பல்லவி

தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக் ஏனெனில் அவர் நம்மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.


திருக்குழும மன்றாட்டு

தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக.


முதலாம் இறைவாக்கு

பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார்.

தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.

வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!


3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்

அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,

4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?

மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி


5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;

மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;

எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள்

அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

சகோதரர் சகோதரிகளே,

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ ” என்றேன்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டதால் நாம், கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். இந்த உரிமையோடு, நாம் எமது தேவைகள் விண்ணப்பங்களை அவர் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவையின் வாழ்வு மலரவும், அதன் புனிதத்துவம் காத்திடவும், உலகின் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகிட உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. எமது பங்கு சமூகம், தங்கள் வாழ்வில் திருத்துவத்தின் பிரசன்னத்தை அறிந்து, அனுபவித்து, பறைசாற்றிட, மகிழ்ச்சியும், நிறை அமைதியும் மிளிர்ந்திட, அதை அனைவரோடும் பகிர்ந்து வாழும் வரமருள வேண்டுமென்று, ...

3. ஜுபிலி ஆண்டை நோக்கி நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் பலனளிக்கவும், ஜுபிலி ஆண்டு வேண்டிநிற்கும் உலக அமைதி, மனித சமத்துவம், உரிமை வாழ்வு, ஏழைகளின் மான்பும் மகத்துவமும், மேலும் யுத்த நிறுத்தம் என அனைத்தும் வெற்றி காண அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கவும், பல்வேறு காலநிலை பிறழ்வுகளில் இருந்து அனைவரையும் காக்கவும், முன்னெடுக்கும் எம் மக்களின் முயற்சிகள் கைகூடவும், பசியும், பட்டினியும் அகலவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

5. பல்வேறு காரணங்களால் நோய்க்குள்ளாகி, நம்பிக்கையின் விளிம்பில் பல்வேறு கோணங்களில், வைத்தியசாலைகளில், இல்லங்களில் தவிக்கும் அனைத்து நோயாளிகளும் நலம்பெறவும், தமது வாழ்வில் பிறக்கும் நம்பிக்கையால் புதிய பாதை அமைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: அன்பும் வல்லமையும் நிறைந்த இறைவா! இவ்விலகில் சிறந்தவர் நீர் ஒருவரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இத் திரித்துவ பெருவிழாவில் மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். உமது பிரசன்னம் எம்மில் செயலாற்றுவதை இட்டு நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று உம் அன்பு பிள்ளைகளாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளும் உமது திருவுளத்தால் நிறைவேறிட எமக்கு அருள்புரிவீராக. எங்கள்.  அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - கலா 4: 

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா. தந்தையே' எனக் கூப்பிடுகிறது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...


No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...