Friday, 27 June 2025

பொதுக் கால 14-ஆம் ஞாயிறு - 06/07/2025

 பொதுக் கால 14-ஆம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்பார்ந்த இறைமக்களே. இயேசுவின் அன்புக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். பொதுக்காலம் பதின் நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் அழகிய வார்த்தைகள் வாழ்வின் ஆழத்தை தொடுவதோடு மட்டும் அல்லாமல், எமது வாழ்வுக்கான படிப்பினையாகவும் அமைகின்றது. "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" என்று எமக்கு அன்பு மொழி கூறும் இறைவன் எம்மை பாதுகாக்கின்றார், எம்மை வழிநடத்துகின்றார். நற்செய்தியில் இயேசு சீடர்களை பணி வாழ்வுக்கு அனுப்புகின்றார். அழைப்பின் பெறுமதியை உணர்த்தி அதன் வரைவிலக்கனத்தை தெளிவுபடுத்துகின்றார். 

இயேசுவின் அழைப்பும் அதற்கான மனிதனின் பதில்களும் இலகுவானதல்ல. அப்பதில்களில் எமது பிரமாணிக்கம் இன்று ஒரு சவாலே. “என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.” எனும் பவுலின் வார்த்தைகள் எமது அழைப்பின் அன்பின் மேன்மையை உணர்த்துகின்றன, எமது அழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான உரைக்கல்லாகவும் அமைகின்றன. 

நாம் பயணிக்கும் இவ்வுலகம் பாதைமாறி செல்கின்றது - பாதைகளை நாம் உருவாக்குவோம். 

எமது சிந்தனைகள் தெளிவற்றதாய் அமைகின்றன - சிந்தனைகளை நாம் ஒன்றிணைப்போம். 

எமது பகைமைகள் ஆழமாக செல்கின்றன - அன்பை நாம் விதைகளாக்குவோம். 

குற்றங்கள் பெருகி, குற்ற உணர்வுகள் அதிகரித்து பிரிவினைகள் பெருகின்றன - புதுமைகளை நாம் உருவாக்குவோம். 

சீடர்களாக, குருக்களாக, இறைவாக்கினர்களாக அழைக்கப்பட்ட நாம் இயேசுவை புதிதாக படைப்போம், அவரைத் தாங்கும் இதயத்தில் இவ்வுலகை புதுப்பிப்போம். இதற்கான வரங்களைக் கேட்டு இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக்கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீரே; அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.

அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்.

நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!


1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;

அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.

3a கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். -பல்லவி


4 ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;

அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;

உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள்.

5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!

அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி


6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;

ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.

7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி


16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்!

கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.

20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!

தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18

சகோதரர் சகோதரிகளே,

நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.

இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!

இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கொலோ 3: 15a,16a

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20

அக்காலத்தில்

இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.

அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

அல்லது குறுகிய வாசகம்


நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


 இறைமக்கள் மன்றாட்டு

குரு: இயேசுவின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் இயேசுவை இவ்வுலகிற்கு சாட்சிகளாக எடுத்துரைப்பவர்களே. இச்சாட்சிய வாழ்வில் நாம் எடுத்துரைக்கும் எமது விண்ணப்பங்கள் வழியாக இவ்வுலகிற்காக, எமது அயலவர்களுக்காக எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.

1. வல்லமையின் ஆண்டவரே! உமது திரு அவையை வழிநடத்தும், ஆசீர்வதியும், பகைமைகளில் இருந்து பாதுகாரும், எதிர்ப்புக்கள் மத்தியில் வல்லமையைக் கொடும். திரு அவைக்கான எமது செபங்கள் உயரசெல்லவும், அதற்காக உழைக்கும் அனைத்து பணியாளர்களும் தமது தியாகத்தால், கடின உழைப்பினால், அர்ப்பணத்தினால் திரு அவைக்கு அணிசேர்க்க வேண்டுமென்று, ...

2. வல்லமையின் ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைத்து பணியாளர்களும் உமது பாதையில் பயணிக்கவும், உமது வார்த்தையை சொல்லவும், உமது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவும், உமது அன்பை உலகெல்லாம் பகிரவும் உமது கருவிகளாய் இவர்களை  பயன்படுத்த அருள்புரிய வேண்டுமென்று, ... 

3. வல்லமையின் ஆண்டவரே! இன்றைய திருப்பலிக்கு பிரசன்னமாயிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதியும். இவர்களின் சாட்சிய வாழ்வினூடாக, சிறந்த திருக்குடும்ப பண்புகளை இவ்வுலகிற்கு கொண்டுசெல்லவும் இவர்களை வழிநடத்த வேண்டும்மென்று, ...

4. வல்லமையின் ஆண்டவரே! கலாசார நவின மயமாக்களுக்குள்ளே நலிவுற்ற சமூகமாக பயணிக்கும் எமது வாழ்வை வழிநடத்தும். நன்மைகள் தீமைகளை தீர்மானிக்கும் நல் அறிவைக்கொடும், பசித்தவர்க்காய் கரம் கொடுக்கும் தாராளமனதைக் கொடும், அதிக பணத்தால் ஆன்மாவை தொலைத்திடா நல் ஆன்மீகத்தைக் கொடும், இதனால் உம்மை என்றும் பற்றிக்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...

குரு. இறைவா இன்றைய நாளுக்காக நன்றி சொல்கின்றோம். இன்று எம்மோடு பேசியதற்காய் நன்றி சொல்கின்றோம். இவ்வுலகின் தீமைகளை எதிர்த்திடும் தூய கருவியாய் நீர் தேர்ந்த இறைவாக்கினர்கள், அப்போஸ்தலர்கள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அனைத்து தூண்டுதல்களுக்காகவும் நன்றி சொல்கின்றோம். எம்மோடு பயணித்தருளும், நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்களை வழிநடத்தும். நாம் ஒரே குடும்ப உணர்வோடு உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து வேண்டுதல்களுக்கும் செவிசாய்த்து அவற்றை நிறைவுசெய்வீராக. எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - திருப்பாடல்: 34:8-9 

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் ; அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.


அல்லது - மத் 12: 8 

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள் - பெருவிழா - 29/06/2025

 புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள் - பெருவிழா

திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்திருக்கும் நல் உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். 

தேனியும் மலரும் இணையும்போது தேன் உருவாவதுபோல், காலையும் மாலையும் இணையும்போது நாளின் முழுமை அடைவதுபோல், மூங்கிலும் காற்றும் இணையும்போது இசை உருவாவதுபோல், மனிதனும் இறைவனும் இணையும்போது இவ் உலகின் புதுமை உருவாகின்றது, மறைபொருள் தெளிவாகின்றது, இறையருள் பெருகுகின்றது. இவ் அதிசயம் தேடி இன்று இப்பலியில் நாம் இணைந்திருக்கின்றோம். பொதுக்காலம் 13ம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கும் நாம் இன்று புனிதர்களான பேதுறு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 

திரு அவையின் இரு பெரும் தூண்களான இவர்கள் தங்களது அழைத்தலுக்கு பிரமாணிக்கமாய் இருந்து, வாழ்வின் தெரிவுகளால் இறைவனை அலங்கரித்தவர்கள். திரு அவையின் நம்பிக்கை வாழ்வுக்கு தமது அறிவாலும், ஞானத்தாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்கள். புனித பேதுறு, திரு அவையின் தலைவராக இருந்து அதை வழிநடத்தினார். புனித பவுல், மறை தூதுப்பயணங்கள் செய்து இறைமகன் இயேசுவை புற இனத்தவர்களுக்கு எடுத்துச் சென்றார். 

இவர்களால் எமது நம்பிக்கை ஆழப்படுத்தப்பட வேண்டும்; வெறுமனே கண்களால் காணும், காதுகளால் கேட்கும் உலகத்தின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் சான்றுபகரும் நம்பிக்கையற்ற பக்தர்களாக அல்லாமல், உள்ளத்து உணர்வுகளுக்கு செவிசாய்த்து, உயரிய விழுமியங்களுக்கு இடங்கொடுத்து வாழும் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும். வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்களாக அல்லாமல், இயேசுவின் பார்வையில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம்கொடுக்கும் அன்பர்களாக மாறவேண்டும். இயேசுவுக்காக வாழ்ந்த இப்பெரும் தூண்களான புனித பேதுறு மற்றும் புனித பவுலைப் போல் நாமும் கிறிஸ்துவுக்காய் வாழும் வரம்கேட்டு  தொடரும் இப்பலியில் மன்றாடுவோமாக. 


வருகைப் பல்லவி

ஊனுடலில் வாழ்ந்தபோது தமது இரத்தம் சிந்தித் திரு அவையை நிறுவியவர்கள் இவர்களே. ஆண்டவரின் கிண்ணத்தில் பருகி, இறைவனின் நண்பர்களானவர்களும் இவர்களே,

உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் வணக்கமும் புனிதமும் நிறைந்த பெருவிழாவில் எங்களுக்குப் பேரின்பம் தந்துள்ளீரே; அவர்களிடமிருந்தே உமது திரு அவை சமய வாழ்வைத் தொடக்கத்தில் பெற்றுக்கொண்டது போல அவர்களின் படிப்பினைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க அருள்புரிவீராக. உம்மோடு. 

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


முதல் இறைவாக்கு

என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.

பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்.

உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.


1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;

வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;

ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி


3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;

அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.


4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது,

இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னைக் கடவுள் அழைத்தார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-20

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடம் இருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரை விட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.

ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவும் இல்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 21: 17d

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர். என் ஆடுகளைப் பேணி வளர்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களோடு உணவருந்தியபின் சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்.

இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: “நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் எமது வலுவின்மையில், இயலாமையில், நம்பிக்கையற்ற நிலையில், வல்லமையாக, புதிய சக்தியாக எமக்கு வலுவளிக்கின்றது. இறைவன் மேல் கொண்ட அன்பை அதிகரிக்கின்றது. அவரது வார்த்தைக்கு செவிமெடுத்தவர்களாக எமது தேவைகளை ஒப்பூக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்பின் இறைவா! திரு அவை வழியாக எமக்கு ஆன்மிக ஊட்டத்தையும், வழிகாட்டலையும், நம்பிக்கையில் நிறைவையும் தருகின்றீர். இதற்காக உழைக்கும் அனைத்து கரங்களையும் ஆசீர்வதியும், எமக்காக செபிக்கும் நல் உள்ளங்களை ஆசீர்வதியும், இதனால், திரு அவை பணியாளர்கள் அனைவரும் உம்மை அன்பு செய்வதன் வழியாக எம்மை நேரிய பாதையில் நடத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. அன்பின் இறைவா! எமக்கு முன்மாதிரிகையாக நீர் தந்த இப்பெரும் புனிதர்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்களிடம் காணப்பட்ட ஞானத்தைப்போலவும், மெய்யான அன்பின் வழி உம்மை உலகிற்கு அறிவிக்கும் ஆற்றலைப் போலவும் நாமும் என்றும் எப்பொழுதும் உமக்காகவே வாழ்ந்து உமக்காகவே மரிக்கும் வரத்தை தந்தருள அருள்புரிய வேண்டுமென்று, ...

3. அன்பின் இறைவா! இவ் அழகிய நாளுக்காக நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். புனித பேதுறு மற்றும் புனித பவுலைப் போல் நாமும் எமது வாழ்விலே நாம், உமது மகன் இயேசுவில் முழு நம்பிக்கை கொள்ளவும், எமது அழகிய குடும்பங்களில் அவரை வாழ்விக்கவும், நன்மைகள் அதிகம் புரிந்து, சொந்தங்கள் அதிகம் சேர்த்து, பஞ்சமும், வஞ்சகமும் வாழ்வில் தொலைத்து புதிய பாதை அமைத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. அன்பின் இறைவா! பாதுகாபிற்காக, அமைதிக்காக, அன்பிற்காக ஏங்கும் எமது நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் நடைமுறைகள் வழியாக, எடுக்கும் புதிய முயற்சிகள் வழியாக புதிய ஆரம்பத்தை கண்டடைவார்களாக. எமது தலைவர்கள் எப்பொழுதும், மக்களை நேரிய பாதையில் வழி நடத்தவும், தியாகத்தாலும், கடின உழைப்பாலும் நல் எதிர்காலத்தை உருவாக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

5. அன்பின் இறைவா! உலகெங்கும் நடைபெறும் யுத்தங்கள் நிறுத்தப்பெற்று, இழப்பினால், கவலையினால், விரக்தியினால் மற்றும் பஞ்சத்தினால் அவதியுறும் மக்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்து காத்திட வரமருள வேண்டுமன்று, ...

குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் உமது சாயலாக பாவனையாக படைக்கப்பட்டு எப்பொழுதும் உம்மை எமது இதயத்திலும், உணர்விலும் சுமந்துகொண்டே இருக்கின்றோம். உம்மில்கொண்ட நம்பிக்கையால் எமது வாழ்வை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவ் நம்பிக்கையால் உம்மிடம் நாம் கொண்டுவந்த அனைத்து தேவைகளுக்கும் செவிசாய்த்து உமது அருளை பொழிந்திடுவீராக. எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளோடு திருத்தூதர்களின் மன்றாட்டும் இணைந்து உம்மிடம் எழுவதாக; அவர்களின் வேண்டலால் நாங்கள் இறைப்பற்றுடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கச் செய்வீராக. எங்கள்.


தொடக்கவுரை: திரு அவையில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் இரு வகைப் பணிகள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில் உமது திருவுளப்படி,

திருத்தூதர்களான புனித பேதுருவும் புனித பவுலும் எங்களை மகிழ்விக்கின்றனர்:

பேதுரு நம்பிக்கையை அறிக்கையிடுவதில் முதன்மையானவராகத் திகழ்ந்து,

இஸ்ரயேலில் எஞ்சினோரைக் கொண்டு

தொடக்கத் திரு அவையை ஏற்படுத்தினார்;

பவுல் அந்நம்பிக்கையை உய்த்துணர்ந்து தெளிவாகப் போதித்து

அழைக்கப்பட்ட பிற இனத்தாருக்கு

ஆசிரியராகவும் போதகராகவும் விளங்கினார்.

இவ்வாறு வெவ்வேறு முறையில்

கிறிஸ்துவின் ஒரே குடும்பத்தை உருவாக்கிய அவர்கள்

ஒன்றாக வெற்றி வாகை சூடி, உலகம் எங்கும் வணக்கம் பெறுகின்றார்கள்.

ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து

நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி

முடிவின்றிச் சொல்வதாவது:

தூயவர்.


திருவிருந்துப் பல்லவி - காண். மத் 16:16,18 

பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் " என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டு வேன்" என்று மறுமொழி

கூறினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திரு உணவால் நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; அதனால் அப்பம் பிடு வதிலும் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நிலைத்து நின்று, உமது அன்பால் உறுதி பெற்று ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் கொண்டவர்களாய் உமது திரு அவையில் வாழ்வோமாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Thursday, 19 June 2025

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா - 22/06/2025

 கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 

திருப்பலி முன்னுரை   

 'அவர் பலியாகப் படைத்த இரத்தம், அவரது சொந்த இரத்தமே. இதனால் கிறிஸ்து, நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார்.'

இன்று நாம் அனைவரும் நற்கருணைக்கு விழா எடுக்கின்றோம். கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.  இயேசுவின் வல்லமையுள்ள பிரசன்னம், வெந்நிற அப்பத்தில் அவரது உடலாகவும், திராட்சை இரசத்தில் அவரது இரத்தமாகவும் காணப்படுவது உண்மையே. இந்த உலகத்திலே, நாம் வழிபடும் ஒரே கடவுளை, எமது ஐம்புலன்களால் அறியமுடியும் என்றால் அது கிறிஸ்து எமக்கு தந்த இந்த நற்கருணையிலேயே. கிறிஸ்துவின் உறுதிதரும், நம்பிக்கைதரும் வார்த்தைகளான,  'இது என் உடல், இது என் இரத்தம்; இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்பது சர்வ சாதாரண வார்த்தைகள் அல்ல. அதுவே எம்மை தெய்வீகத்தோடு இணைக்கும் வார்த்தைகள், உறவிலே உறுதிதரும் வார்த்தைகள், இறைவனை எமது இதயத்தில் தினமும் தாங்கும் வார்த்தைகள். திரு அவை வழியாக கிறிஸ்து தரும் இவ் அற்புதமான அனுபவத்திற்காக நன்றி கூறுவோம். எம்மாவுஸ் பயணத்தில், கிறிஸ்து அப்பத்தை உடைத்து கொடுத்தபோது, சீடர்களின் அகக் கண்களை இயேசு திறந்தார். ஒவ்வொரு முறையும் அப்பத்தை உடைத்துக் கொடுக்கும்போது கிறிஸ்துவின் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் எனும் உறுதிமொழியையும் விட்டுச் சென்றார்.

இதுவே எமது நம்பிக்கை. இதை மெய்பிக்கவே இன்று நாம் இந்த நற்கருணைக்கு பெருவிழா கொண்டாடுகின்றோம்.

இன்று உலகின் பல்வேறு மெய்ஞானத்தின், அறிவியலின், விஞ்ஞானத்தின், கலாசாரமயமாக்கல் மற்றும் பிரிவினைசபைகளின் வளர்ச்சிப் போக்கில் இவ்வெந்நிற அப்பத்தில் கிறிஸ்துவின் பிரசன்னம் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு, அறியாமையின் விதைகள் விதைக்கப்பட்டும் மக்களின் மனங்கள் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. எமக்கிடையே காணப்படும் பல்வேறு வகையான பிரிவுகள், பிளவுகள், போலி வாழ்க்கை, எரிச்சல், பொறாமை, அடிமைத்தனம் என அனைத்துமே இன்று உருவாக்கியிருக்கும் விபச்சார கலாசாரமும், கிறிஸ்துவின் இவ்வுண்மை பிரசன்னத்திற்கு தடைகளே, தூய்மை வாழ்வுக்கு எதிரானவையே. 

இன்று நாம் பயணிக்கும் இவ் ஆபத்தான உலகத்திலே, இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் தாங்கும் இதயங்களை உருவாக்குவோம். அன்பும், தியாகமும் இதன் இரு துருவங்களாக ஏற்று வாழ்வோம். நம்மைச் சுற்றியிருக்கும் அவநம்பிக்கை தரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, கிறிஸ்துவின் நற்கருணைக்கு சான்றுபகரும் புதிய நற்கருணைப் பேளையாக மாறுவோம், இதற்கான இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி - காண். திபா 80:17 

கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, இந்த வியப்புக்கு உரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.


முதலாம் இறைவாக்கு

தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20

அந்நாள்களில்

சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘ உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!” என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.


1 ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை

நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். -பல்லவி


2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்;

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! -பல்லவி


3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்

தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;

வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். -பல்லவி


4 ‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’

என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;

அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நீங்கள் உண்டு பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

அனைவரும் வயிறார உண்டனர்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17

அக்காலத்தில்

இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.

ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு

குரு. கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், கிறிஸ்துவை உடலோடும், ஆன்மாவோடும் உண்டு பருக கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்காகவும் நன்றி கூறுவோம். எமது ஆன்மாவை அன்புசெய்யும் கிறிஸ்து தன்னை தமது மெய்யான உணவாகத் தருகின்றார். அவரிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.    

1. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! உமது திரு அவையை ஆசீர்வதியும். இத் திரு அவையின் வழியாக பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், இவ்வுலகை புனிதப்படுத்தும் தமது பணியில், உமது முழுமையான அன்பையும், தியாகத்தையும், பரிசுத்தத்தையும் தமது வாழ்வின் ஒளிரும் விளக்காக்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஆயுதக் கலாசாரத்தால் வெற்றி நடைபோடும் பல நாடுகளில், அன்பை விதைக்கும் உணர்வுகளைக் கற்றுக்கொடும். பட்டினியால், பஞ்சத்தால் இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக, உதவும் கரங்களைக் கற்றுக்கொடும். மனிதனை மனிதன் மதியாது, மான்பிழக்க வழிதேடும் பொய்க் கலாசாரத்தில், பண்பை, விழுமியங்களை விதைக்கக் கற்றுக்கொடும். இதனால் அவர்கள் என்றும் உம்மை பிரதிபலிக்க அருள்புரியவேண்டுமென்று, ...

3. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஜிபிலி ஆண்டில் பயணிக்கும் எம் அனைவரையும் ஒப்புக்கொடுக்கின்றோம். பாவத்தால், அறியாமையால், தீண்டாமையால், அதீதகோபங்களால் மூழ்கிக்கிடக்கும் எமது பூமியில், நாம் காத்திருக்கும் அமைதியும், சந்தோஷமும், நிறை ஆசீரும் இவ் ஜுபிலி ஆண்டு எமக்கு பெற்றுத்தர வேண்டுமென்று, ...

4. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! எமது நாட்டிலே, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், எமது கலை, கலாசார, பண்புகளை பெருமையோடும் வலிமையோடும், உரிமையோடும் தாங்கும் கருவிகளாக உருவாகுவார்களாக. தமது ஞானத்தால் உணமையை எடுத்துரைப்பார்களாக, தமது அறிவால் புதுமை தேடுவார்களாக, தமது நம்பிக்கையால் கிறிஸ்துவை என்றும் தாங்கவேண்டுமென்று, ...

5. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! நாம் உம்மை அதிகம் அன்பு செய்யும் பிள்ளைகளாக மாறுவோமாக. உமது உடலும் இரத்தமும் தரும் ஆன்ம சக்தி எம்மை இறுதிவரை உமது சீடராக உருவாக்குவதாக. நம் வாழ்வில் சம்பாதிக்கும் அனைத்து நன்மைகளும் உம்மை நிலைநிருத்தச் செய்யவேண்டுமென்று, ...

குரு. நற்கருணையின் ஆண்டவரே! இன்று நாம் பெருமகிழ்வோடு, நற்கருணையில் உமது உண்மைப் பிரசன்னத்தை போற்றிப் புகழ்கின்றோம். உம்மை உடலாகவும், இரத்தமாகவும் உண்னும் அரிய வாய்ப்பை எமக்கு தருவதையிட்டு பெருமைகொள்கின்றோம். நாம் உம்மை திருப்பலியில் பெற்று, உண்டு மகிழ எமக்குள் வாஞ்சையையும் ஆன்ம தாகத்தையும் தாரும். இறைவா, உண்மை உள்ளத்தோடு நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. உமது அன்பு பொங்கிவரும் ஆறாய் எம்மில் பாய்வதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமது மீட்பின் மறைபொருளைக் குறித்துக்காட்டுகின்றன் அதனால் உமது திரு அவைக்கு ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைக் கனிவுடன் தந்தருள்வீராக. 


திருவிருந்துப் பல்லவி - யோவா 6:57 

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன், என் கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உயர்மதிப்புள்ள உம் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் இவ்வுலகில் உட்கொள்வது உமது இறைத்தன்மையைச் சுவைத்து இன்புறுவதன் முன்னடையாள மாய்த் திகழ்கின்றது; அதனால் நாங்கள் அப்பேரின்பத்தில் என்றென்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

Thursday, 12 June 2025

தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா - 15/06/2025

 தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா


திருப்பலி முன்னுரை 

'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்'

இறை அன்பில் இணைந்திடும் இறை குலமே, இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம். பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்துவரும் ஞாயிறு, அதாவது இன்று நாம் தூய்மை மிகு மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 

படைப்பின் தொடக்கத்திலே இருந்து இவ் இறைபிரசன்னம் இன்றும் எம்மோடு இருக்கின்றது. கபிரியேல் தூதர், அன்னை  மரியாவுக்கு இறைவார்த்தை அறிவித்த போது, இயேசுவின் திருமுழுக்கின் போது என இத்திரித்துவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பதை காணலாம். திரு அவை வரலாற்றிலே காணப்பட்ட பல்வேறு வகையான பேதகங்கள் மத்தியில் அதற்கான பதிலடியாக சங்கங்கள் கூட்டப்பட்டு, பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவைகள் செபங்களாக, விழாக்களாக வழிபாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. பதின்னான்காம் நூற்றாண்டில் தான் இதை ஒரு பெருவிழாவாக கொண்டாடும் படி திரு அவையின் நாட்காட்டியிலே சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

இன்று இப்பெருவிழா எம்மை இறை நம்பிக்கையில் வாழ, வளர அழைக்கின்றது. 'தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' எனும் இயேசுவின் வார்த்தைகள் இன்று இத் திரித்துவத்தை முழுமையாக பற்றுக்கொண்டு வாழ அழைக்கின்றது. இயேசுவை முழுமையாக நற்கருணை வழியாக, அவர் வார்த்தை வழியாக அனுபவிக்கின்ற நாங்கள், இத் திரித்துவத்தையும் முழுமையாக அனுபவிக்கின்றோம் என்பதே உண்மை. 

ஆகவே, நாம் பெற்றுக்கொண்ட அனைத்து அருட்கொடைகள் வழியாக இத்திருத்துவத்தின் பிரசன்னம் எம்மில் செயலாற்றுகின்றது, இதற்காக நாம் நன்றி சொல்லுவோம். இவ்வுலகை வியாபித்திருக்கும் அப்பிரசன்னம், அதை அனைத்து கறைகளில் இருந்தும் காத்து, புனிதப்படுத்தி, இவ்வுலகமும் அதில் வாழும் நாமும், மூவொரு கடவுளை போற்றி, புகழ்ந்து இவ்வுலகமெங்கும் பறைசாற்றிட அருள் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். திரு அவையோடு இணைந்து இப்பெருவிழாவின் பொருள் உணர்ந்து, இவழிபாட்டில் வாழ்வாகிட வரம்கேட்போம்.


வருகைப் பல்லவி

தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக் ஏனெனில் அவர் நம்மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.


திருக்குழும மன்றாட்டு

தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக.


முதலாம் இறைவாக்கு

பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார்.

தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.

வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!


3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்

அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,

4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?

மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி


5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;

மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;

எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள்

அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

சகோதரர் சகோதரிகளே,

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ ” என்றேன்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டதால் நாம், கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். இந்த உரிமையோடு, நாம் எமது தேவைகள் விண்ணப்பங்களை அவர் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவையின் வாழ்வு மலரவும், அதன் புனிதத்துவம் காத்திடவும், உலகின் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகிட உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. எமது பங்கு சமூகம், தங்கள் வாழ்வில் திருத்துவத்தின் பிரசன்னத்தை அறிந்து, அனுபவித்து, பறைசாற்றிட, மகிழ்ச்சியும், நிறை அமைதியும் மிளிர்ந்திட, அதை அனைவரோடும் பகிர்ந்து வாழும் வரமருள வேண்டுமென்று, ...

3. ஜுபிலி ஆண்டை நோக்கி நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் பலனளிக்கவும், ஜுபிலி ஆண்டு வேண்டிநிற்கும் உலக அமைதி, மனித சமத்துவம், உரிமை வாழ்வு, ஏழைகளின் மான்பும் மகத்துவமும், மேலும் யுத்த நிறுத்தம் என அனைத்தும் வெற்றி காண அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கவும், பல்வேறு காலநிலை பிறழ்வுகளில் இருந்து அனைவரையும் காக்கவும், முன்னெடுக்கும் எம் மக்களின் முயற்சிகள் கைகூடவும், பசியும், பட்டினியும் அகலவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

5. பல்வேறு காரணங்களால் நோய்க்குள்ளாகி, நம்பிக்கையின் விளிம்பில் பல்வேறு கோணங்களில், வைத்தியசாலைகளில், இல்லங்களில் தவிக்கும் அனைத்து நோயாளிகளும் நலம்பெறவும், தமது வாழ்வில் பிறக்கும் நம்பிக்கையால் புதிய பாதை அமைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: அன்பும் வல்லமையும் நிறைந்த இறைவா! இவ்விலகில் சிறந்தவர் நீர் ஒருவரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இத் திரித்துவ பெருவிழாவில் மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். உமது பிரசன்னம் எம்மில் செயலாற்றுவதை இட்டு நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று உம் அன்பு பிள்ளைகளாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளும் உமது திருவுளத்தால் நிறைவேறிட எமக்கு அருள்புரிவீராக. எங்கள்.  அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - கலா 4: 

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா. தந்தையே' எனக் கூப்பிடுகிறது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...


Wednesday, 4 June 2025

பெந்தக்கோஸ்து ஞாயிறு 08/06/2025

 பெந்தக்கோஸ்து ஞாயிறு


திருப்பலி முன்னுரை 

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இறை அன்பில் நிலைத்திருந்து, நாளும் பொழுதும் அவர் புகழ்பாடவும், அவர் அருள்தனை பெற்று, தூய உள்ளத்தினராய் அவரோடு வாழவும், இறைவரம் வேண்டி, வந்திருக்கும் என் அன்பு உறவுகளே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பெந்தக்கோஸ்து ஞாயிறு தினமாகும். தூய ஆவியின் வருகைதான் எமது திரு அவையின் பிறந்ததினமாகும். இன்றைய நாளை நாம் பெருமகிழ்வுடன் வரவேற்போம். 

திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவி, இன்று உலகமெல்லாம் வியாபித்து, திரு அவைக்கும் இவ்வுலக மாந்தருக்கும் தேவையான அருளையும், கொடைகளையும் கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். திரு அருட்கொடைகளை எமக்கு அளித்து, அதன் வழி, உலகை புனிதப்படுத்தியும், அபிஷேகித்தும், இன்றும் என்றும் எமக்கு வல்லமை அளித்துக்கொண்டிருக்கின்றார். நாம் பலராயினும், பல மொழியினராயினும், நாம் நம்பும் தூய ஆவி ஒன்றே, அவர் அருளும் வல்லமையும், கொடைகளும் ஒன்றே. தூய ஆவியைப் பெற்றே, திருத்தூரத்கள் துணிந்து சென்றனர், தூய ஆவியினாலே பல தீமைகளை வென்றனர், பல தீயவர்களை துணிந்து எதிர்த்தனர். 

இன்று தூய ஆவியைப் பெற்ற இறைமக்களாக இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம். நாம் தூயோராய் வாழ்ந்து, இறை நம்பிக்கையின் தூண்களாய் மிளிர்ந்து, திரு அவையின் புனிதம் காத்து வாழ்ந்திட மன்றாடுவோம். அக்கினியின் வல்லமை எல்லார் மேலும் பொழியப்பட்டு புது உலகம் படைத்திட மன்றாடுவோம், நாம் செல்லும் பாதைகள் தெளிவற்றதாயினும், பொருளற்றதாயினும், பண்பற்றதாயினும், உறவற்றதாயினும், இயேசு ஒருவருக்கே சான்றுபகரும் பணியில், உயிருள்ள ஆற்றல் தரும் தூய ஆவி எமக்கு துணை நிற்க மன்றாடுவோம். உலகெங்கும் போரிடும் படைகளுக்கு ஆயுதங்கள் பலமாயினும், எமது நம்பிக்கையின் வாழ்வுப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தூய ஆவி எம்மை தாங்கி, வழி நடத்த இப்பலி வழியாக வரங்கேட்டு மன்றாடுவோம். 


விருப்பமானால் இதை முன்னுரையோடு இணைத்துக்கொள்ளலாம் ...


2025ம் ஆண்டு ஜுபிலி ஆண்டாகும். இவ்வாண்டு எமது கிறிஸ்தவ வாழ்வுக்கும், கத்தோலிக்க திரு அவைக்கும், ஏன் இவ்வுலகிற்குமே கொடுக்கப்படும் ஒரு சவாலாகும். மாறுபட்ட விசுவாச விழுமியக் கொள்கைகள் மத்தியில், போதை கலாசாரம் மற்றும் பொய்மையான வாழ்க்கை மத்தியிலும்,  இயற்கைக்கு எதிரான மனித சிந்தனைகள் மத்தியிலும், அரசியல் சுயலாபங்களுக்காக நடத்தப்படும் போர்கள் மத்தியிலும், வேலையற்ற, அமைதி, நீதி தேடி அலையும் நிலமை மத்தியிலும், நாடு விட்டு நாடு செல்லும் புலம்பெயர் அகதிகள் மத்தியிலும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வன்முறையான மனிதப்பண்பு படுகொலை மத்தியிலும், இந்த ஜுபிலி ஆண்டு ஓர் அழகிய பாடத்தை இவ்வுலகிற்கு கற்றுத்தர இருக்கின்றது. இவைகள் மாற்றங்காண திருத்தந்தை எடுக்கும் இவ்வழகிய முயற்சியை வரவேற்று அதற்காக இப்பலியின் வழியாக மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - சாஞா 1:7

ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது, அல்லேலூயா.

அல்லது

உரோ 5:5; காண். 8:11

அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா.


"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, இன்றைய பெருவிழாவின் மறைபொருளால் எல்லா மக்களிலும் நாடுகளிலும் உள்ள உமது அனைத்துலகத் திரு அவையைப் புனிதப்படுத்துகின்றீர்; உலகின் எத்திக்கிலும் தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்து, நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட காலத்தில் நீர் செய்தது போல இக்காலத்திலும் தூய ஆவியாரின் அருளால் நம்பிக்கையாளரின் இதயங்களை நிரப்புவீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது: அல்லேலூயா.


1ab என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!

24ac ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!

பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -பல்லவி


29bc நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;

மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி


31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக!

அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!

34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!

நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7. 12-13

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,

வானினின்றுமது பேரொளியின்

அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,

நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,

இதய ஒளியே, வந்தருள்வீர்.


உன்னத ஆறுதலானவரே,

ஆன்ம இனிய விருந்தினரே,

இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,

வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,

அழுகையில் ஆறுதலானவரே.


உன்னத பேரின்ப ஒளியே,

உம்மை விசுவசிப்போருடைய

நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்

உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,

நல்லது அவனில் ஏதுமில்லை.


மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.

வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,

காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,

குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,

தவறிப்போனதை ஆண்டருள்வீர்.


இறைவா உம்மை விசுவசித்து,

உம்மை நம்பும் அடியார்க்குக்

கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,

இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,

அழிவிலா இன்பம் அருள்வீரே.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு. இறை இயேசுவில் என் அன்பு பிள்ளைகளே! இன்று நாம் பெரு மகிழ்வோடு இத் தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் அருளினால் நாம் அவர் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். அவர் தூண்டுதலால், நாம் அவரின் உரிமைப் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரிடம் எமது விண்ணப்பங்கள் வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 


1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் பிறந்திருக்கும் எமது திரு அவை இன்று மகிழ்கின்றாள். இது கடந்துவந்த பல பேதகங்கள் மத்தியிலும், போர்கள் மத்தியிலும், பல அரசியல் கெடுபிடிகள் மத்தியிலும், அழிவுகள் மத்தியிலும் இன்றும் அதன் புனிதம், மகிமை குன்றா, தொடர்ந்தும் வழிநடத்தி வரும் இறை ஆவிக்கு நன்றி கூறுகின்றோம். தொடர்ந்தும், இவ் இறைபணி இத்திரு அவையில் வளர்ச்சிகாணவும், அதற்காக பலர் தம்மை அர்ப்பணிக்கவும் வரம்வேண்டி, ...

2. எமது கிறிஸ்தவ வாழ்வுக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் புதுப்படைப்பாக பிறந்துள்ள நாம், அவர் ஞானம் நிறைந்த வார்த்தைகளால் தூண்டப்பெற்று, அமைதியும் மகிழ்ச்சியும் தரும் அவர் உடனிருப்பால் ஆறுதல்பெற்று, வாழ்வின் அதிசயங்கள் தரும் பாடங்களாக அவர் கொடைகள் மாற்றம் பெற்று, தெய்வபயம் என்றும் எப்பொழுது எமக்குள் ஊற்றெடுத்து இறைவனையே பற்றிக்கொண்டு அவரை விட்டு விலகிடா மனம் தர வேண்டுமென்று, ... 

3. எமது பங்கிற்காக மன்றாடுவோம்.  படைப்பிலே மூவொரு கடவுளாய் ஒன்றித்து செயற்பட்டது போல, உலகம் முடிவுவரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்று உறுதிமொழி அளித்து தூய ஆவியை பொழிந்தது போல, எமது பங்கிலும் உமது வல்லமை பெருகட்டும். பிளவுகள் அகன்று, தவறுகள் களைந்து, வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இல்லாதொழிந்து, பகைமையை தகர்த்தெறிந்து புதிய வழி காணும் மக்களாக எமை மாற்றும். நாம் திருமுழுக்கிலே கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருந்து தொடர்ந்தும் செயற்பட அருள்புரியவேண்டுமென்று, ... 

4. ஜுபிலி ஆண்டுக்காக மன்றாடுவோம்.  திருத்தந்தையோடு இணைந்து, ஜுபிபி ஆண்டை முன்னோக்கி செல்லும் எமது திரு அவை, குறிப்பாக எமது மறைமாவட்டம் முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை ஆசீர்வதியும். ஏழைகள் இனங்காணப்படவும், அடிமைகள் தகர்த்தேறியப்படவும், அமைதியற்ற சூழல் மாற்றம் பெறவும், வன்முறைகள் ஒழியவும், சமத்துவம் எங்கும் எப்பொழுதும் வியாபித்திருக்கவும், தூய ஆவியின் துணை எம் அனைவருக்கும் கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


குரு: எல்லாம் வல்ல இறைவா, நீர் வாக்களித்தபடியே உமது ஆவியை எமக்கு அளித்து எம்மை உமது சுவிகார பிள்ளைகளாக, அரச, குருத்துவ திருக்கூட்டமாக மாற்றினீரே. உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நாம் எப்பொழுதும் தூய ஆவியால் வரம்பெற்று, அவர் தரும் வார்த்தைக்கு அடிபணிந்து செயற்படுவோமாக. எமது உள்ளத்தில் இருப்பவை, எமக்கு முன் வைக்கப்படும் தேவைகள் அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவற்றை ஏற்று, உமது உல்லமையால் எம்மை நிறைத்தருள்வீராக. எங்கள்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் வாக்குறுதிக்கு ஏற்ப தூய ஆவியார் இப்பலியின் மறையுண்மைகளை எங்களுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரே எங்களை நிறையுண்மையை நோக்கி வழிநடத்துவாராக. எங்கள்.


தொடக்கவுரை: பெந்தக்கோஸ்து பெருவிழாவின் மறைபொருள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


ஏனெனில் நீர் பாஸ்கா மறைபொருளை நிறைவுறச் செய்கின்றீர்.

உம் ஒரே திருமகனோடு உறவு கொள்வதால்

உரிமைப்பேறான மக்களாக நீர் ஏற்றுக்கொண்டவர்களுக்கு

இன்று தூய ஆவியாரை வழங்கினீர்.

திரு அவை பிறந்த அந்த நாளிலேயே

அதே ஆவியார் எல்லா மக்களுக்கும் இறை அறிவை ஊட்டினார்;

பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றுசேர்த்து

ஒரே நம்பிக்கையை அவரே அறிக்கையிடச் செய்தார்.


ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க

அனைத்துலக மனிதர் அனைவரும் அக்களிக்கின்றனர்;

அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்

உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி - திப 2:4,11

காள்ளப்பட்டனர்; கடவுளின் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர், மாபெரும் செயல்களைப் பேசினர், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

விண்ணகக் கொடைகளை உமது திரு அவைக்கு தாராளமாய் வழங்கும் இறைவா, நீர் எமக்கு அளித்துள்ள அருளை எம்மில் பாதுகாத்தருளும்; இவ்வாறு தூய ஆவியார் பொழிந்துள்ள கொடை என்றும் வலிமை பெறுவதாக; இந்த ஆன்மீக உணவால் நிலையான மீட்பு எங்களில் வளர்வதாக. எங்கள். 


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...