திருவருகைக் கால முதல் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே!
இன்று நாம் திருவருகைக் காலத்தை ஆரம்பிக்கின்றோம். திரு அவையின் திரு வழிபாட்டுக் காலத்தின் தொடக்கமாகவும் இது அமைகின்றது. இறைமகன் கிறிஸ்து ஒரே ஒருமுறை இவ்வுலகிலே பிறந்தார். அந்த மானிட பிறப்பை நினைவுகூரவும், அவர் வருகைக்காக எம்மை தகுதியான முறையில் ஆயத்தம் செய்யவும் இந்த நான்கு வாரங்களும் எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் பயணிக்கும் எமக்கு, விழிப்பாய் இருந்து செபிக்கவும், அவர் தரும் மீட்பை சுவைக்கவும் ஓர் உள்ளார்ந்த திருப்பயணத்திற்கான அழைப்பாக இது அமைகின்றது.
ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் காலங்கள் போன்று இத்திருவருகைக் காலம் அமைந்துவிடக் கூடாது. இறைமகனை அதாவது இவ்வுலகின் மீட்பரை வரவேற்க நாமும் தயார் நிலையில் இருக்கவேண்டும். நாம் மட்டும் அல்ல, இவ்வுலகத்தையும் இயேசுவின் வருகைகாக ஆயத்தம் செய்ய எம்மால் முடியும்.
இவ்வுலகிலே நம்பிக்கை இழந்து, வாழ்விழந்து, பசியிலும், வறுமையிலும், யுத்தத்தின் கொடூர வலைக்குள்ளும் சிக்குண்டு வாழும் பலருக்கு எனது செபம் ஓர் ஆறுதலாக அமையலாம்! உறவுகள் பிழவுபட்டு, உள்ளங்கள் நொந்துண்டு, கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாய் வாழும் பலரின் வாழ்வுக்கு, எனது ஒவ்வொரு முயற்சியும் திருவருகைக் காலமே! எமக்குள் சிக்கிக் கிடக்கும் பிழையான எண்ணங்கள், பிழையான உறவுகள், பிழையான தீர்மானங்கள் அனைத்திற்கு இக்காலம் ஒரு தீர்வாக அமையலாம்! பணத்தினால் அல்ல, மாறாக குடும்ப பிணைப்பினாலும், எம்மால் உருவாக்ககூடிய மகிழ்ச்சியினாலும் தான் கிறிஸ்துவை மீண்டும் பிறக்கச் செய்யமுடியும் எனும் நம்பிக்கையை தரும் காலமாகவும் இதை மாற்றுவோம்.
எனவே, எமக்கு கிடைக்கப்பெற்ற இத் திருவருகைக் காலத்திற்காய் நன்றி சொல்லி, அதன் அர்த்தத்தையும் நோக்கத்தையும் மெய்ப்பிப்போம். இக்காலம் இன்னும் அதிகமான வரங்களையும் அருளையும் எமக்கு தரவேண்டி தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 24:1-3 என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு :
எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முதல் இறைவாக்கு
தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16
இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ - அதாவது ‘ஆண்டவரே நமது நீதி’ - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி
10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-4: 2
சகோதரர் சகோதரிகளே,
உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 85: 7
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28,34-36
அக்காலத்தில்
மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
1. வல்லமையின் இறைவா! எமது திரு அவையை ஆசீர்வதியும். நம்பிக்கையிலும், அன்பிலும், தியாகத்திலும் கட்டப்பட்ட இத்திரு அவை, தனது புனிதத்திலும், திர்ருவருட்சாதன அருளிலும் பயணிக்கவும், இதன் உயர்ச்சிக்காக உழைக்கும் அனைவரிலும் உமது அருளும் வல்லமையும் நிறைவாக கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...
2. வல்லமையின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், பங்குத்தந்தை, குருக்கள் மற்றும் துறவிகள், அனைவரும் உமது தூய ஆவியின் துணையால், நம்பிக்கையின் திருப்பயணிகளாகிய எம்மை வழிநடத்த தேவையான அருளை பொழிந்திட வேண்டுமென்று, ...
3. வல்லமையின் இறைவா! இத் திருவருகைக் காலத்தில், ஒன்றிணைந்த திரு அவையாக, சமத்துவம் நிறைந்த திரு அவையாக, செபிக்கு திரு அவையாக, மேலும் உறவின் திரு அவையாக நாம் வாழவும் எமது வாழ்வின் வழி, ஒரு புதிய பாதை அமைத்து கிறிஸ்துவின் வருகையில் மகிழ்ந்திட அருள்புரிந்தருள வேண்டும்மென்று, ...
4. வல்லமையின் இறைவா! இவ்வுலகிலே தீமைகளை ஏற்படுத்துவோர், பகைமைக்கான பாதையை உருவாக்குவோர், மனிதத்தை நசுக்கி, மானத்தை விற்று வாழ்வோர், யுத்தங்களால் உயிர்களை கொன்று தீர்ப்போர் என அனைவரும் தங்களை மாற்றவேண்டி மன்றாடுவோம். இதனால், பாவிகளின் மாற்றங்கள் இயேசுவின் வருகையில் பெருமதியாய் அமைய வரமருள வேண்டுமென்று, ...
5. வல்லமையின் இறைவா! காலநிலை மாற்றங்களால் அவதியுறும் எமது மக்கள் தமது நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவார்களாக. பிள்ளைகளின் கல்வி மக்களின் பொருளாதார வாழ்வு அனைத்தும் சீர்பெறவும், உதவும் கரங்கள் உயரவும் அருள்புரிய வேண்டும்மென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருவிருந்துப் பல்லவி :
திபா 84:13 ஆண்டவர் இரக்கம் அருள்வார்; நமது நிலமும் தனது பலனைத் தரும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
சிறப்பு ஆசி உரைகள்
எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவன்,
தம் ஒரே மகனின் வருகையில் நம்பிக்கைகொண்டு
அவரது மறு வருகையை எதிர்பார்த்திருக்கும் உங்களை
அவரது வருகையின் ஒளியால் புனிதப்படுத்தித்
தமது ஆசியால் வளப்படுத்துவாராக.
பதில்: ஆமென்.
இம்மை வாழ்வில் உங்களுக்கு நம்பிக்கையில் உறுதியையும்
எதிர்நோக்கில் மகிழ்ச்சியையும் அன்பில் செயல்திறனையும் அவர் அளிப்பாராக.
பதில்: ஆமென்.
என் மீட்பர் மனிதராகி நம்மிடம் வந்ததால் அகமகிழும் நீங்கள்
அவர் மீண்டும் தமது மாட்சியில் வரும்போது
நிலைவாழ்வின் கொடைகளால் வளம் பெறுவீர்களாக.
பதில்: ஆமென்.
எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.
பதில்: ஆமென்.
அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி