Thursday, 24 October 2024

பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு வாரம் - 27/10/2024



பொதுக்காலம் முப்பதாம் வாரம் 

திருப்பலி முன்னுரை 

அன்பின் பலியாம் கல்வாரிப் பலியில் இணைந்து, அனைத்தையும் தன் மகனின் அன்பின் காணிக்கை வழியாக ஒன்றித்து, புதிய வாழ்வின் பாதையில் இன்று எம்மை தேர்ந்தெடுத்து, அர்ச்சித்து, அரவணைத்து, அருளின் பெருக்கால் எம்மை நிறைக்கும் இப் பலியில் இணைந்து கொண்டாட ஒன்றுகூடி வந்திருக்கின்றோம். தனது வாழ்வை அவரது உடலிலும் இரத்தத்திலும் நாளும் எமக்கு தருவதற்காய் நன்றி சொல்லுவோம், இவ் உன்னத பலியில் இணைந்து இறைவனின் இரக்கத்தையும், வழிநடத்தலையும் வேண்டிமன்றாடுவோம். 

இப்பலியின் முதற்பணியாக, நாம் செவிமெடுக்கும் இறைவார்த்தை எம் ஆன்மிக வாழ்வை வழிநடத்த இருக்கின்றது; இறைவாக்கினர் எரேமியாவின் முதலாம் இறைவாக்கானது தனது தேர்ந்தெடுத்த பிள்ளைகளை ஆறுதலின் தேவனாக இருந்து, தாய்மைக்குரிய பாசத்தோடும், அன்போடும் தேற்றுவதைக் காணலாம். இதுவே அவர்களின் நல்வாழ்வுக்கான செய்தியாகவும் அமைகின்றது. 

எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் இறைவாக்கு, 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என இயேசுவின் முழுமையான குருத்துவத்தையும், அதன் வழியாக இவ்வுலகுபெறும் விலைமதிப்பில்லா அருளையும் அனைத்து மக்களும் பெறும் படி தலைமைக் குருவாம் இயேசு செய்த தியாகத்தை முன்னிலைப்படுத்துகின்றார். 

மாற்கு எழுதிய நற்செய்தி, இயேசு செய்த புதுமையைக் காட்டுகின்றது. இயேசுவை அணுகிச்செல்லும்  ஒவ்வொருவரும், தமது ஆழங்காணா நம்பிக்கை வழியாக நலம்பெறுவர் என்பதை 'உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' எனும் இயேசுவின் வார்த்தை வழியாக எடுத்தியம்புகின்றார். 

எமது இன்றைய வாழ்வு பெரிதும் அலைகள் மோதும் சவால்களை தாங்கியும், கடந்தும் செல்கின்றது என்பது உண்மையே. ஒவ்வொரு மனிதனையும் சந்திக்கும்போது, ஒவ்வொரு நிகழ்வையும் கடந்து செல்லும்போது, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் முகங்கொடுக்கும்போது, எமது வாழ்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிலடங்காதவையே. ஆயினும், இன்றைய வார்த்தைகள் எமக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் தருகின்றது. நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், எமக்குள் செயலாற்றும் தூய ஆவி எமக்கு பலமாக, வலுவாக உயிராக செயலாற்றுகின்றார். நாம் நம்பிக்கையோடே பயணிக்கவேண்டும். இதற்காக இப்பலியில் மன்றாடுவோம். நாம் தீமையின் மக்களல்ல, பொய்மையை தாங்குபவர்களும் அல்ல, மாறாக இயேசுவை, உண்மையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவரை இதயத்தில் தாங்கி வாழும் அவர் மக்கள். இவற்றை நாம் உணர்ந்து, தொடர்ந்தும் பயணிக்கும் வரம்கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 104:3-4 எ ண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக. ஆண்டவரைக் தேடுங்கள், உறுதிபெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியன வளரச் செய்தருளும் அதனால் நீர் கட்டளையிடு வதை நாங்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9

ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ’ என்று பறைசாற்றுங்கள்.

இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.

அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab.2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.


1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,

| நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.

நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி


2cd “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”

என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;

அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி


4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,

எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி


6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது -

அழுகையோடு செல்கின்றார்கள்;

அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது -

| அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே,

தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.

அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.

இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திரு அவையின் மாண்புக்காய் உழைக்கும் திரு அவை பணியாளர்களும், அதன் வளர்ச்சிக்காய் அயராது பாடுபடும் அனைத்து பொதுநிலைப் பணியாளர்களும் இறைவனின் வார்த்தையை இதயத்தில் தாங்கி, நாளும் கொண்டாடும் திருப்பலியால் ஆன்ம ஊட்டம்பெற்று இயேசுவை உலகமெங்கும் வாழ்ந்திடச் செய்யும் வரத்தை அருளவேண்டுமென்று, ...

2. கூட்டொருங்கியக்க திரு அவையாக பயணிக்கும் நாம், இவ்வுலகின் மாற்றங்களை மனதில் இருத்தி அதை ஆழ சிந்தித்து, திரு அவையின் முழுமையான வளர்ச்சிக்கு என்றும் துணையாக பணிபுரிந்திடவும், இத் திரு அவையில் அனைவருமாய், அனைத்துக்குமாய் ஒன்றிணைந்து தூய ஆவியின் மக்களாய் பய்யணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. எமது பங்கின் வளர்ச்சிக்கு இன்றுவரை பாடுபட்டு உழைத்த அனைத்து குருக்களையும் நினைத்து நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். இவர்களின் முயற்சியால் ஏற்பட்ட மாற்றங்கள், அன்பினால் இணைத்த உறவுகள், தமது பலியினால், செபத்தினால் மீட்ட ஆன்மாக்கள் என அனைத்தையும் நன்றியோடு நினைத்து இறை அருளையும் பலத்தையும் தொடர்ந்தும் அளித்திட வேண்டுமென்று, ...

4. எமது நாட்டின் அரசியல் தலைவர்கள் வழியாக எமது நாடு காணும் அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். நடைபெற இருக்கும் தேர்தலில், ஒவ்வொரு ஏழையின் கண்ணீருக்காய், பொருளாதார உயர்வுக்காய், பிள்ளைகளின் உரிமை நிறை கல்விக்காய் உழைக்கும் தலைவர்கள் நாம் தேர்ந்தெடுத்திட எம்மை வழிநடத்தியருள வேண்டுமென்று, ...

5. எம்மை சுற்றி, பல நாடுகளில் நடந்தேறும் யுத்தங்கள் நிறைவுக்கு வரவும், நாளுக்கு நாள் விலைமதிப்பில்லா உயிர்கள் கொல்லப்படுவது முற்றாக நிறுத்தப்படவும், பசியிலும்,  வேதனையிலும் வாழும் அனைவரும் பாதுகாக்கப்படவும் நீரே இவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிக்கு உரிய உமக்கு நாங்கள் அளிக்கும் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பணி எங்களை உமது மாட்சிக்கு இட்டுச்செல்வதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 19: உமது வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக! நம் கடவுளின் பெயராக மாண்புறுவோமாக!

அல்லது

எபே 5: கிறிஸ்து நமக்காகத் தம்மை நறு மணம் வீசும் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை அன்பு செய்தார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அருளடையாளங்கள் தம்முள் கொண்டிருக்கும் அருள் எங்களில் நிறைவு பெறச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்போது அடையாள முறையில் கொண்டாடுவதை நாங்கள் உண்மையாகவே பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி

Thursday, 17 October 2024

பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு - 20/10/2024



பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை 

பகலின் பனியில் பசுமைகண்டு, பறக்கும் பறவைகளின் புதிய ஒலியைக் கேட்டு, மறைந்த சூரியனின் புதிய உதயம் கண்டு, புதிய நாளில் இதயம் நிறைந்த மகிழ்விலும், உரிமைகொள்ளும் நிறைந்த உறவிலும் இன்று இப் பலிப்பீடம் தேடி வந்திருக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறுவாரத்தில் இணைந்து இறைவனின் அருளையும், அவர் ஆசீரையும் பெற வந்திருக்கின்றோம். 

இன்றைய இறைவார்த்தைகள் இயேசுவின் இவ்வுலக வருகைக்கான நோக்கம் என்ன என்பதை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றது. இயேசு யார், அவர் தான் சுமந்த துன்பங்கள் வழியாக, சிலுவை எனும் அவமானத்தின் வழியாக, உலகம் சொல்லித்தராத ஒரு புதிய வழிமுறையினூடாக, இவ்வுலகின் பாவத்தழையை தகர்த்தெறிந்து புதிய வரலாறு காணும் மானுடம் உருவாக்க வந்தார் என்பதை இறைவார்த்தைகள் இன்று சொல்லித்தருகின்றன. "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” எனும் இயேசுவின் வார்த்தைகள் எமக்கும் ஒரு மாற்றுச் சிந்தனையை தருகின்றது. 

நாம் பின்பற்றும் இயேசு, அனைத்து மக்களுக்குமான ஓர் உன்னத அடையாளமே. தனது வார்த்தைகளால் மாத்திரம் அல்ல, தனது உணர்வுகளின், சிந்தனைகளின் வெளிப்பாடாக தன்னை செயலாக்கி, தன்னை கருவியாக்கி, தன்னை இவ்வுலகம் உற்றுநோக்கும் வெளிச்சமாக்கி, வாழ்வைக் கொடுக்கும் உணவாக மாறுகின்றார் இயேசு. நாம் வாழ்வைத் தொலைத்தாலும் இயேசுவில் எம்மை மீண்டும் பெற்றுக்கொள்வோம்; நாம் நிலை தடுமாறி போனாலும், இயேசுவில் எம்மை சீர் செய்துகொள்வோம்; இதுவே எமது நம்பிக்கை, இதுவே எமது தெரிவு. இந்த ஆழ்ந்த சிந்தனைகளை எமது மனதிலே இருத்தியவர்களாக தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்துகொள்வோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 16:6,8 இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில்

ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!


4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;

அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;

அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி


18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;

அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி


20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,

உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே,

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில்

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


 அல்லது குறுகிய இறைவாக்கு

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 42-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளையே நாங்கள் உமக்கு மனம் உவந்து அளிக்க அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருள் எங்களைத் தூய்மையாக்கி, நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக உமது புனிதப்படுத்தும் அருளைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

இறைமக்கள் மன்றாட்டு

1. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்குத் திரு அவையின் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தையை ஆசீர்வதியும். கிறிஸ்தவ நம்பிக்கையை எமது மனங்களில் பதித்து, கிறிஸ்துவை எமக்கு திருப்பலி வழியாக உணவாகத் தரும் இவரின் வாழ்வு உயர்ந்திடவும், அன்பிலும் அருளிலும் சிறந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

2. உயிரின் ஊற்றே இறைவா! இயற்கையின் அழிவுக்குள் அகப்பட்டு வாழும் எமது மக்களை பாதுகாரும். மழையிலும், மண்சரிவிலும் அச்சத்தில் விழித்தெழ முடியாமல் இருக்கும் எமது மக்கள், விரைவில் தமது அன்றாட வாழ்விற்கும் கால்பதித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. உயிரின் ஊற்றே இறைவா! கல்வி எனும் காலத்தால் அழியாத கலையை கற்கும் எமது பிள்ளைகள் அதன் மெய்பொருள் உணர்ந்து தம்மை அர்ப்பணிப்பார்களாக. எமது நாட்டின், இவ்வுலகத்தின் உயர்ர்ந்த, சிறந்த தலைவர்களை உருவாக்கவும், மாறிவரும் உலகின் சிந்தனைகளுக்கு எதிர்கொண்டு செல்லத் தகுந்த தகுதியாளர்களாக தம்மை உருவாக்கிட அருள்புரியவேண்டுமென்று, ...

4. உயிரின் ஊற்றே இறைவா! இவ்வுலகின் தீமைகளுக்கு அடிபணியும் அனைத்து தலைவர்கள், மக்களின் வாழ்வுக்காக தம்மை மாற்றிக்கொள்வார்களாக. பணத்துக்காகவும், பதவிக்காகவும் அடிமை வாழ்வை, போலி வாழ்வை உருவாக்கும் அனைவரும், நிலையானவற்றில் தம்மை செலுத்தி, நீதியையும், சமத்துவத்தையும் சமமாக வாழும் வாழ்வைக் கற்றுக்கொள்ள அருள்புரியவேண்டுமென்று, ...

5. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்கில் வாழும் அனைத்து பிறமதத்தினருக்காக மன்றாடுகின்றோம். அன்பை அணிகலனாகக் கொண்டு, ஒன்றிணைந்து பங்கேற்கும் புதிய சந்தர்ப்பங்கள் உருவாகி, நன்மைகள் பரவும் நல்லுறவுகள் மிளிர்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 32:18-19 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன் பில் நம்பிக்கை கொள்வோரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்; அதனால் அவர்கள் ஆன்மாவைச் சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் அவர்களுக்கு உணவளிக்கின்றார்.

அல்லது மாற் 10:45

பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகப் பலியில் நாங்கள் அடிக்கடி பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வுலக நலன்களின் உதவியால் மறுவுலக நலன்களை நாடக் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Thursday, 10 October 2024

பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு வாரம் - 13/10/2024

 


பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறைவனின் உறவில் இணைந்து, இதயத்தில் அவரை புகழ்ந்து, உயிரிலும் உணர்விலும் எம் உறவோடு கலந்து, அழகுதரும் இயற்கையின் அரவணைப்பில் ஆனந்தம்கொண்டு, அன்பைக் கொண்டாட, அருளை சுவைக்க இன்றைய நாளில் ஒன்றுகூடியுள்ளோம். 

பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறுவாரத்தில் இணைந்திருக்கின்றோம். இப் புதிய, அழகுதரும் நாட்களும் வாரமும் எமது வாழ்வின் உயார்ச்சிப் படிகளை புடமிடுவதாக.  

இறைவனின் வார்த்தைகள் இன்று எமக்கு ஒரு புதிய செய்தியை தருகின்றன. சாலமோனின் ஞான நூல், இவ்வுலகத்தின் அனைத்து செல்வங்களை விட, கடவுள் அருளும் ஞானமே உயர்வானது எனவும், உன்னதமானது எனவும் தமது அனுபவ வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கடவுளின் வார்த்தையின் பெறுமதி என்ன என்பதை விளக்குகின்றது. மாற்கு நற்செய்தியில், இவ்வுலகில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் பொருளற்றது; அவை நாம் தேடும் நிலைவாழ்வை அளிக்கமுடியாதது என மிக அழகிய முறையில் இயேசு செல்வந்தனுக்கு எடுத்துரைக்கின்றார். 

எனவே, பொருள்தேடும் புகழ்தேடும் இவ்வுலகிலே நாம் ஒரு புதிய இலக்கியம் வரையவேண்டும். இறைவனின் வார்த்தையே நல்ல செய்தியாக, ஞானத்தின் உறைவிடமாக, மீட்பு தரும் பாதையாக, எமது இருள் நிறைந்த வாழ்வுக்கான விடியலாக அமையவேண்டும். இந்த ஞானத்தின் வார்த்தையே கருவாகி, மனுவுருவாகி, எம் அனைவரின் உறவாகி இவ்வுலகத்தின் ஒளியாகி உதித்தவர். படைப்பாகி இருந்தவர் படைப்பிற்குள்ளே தன்னைத் தந்து எமக்கு தம்மை வெளிப்படுத்தினார். இதை மகிழ்வோடு ஏற்று வாழுவோம். இயேசுவை புதிதாய் காணுவோம். 

இந்த சிந்தனைகளோடு தொடரும் பலியில் இணைந்துகொள்வோம். 

வருகைப் பல்லவி  திபா 129:3-4

ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளே, உம்மிடமே மன்னிப்பு உள்ளது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைத் தொடர்ந்து வரவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நற்செயல் புரிவதில் என்றும் கருத்தாய் இருக்கச் செய்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 90: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 14a)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.


12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;

அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?

உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி


14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;

அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி


16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!

நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!

ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

 

நற்செய்தி இறைவாக்கு

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” என்றார்.

கிறிஸ்துவின் நற்செய்தி


 அல்லது குறுகிய வாசகம்


உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

கிறிஸ்துவின் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. இறை பணியே தமது வாழ்வு என்றும், இறைமக்களே தாம் காணும் மறு இயேசு கிறிஸ்து என்றும் தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் அனைத்து திரு அவைப் பணியாளர்களையும் இறை அருளால் நிறைத்து வழிநடத்தவும், இறை ஞானத்தால் தமது வாழ்வை கொண்டுசெல்லவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

2. உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் இவ்வேளையில், திரு அவையின் புதிய மாற்றங்களை கிறிஸ்துவின் பெயரால் வரவேற்கவும், திரு அவைக்கு ஆன்மிக உரமூட்டி அவற்றை நெறிப்படுத்தவும் தேவையான அருளையும் வல்லமையையும் அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று, ...

3. உலகில் நடைபெறும் பாரிய யுத்தங்கள் நிறைவுக்கு வரவும், அரசியல் மாற்றங்கள் அனைத்துமே மக்களுக்கு சாதகமானதாக அமையவும், ஒவ்வொரு நாட்டின் இறைமைக்கு  களங்கம் விளைவிக்காமல் அதை பாதுகாத்திட உழைக்கும் அனைத்து தலைவர்களையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

4. எமது நாட்டின் புதிய பரிணாம வளர்ச்சியில், பாடுபடும் அனைத்து தலைவர்களும் எம் நாட்டுக்கான ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. தீமையின் கொடுக்களில் இருந்து எம் மக்களை பாதுகாத்து, நாம் அனைவரும் விரும்பித்தேடும் அன்பின், அமைதியின், நீதியின் பாதையை காட்டியருள வேண்டுமென்று, ...

5. கிறிஸ்தவ நம்பிக்கை இழந்து, வாழ்வை இவ்வுலகப் போக்கோடு தொடர்புகொண்டு வாழும் அனைவரும், இயேசுவை அறியும் அவா பெறுவார்களாக. இயேசுவை மறுதளிப்பவர்கள், விலகிச் செல்பவர்கள், வாழ விருப்பமில்லாதவர்கள், அருள் இழந்து போனவார்கள் அனைவரும் தூய ஆவியின் வல்லமை பெற்று இயேசுவை பறைசாற்றும் வாஞ்சை பெற வேண்டும்மென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 33:11 நன்மை செல்வர் வறுமையுற்றனர், பசியுற்றனர்; ஆண்டவரை நாடுவோருக்கு ஏதும் குறைவுபடாது.

அல்லது

1 யோவா 3:2 ஆண்டவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் நாம் அவரைக் காண்போம்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிக்க உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல எங் கள். எங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Saturday, 5 October 2024

நவநாள் வழிபாடு - தன்னாமுனை - 05/10/2024


இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறை மக்களே!

வாழ்வும் வளமும் செழிந்தோங்கி, இறைபற்றும், இதய அன்பும் நிறைந்து விளங்கும்  தென்னையூர் கிராமத்திலே கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் புனித வளனாரின் பெருவிழாவைக் கொண்டாடும் ஆயத்த நாட்களில் இரண்டாம் நாளாகிய இன்று 'நாளாந்த வாழ்வில் சவால்களைத் தாண்டிச்செல்ல இறைவேண்டலில் நிலைத்திருப்போம்' எனும் கருப்பொருள் எமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. கப்பலேந்தி மாதா அன்பிய உறவுகள் யாரும், இங்கு குழுமியிருக்கும் அனைத்து இறைமக்களோடும் இணைந்து இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுத்து நன்றி சொல்லுவோம். 

இன்று, நாம் எமது சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் இறைவார்த்தைப் பகுதி மிக ஆழமானது. சபை உரையாடல் நூல் தரும் இளையோருக்கான அறிவுரை எமது ஞானக் கண்களை திறக்கின்றது. "உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை" எனும் வார்த்தை நாம் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளுக்கு முன், அனுபவங்காளாக மாறவேண்டும் என வலியுறுத்துகின்றார். இதுவே நாம் செய்யும் இறைவேண்டலின் தெளிவான சுருக்காமாகும். 

மத்தேயு நற்செய்தியாளர், பொருட்செல்வங்களை அல்ல, அகச்செல்வமாகிய இறைவனை சேகரிக்கவேண்டும் என எமது அனைத்தையும் திறந்த வாழ்வை, நிலை வாழ்வுக்கான வழியாக காட்டி நிற்கின்றார். 

ஆகவே, இளைஞர்களே! விளித்தெழுங்கள். இளைஞரான இயேசு இன்று உங்களை அழைக்கின்றார். இவ்வுலகின் பல கோடி மக்களை திரும்பிப்பார்க்கச் செய்தவர் இவ் இளைஞன் இயேசு. யூத சட்டங்களுக்கு அப்பால், மனித இதயத்தை ஆழ புரிந்துகொண்டவர் இவ் இளைஞன் இயேசு. இறுகிப்போன மனங்களை இனங்கண்டு, அதற்குள் இதய அன்பு மிக உன்னதமானது என்பதை புரியவைத்தவர் இவ் இளைஞன் இயேசு. எல்லாவற்றையும் அர்ப்பணமாக்கி, தியாகமே மேலானது என ஆயிரக்கணக்கான இளைஞர்களை பின்பற்ற செய்தவர் இவ் இளைஞன் இயேசு. இன்று நாமும் எமது இதயங்களைத் திறந்து, அவர் அழைத்தலுக்கு செவிகொடுப்போம். 

இன்றைய நாளிலே எம்மோடு இணைந்து எமக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அமல மரித் தியாகிகள் சபையின் குரவர், அருட்தந்தை பிலிப் ரஞ்சனகுமார் அடிகளாருக்காக மன்றாடுவோம். இயேசுவை இவ்வுலகமெங்கும்  எடுத்துச் செல்லும் அவர் பணிவாழ்வு என்றும் நிறைவுபெற மன்றாடுவோம். அத்தோடு எமது  பங்குதந்தையர்கள், துறவிகள் அனைவருக்கும் இறை ஆசீர்கேட்டு மன்றாடுவதோடு, கப்பலேந்தி மாதா அன்பியத்தினரையும் மற்றும் அனைவரையும் இப்பலியிலே இணைத்து மன்றாடி இறைவரம் கேட்டுநிற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு

பதிலுரையாக: கேட்டருளும் ஆண்டவரே கேட்டருளும் எம் மன்றாட்டை தயவாக கேட்டருளும் 


1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: திரு அவையின் இறை நம்பிக்கையை களங்கம் இல்லாமல் பாதுகாக்கவும், இறை விருப்பத்திற்கேற்ப, மக்களை அவர்வழி நடத்திடவும் பணியாளர்கள் அனைவருக்கும் அருள்புரிந்திட வேண்டுமென்று, ...

2. எமது மறையுரைஞருக்காக மன்றாடுவோம்: அமதிகளின் விருவாக்கிற்கொப்ப, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபடவும், ஆற்றலையும் ஞானத்தையும் இவருக்கு அளித்திடவேண்டுமென்று, ...

3. எமது இறைமக்களுக்காக மன்றாடுவோம்: புனித வளனை முன்மாதிரியாகக் கொண்டு தமது வாழ்வில் இறைவரங்களை நிறைவாகப் பெறவும், இக்கிராமத்தின் வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைக்கும் ஆற்றலை அளித்திடவேண்டுமென்று, ...

4. எமது இளைஞர்களுக்காக மன்றாடுவோம்: இயேசுவை இலக்காகக்  கொண்டு, அவர் வாழ்வை பகிர்ந்து வாழும் உயரிய கொடையை வரங்களாகப் பெற்ற இவ்விளஞர்கள்,  என்றும் நேர்மைறை தீர்மானங்களுக்கு செவிசாய்க்கவும், சமய-சமூக அக்கறைகொண்டு வாழவும், நவீன உலகிற்குள் தொலைந்திடாமல் இருக்கவும் வேண்டுமென்று, ...

5. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்தேறும் யுத்தங்கள் நிறைவுபெற மன்றாடுவோம். சுயநல அரசியல் நிலை மாறி, நாடுகளில் வாழும் மக்களின்  நலனுக்காக உழைக்கும் தலைவர்கள் உருவாகி, உரிமைகளை மதித்து, உணர்வுகளுக்கு செவிகொடுத்து செயற்பட  தேவையான அருளை அளித்திடவேண்டுமென்று, ...

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Wednesday, 2 October 2024

பொதுக் காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு 06/10/2024


பொதுக் காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை 

"நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும்" 

இறை இயேசுவில் அன்புள்ள என் உறவுகளே! இயேசுவின் பெயரால் நாம் உங்களை இக்கல்வாரிப் பலிக்கு அழைக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு வாரத்தில் இணைகின்றோம். மகிழ்வோடு தொடங்கும் இன்றைய நாளில், இறை அன்பும் இறை வல்லமையும் எம்மை ஊக்கப்படுத்துவதாக, திடப்படுத்துவதாக எம்மை நிறைவாழ்வுக்கு அழைத்துச் செல்வதாக. 

இன்றைய வார்த்தை வழிபாடு இறை-மனித உறவின் மேன்மையை எடுத்தியம்புகின்றது. இறைவன் மனிதனைப் படைத்து அவர்களை இவ்வுலகின் உயர்ந்த படைப்பாக்கி, தமது ஒன்றிப்பின் வழி, இறை ஒன்றிப்பை காட்டவும், தமது அன்பின் வழி, இறை அன்பைக் காட்டவும், தமது மேன்மையான வாழ்வின் வழி இறை தன்மையை எடுத்தியம்பவும் மனிதனுக்கு இறை அருளைக் கொடுத்து அருட்கொடையின் மான்பினை உணர்த்துவதை தொடக்க நூலில் காணலாம். "தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே" என்று தன்னை மனிதனுக்கு முழுமையாகக் கொடுத்த இறைவனின் வல்ல செயலைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர். இன்றைய நற்செய்தியில், திருமண அருட்கொடையின் ஒன்றிப்பு, ஒரே நிலைத்தன்மை, பிழவுபடாத் தன்மை குறித்து மாற்கு நற்செய்தியாளர் பேசுகின்றார். 

 உடலும் உயிரும் உறவிலே இணையும் போது, உண்மையும், மெய்மையும் உள்ளத்தால் உணரும் போது, படைத்த இறைவன் எம்மில் படைப்பாய், பண்பாய், அன்பாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அன்பை தரும் அழகிய இறைவன், தன்னை எம்மில் ஒருவராக்கி இன்னும் வியாபித்துக்கொண்டிருக்கிறார். இதுவே இன்றைய வாசகங்களின் மெய்பொருளாய் அமைகின்றது.

எனவே! திருமண உறவால் பெறும் வாழ்வின் வளங்களை உணர்ந்துகொள்வோம், அதன் நோக்கங்கள் பற்றி தெளிவில்கொள்வோம்,  உணர்வுகளில், கருத்துக்களில், கொள்கைகளில், வாழ்வியல் அனுபவங்களில் பெறும் வேறுபாடுகளின் மத்தியிலும் பண்புகளைக் கற்றுக்கொண்டு, அன்பிலே இணைந்துகொள்வோம். இவ்வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி, வரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். எஸ் 4:17 ஆண்டவரே, அனைத்து ம் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன; உமது திருவுளத்தை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்துக்கும் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தகுதிக்கும் நாங்கள் விரும்பிக் கேட்பதற்கும் மேலாகவே உமது மிகுதியான பரிவிரக்கத்தால் எங்களுக்கு அருளுகின்றீர்; அதனால் எங்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து மனச்சான்றுக்கு அச்சம் விளைவிப்பவற்றை மன்னித்து, நாங்கள் கேட்கத் தயங்கும் மன்றாட்டை நிறைவேற்றுவீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 5 காண்க)

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!

2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!

நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி


3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;

உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி


4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.

5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!

உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி

6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக!

இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே,

நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது.

கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. என்றும் வாழும் இறைவா! உமது திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். உலமெல்லாம் சென்று பல வழிகளில், பல துறைகளின் மூலம், பல்வேறு பணிகள் ஊடாக உமது நற்செய்தியை பரப்பிடும் அனைத்து உள்ளங்களையும் நிறைவாக ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. என்றும் வாழும் இறைவா! உமது ஆசீரால் அமையப்பெற்ற எமது குடும்பங்களுக்காக நன்றி கூறுகின்றோம். நாளும் நாம் சூழலில், இடையூறுகள் மத்தியில், உமது அன்பையும், திரித்துவ ஒன்றிப்பையும் வெளிப்படுத்தும் நல்ல குடும்பங்களாக இவைகள் மாற்றம் பெற்றிட வேண்டுமென்று, ...

3. என்றும் வாழும் இறைவா! எமது நாட்டுக்காக நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் எதிர்பார்ர்க்கும் அடிப்படை மாற்றங்கள் அரசியல் தலைவர்கள் ஊடாக நிகழ்ந்தேறவும், எமது நாட்டிலே மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழும் வரத்தை எம் மக்களுக்கு அளித்திடவேண்டுமென்று, ...

4. என்றும் வாழும் இறைவா! எமது வாழ்வின் வளர்ச்சிக்காக மனம் நிறைந்து துணைபுரியும் அனைவருக்காகவும் நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையில் உடன்சென்று, உதவிகள் பல புரிந்து, கரம்கொடுத்து தூக்கிவிடும் அனைவருக்கும் உமது ஆசீரைக் கொடுத்தருள வேண்டுமென்று, ...

5. என்றும் வாழும் இறைவா! எமது பங்கில் நோய்வாய்ப்பட்டிருப்போருக்காக மன்றாடுகின்றோம். பல்வேறு அக,புற காரணிகளால் நோய்வாய்ப்பட்டு தினமும் வேதனையுறும் அனைவருக்கும் கரங்கொடுக்கும் இறைவனாக, உதவிபுரியும் நண்பனாக, குணமளிக்கும் மருத்துவனாக இருந்தருள வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து நாங்கள் கொண்டாடும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

ஆண் டவரில் நம்பிக்கை வைப்போருக்கும் அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்!

காண். 1 கொரி 10:17

அல்லது

அப்பம் ஒன்றே. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்குகொள்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அருளடையாளத்தால் புத்துணர்வும் ஊட்டமும் பெறுகின்றோம்; இவ்வாறு நாங்கள் அவராகவே மாறிட எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...