திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே! இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அழைத்து நிறகின்றேன். இன்று பொதூக்காலம் பதினைந்தாம் ஞாயிறு வாரத்தில் நாம் கால் பதிக்கின்றோம். ஆண்டவர் நாளுக்கு நாள், காலத்திற்குக் காலம், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக மனிதர்களை தேர்ந்த்டுத்து, உருவாக்கி, அவர்களை தமது பணிக்காக அனுப்புவது உண்மையே. இதை இன்றைய இறைவார்த்தைகள் மெய்ப்பிப்பதை காணலாம்.
இன்றைய முதலாம் இறைவார்த்தையிலே, ஆமோஸ் இறைவாக்கினர் அழைப்பைப் பெற்று வடநாட்டுக்கு இறைவாக்குரைக்க செல்வதை காணலாம். சீரும் சிறப்புமாய் இருந்த நாட்டிலே, வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்ததால் இறைவாக்குரைப்பதன் அவசியம் தெளிவாகின்றது. இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.
புனித பவுலின் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில், கடவுளால் அழைக்கப்பெற்ற ஒவ்வொருவரின் தனித்துவத்தையும், மாண்பையும், அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதைக் காணலாம். இத்திருமுகத்தில் பல உருவகங்கள் இடம் பெறுகின்றன. திருச்சபையை - உடலாகவும், கட்டடமாகவும் மணமகளாகவும், கிறிஸ்துவை - தலையாகவும், மூலைக்கல்லாகவும், மணமகனாகவும் உருவகிக்கப்படுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்தல் பற்றிப் பலமுறை சொல்லப்படுகிறது; கடவுளின் அருள் வலியுறுத்தப்படுகின்றது. அனைத்தும் கிறிஸ்துவின் அன்பு, தியாகம், மன்னிப்பு, அருள், தூய்மை என்னும் அடிப்படையில் பார்க்கப்படுகின்றன.
மாற்கு எழுதிய நற்செய்தி இறைவார்த்தையிலே பணிக்காக அனுப்பப்படுவோரின் பண்புகள் குறித்து விதைந்துரைக்கப்படுகின்றது. இறை பணியாற்றுபவர்கள் இறைவன் விரும்புவதை செய்ய பணிக்கப்படுகின்றார்கள்.
எனவே, இவ் இறைவார்த்தைகளின் அடிப்படையில், இறை பணிசெய்ய அனுப்பப்படுவது காலத்தின் தேவையாகவும், சமகால சவாலாகவும் காணப்படுகின்றது.
- விரும்பியதை செய்யும் இவ்வுலகம், இறை விருப்பத்தை அறிந்துசெய்ய பணிக்கப்படுவது சவாலே! இதற்கு ஆமோஸ் ஒரு முன்னுதாரணம்.
- விருப்பமான இடங்களுக்கு சென்று சௌகரியமான வாழ்வுவாழும் இவ்வுலகம், எதை எடுத்துச் செல்ல வேண்டும், எதை தவிர்க்கவேண்டும் என்பது இன்றைய சவாலே.
- நமது வாழ்வே போதுமானது, நமது சுகமே தேவையானது என்று சுயநலத்தில் வாழும் இவ்வுலகம், பிறர் பாவத்தை மன்னித்து, பிறர் தவறை சுட்டிக்காட்ட முன்னெடுக்க விடுக்கும் இயேசுவின் அழைப்பு இன்று எமக்கு சவாலே.
- இறுதியாக, இயேசுவின் தலைமையில் பணியாற்றி, தாழ்ச்சியுடன் அனைத்தையும் துறந்து, அவர் விருப்பத்தை சிரமேற்று முன்னெடுக்க என்னை அர்ப்பணிப்பது இன்றைய சவாலே.
எனவே எமது அழைப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம், அழைப்புபெற்று பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் தமது அழைப்பை செவ்வனே உணர்ந்து இறைவனுக்கேற்ப தம்மை உடைத்து, அனைத்தையும் துறந்து, அனைவருக்காகவும் பணியாற்றிட இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும்போது நான் நிறைவு பெறுவேன்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவார்த்தை
என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு. இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15
அந்நாள்களில்
பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 7)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
8ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி
10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி
12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி
இரண்டாம் இறைவார்த்தை
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.
கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-10
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபே 1: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
நற்செய்தி இறைவார்த்தை
இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13
அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.
அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
கிறிஸ்துவின் நற்செய்தி.
இறைமக்கள் மன்றாட்டு
1. தாய்த் திரு அவைக்காக மன்றாடுவோம்:
இறையரசின் வளமைக்கும், ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் பயணிக்கின்ற உம் மறை உடலாகிய திரு அவையின் திருப்பணியாளர்கள் யாவரும் இறையரசின் மதிப்பீடுகளை தம் அர்ப்பண வாழ்வில் என்றும் கருத்தூன்றி வாழ வரமருள வேண்டுமென்று, ...
2. உலக அமைதிக்காக மன்றாடுவோம்:
யுத்த பூமிகள் மனம் மாறவும், அரசியல் தலைவர்கள் மத்தியிலே மனித நேயம் மலரவும், இன, மத, மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து நாம் யாவரும் இறைவனின் உன்னதமான படைப்பின் சிகரங்கள் என்பதை உணர்ந்து வாழத் தேவையான ஞானத்தின் ஆவியை மண்ணகத்தின் மீது பொழிய வேண்டுமென்று, ...
3. மறைபரப்பு பணியில் உள்ளவர்களுக்காக மன்றாடுவோம்:
வாழ்வின் பல்வேறு சூழல்களின் மத்தியில் சென்று, இறைவாக்கு உரைத்திடும் அனைத்து மறைபரப்பாளர்களும் உம் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, உம் பணிக்காகவே தாங்கள் யாவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை குன்றா நற்செய்தியின் ஒளியில் சீர்தூக்கிப்பார்த்திட தயைகூர வேண்டுமென்று, ...
4. இறை நம்பிக்கையில் வாழாதவர்களுக்காவும், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்போருக்காகவும் மன்றாடுவோம்:
உலக மீட்பரான இயேசுகிறிஸ்துவின் ஒளி இவர்கள் வாழ்வினைத் தொடவும், இறைபக்தி மலரவும், அன்றாட வாழ்வியல் அனுபவங்கள் மூலமாக ஒரே இறைவனை கண்டு அனுபவிக்கவும் அருள்கூர வேண்டுமென்று, ...
நன்றி அருட்சகோ. அருண், அமதி.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக. எங்கள்.
'
திருவிருந்துப் பல்லவி காண். திபா 83:4-5
படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
அல்லது. யோவா 6:56
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச். ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment