Friday, 30 May 2025

புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா - 31/05/2025

புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா  


திருப்பலி முன்னுரை 

  'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'

இயேசுக் கிறிஸ்துவில் அன்பு இறைமக்களே! இயேசுவை கருவில் சுமந்த தாய் அன்னை மரியாவின் மகிழ்வில் நாமும் இன்று இணைந்து அதை பார் உலகமெங்கும் பரப்பிட கூடிவந்துள்ளோம். இன்று அன்னையாம் திரு அவை அன்னை மரியாள் எலிசபேத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடுகின்றாள். இவ்விழா பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே வழிபாட்டிற்குள் இணைத்து கொண்டாடப்படுகின்றது. திருத்தந்தை ஆறாம் உர்பான் இவ்விழாவிற்கான சிறப்பு தனித்துவத்தை அளித்து அதை இறைமக்கள் அனைவரும் கொண்டாடும்படி அழைத்தார். எலிசபேத் அம்மாள் அன்னை மரியாளை, பெண்களுள் ஆசீர் பெற்றவள் என்றும், ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டதால், அவள் பேறுபெற்றவள் என்றும் வாழ்த்தி அன்னை மரியாளை உலகின் நட்சத்திரமாக எண்பிக்கின்றாள். இன்று நாம் கொண்டாடும் இவ்விழாவில் எம்மையும் இணைத்துக் கொள்வோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவர் வார்த்தையில் நிலைத்து நிற்கும் நாம் ஒவ்வொருவரும் பெறுபெற்றவர்களே! இவ்வாசீரில், அன்னையும் எம்மோடு சேர்ந்து பயணிக்கின்றாள். அன்னையின் மகிழ்வில், இவ்வுலகம் ஒரு புதிய வரலாற்றை கண்டது, அவளின் சந்திப்பில், ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது, அவளின் தூய்மையில், இறைவன் புதிய வாழ்வைக் எமக்குக் கொடுத்தார். இந்த சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் வரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண், திபா 6:1:16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, அனைவரும் வாரீர் கேளீர்! ஆண்டவர் என ஆன்மாவுக்குச் செய்தது எத்துணை என்பதை எடுத்துரைப்பேன் 

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனைக் கருத்தாங்கிய புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கத் தூண்டுதல் தந்தீNர் அதனால் நாங்கள் தூய ஆவியாரின் ஏவுதலுக்குப் பணிந்து, அந்த அன்னையோடு உம்மை என்றும் போற்றிப் பெருமைப்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 
3: 14-18

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

பதிலுரைப் பாடல்: எசாயா: 12 

பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

நற்செய்தி இறைவாக்கு

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
1: 39-56

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

இறைமக்கள் மன்றாட்டு

குரு. அன்னையின் அன்பு சந்திப்பில் எமது தேவைகளை அவள் வழியாக இறை தந்தையிடம் எடுத்துச் சொல்லி மன்றாடுவோம். எமக்காக இன்றும் பரிந்துபேசும் தாய், எம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள் எனும் நம்பிக்கையில் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.   

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: இறைவனின் அரசை இவ்வுலகெங்கும் பரப்பி, இயேசுவின் நற்செய்திற்கு பிரமாணிக்கமாய் வாழும் அனைவரையும், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டால் ஊந்தப்பட்டு, தொடர்ந்து பணியாற்றிடும் அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: இறைவா, அன்னை மரியாவையும் புனித வளனாரையும் கொண்டு அழகிய குடும்பம உணர்வையும், விழுமியத்தையும், அன்பையும் எமக்கு காட்டினீரே.  குடும்பம் என்பது நீர் கொடுத்த கொடை, அதை உருவாக்கி, உறவுகொண்டாட செய்தவர் நீர் என உணரவும், குடும்பம் தருகின்ற பண்புகள், விழுமியங்கள், புன்னியங்கள், ஒழுக்கங்கள் என்பன அதன் அத்திவாரமாக இருப்பதாக. எமது தாயும் தந்தையும் இப்பண்புகளால் எமை அழகுபடுத்தி, இவ்வுலகு அறியச் செய்பவர்களாக மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்னையின் பக்தர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, உமது அன்னையை எமக்கு தாயாக தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அன்னையின் வழி நடந்து, அவள் கூறும் செய்திகளைக் கேட்டு, அவளின் உண்மையான உணர்வுகளுக்கு செவிசாய்த்து, தினமும் திருச்செபமாலையை அன்பின், புனிதத்தின், வாழ்வின் செபமாகச் சொல்லி அவளின் வழி உம்மிடம் வந்துசேரும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. நலிவுற்ற குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, இன்று பண ஆசை, பொருள் ஆசை மீது நாட்டம் கொண்டு குடும்ப பலம் இழந்து, குடும்ப அன்பு இழந்து, குடும்ப ஒன்றிப்பு இழந்து வாழும் எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். குடும்ப சச்சரவுகளால், பிரட்சனைகளால், பொருளாதார நெருக்கடியினால், சந்தேகங்களினால், பண மோகங்களால், விவாகரத்து வரைக்கும் பிரிந்து சென்ற குடும்ப தம்பதியினர், குடும்பங்களை இணைத்து வைத்தவர் இயேசு என்பதை முழுமையாக அறிந்து தமது வாழ்வின் உயர் பொறுப்பாகிய குடும்பங்களை கட்டிக்காக்கும் வல்லமை கிடைக்கவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா! உம் தாயாகிய அன்னை மரியாவை எமக்கு ஒரு வரலாற்றின் தாயாக தந்தீரே, உமக்கு நன்றி கூறுகின்றோம். அத்தாய் குடும்பத்தை பக்குவமாக பேணிப் பாதுகாத்து, பராமரித்து, இறைதிட்டத்திற்கு ஏற்ப இயேசுவை வளர்த்து கையளித்தது போல, எமது குடும்பங்கள் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் உம் பாதம் வந்து சேர்வனவாக. குடும்பங்கள் இவ்வுலகிற்கு கொடுக்கும் உயரிய கொடையாகிய பிள்ளைகளை ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து அவர்களுக்கு தேவையான வழி நடத்துதலை கொடுத்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் புனிதமிக்க அன்னை புரிந்த அன்புப் பணி உமக்கு ஏற்புடையதாய் இருந்தது; அது போல நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலி உமது மாட்சிக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பது அவரது பெயர்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு அரும்பெரும் செயல் செய்யும் உம்மை உமது திரு அவை போற்றிப் பெருமைப்படுத்துவதாக் மரியாவின் வயிற்றில் இருந்த இயேசுவைப் புனித யோவான் அக்களிப்போடு கண்டுகொண்டது போல், என்றும் வாழும் அதே இயேசுவை உமது திரு அவை இவ்வருளடையாளத்தில் பேரின்பத்துடன் கண்டுகொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா -1/06/2025

ஆண்டவரின் விண்ணேற்றம் - பெருவிழா 


திருப்பலி முன்னுரை 

உமது வார்த்தையே உண்மை. 

இறை இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே! பாஸ்கா காலம் ஏழாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். இன்று கிறிஸ்து இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா ஆகும். இயேசுவின் அன்பு பெறுமதியானது, ஆழமானது, தனித்துவம் நிறைந்தது என இன்றைய மூன்று இறைவார்த்தைகளும்  சான்றுபகிர்கின்றன. இந்த உலகத்திலே, பலர் இறக்கின்றனர், பல குழந்தைகள் பிறக்கின்றன, பல தலைமுறை புதிதாக உருவாகின்றன, பல தலைமுறை இல்லாமலே போகின்றன. ஆனால், இயேசுவின் அன்பு இன்னும் இன்றும் மாறாமலே இருக்கின்றது. அவரது இரக்கம் பொங்கிவழியும் ஊற்றாக திகழ்கின்றது. அவரது அருள் எமக்கு நிறைவாகவே கிடைக்கின்றன. இயேசு இறந்து உயிர்த்தெழுந்து இன்று தனது தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். லூக்கா நற்செய்தியின் இறுதி அதிகாரத்தில் இறுதி நிகழ்வாக இதைப் பதிவிடும்போது, அவர் திருத்தூதர்பணிகள் நூலின் முதல் அதிகாரத்தில் மீண்டும் அதை திரு அவையின் புதிய வாழ்வுப் பணியாக ஆரம்புக்கின்றார். 

இவ் அழகிய பெருவிழாவில் எமது வாழ்வும் நம்பிக்கை நிறைந்த விழுமியங்களால் நிரப்பப்படவேண்டும். மாறுபட்ட எண்ணங்கள், விதண்டா வார்த்தைகள், பொறாமையோடு கூடிய பழிவாங்கல்கள், பிறர்வாழ்வை தடம்புறழ வைக்கும் சூழ்ச்சிகள், நம்மைச் சுற்றி அமைக்கும் குட்டி அதிகாரங்கள், அளவுக்குமீறிய ஆசைகள், பிறருக்காக ஏந்தாத கைகள், சுயநல செபங்கள் என எமது வாழ்வு இன்று முடக்கப்பட்டுவிட்டது. கடவுள் அன்பாய் இருக்கிறார், அந்த அன்பில் உறவு இருக்கின்றது என்பதை தனது சாவினால், உயிர்ப்பினால் இன்று தனது விண்ணேற்பினால் எண்பித்தவர் இயேசு. 

இன்று நாமும் இயேசுவின் அன்பை அவரது பாஸ்கா மறைபொருளில் காணவேண்டும். அவரது அழியா உணவாகிய உடலிலும் இரத்தத்திலும் காணவேண்டும். எம்மை சந்திக்கும் உறவுகளில் காணவேண்டும், இயற்கையை உவந்தளிக்கும் இவ்வுலகில் காணவேண்டும். எமது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்கள் இயேசுவில் உயிர்த்தெழுந்து விண்ணகம் நோக்கிச் செல்லும் உறவை வளர்க்க முயற்சிப்போம். இச் சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம்.


வருகைப் பல்லவி - திப 1:11 

கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயே சு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண் டீர்கள் அல்லவா? அவ் அவர் மீண்டும் வருவார், அல்லேலூயா.

"உன்னதங்களிலே சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் விண்ணேற்றம் எங்களுக்கு ஒரு முன்னடையாளமாக இருக்கின்றது; தலையாகிய அவர் பெற்ற மாட்சிக்கே அவரது உடலாகிய நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம் எனும் எதிர்நோக்கை எங்களுக்குத் தருகின்றது; எனவே நாங்கள் உமக்கு அன்புடன் நன்றி கூறிப் புனிதமான மகிழ்ச்சியுடன் அக்களிக்கச் செய்வீராக. உம்மோடு.


அல்லது

எல்லாம் வல்ல இறைவா, இந்நாளில் உம் ஒரே திருமகனும் எம் மீட்பருமான கிறிஸ்து விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதை நம்புகின்றோம்; அதனால் நாங்கள் இப்பொழுதே மனத்தளவில் விண்ணகத்தில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.

அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

அல்லது: அல்லேலூயா.


1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;

ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.

2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;

உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி


5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;

எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;

பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி


7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;

அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.

8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;

அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28; 10: 19-23

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார்.

சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 28: 19.20

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம்

நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்

பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். உயிர்த்து விண்ணகம் சென்ற இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளில் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  


1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். அன்பின் இறைவா! நீர் அழைத்தவர்களை தேர்ந்தெடுத்து, உமது பணிக்காக இவ்வுலகிற்கு அனுப்புகின்றீர். உம்மை எதிர்ப்பவர்கள் மத்தியில், உம்மைவிட்டு தவறி போகின்றவர்கள் மத்தியில், பொய்யான விழுமியங்கள், போதனைகள் மத்தியில், உம்மை ஒளியாக தாங்கிக்கொண்டு, உப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் உமது அருளை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. உலக சமாதானத்திற்காக மன்றாடுவோம்;. வழிநடத்தும் இறைவா! உலகின் பல்வேறு கோணங்களிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களால் பாதிக்கப்பட்டு, இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகள், தமது நீதியையும், சுதந்திரத்தையும், உரிமையையும் இழந்துவிடாமல் காத்திட, அருள்புரிய வேண்டுமென்று ...

3. இப்போர்களிலே, பசி, வறுமை, கைவிடப்பட்ட நிலை, நோய், என பல்வேறு புறக்காரணிகளால் அவதியுறும் எம் உறவுகள், பல்வேறு உதவும் கரங்களால் காக்கப்படவும், எவ்வித இடையூறும் இன்றி உம்மை தொடர்ந்தும் பற்றிக்கொண்டு வாழ அருள்புரியவேண்டுமென்று ... 

4. இறை அழைத்தலுக்காக மன்றாடுவோம்.  அழைத்தலின் ஆண்டவரே, உம்மிலே அதீத நம்பிக்கைகொண்டு, இவ்வுலகின் வாழ்வுக்காக, அதன் புனிதத்துவத்திற்காக, அதன் உயர்ச்சிக்காக முன்வரும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். தமது சுயநலனை அன்று பிறருக்காகவே வாழ்ந்து சான்றுபகரும் வல்லமையை அளித்திடவேண்டுமென்று ...

5. எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். எமது பங்கிலே நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், மன உழைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இயலாமையில் தவிப்பவர்கள் என அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா குணப்படுத்தும் வல்லமையால் இவர்களை ஆற்றியருளும், தமக்கு முன் தெரியும் அனைத்து தடைகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ....


குரு: அன்பின் ஆண்டவரே, நீரே ஏமது உறைவிடம், நீரே எமது அடைக்கலம் என உம்மையே நாம் நாடி வந்திருக்கின்றோம். உம்மிடம் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. எங்கள்.   


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் வணக்கத்துக்கு உரிய விண்ணேற்றத்தை முன்னிட்டு நாங்கள் தாழ்மையுடன் இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வருகின்றோம்; இவ்வாறு இப்புனிதமிக்க பரிமாற்றத்தினால் நாங்களும் விண்ணகத்துக்கு உரியவற்றையே நாட அருள்புரிவாராக. எங்கள்.


தொடக்கவுரை: விண்ணேற்றத்தின் மறைநிகழ்வு.

இசையில்லாப் பாடம்: விண்ணேற்றத்தின் தொடக்கவுரை


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


ஏ னெ னில் ஆண்டவராகிய இயேசு மாட் சி யின் மன்னர்,

பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கொண்டவர்.

வானதூதர் வியப்புற (இன்று) வானங்களின் உச்சிக்கு ஏ றிச் சென்றார்.

கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும்

உலகுக்குத் தீர்ப்பிடுகின்றவரும் ஆற்றல்மிகு அணிகளின் ஆண்டவரும் அவரே.


இவ்வாறு அவர் சென்றது எங் கள் தாழ்நிலையிலிருந்து விலகிச் செல்வதற்காக அன்று;

மாறாக, எங்கள் தலைவரும் மு தல் வருமாகிய அவர் முன் சென்றஅவ்விடத்துக்கு

அவர்தம் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின்தொடர்வோம்

எனும் நம் பிக் கையைத் த ரு வதற்காகவே.


ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலகின் மாந்தர் அனைவரும்

அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல் மிக்கோரும் அதிகாரம்

கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி

முடிவின் றிச் சொல் வ தாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி - மத் 28:20 

இதோ! உலக முடி வுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இவ்வுலகில் இருக்கும் நாங்கள் விண்ணக மறைநிகழ்வுகளைக் கொண்டாட அருளுகின்றீர்; எங்கள் இயல்பு உம்மோடு இணைக்கப்பட்டுள்ள இடத்துக்கே எமது கிறிஸ்தவ பற்றன்பு எம்மை இட்டுச்செல்ல அருள்வீராக. எங்கள்:


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Friday, 23 May 2025

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வாரம் - 25/05/2025

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வாரம் 







திருப்பலி முன்னுரை 

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.

கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்குரிய இறைமக்களே. அன்பின் உயர் மதிப்பாம் சிலுவையில் தனது உயிர் கொடுத்து, அதை தன் நினைவாகச் செய்யுங்கள் என எம்மை பணிக்கும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடங்கள் இன்னும், இன்றும் எம்மை அவர்பால் தொடர்ந்தும் ஈர்க்கின்றது. 

இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு விடுக்கும் சவால் புதியதே. புதுமையான உலக வழக்கங்களுக்கும் போக்குகளுக்கும், போதனைகளுக்கும் புதிய திருப்பமாக அமைகின்றன இன்றைய இறைவார்த்தைகள். தூய ஆவியின் துணைகொண்டு செயற்படும் திரு அவை, அனைவருக்கும் உரியதே என முதல் இறைவார்த்தையும், அன்பில் உலகை கட்டுங்கள், அவ் அன்பால் உலகை வெல்லுங்கள் என எம்மை அன்புசெய்யும் இயேசுவின் உள்ளார்ந்த உணர்வுகளை தெளிவுபடுத்துகின்றது இரண்டாம் மற்றும் நற்செய்தி இறைவார்த்தைகள். அமைதியைத் தரும் இயேசுவின் உயிர்ப்பு இக்காலத்தின் தேவையாகின்றது.  அன்பும் அமைதியும் செயற்படவேண்டும், அவைகள் உணர்வுகளாக வேண்டும், எமது செயல்களாக வேண்டும். குறிப்பாக யுத்தங்கள் நடைபெறும் நாடுகளை ஒப்புக்கொடுத்து அங்கே விதைக்கப்படுவது இரத்தம் அல்ல மாறாக அன்பைக் கொடுக்கும், அமைதிக்காக ஏங்கும் மனிதமே என்பதை அனைத்து தலைவர்களும் உணர மன்றாடுவோம்.

மலர்களில் மணம் நிறைந்துள்ளது போல், இன்று எம் உறவுகள் இணைவதில் அன்பு மலரவேண்டும். இயேசு அன்பினால் தன்னைக் கொடுத்தார் அவ் அன்பை நாமும் உணர்ந்து வாழ இன்றைய இப்பலியின் வழியாக மான்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண், எசா 48:20 

ஆரவாரக் குரலெழுப்பி, முழங்கி அறிவியுங்கள் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மக்களை மீட்டு விட்டார், அல்லேலூயா.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள் புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


முதல் இறைவாக்கு

இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29

அந்நாள்களில்

யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

அல்லது: அல்லேலூயா.


1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி


4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி


5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!

மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

 

இறைமக்கள் மன்றாட்டு

குரு. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது எனும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளுக்கு ஒப்ப நாமும் எம் அயலவர்களை அன்புசெய்ய முன்வருவோம்.  நாம் மற்றவர்களின் நன்மை கருதி, பிறரின் வாழ்வை வைகறையாக மாற்ற எமது தேவைகளை விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம். 


1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது திரு அவையை எல்லா கறைகளில் இருந்தும் காத்தருளும். உமது அன்புப் பணி என்றும் தொடரவும் தூய ஆவியால் அதைக் காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,... 

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, குடும்பமாக இணைந்து வாழ்வது பற்றி ஆழமாக கற்பித்திருக்கின்றீர். இன்று எமது குடும்பங்களை ஆசீர்வதியும். எமது குடும்பத்தில் பிரிவுகள் இன்றி ஒன்றிப்பையும், பிளவுகள் இன்றி பாசத்தையும், வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தையும், சந்தேகம் இன்றி புரிந்துணர்வையும், கோபம் இன்றி அன்பையும், நாம் அதன் கனிகளாக விதைத்திட வரமருளவேண்டுமென்று,...

3. மனதில் அமைதி தேடி அலையும் உள்ளங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, பல்வேறு புறக்காரணிகளால் பாதிப்புற்று மன அழுத்தத்தாலும், சொல்லொன்னா துயரத்தாலும், துன்பத்தாலும் வேதனையுற்று தினமும் வாடும் அனைவருக்கும் வாழ்வின் புதிய வழியைக் காட்டியருளும். வாழ்வது நான் அல்ல, எனில் இயேசுவே வாழ்கின்றார் என்று அவரில் பற்றிக்கொண்டு, அனைத்தையும் தாங்கும் மனத்தையும், துன்புறுத்துவோருக்காக செபிக்கும் பண்பையும் எமக்கு தந்தருள வேண்டுமென்று,...

4. எமக்காக மன்றாடுவோம். இறைவா, எமது வாழ்வை ஆசீர்வதித்தருளும். எமது எண்ணங்கள் சீரானவையாக அமைவதாக. எமது தீர்மானங்கள் ஒழுக்கம் நிறைந்தவையாக அமைவதாக. எமது தீர்ப்புக்கள் நீதியானவையாக அமைவதாக. இதனால் நாம் அமைக்கும் குடும்பமும், சமூகமும், எமது பங்கும் சீரான, முதன்மையான புனிதம் நிறைந்த உலகை கட்டியெழுப்ப அருள்புரிய வேண்டுமென்று, ...


குரு: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என மொழிந்த இறைவா. உம்மிடம் முழு நம்பிக்கையோடு எமது தேவைகளை ஒப்புக்கொடுக்கின்றோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே எமது அயலான்கள், நண்பர்கள் என உணர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் ஒப்புக்கொடுத்த இவ்வேண்டல்கள் பயன் தருவதாக. எங்கள்.  


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - யோவா 14:15-16 

நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான்

தந்தையிடம் கேட்பேன், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


Saturday, 10 May 2025

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு வாரம் - 18/05/2025

 பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு வாரம் 



திருப்பலி முன்னுரை 

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’. இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே. இயேசுவின் உயிர்ப்பு இன்றும் எமக்கு இன்னும் அழகான செய்திகளை தருகின்றது, அம்மகிழ்ச்சியை பரப்ப எமக்கு அழைப்புவிடுக்கின்றது. இயேசுவோடு இணைந்து, அவர் வாழ்வோடு கலந்து, அவரை உண்டு, பருக இப்பலியிலே இணைந்திருக்கின்றோம். பாஸ்கா காலத்தின் இவ் ஐந்தாம் வாரம், இயேசுவில் எம்மை இன்னும் இணைத்திட அழைக்கின்றது.


இயேசுவை உலகறிய எடுத்துரைப்பது என்பது ஒரு சவாலே. அதிலும் “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” எனும் அழகிய உண்மையை எடுத்துரைப்பதை இன்றைய முதலாம் இறைவார்த்தையில் காணலாம். இயேசுவோடு அனைத்திலும் இணைந்திருந்து, உண்மையான, நேர்மையான வாழ்வினால் அவரின் அன்பு பிள்ளைகளாக மாறமுடியும் என்பதை இரண்டாம் இறைவாக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்தி இன்னும் அழகாக இயேசுவின் இயல்புகளில் ஒன்றை எடுத்துரைக்கின்றது. இயேசுவோடு நாம் கொண்டுள்ள இணைபிரியா உறவே நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கிய பண்பாக உள்ளது. ஆகவே, இன்று எம் வாழ்வை இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்வோம். தூய்மையான வாழ்வினால் அவர் தரும் அருளை ஆசீரை பிறரோடு பகிர்ந்துகொள்வோம், எமது இயலாமைகள், பாவங்கள் எமது ஆரோக்கியமற்ற எண்ணங்களை அடியோடு களைந்துவிடுவோம். நாம் பார்க்கும் பார்வைகள், கேட்கும் வார்த்தைகள், பேசும் மொழிகள் புதிய வாழ்வுக்கான பாதையை அமைப்பதாக. எமது விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும் இயேசுவின் உண்மை வார்த்தைகளோடு இணைந்திருப்பதாக. அவர் சீடராக நாளும் பொழுதும் வாழ்ந்து, வாழ்வித்து, வழிகாட்டிச் செல்ல தொடரும் இப்பலியில் இணைந்துகொள்வோம்.

(குறிப்பாக இன்றைய நாளிலே, தமது இயலாமையால், முதுமையால் மேலும் நோயினால் துன்புறும் அனைத்து ஆயர்கள், குருக்கள் மற்ரும் துறவிகளின் நல்வாழ்வுக்காகவும் இப்பலியில் மன்றாடிக்கொள்வோம்)


வருகைப் பல்லவி - காண். திபா 97:1-2

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள், ஏனெனில் ஆண்டவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார், அல்லேலூயா..


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா மறைபொருளை எப்பொழுதும் எங்களில் நிறைவு பெறச்செய்தருளும் இவ்வாறு புனிதத் திருமுழுக்கினால் நீர் புதுப்பிக்கத் திருவுளம் கொண்ட நாங்கள் உமது பாதுகாப்பின் உதவியால் மிகுந்த பயன் தந்து நிலைவாழ்வின் மகிழ்ச்சிக்கு வந்து சேர அருள்வீராக. உம்மோடு.


முதலாம் இறைவாக்கு

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.


8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;

எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;

தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;

உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;

உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி


12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13ab உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;

உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு

குரு. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்று மொழிந்த நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.


1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவனிலே நம்பிக்கைகொண்டு, தமது முழு விருப்பத்தோடும், சுதந்திரத்தோடும் திரு அவையிலே பணிபுரியும் அனைத்து திருநிலைப் பணியாளர்களும், தமது அழைப்பின் மேன்மை உணர்ந்து, இறைபராமரிப்பிலும், இறைவல்லமையிலும் நம்பிக்கைகொண்டு பணியாற்ற அருள்புரிய வேண்டுமென்று...

2. துன்புறும் எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அரசியல் சீர்கெட்ட சிந்தனையால், ஆணவத் தலைமைத்துவத்தால் முன்னெடுக்கும் யுத்தங்களும், ஆயுத கலாசாரமும், அழித்துக்கொண்டிருக்கும் இவ்வுலகிலிருந்து அனைத்து மக்களும் மீண்டு வரவும், அனைவரின் உரிமையும், உணர்வுகளும் மதிக்கப்படவும், மகிழ்ச்சியும், அமைதியும் வாழப்படவும் வேண்டுமென்று...

3. உலகின் பல நிலைகளில் உயிருக்காக போராடும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தினால் பாதிப்புற்று, பசியினால், பஞ்சத்தினால் உயிரை இழந்துகொண்டிருக்கும் சிறுவர்கள், பெண்கள், வயதுவந்தோர் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா, இவர்களை நீரே பொறுப்பெடுத்து, இவர்களின் கண்ணீருக்கு பதில்தரவேண்டுமென்று...

4. எமது திரு அவைக்கு நீர் தந்த புதிய திருத்தந்தைக்காக நன்றி சொல்லி மன்றாடுவோம். இவ்வுலகிற்காக இறைவன் கொடுத்திருக்கின்ற இன்னுமொரு பேதுறுவாக இறை மக்கள் அனைவரையும் வழிநடத்தவும், அன்பையும், மன்னிப்பையும் கொடுத்து தனது தாழ்ச்சியினால் இத் திரு அவைக்கு உரமூட்டிட வேண்டுமென்று, ...

குரு: இறைவா நீரே வல்லவர், நல்லவர், அனைத்தையும் ஆள்பவர் என் நாம் அறிவோம். நாம் எவ்வளவிற்கு உம்மோடு இணைந்து பயணிக்கின்றோமோ, அவ்வளவிற்கு எமது அயலவர்களின் உறவு, அவர்களின் தேவைகள் எமக்கு தேவையானதே. இங்கே கூடியிருக்கும் அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள்.


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 15:1,5

உண்மையான திராட்சைச் செடி நானே. நீங்கள் கொடிகள், என்கிறார் ஆண்டவர். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Wednesday, 7 May 2025

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு வாரம் - 11/05/2025 - நல்லாயன் ஞாயிறு

 பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு வாரம் -  நல்லாயன் ஞாயிறு



திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! மலரும் இவ் இளங்காலை வேளையில் எமது உள்ளங்களை இறைவன்பால் திருப்பி, அவர் புகழ்பாடவும், அவர் அன்பை தினமும் சுவைக்கவும் நாம் இக்கல்வாரி பீடம் நோக்கி கூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறாகும், அத்தோடு உலக இறை அழைத்தலின் தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம். 

இறைவன் எம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார், தனது பணியை நேர்மையோடும் ஆர்வத்தோடும் வாஞ்சையோடும் ஆற்ற இன்றும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். நல்ல ஆயன் நானே என்று இயேசு தன்னை ஓர் வழிகாட்டியாக, தலைவனாக, ஆசானாக, அரவணைப்பவராக, உடன் பயணிப்பாவராக எண்பிக்கின்றார். அனைவரையும் அறிந்து, தேர்ந்தெடுத்து அவர்களை அழைப்பவரே இறைவன். 

இன்று நாம் எமது திருநிலைப் பணியாளர்களுக்காக மன்றாட அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக எமது மறைமாநில ஆயர், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். இவர்களின் அர்ப்பண வாழ்வுக்காக மன்றாடுவோம். தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான இயேசுவின் தாழ்ச்சியை, தியாகத்தை, வெறுமையை தமது வாழ்வின் பண்புகளாக்கிட மன்றாடுவோம். ஒப்படைக்கப்பட்ட மந்தைகளின் உரிமைக்காக போராடும், ஆன்மாவுக்காக செபிக்கும், உறவுகளை ஒன்றிணைக்கும் நல் இதயம்கொண்டிருக்க மன்றாடுவோம். இயேசுவே தம் வாழ்வின் தொடக்கமும் முடிவுமாகிட மன்றாடுவோம். அவரின் சாயல் இப்பணியாளர்களின் வாழ்நாள் முழுவதும் செழித்தோங்கிடவும் தொடர்ந்தும் இறை அழைத்தல் பெருகிடவும் தொடரும் இப்பலியில் இவர்களை இணைத்து மன்றாடுவோம். 

குறிப்பாக எமது திரு அவையின் புதிய தலைமைத்துவத்தை ஏற்கும் திருத்தந்தைக்கு நிறை ஞானத்தையும், இவ்வுலக அரசியல், பொருளாதார, சமுக நெருக்கடிகள் மத்தியில் மக்களின் இதயத்தை அறிந்து பணியாற்றக் கூடிய ஆற்றலையும் அளித்திட வேண்டுமென்றும் இப்பலியிலே மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 32:5-6 

ஆண்டவரது இரக்கத்தால் பூவுலகு நிறைந்துள்ளது ; ஆண்ட வாக்கினால் வானங்கள் நிலைபெற்றுள்ளன, அல்லேலூயா

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணவரின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்ள எங்களை அழைத்துச் செல்கின்றீர்; அதனால் நல்ல ஆயராகிய கிறிஸ்து துணிவோடு முன்னரே சென்றுள்ள இடத்துக்குப் பணிவுள்ள மந்தையாகிய நாங்களும் வந்து சேர்வோமாக. உம்மோடு. 


முதல் இறைவார்த்தை

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 14, 43-52

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும் பர்னபாவையும் பின்தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

அல்லது: அல்லேலூயா.


1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!

மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி


3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!

அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி


5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;

என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;

தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி


இரண்டாம் இறைவார்த்தை

அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9, 14b-17

யோவான் நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

மூப்பர்களுள் ஒருவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்று கொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு. 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை

நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. அழைத்தலின் ஞாயிறு தினத்திலே, எம்மை தம் பெயர்சொல்லி அழைக்கும் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 


1. அழைத்தலின் ஆண்டவரே, எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும் உமது அன்பையும், உம்மேல் வைத்திருக்கும் பிரமாணிக்கத்தையும் தொடர்ந்து பறைசாற்றிட அருளபுரிய வேண்டுமென்று...

2. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாநில ஆயருக்காக மன்றாடுவோம். உமது பாதையில் தொடர்ந்து பயணிக்கும் இவர், தமது ஞானத்தால், அறிவால், வல்லமையால், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இம்மறை மாவட்டத்தையும், அதிலே பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகளையும், மேலும் இறைமக்களையும் வழிநடத்த தேவையான அருளை பொழிந்தருள வேண்டுமென்று...

3. அழைத்தலின் ஆண்டவரே, இவ்வுலகிலே நாம் சந்திக்கும் புதிய புதிய சவாலகள், போராட்டங்கள் மத்தியில், அதை முகங்கொடுத்து, முன்செல்லவும், திரு அவையை எவ்வித கலக்கமின்றி, கறையின்றி வழிநடத்த தேவையான பணியாளர்களை அளித்தருள வேண்டுமென்று...

4. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாவட்டத்தில் பணியாற்றி உமதண்டை சேர்ந்திருக்கும் எமது பணியாளர்கள் அனைவரும், விண்ணக பேரின்பத்தை அடையவும், புனிதர்காளின் கூட்டத்தில் சேர்த்தருள வேண்டுமென்று...

5. அழைத்தலின் ஆண்டவரே, உமது அழைப்பை ஏற்று, வெவ்வேறு நாடுகளில் மறைபோதகர்களாக பணியாற்றும் அனைவருக்கும் உமது வல்லமையையும் ஆற்றலையும், பணியார்வத்தையும் அளித்திடவேண்டுமென்று...


குரு: அன்பின் இறைவா, உமது அழைப்பு மிக மகத்தானது, சிறந்தது, எம்மை தொடர்ந்தும் மக்களோடு இணைக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவையும் உம்மிடம் கொண்டுசேர்க்கும் பாரிய பணியை எமக்கு அளித்திருக்கின்றீர். எமது திறமையோடும், பலவீனத்தோடும் நாம் அவற்றில் திறம்பட செயாலாற்ற தேவையான அருளை பொழிந்தருளும். மிக தாழ்மையோடும் பணிவோடும் உம்மிடம் ஒப்படைக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து அவற்றை பெற்றுத் தந்தருள்வீராக. எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாக அமைவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

தம் ஆடு களுக்காக உயிரைக் கொடுத்து, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

நல்ல ஆயரே, உமது மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; உம் திருமகனின் உயர் மதிப்புள்ள இரத்தத்தால் மீட்ட உம் ஆடுகளை நிலையான பசும்புல் வெளியில் கூட்டிச் சேர்க்க அருள்வீராக. எங்கள்...

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 1 May 2025

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு - 03/05/2025

 பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு




திருப்பலி முன்னுரை

“மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?

என் அன்புக்கினிய இறை மக்களே! இயேசுவின் இறை வல்லமையும், ஆசீரும் இன்றும் என்றும் உங்களோடு இருப்பதாக. இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பின் செய்தி தொடர்ந்தும் சீடர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையில் உறுதியையும் அளிக்கின்றது. இறப்பு என்பது இனி இல்லை, மாறாக இயேசுவோடு வாழ்வு ஒன்று உண்டு என்பதன் அர்த்தம் இன்று தெளிவுபடுத்தப்படுகின்றது. நாம் தீமையின் மக்கள் அல்ல, பாவத்தில் பிறந்தவர்களும் அல்ல, மாறாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இறைவனுக்கு சொந்தமானவர்கள் எனும் உண்மையை தனது வாழ்வின் அர்பணத்தாலும், தனது பாஸ்கா மறைபொருளின் நிறைவுதலாலும் காட்டிநிற்கின்றார் இயேசு. இதனால் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம். 

ஆகவே, எமது உறவை வலுப்படுத்துவோம், மற்றவர்களை மதித்து வாழ்வோம், அன்பு ஒன்றே அழகானது என்பதை அறிக்கையிடுவோம். இயேசு தரும் உயிர்ப்பின் செய்தி எமது வாழ்வில், குடும்பங்களில் தொடர்ந்தும் மிளிர இறைவரம் வேண்டி இப்பலியில் இணைந்திடுவோம்.  

விசேட விதமாக, திரு அவைக்கான புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணியில் தம்மை இணைத்திருக்கும் அனைத்து கருதினால்களுக்கும் இறைவனின் வழிநடத்தலும், தூய ஆவியின் ஞானமும் அளித்துத் எமக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அருள்கூர்ந்தருள வேண்டுமென்று இப்பலியில் இணைந்து மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 65:1,2

அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியு ங் கள், இசை பாடுவீர்; அவரது புகழை அவரது பெயருக்கு இசை பாடுவீர்; மாட்சிப்படுத்துங்கள், அல்லேலூயா.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, புதுப்பிக்கப்பெற்ற இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக; அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


முதல் இறைவாக்கு

இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32. 40b-41

அந்நாள்களில்

தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.

இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;

ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;

என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;

சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி


4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.


5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்;

அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;

மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி


10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;

என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;

12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14

யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக் குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: நாம் இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடித்தால், கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; ஆகவே, இயேசுவின் வார்த்தையில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் எமது தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.  

1. வல்லமையின் இறைவா, எமது திரு அவையின் பணியாளர்கள் உமது அன்பில் என்றும் நிலைத்திருந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்ற உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று... 

2. வல்லமையின் இறைவா, எமது இளையோர் தமது இளமை வாழ்வை ஒரு கொடையாக ஏற்று, அது தரும் பலத்தையும், வாழ்வின் அழகையும் திரு அவையின் உயர்வுக்கும், இயேசுவின் நற்செய்திக்கும் பயன்படுத்த உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று...

3. வல்லமையின் இறைவா, எமது குடும்பங்களின் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் எமது பெற்றோர்கள் என்றும் ஆசீர்வதிக்கப்படவும், எந்த நிலையிலும் தமது பிள்ளைகளின் மேல்கொண்ட அன்பை விட்டு விலகிடா வரம் அருளவேண்டுமென்று...

4. வல்லமையின் இறைவா, நாளுக்கு நாள் வீதி விபத்துக்களிலும், மற்றும் போதை பாவனையாலும் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருப்போர் அதிகரிக்கும் இச்சூழலில், எமது பிள்ளைகள், உறவுகள் அனைவரும் வாழ்வின் பெறுமதி அறிந்து செயற்படவும், தமக்காக வாழும் பல உள்ளங்கள் மத்தியில் தமது பொறுப்பை செவ்வனே உணர்ந்து செயற்பட வேண்டிய அருளை பொழிந்திட வேண்டுமென்று...

5. வல்லமையின் இறைவா, இவ்வுலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்படவும், பஞ்சம், பசி, பட்டினியால் மாண்டிடும் சமூகம் மீட்கப்படவும் வேண்டிய அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று... 

6. வல்லமையின் இறைவா, எமது திரு அவைக்கான புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்மை நிறை வாழ்வுக்கு அழைத்துச் செல்லவும் இயேசுவின் உண்மை நற்செய்தியை தனது ஞானத்தாலும், அறிவாலும் அவர் மந்தைகளாகிய எமக்கு பறைசாற்றிட அருள்கூர்ந்திட வேண்டுமென்று, ...

குரு: இறைவா, உமது உயிர்ப்பின் மகிழ்ச்சி என்றும் எமது உள்ளங்களுக்கு நிறைவை தருவதாக, அமைதி தேடி அலையும் பல உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருவதாக, உறவை இழந்து தவிக்கும் பலருக்கு உடன் இருப்பை அளிப்பதாக. இவ் உணர்வுகளோடும் எண்ணங்களோடும் நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து, அருளை பொழிவீராக. எங்கள்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 21:12-13 

இயேசு தம் சீடர்களிடம், ''உணவருந்த வாருங்கள் . எல் அப்பத்தை எடுத்து, அவர்களிடம் கொடுத்தார், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...