Thursday, 26 September 2024

பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு வாரம் - 29/09/2024



பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

நாடு விளங்கிட வீடு துலங்கிட நல்லவர் பாவிகளும்

கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட கேட்டதும் ஓடிவரும்!

பாடுபவர் இதை படிப்பவர்க் எல்லாம் பரமனின் வீடு வரும்!

எம் இல்லங்களில் அவர் ஆவி புகுந்து நன்மைகள் கோடிவரும்! 

இறை இயேசுவில் என் பிரியமுள்ள உறவுகளே! கோடி நன்மைகள் கூடியே எம்மைத் தேடி வரும் இத் தியாகப் பலியில் எம்மை இணைத்துக் கொண்டாட நாம் இன்று கூடிவந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்ற எமக்கு, கல்வாரியின் தியாகம் கொண்ட எம் கிறிஸ்தவ வாழ்வில் இயேசுவின் இரத்தம் எம்மை தூய்மையாக்கி, உன்னத நிலை காணச் செய்கின்றது என்றால், நாமும் அதை எமது  நாளாந்த வாழ்வில் உணர்ந்துவாழ இன்று ஆயத்தம் செய்வோம். 

இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு தரும் செய்தி புதியதே. தூய ஆவியால் தூண்டப்பெற்ற அனைவரும் இறைவனின் வார்த்தையை உரைக்க வல்லமையுடைவர்கள்  என்பதை இன்றைய முதலாம் இறைவாக்கு எண்பிக்கின்றது. இதயத்தில், எண்ணத்தில், எமது செயல்களில் கிறிஸ்துவைத் தாங்கும் நாம், பணத்தால், பெருமையால், ஆணவத்தால் அதை தகர்துவிடக் கூடாது என்பதை தனது திருமுகத்தில் விளக்குகின்றார் திருத்தூதர் யாக்கோபு. மனிதன் இறைவனைத் தாங்கும் பேற்றினை பெற்றுள்ளான் இதனால், பாவம் அவனை அணுகக்கூடாது என்றும், பாவத்திற்கு அடிமைப்பட்ட வாழ்வில் அதைத் தூண்டும் எந்த சக்திகளும் இருத்தலாகாது எனவும் விளக்குகிறார் புனித மாற்கு. 

இன்று, அன்பை பகிரும் பலர் இவ்வுலகத்தில் தம்மை அர்ப்பணமாக்குகின்றனர், தமது உள்ளத்து மகிழ்ச்சியால் தாம் வாழும் குடும்பத்தில் அமைதியயும், நன்மைகளையும் விதைகளாக்குகின்றனர், எமது சமூகத்தில் நேர்மையோடும், உண்மையோடும் பலர் வாழ்ந்தும், பலரை வாழ்வித்தும், புதிய சமூகத்திற்கு வித்திட்டும் வாழ்ந்து மாண்டுள்ளனர், பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியிலும், பொறுமையோடும், தாழ்ச்சியோடும் நல்ல தலைவர்களாக வாழ்ந்துகொண்டும் இருக்கின்றனர். இவ்வாறு வாழும் பல நூறு உள்ளங்களில் மிளிரும் பண்புகள், தூய ஆவியின் செயல்களே, இவர்கள் வழியாக நாம் பெறும் செல்வங்கள் இறைவன் தரும் கொடைகளே. இதை நாம் உணார்ந்து வாழ வேண்டும். இதையே இன்றைய இறைவார்த்தைகள் உணர்த்தி நிற்கின்றன. எனவே, நாம் தொடங்கும் எமது வாழ்வு புதியதாக அமையட்டும், நாம் எடுக்கும் தீர்மானங்கள் தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தாங்கட்டும். இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் எமது கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம். 

 வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் எங்களுக்குச் செய்த யாவற்றையும் உண்மையான தீர்ப்போடு செய்திருக்கிறீர். ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராக பாவம் செய்தோம். உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை அனால் உம் பெயரை மாட்சிப்படுத்தும்; உமது இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தும்.

திருக்கும் மன்றாட்டு

இறைவா, எல்லாவற்றுக்கும் மேலாக மன்னிப்பு அளிப்பதிலும் இரக்கம் காட்டுவதிலும் நீர் எல்லாம் வல்லவர் என வெளிப்படுத்துகின்றீர்; இவ்வாறு உமது அருளை எங்கள் மீது நிறைவாகப் பொழிவதால் நாங்கள் உம் வாக்குறுதிகளை ஆர்வமுடன் நாடி விண்ணக நலன்களில் பங்குபெறச் செய்வீராக. உம்மோடு. 

முதல் இறைவாக்கு 

அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29

அந்நாள்களில்,

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.

ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்” என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.

ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி


11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்.

அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.

12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்?

என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி


13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும்.

அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;

அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;

பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 17: 17b,ய

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48

அக்காலத்தில்

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு 

1. நன்மைகளின் ஊற்றே இறைவா! உமது ஆவியின் கொடைகளையும் வரங்களையும் உமது திரு அவை  வழியாக எமக்கு நிறைவாகப் பொழிந்தருளும். தமது அர்ப்பணத்தால் இவற்றை நிறைவேற்றும் அனைத்து பணியாளர்களும் இவ்வுலகின் நிறை உண்மைக்காக உழைக்கவும், குருத்துவம் எனும் உயரிய அருட் கொடையின் வழியாக இவ்வுலகை புதுப்பிக்கும் பணியில் தம்மை முழுமையாக இணைத்திட வேண்டுமென்று, ...

2. நன்மைகளின் ஊற்றே இறைவா! எமது நாட்டில் நடைபெற்ற தேர்தல் வழியாக நீர் எமக்கு தந்த நாட்டுத் தலைவருக்காக நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். புதிய மாற்றங்கள் ஏற்பட்டு, இந்நாடு நிறைவை நோக்கி பயணிக்கும் பாதையில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமென்று, ...

3. நன்மைகளின் ஊற்றே இறைவா! இவ்வுலகின் பல்வேறு கோணங்களில் நடைபெறும் யுத்தங்களால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தும், வீடுகள், சொத்துக்களை பறிகொடுத்தும், சூழல் மாசடைந்தும், உணவின்றி, சுகாதார வசதிகள் இன்றி பாதிப்புற்று தவிக்கும் உறவுகளுக்கு ஆறுதலாக இருந்தருளும். அன்பு ஒன்றே இவ்வுலகில் தீமைகளையும் அதன் செயற்பாடுகளையும் மாற்றவல்லது என்பதை அனைவரும் உணர்ந்து புதிய மாற்றங்களுக்காக உழைக்கவும் வரமருளவேண்டுமென்று, ...

4. நன்மைகளின் ஊற்றே இறைவா! எமது பிள்ளைகளின் கல்வி வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். நவினத்துவ வேகத்தில் பயணிக்க விரும்பும் எம் பிள்ளைகள், விழுமியங்களை மறந்து, மதிப்பை இழந்து, குடும்ப பாசம் மறந்து வாழ நினைக்கும் எமது பிள்ளைகளை வழிநடத்தும். கற்பவற்றை கசறட கற்று, காலத்தால் அழியாத வரலாற்றுக்கு வழிசமைக்கும் பொறுப்புள்ள பிள்ளைகளாக திகழவேண்டுமென்று, ...

5. நன்மைகளின் ஊற்றே இறைவா! நீர்  தந்த குடும்பங்களை ஆசீர்வதியும். பிரிவுகளை அல்ல - ஒன்றிப்பை ஏற்படுத்தவும், வெறுப்பை அல்ல - அன்பை சுவீகரிக்கவும், வீண் வார்த்தைகளை அல்ல - புரிந்துணர்வுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஆபத்தான உறவுகளை அல்ல - விசுவாசத்தை விதைகளாக்கும் சந்தர்ப்பங்களை விளை நிலங்காளாக்கிட வரமருளவேண்டுமென்று, ...

காணிக்கைந்து மன்றாட்டு 

இரக்கமுள்ள இறைவா, நாங்கள் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாக மாறிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி அனைத்தின் ஊற்று எங்களுக்குத் திறக்கப்படுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண் திபா 89-50 ஆண்டவரே, உம் ஊ ழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூரும்; அதில் நீர் எனக்கு நம்பிக்கை அளித்தீர். இது என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது.

அல்லது

யோவா 2:16 இதில் கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம். ஏனெனில் அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வு எங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்துவதாக, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பை அறிவிப்பதால் அவருடன் இணைந்து அவருடைய மாட்சியில் பங்கேற்பவர்களாக இருப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Friday, 20 September 2024

பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு - 22/09/2024



பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு

திருப்பலி  முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! நாம் பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். அன்பு எனும் கடலிலே, ஆழம் காணா இறைவனின் கருணையும், அவர் இரக்கமும், அலைகள் மோதி, புயல் அடித்தும் தாங்கும் படகுபோல், எம்மையும் தாங்கிக்கொள்ள அருள்வேண்டி இங்கு வந்திருக்கின்றோம். நாம் கடந்துசெல்லும் நேரங்களும் நாட்களும் எமக்கு பயந்தருவதாக, வாழ்வளிப்பதாக, வெற்றிகளையும், தோல்விகளையும் - இழப்புக்களையும், இறப்புக்களையும் சந்திக்க பலம் தருவதாக.

இன்றைய இறைவார்த்தைகள் மிக அழகான பாடத்தை எமக்கு கற்றுத் தருகின்றன. ஒவ்வொரு மனிதனின் இருப்பும், அவனது உறவை பலப்படுத்த வேண்டும், நன்மைகள் பெருகவேண்டும், இறை சாயல்கொண்ட நாம் இறைவனை ஞானமாக சுவீகரிக்கவேண்டும், சுயநல இன்பங்களை கண்டறிந்து, அது விதிக்கும் தடைகளை தகர்த்தெறிந்து, அன்பை அணிகலனாக கொண்டு வாழவேண்டும், ஒன்றித்து செயற்படும்  திரு அவையாக மாறவேண்டும். இன்றைய நற்செய்தியில், இறைவனின் பணியாளனே உண்மையான தலைவன் என்பதை அழகாக காட்டுகின்றார். தலைவனாக இருப்பவர், தனது சிந்தனையில், எண்ணத்தில், தனது பார்வையில் அன்பின் விழுமியங்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதை ஒரு குழந்தைதை கொண்டு இயேசு சித்தரிப்பதைக் காணலாம். 

அன்பார்ந்தவர்களே! இறைவனின் வார்த்தை  மிக அழகானது, ஆழமானது, உண்மையானது என்பது எமக்கு நன்கு தெரிந்ததே. நாம் கொண்ட இந்நம்பிக்கை எம்மில் தான் மலரவேண்டும், அது கொடைகளாக, வரங்களாக விருட்சமாக வேண்டும். எனவே, பாதை தெரியாதவர்களுக்கு நாம் பாதை காட்டுவோம், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வுக்கான வழியாக மாறுவோம், படைப்பைப் பாதுகாத்து புதிய உலகத்தை உருவாக்குவோம், எம்மைக் முழுமையாக கொடுப்பதன் வழி, எம்முள் இருக்கும் இயேசுவை  உலகறியவைப்போம்.. இதுவே, நாம் உருவாக்கும் இயேசுவின் சீடத்துவம் என்பதை மெய்ப்பித்து தொடரும் பலியில் இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பர் நாமே, என்கிறார் ஆண்டவர். எத்தகைய இடுக்கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றும் அவர்களுக்கு ஆண்டவராய் இருப்பேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: ‘நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.

நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)

பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.


1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;

உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.

2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;

என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி


3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;

கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;

அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி


4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்;

என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்;

ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16 - 4: 3

அன்பிற்குரியவர்களே,

பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி



நம்பிக்கையாளர் மன்றாட்டு

1. வல்லமையின் இறைவா! எமது  திரு அவையை வழிநடத்தவேண்டி மன்றாடுகின்றோம். இவ்வுலகத்தின் காலத்தையும், நேரத்தையும் அறிந்து, இறை மக்களுக்காக பல்வேறு  வழிகளில் குரல்கொடுக்கும் எமது திரு நிலைப் பணியாளர்கள், உம்மை அன்புசெய்வதன் மூலம் உம் மக்களை உயர்வழியில் கொண்டுசேர்க்கும் பணியில் தம்மை அர்ப்பணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. வல்லமையின் இறைவா! எமது புதிய நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுவோம். தாழ்ச்சியையும், பணிவையும் மக்களின் மேல் கொண்ட உண்மையான அன்பையும் இவர்கள் கண்டறிவார்களாக. தம்மை அல்ல, மாறாக, தம்வழி இந்நாட்டு மக்கள் புதிய சகாப்தம் நோக்கி பயணிக்கும் உயரிய நோக்கங்களை தம் சிரத்தில் இருத்தி பணிபுரிந்திட வரமருளவேண்டுமென்று, ...

3. வல்லமையின் இறைவா! எமது பங்கையும், பங்கு மக்களையும் ஆசீர்வதியும். எமது பலவீனத்தால், இயலாமையால், அறியாமையால் நாம் செய்த பாவங்கள் எமையும் எமது குடும்பங்களையும் தீண்டாது இருப்பதாக. இன்று நீர் கற்றுத்தந்த அன்பின் ஆழத்தை நாம் உண்மை உணர்வோடு அறிந்து, செயற்படச் செய்தருளும். எமது வாழ்வின் வளர்ச்சியும், நம்பிக்கையின் ஆழமும் எமக்கு நீர் தரும் கொடைகளாக அமைய அருள்புரிய வேண்டுமென்று, ...

4. வல்லமையின் இறைவா! எமது புலம்பெயர் உறவுகளுக்காக மன்றாடுவோம். நாளும் பொழுதும் உழைத்து, பல தடைகள், மனச்சோர்வுகள், ஏமாற்றங்கள் மத்தியில் தமது வாழ்வை கொண்டுசெல்லும் இவர்களுடன் உடன் இருந்தருளும். இவ்வுகத்தோடு பயணிக்கும் இவர்கள், இவ்வுலக போக்குகளையும் விழுமியங்களையும் கடந்து இறை நம்பிகையில் நிலைத்திருந்து, நல்ல குடும்பங்களை உருவாக்கி,  நற்பணி புரிந்து வாழும் அருளை பெறவேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடு கின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி   திபா 118:4-5

உம் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிக்க நீர் கட்டளையிட்டீர்; அதனால் உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் வழிகளை நிலைப்படுத்தும்.

யோவா 10:14

அல்லது

நல்ல ஆயன் நானே! என் கிறார் ஆண்டவர். நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற எங்களுக்கு உமது இடையறாத உதவியைக் கனிவுடன் என்றும் அருள்வீராக; அதனால் மீட்பின் பயனை இம்மறைநிகழ்வுகளிலும் அன்றாட வாழ்விலும் பெற்றுக்கொள்வோமாக. எ ங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 12 September 2024

பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு - 15/09/2024


 

பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவில் அன்பார்ந்த உறவுகளே! இன்று நாம் பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். காலையில் கண்விழித்து தினமும் தொடங்கும் எமது வாழ்வுக்கு அருளையும் ஆசீரையும் தரும் இறைவனின் அன்பும், கருணையும் அவர் இரக்கமும் எம்மை வழிநடத்தவேண்டி இறைவரம் வேண்டி இங்கே கூடியிருக்கின்றோம். இன்றைய இறைவார்த்தையும், அவர் திருவிருந்தும் எம் வாழ்வின் வழியாக அமைவதாக, சவால்களை சந்திக்க தேவையான பலமாக அமைவதாக, இவ்வுலகைத் தாங்கும் கருவிகளாக மாற எம்மை உருவாக்குவதாக. 

எசாயா இறைவாக்கினரின் இன்றைய முதாலாம் இறைவாக்கு, பாபிலோனில் அடிமைப்பட்ட யூதாவின் மக்கள் கொண்ட துன்பங்களை சித்தரிக்கின்றது. துன்புறும் ஊழியன் பகுதியில், புதிய விடியலுக்காக பயணிக்கும் மக்களுக்காக தம்மை ஒப்புக்கொடுக்கும் அழகிய பகுதி மக்களுக்கு அருளிய நற்செய்தியாக இது அமைகின்றது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகம், நம்பிக்கை எனும் அழகிய கொடையை செயலோடு இணைந்த வாழ்வில் காட்டவேண்டும் என வலியுறுத்துவதைக் காணலாம். மாற்கு எழுதிய நற்செய்தி இறைவார்த்தையில், இயேசுவின் அதிசயம் நிறைந்த போதனை கொடுக்கப்படுகின்றது. அதாவது, சிலுவையின் வழி தான் மானிட மீட்பு என துன்பங்களை ஏற்று, தாங்கிச் செல்லவேண்டும் என இயேசுவின் போதனை பேதுறுவை வலிமைப்படுத்துவதைக் காணலாம். 

அன்பார்ந்தவர்களே! 

- நமது வாழ்வைப் புடமிடும் இன்பங்களும் துன்பங்களும் வாழ்வின் இரண்டு தூண்கள் என ஏற்றுக்கொண்டு செல்ல வரம்வேண்டுவோம்;

- நாம் இவ்வுலகில் சந்திக்கும் அதிவேக மாற்றங்கள் மத்தியில், நாம் இலக்கோடே பய்ணிக்க  வரம் வேண்டுவோம்;

- மனித உரிமைகள் மதிப்பிழந்து, மனிதப் புதைகுழிகள் பெருகுகிக்கொண்டே செல்லும் பரிதாப நிலை மத்தியில், இறை சாயல் கொண்டு வாழும் எம் அனைவரையும் அன்பு செய்து வாழும் வரம் வேண்டுவோம்;

- எமக்காக இயேசு பாடுகள் பட்டு, மரித்து உயிர்த்தெழுந்தார் எனும் உண்மை எமது வாழ்விற்கான புது விடியலாக அமைய மன்றாடுவோம்; 

- எமக்கு முன் துன்புற்று, துயறுற்று, வாழ எத்தனிக்கும் அனைத்து உள்ளங்களிலும் இறைவனின் கருணையும், இரக்கமும் கிடைக்கவேண்டி மன்றாடுவோம். 

நாம் பயணிக்கும் பாதைகள் இறைவனின் தரும் வரங்களை தாங்கிச் சென்று அவரின் வாழ்வை பின்பற்றி செல்லும் வழியாக அமைக்க இறைவரம் வேண்டி இன்றைய பலியின் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

காண். சீஞா 36:18 ஆண்டவரே, உமக்காகக் காத்திருப்போருக்கு அது அளித்தருளும்; அதனால் உம் இறைவாக்கினர்கள் - தகுந்தவர்களாகக் காணப்படுவார்களாக. உம் ஊழியர்களின் மக்களாகிய இஸ்ரயேலரின் மன்றாட்டுகளுக்குச் செவிசாயும்.

திருக்குழும மன்றாட்டு

அனைத்தையும் படைத்தவரும் ஆள்பவருமான இறைவா, எங்களைக் கண்ணோக்கியருளும்; அதனால் உமது பரிவிரக்கத்தின் செயலாற்றலை உய்த்துணர்ந்து உமக்கு முழு இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரிய அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9a

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

அல்லது: அல்லேலூயா.


1 ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்;

ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி


3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன.

பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன;

துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.

4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;

‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். -பல்லவி


5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;

நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி


8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;

என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கலா 6: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

‘மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும். † மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35

அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்து கொண்டார்.

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு

1. கருணையின் இறைவா! எமது திரு அவையை பாதுகாத்தருளும். அனைத்து இன்னல்களிலும், நெருக்கீடுகளிலும் உமது தொடர் வழிநடத்தல் இருக்கவேண்டுமென்று, ...

2. கருணையின் இறைவா! எமது பங்குதந்தையை ஆசீர்வதித்தருளும். இப்பங்கின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இவரை உமது அருளால் நிறைத்துக் காத்தருளவேண்டுமென்று, ...

3. கருணையின் இறைவா! எமது பங்கில் உள்ள பிற சமய உறவுகள் அனைவருக்கும் உமது அருளையும் பாதுகாப்பையும் அளித்தருளும். அவர்களின் அன்பும் புரிந்துணர்வும் எமது வள்ர்ச்சிக்காகவே அமைந்திட வேண்டுமென்று, ...

4. கருணையின் இறைவா! யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நொந்துபோய்கிடக்கும் அனைத்து உறவுகளின் உணர்வுகளை ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவர்களின் ஆறுதலாக, அரவணைப்பவராக, துன்பத்தில் தாங்குபவராக இருக்கவேண்டுமென்று, ...

5. கருணையின் இறைவா! நடைபெற இருக்கும் தேர்தலில் எமது இலக்கு நேர்மையானதாக இருக்க மன்றாடுகின்றோம். மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் பண்பை சம்பாதிக்கவேண்டுமென்று, ... 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கி இக்காணிக்கைகளை ஏற்றருளும்; இவ்வாறு உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை அனைவருடைய மீட்புக்கும் பயன்படுவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 35:8

கடவுளே, உமது இரக்கம் எத்துணை உயர்மதிப்புள்ளது ! மானிடா உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.

அல்லது

காண். 1 கொரி 10:16 நாம் போற்றும் திருக்கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் ஆகும்; நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் ஆகும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணகக் கொடைகளின் செயலாற்றல் எங்கள் மனதையும் உடலையும் ஆட்கொண்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாம இத்திருவிருந்தின் பயனுக்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Friday, 6 September 2024

பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு - 08/09/2024



பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

அன்பினில் இணையும் இறை குலமாக, அருளில் நனையும் அவர் உறவாக இன்று நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலம் இருபத்துமூன்றாம் ஞாயிறு வாரத்தில் இணையும் நாம், தொடர்ந்தும் அவர்வழி செல்ல, அவர் அழைப்பை ஏற்று புதிய இஸ்ராயேல் குலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக வாழ இங்கு கூடி வந்துள்ளோம். 

முதலாவது இறைவார்த்தையாக, இறைவாக்கினர் எசாயா தனது நூலிலே, அடிமைப்பட்ட, நொருங்குண்ட, உடந்துபோன மக்களுக்கு கடவுளின் நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுப்பதை காணலாம். இன்றைய இரண்டாம் இறைவார்த்தையாக, யாக்கோபு எழுதிய திருமுகத்திலே தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக இறைவனோடு இணைந்து வாழ அழைப்புவிடுக்கின்றார். நற்செய்தி இறைவார்த்தையில், மாற்கு, இயேசுவின் அழகிய புதுமை வழியாக, அவர் யார், அவரின் ஆளுமை என்ன, அவரின் இவ்வுலக வருகையின் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு எடுத்தியம்புவதைக் காணலாம். 

இன்று நாமும் இயேசுவில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையை அதிகரிப்போம், உறுதிசெய்வோம். நாம் காணும் வாழ்வியற் போராட்டங்கள் மேலும் உலகபோக்குக்கள், இறைபற்றற்ற வாழ்வு என அனைத்தும், இயேசுல் கொண்ட எமது அன்பையும், புரிதலையும் பிரித்துவிடாமல் இருக்க மன்றாடுவோம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், எம்மை தொட்டுச் செல்லும் ஒவ்வொரு நிகழ்வும், எமக்கு அனுபவமாகும் ஒவ்வொரு மனிதனும் இறைவன் கொடுத்த அதிசயங்களே. இதற்காக நன்றிகூறி, எமது வாழ்வின்வழி இறைவனை மகிமைப்படுத்த அவர் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்; உமது தீர்ப்பு நேர்மையானது - உமது இரக்கத்துக்கு ஏற்ப உம் ஊழியனை நடத்தியருளும்.


திருக்குழும மன்றாட்டு

எங்களுக்கு மீட்பும் பிள்ளைகளுக்கு உரிய உரிமையும் வழங்கும் இறைவா, உம் அன்புக்கு உரிய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கும்; அதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நிலையான உரிமைப் பேற்றையும் அளிப்பீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்துபாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.


7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;

சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி


8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9a ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி


9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;

ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.

10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில்

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘எப்பத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! இவ்வுலகை ஓர் அழகிய அதிசயமாகக்கொண்டு, இவ்வுலகின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இறை அருளை தமது வாழ்வாலும், அருட்கொடைகளாலும் அளிக்கும் எமது திரு அவை ஊழியர்கள் அனைவரும் உமது ஆவியால் உந்தப்படவும், அவர்களுக்கு தேவையான நிறை கொடைகளை அளித்திட அருள்புரியவேண்டுமென்று, ... 

2. எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்: இன்றைய தினங்களில் ஆசியாவை நோக்கிய தமது பயணங்களை மேற்கொள்ளும் எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமது வாழ்வில் கொண்டிருக்கும் இயேசுவின் அழகிய மதிப்பீடுகளை அவர் எடுக்கும் பெறுமதியான முயற்சிகளில் கொணரச் செய்தருளும். இவ்வுலகில் மனிதர்களில் அன்பையும், சமயங்களில் புரிதலையும், அரசியல் தலைமைத்துவத்தில் மனித உரிமையையும் இத்திருத்தந்தை வழியாக நீர் அளித்திட வேண்டுமென்று, ...

3. எமது நாட்டுக்காக மன்றாடுவோம்: புதிய விடியல் நோக்கி செல்லும் எமது நாட்டின் அரசியல் மாற்றங்கள் நிலையானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற வேண்டுகின்றோம். மக்கள் வாழ்வே எமது இலக்கு என்று தம்மை அர்ப்பணிக்கும் புதிய தலைவர்கள் உருவாகவும், உயரிய எண்ணங்களோடும், வலிமையான விழுமியங்களோடும் இந்நாட்டை தாங்கும் தலைவர்கள் உருவாக அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எம் பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! நாம் அமைக்கும் இவ் அழகிய பங்கு சமூகம் உமது திரு அவையின் ஒன்றிப்பை காட்டுவதாக. எமக்குள் மிளிரும் அன்பையும், பகிர்வையும், விட்டுக்கொப்பையும், தெளிவான சிந்தனைகளையும், பிறருக்கான எமது செபங்களையும், உமது ஆவியின் வெளிப்பாடாக கொள்வோமாக. அனைவரையும், அனைத்திலும் நாம் தாங்கிச் செல்லவும் எமது உழைப்பையும் வாழ்வையும் ஆசீர்வதிக்கவும் வேண்டுமென்று, ... 


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன் மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன் மா தாகம் கொண்டுள்ளது.

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது வார்த்தையாலும் விண்ணக விருந்தாலும் உம் நம்பிக்கையாளருக்கு நீர் உணவு அளித்து வாழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் அன்புத் திருமகன் அளிக்கும் மாபெரும் கொடைகளால் நாங்கள் வளம் பெற்று அவரது வாழ்வில் என்றும் பங்கேற்கும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...