Saturday, 27 January 2024

பொதுக்கால நான்காம் ஞாயிறு 28/01/2024

 


திருப்பலி முன்னுரை

இன்றைய நாளில் நாம் அனைவரும் பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தை கொண்டாடுகின்றோம். இவ்வாரத்தை இறைவனின் அருளோடும், ஆசீரோடும் ஆரம்பிக்கின்றோம். நாம் பங்குபெற்றும் இத்திருப்பலி வழியாக இயேசுவின் கல்வாரி அன்பை சுவைக்கவும், அவ்வன்பின் அன்பின் வெளிப்பாடாக அவரது உடலையும் இரத்தத்தையும் சுவைத்து எம்மை அவரில் புதுப்பிக்கவும் ஒன்றுகூடியுள்ளோம். 'உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை  நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்' எனும் இறைவனின் அசையா வாக்குறுதி, முதல் இறைவாக்கான, இணைச்சட்ட நூலிலிருந்து தரப்படுகின்றது. புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 'எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்' என்று ஒழுக்கம் நிறைந்த வார்த்தைகளை முன்வைப்பதையும் காணலாம். மாற்கு எழுதிய நற்செய்தியிலே, இயேசுவின் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் பலரின் வாழ்விலே மாற்றத்தைக் கொணர்ந்ததைக் காணலாம். 

கடவுளோடு ஒன்றித்த வாழ்விலே இறைவனின் ஆசீர் அதிகம் இருப்பது இன்றைய வாசகங்களின் வெளிப்பாடு. நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது அனைத்துமே எமது வாழ்வின் தேர்விலும், தூய எண்ணங்கள் நிறைந்த வாழ்விலும், எமது அன்பை வெளிப்படுத்தும் செயல்களிலுமே தங்கியிருக்கின்றது. சவால்கள் வரும்போது, இடர்கள் எம்மை சூழும் போது, துன்பத்தால் நாம் வாடும்போதே, எமது நம்பிக்கை வாழ்வு எம்மில் செயற்பட ஆரம்பிக்கின்றது, எமது சுயம் தெளிவுற தொடங்குகின்றது. 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!' எனும் திருப்பாடலின் ஆசிரியரோடு இணைந்து, இறைவனின் அழைப்பாகவும் அவர் குரலாகவும் துளங்கும் அனைத்திலும் நாம் தெளிவுற திகலவும், ஆயனைத் தேடும் ஆடுகளாக அவர் பிள்ளைகளாக எப்பொழுதும் திகலவும் வரம்வேண்டி தொடரும் இக்கல்வாரிப் பலியில் கலந்து சிறப்பிப்போம். 

வருகைப் பல்லவி

திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20

பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8டி,7உ காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்

இரண்டாம் இறைவாக்கு

கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு

அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி காண். திபா 30:17-18

உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.

அல்லது

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரிய து ; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். மத் 5:3,5

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எ ங்கள்.

இறைமக்கள் மன்றாட்டு

குரு: வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம், ஏனெனில் ஆண்டவர் எமது பாதுகாப்பாக இருக்கின்றார், எமது தேவைகளில் எமக்கு செவிமெடுக்கின்றார், எமது இயலாமையில் எமக்கு துணை நிற்கின்றார். எமது விண்ணப்பங்களை அவரிடம் சமர்ப்பிப்போம். 

1. திரு அவைப் பணியாளர்களுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், திரு அவையின் மாண்புக்காக உழைக்கவும், ஒரே, மற்றும் புனித, கத்தோலிக்க திரு அவையின் வாழ்வுக்காக பணியாற்றும் வாஞ்சை கொண்டு வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மான்றாடுகின்றோம். 

2. எமது பங்கு திரு அவைக்காக மான்றாடுவோம். 

அன்பின் இறைவா! விசுவாசத்தின் விழைநிலமாகிய எமது பங்கை வழிநடத்தி அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தை, துறவற உறவுகள் மற்றும் பங்கின் மக்கள் அனைவருக்கும் தேவையான அருள் வளங்களை அளித்தருளும். என்றுமே தமது தியாகத்தாலும், ஆர்வத்தாலும், வாஞ்சையாலும் எமது பங்கிற்கு அணிசேர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

இரக்கத்தின் இறைவா! இயற்கை அனர்த்தத்தினால் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கும் மக்களும், வீதி விபத்தினால் தமது வாழ்வையே தொலைத்துவிட்டு தவிக்கும் உறவுகளும் ஆதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த இக்கட்டான சூழலிலே, எமது நாட்டை உம்பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலைக் கொண்டவன் என்பதன் பொருள் உணர்ந்து செயற்படவும், எச்சூழலிலும் இறையன்பை விட்டு விலகிச் செல்லா வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது இளைஞர் யுவதிகளுக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா! மாறிவரும் கலாசார வேட்கையினாலும், சினிமா மோகத்தினாலும், அதிநவின தொழில்நுட்ப உலகத்தின் தாக்கத்தாலும் கவரப்பட்டு பாதிப்புறும் எமது இளையோர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பையும், விசுவாசதையும் தொலைத்திடாமல், அவருக்காக இறுதிவரைக்கும் வாழும் உள்ளம் கொண்டு வாழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்', எனும் திருப்பாடல் ஆசிரியரின் வலிமையின் வார்த்தைகளோடு இணைந்து, வாழ்வு எனும் கொடைக்காக நன்றி சொல்லி, ஆவர் எம்மேல் கொண்ட கருணைக்காகவும், பேரிரக்கத்திற்காகவும், பராமரிப்பிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் வார்த்தைகளில் எடுத்துரைத்த விண்ணப்பங்களுக்கும், எண்ணத்திலும், சிந்தனையிலும், சொல்லமுடியாமல் தவிக்கும் பல விண்ணப்பங்களுக்கும் அவர் செவிசாய்க்கவும், மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம், ஆமென். 


Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Sunday, 21 January 2024

பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு - 21.01.2024

 பொதுக் கால 3ஆம் ஞாயிறு 



முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

இறை உறவில் இணைந்து, இறை சமூகம் அமைத்து, புதிய வழியில், புதிய நற்செய்தியின் கருவிகளாய் ஆகிட ஒன்றுகூடியிருக்கும் என் அன்பு உறவுகளே! இயேசுவின் அன்பின் பெயரால் உங்களை வரவேற்கின்றோம். இயேசுவின் கல்வாரிப்பலியில் இணைந்து, அவர் காட்டிய அன்பைப் பகிர்ந்து, தியாகத்தால் வாழ்விக்கலாம் என்ற புதிய எண்ணக்கருவை இன்றைய நாளும், இறைவார்த்தைகளும் எமக்கு நினை{ட்டுகின்றன. 

கடவுளின் செய்தியை அறிவிக்கவென தேர்ந்துகொள்ளப்பட்ட யோனா, இறைவனின் வார்த்தையை நம்பினார், அதை ஏற்றுக்கொண்டார், குறிக்கப்பட்ட மக்கள் இனத்திற்கு அறிவிக்க துணிந்து சென்றார். கடவுளின் அழைப்பிற்கு செவிசாய்த்து, தன்னை இசைவாக்கிக் கொண்டார். இதே அழைப்புப் பற்றி குறிப்பிடும் மாற்கு நற்செய்தியாளர், இயேசுவின் அழைப்பிற்கு தங்களின் முழு ஒத்துழைப்பையும் அழைத்ததன் வெளிப்பாட்டை இங்கே கோடிட்டுக் காட்டுகின்றார். அழைப்பிற்கு, ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் நிலை முக்கியமில்லை, அவர்கள் செய்யும் தொழில் முக்கியமில்லை, அவர்களின் ஆற்றல் திறமை முக்கியமில்லை, அவர்கள் இயேசுவோடு அமைக்க இருக்கும் பாதையும், பயணமும், நோக்கமுமே முக்கியமானதாகும்.

ஆகவே, எமது வாழ்வு எமக்கு சொல்லித்தரும் அழைத்தல் பயணம் பற்றி சிந்திப்போம். நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ, அதே நிலையில் எமக்கு முன் நிற்கும் சவால்கள், போராட்டங்கள் மத்தியில், எமது அழைத்தல் வாழ்வில் துணிவோடு பயணிக்கவேண்டிய அருளைக் கேட்டு மன்றாடுவோம். நாம் நல்லவர்களாக, நேர்மையுள்ளவர்களாக, மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக, அனைவரையும் அரவணைக்கும் பரந்த மனம் படைத்தவர்களாக வாழ, வளர இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள் உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன் மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.

'காண். திபா 95:1,6.

உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும் இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-5, 10

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.

பதிலுரைப் பாடல் திபா 25: 4-9

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்;!

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 29-31 இந்த உலக அமைப்பு கடந்துபோகக் கூடியது 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்


நற்செய்தி இறைவாக்கு: மாற்: 1: 15.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று மொழிந்த இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு எமது தேவைகள் விண்ணப்பங்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. இறை அழைத்தலை பெற்று பணிபுரியும் திருநிலைப்பணியாளர்கள் அனைவரும் இறையாசீர் நிரம்பப் பெற்று, இறைவனின் மக்களுக்காய் உழைக்கும் வாஞ்சை கொண்டு வாழ வேண்டிய வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறை வேண்டலின் ஆண்டாகிய இவ்வாண்டிலே, இறை சமூகமாய் ஒன்றிணைந்து, பயணிக்கும் திரு அவையின் வளர்ச்சிக்காகவும், அதன் மேன்மைக்காகவும் தொடர்ந்து இடைவிடாமல் தங்கள் செபத்தாலும் தப, ஒறுத்தல் முயற்சிகளாலும் அணிசேர்க்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது பங்கில் உள்ள சிறுவர்கள் விசுவாசத்தில் நன்கு வளர்ந்து, இறைபக்தி, தெய்வபயம் என்பவற்றில் உறுதியாக திளைக்கவும், எம் இளைஞர்கள் வாழ்வின் நோக்கத்தையும் அதன் குறிக்கோளையும் நன்கு உணர்ந்து வாழவும், தம்மேல் சுமத்தப்படும் பொறுப்புக்களின் கனாகணம் உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நாட்டின் பொருளாதார கெடுபிடியால் சிக்கித் தவிக்கும் எமது உறவுகள் மற்றும் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகள் அனைவரும் வாழ்வோடு தொடர்ந்து போராடும் வல்லமையை பெற்றிடவும், அரசியல் தலைவர்கள் அகந்தை தவிர்த்து, அநுதினம் ஏங்கும் இவர்களுக்காய் வாழும் வரம்பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களால் இறந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் இறைவன் தமது இரக்கத்தால் இளைப்பாறுதல் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும் ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்' எனும் திருப்பாடல் வழியாக, இறைவா நீர் நல்லவர் என்று நம்பும் உன் அடியார்கள் நாங்கள் எமது பலவீனத்திலும், இயலாமையிலும் உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். எமது வாழ்வின் போராட்டத்திலே, நாம் சந்திக்கும் சவால்கள் மத்தியிலே, உமது அருளும், இரக்கமும் நீர் தரும்  ஆசீர்வாதமாய் அமைவதாக. நாம் உம் பதம் தந்த அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்று நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 33:6 ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள் உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது!

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். 

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.

Saturday, 13 January 2024

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 14/01/2024


திருப்பலி முன்னுரை 

இறைமகிமையும், மாட்சியும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும். புலர்ந்துள்ள புதிய நாளிலே இயேசுவின் கல்வாரிப் பலியில் கலந்து, அவரோடு இணைந்து பயணிக்க நாம் ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இந்நாள் ஆசீர்வாதம் நிறைந்த நாளாக அமைவதாக. இன்றைய இறைவார்த்தைகள், இறைவன் தேர்ந்துகொண்டோரை அழைப்பதையும், அழைத்தவரை தமது பணிக்காக அனுப்புவதையும் காண்கின்றோம். சாமுவேலின் அழைப்பு பற்றி முதலாம் இறைவார்த்தையிலும், பேதுறுவின் அழைப்பும் அவரது எதிர்கால பணி பற்றி நற்செய்தி இறைவார்த்தையிலும் எடுத்தியம்புகின்றது. இறைவனின் பார்வையில் விலைமதிக்கப் பெற்றவர்களாக இருக்கும் போது, இறைவனின் உடன் இருப்பும், அவரது வலக்கரமும் எப்போதும் இருக்கின்றது என்பதற்கு இன்றைய இறைவார்த்தைகள் உதாரணங்களாகின்றன. நாமும் இறைவனின் அழைப்பைப் பெற்றுள்ளோம். எம்மை தன் மகளாக, மகனாக தேர்ந்தெடுத்த இறைவன், எம் வழியாக அவர் ஆற்ற இருக்கும் அனைத்துமே அற்புதம். கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார்' எனும் புனித பவுலின் அழகிய வார்த்தைகள் எமது வாழ்வின் உயர்ச்சியையும், மனித மான்பையும் எடுத்தியம்புகின்றன. 

ஆகவே, இறைவனின் அன்பு பிள்ளைகளாக, அரச குருத்துவ திருக்கூட்டமாக திகழும் நாம், கடவுளின் அழைப்பிற்கு செவிசாய்த்து, எம்மை அவர் கருவிகளாக மாற்றிட வரம்வேண்டி இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.

குறிப்பு: இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும், தமது நாளாந்த வாழ்வுக்கு திரும்பவும், தாங்கள் இழந்ததை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கவும் மன்றாடுவோம். கல்வி இழந்து, பொருளாதாரம் இழந்து தவிக்கும் இம்மக்களுக்கு, இறைவன் ஒரு விடியலைக் காட்டவேண்டி மன்றாடுவோம்.

வருகைப் பல்லவி

கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும் உம் புகம் பாடிடும் உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும். திபா 65:4

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீர் உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

பதிலுரைப் பாடல் திபா 40: 2,3. 6-7ய. 7டி-8. 9

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்!

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13உ-15ய,17-20

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. யோவா 1: 41.17டி

நற்செய்தி இறைவாக்கு:

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. இயற்கை அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர் நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!

அல்லது

1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம் நம்புகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும் இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 6 January 2024

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா - 07-01-2024



வருகைப் பல்லவி: காண். மலா 3:1; 1 குறி 28:12 
இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும் ஆட்சியும் அவரது கையிலே. 

திருப்பலி முன்னுரை
புதிய இளங்காலைப் பொழுதினிலே, இறை உள்ளங்களாக இறை சந்நிதானம் ஒன்று கூடியுள்ள என் அன்பு உறவுகளே! அன்னையாம் திரு அவை இன்றைய நாளிலே ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றாள். இதை வரலாற்றிலே, 'மூவிராசாக்கள் பெருவிழா' என்றும் அழைப்பர். கீழைத்தேய திரு அவையிலே இன்றைய நாளைத் தான் கிறிஸ்து பிறப்பின் நாளாகக் கொண்டாடுவர். இதற்கான காரணம்,  இன்றைய நாளில் தான் கிறிஸ்து எனும் இறைமகன் தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றார். 
'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' எனும் புனித மத்தேயுவின் நற்செய்தி அனுபவம், பல அர்த்தங்கள் நிறைந்த ஆழ்ந்த விளக்கங்களை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. இயேசுவை அரசராக, மாந்தர் அனைவரின் வீரனாக அடையாளம் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இயேசுவை இவ்வுலகிற்கு எண்பித்தது ஒரு புதிய விடிவெள்ளி, அதை துள்ளியமாகக் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இவர் இறை மகன் என்பதன் வெளிப்பாடு, இவர்கள் செலுத்தும் ஆராதனையும் வணக்கமுமே. 
இயேசு தன்னை தொடர்ந்தும் வெளிப்படுத்த இருக்கின்றார். இத்தொடர் வெளிப்பாட்டிலே நானும் இயேசுவைக் கண்டுகொள்ள வேண்டும். ஞானிகளைப் போல், நாம் எத்திசை சார்ந்தவர்களாகவோ, எந்நிலையில் வாழ்பவர்களாகவோ, எந்தெந்த பட்டப் படிப்புக்களை படித்தவர்களாகவோ, எவ்வகை சார்ந்தவர்களாகவோ இருந்தாலும் பரவாயில்லை. இயேசுவைக் கண்டுகொள்வதே எமது நோக்கமும் தேடலுமாக இருக்கவேண்டும். இயேசுவின் பிறப்பிற்கு கொடுக்கப்பட்ட பரிசுகள், அவர்களின் விலைமதிப்பில்லா பொன்னோ பொருளோ அல்ல, மாறாக, அவர்களின் அளவில்லா மகிழ்ச்சி நிறைந்த இதயமே. இது தான் எமது அன்பின் பரிசாக அமைய வேண்டும். இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு தொடரும் அன்பின் பலியிலே கலந்து இறைவரம் வேண்டி செபிப்போம்.


திருக்குழும மன்றாட்டு :
இறைவா, விண்மீன் வழிநடத்த உம் ஒரே திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர் கனிவுடன் வரம் அருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை ஏற்கெனவே நம்பிக்கையால் அறிந்துள்ள நாங்கள் உமது மாட்சியின் தோற்றத்தைக் கண்டுகளிக்கும்வரை வழிநடத்தப்படுவோமாக. உம்மோடு. 

முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11) 
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 2: 2
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு
 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

இறைமக்கள் மன்றாட்டு

குரு: ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இன்று எம்மிடம் இருப்பதை இயேசுவிக்கு காணிக்கையாகக் கொடுப்போம், எமது விண்ணப்பங்கள் விரும்பிக்கேட்கும் இறையருள்,  அவர் அளிக்கும் அன்பின் பரிசாக அமைவதாக. 

1. அன்பின் இறைவா! இயேசுவின் பிறப்பின் செய்தியை உலகமெங்கும் அறிவிக்கும் வாஞ்சைகொண்ட எம் திரு அவைப் பணியாளர்கள் என்றும் எப்பொழுதும் உம்மை தமது பணியினாலும், ஆர்வத்தினாலும் தாங்கிச் செல்லும் வாஞ்சையை அளித்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அருள் வழங்கும் இறைவா! உம்மைக் காணவேண்டும் எனும் ஆர்வத்திலே ஏங்கிக் கொண்டிருக்கும் பல உள்ளங்களுக்கு, ஞானிகள் தந்த எதிர்நோக்கும், நம்பிக்கையும் இவர்கள் உள்ளங்களுக்கு மகிழ்வை தருவதாக. தமது வாழ்வின் தேடலில், தொடர்ந்தும் இயேசுவை கண்டுகொள்ளவேண்டிய வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3.அமைதியின் இறைவா!  எமது நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையில் மீழமுடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு, புதிய வாழ்வின் மாற்றங்கள், தீர்மானங்கள், எடுகோள்கள், புதிய வாழ்வின் பயணத்திற்கு அருள்பாலிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. நாம் வாழும் சமூகத்தில், ஆரோக்கியமான சமூக விழுமியங்கள் கட்டி எழுப்பப்படவும் ஒருவரை ஒருவர் ஏற்று, அன்புடன் தாங்கி அமைதியில் நிறைவு காணவும், எம்மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வின் நிலைகளை ஏற்று வாழவும், நாம் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான வழிகோலவும், தொழில் துறைகளை ஆசிர்வதிக்கவும், கல்வி வாழ்வை மேம்படுத்தவும், குடும்ப பொறுப்புக்களை சீரமைக்கவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வல்லமையின் இறைவா! கல்விப் பொதுத்தராதர உயர்தர பரிட்சை எழுதும் எமது பிள்ளைகளுக்கு, துணிவையும், ஆற்றலையும், சவால்களை சந்திக்கும் திடத்தையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 
குரு: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும் என உமது வரங்களிலும் வல்லமையிலும் நம்பிக்கை கொண்டு உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எமது குடும்பங்களாய், பங்கு சமூகமாய், அன்பின் உறவுகளாய் எம்மை வழிநடாத்தி, அருளால் நிறைத்து ஆசித்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 



காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்க உம்மை வேண்டுகின்றோம்: பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படவில்லை; எனினும் இக்காணிக்கைகள் வழியாக இயேசு கிறிஸ்து அறிக்கையிடப்படுகின்றார், பலியிடப்படுகின்றார், உட்கொள்ளப்படுகின்றார் என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி :காண். மத் 2:2 
கிழக்கில் அவரது விண்மீனைக் கண்டோம்; ஆண்டவரை வணங்கக் காணிக்கைகளுடன் வந்திருக்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, எங்கும், எப்பொழுதும் விண்ணக ஒளியாய் நீர் எங்கள் முன் செல்ல உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பங்கேற்க வேண்டும் என நீர் விரும்பும் மறைநிகழ்வைத் தூய்மையான உள்ளுணர்வுடன் கண்டுகொள்ளவும் தகுதியான ஆவலுடன் அறிந்துகொள்ளவும் செய்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...