Friday, 28 March 2025

தவக்காலம் நான்காம் ஞாயிறு வாரம் - 30/03/2025

 தவக்காலம் நான்காம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

நிறை அருளின் காலமாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் என் அன்பின் இறை சமூகமே! இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அழைத்து நிற்கின்றேன். தம் மக்களை பெயர்சொல்லி அழைக்கும் இறைவன் அவர்களை தொடர்ந்தும் தமது பிள்ளைகளுக்கு உரிய உரிமையோடு வழிநடத்துகின்றார். மீண்டும் ஒரு புதிய நாளுக்குள்ளும், புதிய வாரத்திற்குள்ளும் நுழையும் எமக்கு இது புதிய அனுபவங்களைத் தருவதாக. 

நாம் அனைவரும் அழைக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். ஆகவே, எமது வாழ்வு அனைத்தும் இறை விழுமியங்களோடு பயணிக்கவும், தூய ஆவி அருளும் கொடைகளையும், வரங்களையும் பெற்று நிறை அருளால் செழித்திடும் மக்களாக மாற இன்றைய இறைவார்த்தைகள் அழைப்பு விடுக்கின்றன. 

நெறி தவறிப்போன ஊதாரி மகனின் உவமை இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்படுகின்றது. தனது சுய விருப்பத்தால், தன்னிட்சையாக மேற்கொண்ட தீர்மானத்தால், விளைவுகளை எதிர்வுகூறாத பாவங்களால் தன்னை இழந்திடும் மனநிலையை இவ் இளைய மகன் பெற்றுக்கொள்கின்றான். இது  மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், மனந்திரும்பும் எவரையும் இறைவன் மன்னிக்கக் கூடியவர் என்பதை இவ்வுவமை எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. 

நாம் பாவிகள் தான், இருப்பினும், நாம் மனம் மாற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புனிதமானது. நாம் தொலைந்துபோனாலும் அன்பை தொலைத்திடாத தந்தையின் உள்ளமே அழகானது. எனவே, இத்தவக்காலத்தில் இளைய மகனின் மனம் மாறும் உள்ளத்தைக் கேட்போம். அதேவேளை அன்பைப் பொழியும் தந்தையின் உள்ளத்தையும் கேட்போம். இக்கல்வாரிப் பலியில் பங்குபெறும் நாம் இதற்கான அருளைக் கேட்டு மன்றாடுவோம். இவ்வுலகிலே நாட்டை ஆள்பவர்கள் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் நிறைவாக கொடுக்கும் உள்ளத்தை பெற இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி - காண். எசா 36:10-11

எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங் கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங் கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங் கள்.


"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனிதரான உம் வாக்கின் வழியாக மனிதக் குலத்தின் ஒப்புரவை வியத்தகு முறையில் செயல்படுத்துகின்றீர்; அதனால் ஆர்வமிக்க இறைப்பற்றாலும் உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கையாலும் வரவிருக்கும் பெருவிழாவுக்குக் கிறிஸ்தவ மக்கள் விரைந்திட ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a,10-12

அந்நாள்களில்

ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.

இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.

நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;

அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;

அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;

எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி


5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்;

அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21

சகோதரர் சகோதரிகளே,

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வசனம் லூக் 15: 18

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்.


 நற்செய்தி இறைவாக்கு

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


நம்பிக்கையாளர் மன்றாட்டு 


குரு: 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.' இயேசுவின் சிலுவையில் உணரப்பட்ட வாழ்வுக்கான அனைத்து புண்ணியங்களும் எமது வாழ்வில் நிறைவேறுகின்றன.  இயேசுவில் நாம் முழு நம்பிக்கைகொண்டு அவரது சிலுவைவழி நடந்துசென்று எமது உள்ளார்ந்த உணர்வுகளை எமது தேவைகளாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 


1. கருணையின் இறைவா! எமது பங்கில் பணியாற்றும் பங்குத்தந்தை, மற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் தங்களது சாட்சிய வாழ்வாலும், தியாகத்தாலும் உமக்கு என்றும் சான்றுபகர அருள்புரியவேண்டுமென்று ...

அல்லது

கருணையின் இறைவா! இவ்வுலகின் தீமைகளை இனங்கண்டு, அதற்குச் சரி நிகராக போராடும் வலிமையை எமக்கு கற்றுத்தரவும், அருள் வாழ்வுக்கான பாதையை காட்ட எம்மை திரு அருட்கொடைகளால் நிறைக்கும் திருப்பணியாளர்களை ஆசீர்வதியும். இத்தவக்காலத்தில் அவர்களின் பணி நிறைவுபெறவும், முயற்சிகள் கைகூடவும் இதனால் இறைமக்கள் நாம் முழுப்பயன் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

2. கருணையின் இறைவா! நாம் திருவருட் கொடைகளால் வளம்பெற்ற மக்களாகவும், பாவங்களை களைந்து அருளில் திகழும் மக்களாகவும் எமை மற்றியருளும். எமது சுய இன்பங்களுக்கு ஆசைப்பட்டு, இவ்வுலகின் இருளுக்குள் மூழ்கடிக்கப்படாமல் இருக்கவும், எமது அகச்செயல் வழியாக நாம் தேடும் தூய வாழ்வை எமக்கு அளித்திட  அருள்புரிய வேண்டுமென்று ...

அல்லது

கருணையின் இறைவா! இத்தவக்காலம் எமக்கு அருளின் காலமாக அமைவதாக. எமது பழைய பாவ வாழ்வில் இருந்து விடுபட்டு, புதிய வாழ்வின் தேடலுக்குள் நுழைய அருள்தாரும். எமது நல்லொழுக்கங்களாலும், நற்பண்புகளாலும், நற்செயல்களாலும் நாம் சேர்த்துவைத்திருக்கும் அருள் வழங்களால் நாம் மேலும் மேலும் சிறந்திட எம்மைத் தூண்டியருள வேண்டுமென்று, ...

3. கருணையின் இறைவா! எமது பங்கு சமுகத்தில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்து நல் உள்ளங்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவும், தொடர்ந்தும் தமது பணியில் முழு நிறைவுகாண அருள்புரிய வேண்டுமென்று ...

4. கருணையின் இறைவா! எமது பங்கின் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நல் ஒழுக்க சீலர்களாக திகழவேண்டுமென்றும், அவர்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களையும் முழுமையாக பின்பற்றும் ஆற்றலை அளித்திடவேண்டுமென்று ...

குரு: எல்லோரின் உள்ளங்களை அறியும் இறைவா, எமது நீண்டதூர பயணத்திலே நாம் கடந்துசெல்லும் சவல்களை தாங்கிச் செல்ல வரம்தாரும், போராட்டங்களில் வெற்றிகாண அருள்தாரும், எதிரிகளை இனங்கண்டு அவர்களுக்காக செபிக்கும் மனம் தாரும். நாம் இவ்வுலகில் வெளிக்கொணரும் அன்பும், பாசமும், இரக்கமும், மன்னிப்பும் நீர் எமக்கு தரும் கொடைகளும், வரங்களுமே. எமது தேவைகள் இவற்றை தாங்கிச் செல்வதாக. எங்கள ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக. எங்கள்.


தொடக்கவுரை :பிறவியிலேயே பார்வையற்றவர்


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


கிறிஸ்து தாம் மனிதர் ஆனதன் மறைநிகழ்வு வழியாக

இருளில் நடக்கும் மனிதக் குலத்தை நம்பிக்கையின் ஒளிக்குக் கொண்டுவந்தார்.

பழைய பாவ நிலைக்கு உட்பட்டவர்களாகப் பிறந்தவர்களைப்

புதுப் பிறப்பின் கழுவுதலால் உரிமை மக்களாக ஏற்றுக்கொண்டார்.


ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்

உம்மை ஆராதித்து வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன;

வானதூதர் அணிகள் அனைத்தோடும் நாங்கள் சேர்ந்து

முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி : பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: காண். யோவா 9:11,38 

ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன், கழுவினேன், பார்த்தேன்; கடவுளை நம்பினேன். ஊதாரி மைந்தனைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:


லூக் 15:32 

மகனே, நீ மகிழ்ந்து இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்.


வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது - காண். திபா 121:3-4 

எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நக" ஆண்டவரே, உமது திருப்பெயரைப் போற்ற இறைக்குலத்தார் ஆங்கே ஏறிச் செல்வார்கள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு 

ஆண்டவரே, தாழ்மையுடன் உம்மை நோக்கி மன்றாடுவோரைக் காத்து வலுவற்றோரைத் தாங்கிக்கொள்ளும்; சாவின் நிழலில் நடப்போரை உமது நிலையான ஒளியால் உயிர் பெறச் செய்தருளும்: தீமை அனைத்திலிருந்தும் உமது இரக்கத்தால் அவர்களை விடுவித்து நிறைவான நன்மைக்கு அவர்கள் வந்து சேர அருள்புரிவீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 20 March 2025

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரம் - 23/03/2025

 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

“நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

அருளின் காலமாம் இத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்தினுள் நுழையும் என் அன்பு இறை மக்களே! எம் கரங்கள் பிடித்து அழைத்துச் சென்று, புதிய வாழ்வுப் பாதையில் வழிநடத்தும் இயேசுவோடு இன்று பயணிக்க கூடிவந்திருக்கின்றோம். இக்காலம் எம் இதயத்தை மாற்ற அழைப்பதோடன்றி, எமது அளுமையை பற்றிச் சிந்திக்கவும், எமது சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தும் பல உலகின் தத்துவங்களைப் / காரணிகளைப் பற்றி சிந்திக்கவும், எமது உறவுநிலையின் ஆழம் அகலம் பற்றிச் சிந்திக்கவும்,  இவை அனைத்தும் எம்மில் செலுத்தும் தாக்கத்தைப் பற்றி சிந்திக்கவும் இன்றைய நாளும் இக்காலமும் எம்மை அழைத்து நிற்கின்றன. 

இன்றைய முதல் இறைவார்த்தையில், கடவுளின் பெயர் முதன் முதலாக கொடுக்கபடுகின்றது. ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்பதன் அர்த்தம் அவர் தொடக்கமும் முடிவும் அற்றவர், எங்கும் எப்பொழுதும் இருப்பவர், அவருக்கு என்றும் அழிவே இராது. நற்செய்தியிலே, கனிகொடாத மரங்களை எல்லாம் வெட்டிவிட வேண்டும் என மனம் மாறாதோரைக் குறித்து இயேசும் சொல்லும் வார்த்தை தெளிவாக அமைகின்றது. 

நாம் கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும் எமக்கு கொடுக்கப்படும் அருளின் கொடையே. எத்தனைகோடி மக்கள் பிறந்து, வாழ்ந்து இறந்து போனாலும், இன்று இவ்வுலகம் எனக்கு சொந்தமானது, இன்றைய நாள் எனக்கு சொந்தமானது. எம்மைக் கடந்து செல்பவர்கள் எமக்கு விட்டுச் செல்லும் செய்தி என்னவெனில், நாம் சிறந்தவர்கள், இறைவனுக்குரியவர்கள், அவருக்கு சொந்தமானவர்கள். எனவே, நாம் கிறிஸ்துவை நாளும் வாழும் விருப்பங்கொள்வோம். இறைவார்த்தையை தியானிப்பதில், ஆன்மாவை தூய்மைப்படுத்தி அழகு காண்பதில் ஆர்வங்கொள்வோம். நாம் நுழையும் இப்புதிய வாரம் எமக்கு ஆசீரை நிறைவாக தரவேண்டி தொடரும் பலியில் இணைந்துகொள்வோம்.  

வருகைப் பல்லவி - காண். திபா 24:15-16 

என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.

அல்லது 

காண். எசே 36:23-26 

நான் உங்களில் என் தூய்மையை நிலை நாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

‘இருக்கின்றவராக இருக்கின்றவர்’ என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a,13-15

அந்நாள்களில்

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. “ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார். அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார். மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.

மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்றார்.

மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி


3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;

உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;

அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி


6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;

ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.

7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்;

அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி


8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;

நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மோசேயோடு மக்கள் பாலைநிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவுபுகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 1-6,10-12

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்ட னர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.

அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வசனம் மத் 4: 17

‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,’ என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி இறைவாக்கு

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: எமது வாழ்வு ஒரு புதிய பாதையிலும், புனித பாதையிலும் பயணிக்கின்றது. இப்பயணத்திலே இயேசுவின் உடனிருப்பு எம்மோடு இருக்கின்றது. எனவே, எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது திரு அவையின் வாழ்வுக்காகவும் அதன் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அனைத்து பணியாளர்களும் இயேசுவின் தூய மனநிலை கொண்டுவாழவும், அவரையே முழுமையாக பின்பற்றி உலகெங்கும் அறிக்கையிடுகின்ற கருவிகளாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று ...  

அல்லது 

நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது திரு அவையை உமது அன்பிலும் பாதுகாப்பிலும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இதோ பேதுறு, இப்பாறையின் மேல் எனது திரு அவையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா என மொழிந்த இறைவா! இவ்வுலகின் பாவத்தில் இருந்தும் கறைபடிந்த மாசுகளில் இருந்தும் காக்கவென உழைக்கும் அனைவருக்கும் இறைவனின் ஆசீரும், ஞானமும், அவர் வழிநடத்துதலும் என்றும் இருக்க அருள்புரிய வேண்டுமென்று, ...


2. நிறை அருளின் ஊற்றே இறைவா!  சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் தங்கள் உணர்வுகளாலும் சான்றுபகரும் அனைவரும் இத்தவக்காலம் கற்றுத்தரும் அனைத்து போதனைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவை தரும் அனைத்தும் படிப்பினைகளுக்கும் பிரமாணிக்கமாய் இருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று ...  


3. நிறை அருளின் ஊற்றே இறைவா!  இன்றைய சமகால அரசியல் பொருளாதார வாழ்வோடு பயணிக்கும் எமக்கு, கொடுக்கப்படும் கேள்விகளும் பதில்களும் அர்த்தமற்ற நிலைகளையும், பொருத்தமற்ற சூழலையும், எதிர்மறை விமர்சனங்களையும் எம்மேல் திணிக்கின்ற விவாதங்களையுமே எமக்கு தரும்வேளை, நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் தேடிச் செல்லவும், வாழ்வில் இயேசுவை விட்டு பிரிந்திடா வரமருள வேண்டுமென்று ... 


4. நிறை அருளின் ஊற்றே இறைவா!  எமது சமுகத்திலே காணப்படும் பிரிந்துபோன குடும்பங்கள், நொந்துபோன மற்றும் உடைந்துபோன உறவுகள், விரக்தியின் விளிம்பில் வெளிவரமுடியாமல் முடங்கிப் போனவர்கள் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். மனித உள்ளங்களை அறியும் இறைவன்,  நம்பிக்கையை வெளிச்சத்தை தந்து, வாழ்வின் பாதைகளை தெளிவாக அமைத்து என்றும் முன்னோக்கிச் செல்ல அருள்புரியவேண்டுமென்று ... 


5. நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்து மரித்துப்போன அனைத்து பொதுநிலைப் பணியாளர்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்கள் கற்றுத்தரும் நல் விழுமியங்களை கருத்துடன் பின்பற்றவும், இவர்கள் விட்டுச்சென்ற தியகத்தையும் அர்ப்பணத்தையும் வழ்வில் கொண்டுவாழ அருள்புரிய வேண்டுமென்று, ...


6. நிறை அருளின் ஊற்றே இறைவா! இத்தவக்காலத்தில் நாம் பல புண்னியங்களை செய்யவும், பிறருக்கான உதவிகளைச் செய்யும் விருப்பங்களையும் எம்மில் தூண்டியருளும். கொடுப்பதால் பலர் வாழ்வுபெறுவர் என்ப்தை தாரகமந்திரமாகக் கொண்டு வாழ்வுக்கான ஒளியை அவர்களில் காட்ட எமக்கு அருள்புரிந்தருள வேண்டுமென்று, ... 


குரு: எம்மை எல்லாம் அன்பு செய்யும் இறைவா! உமது துணை இன்றி நாம் வாழ முடியாது, உமது வழிநடத்துதல் இன்றி நாம் இயங்கமுடியாது. உமது பாதம் நம்பிக்கையோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, உமது அருளைப் பொழிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக; எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக. எங்கள்.


தொடக்கவுரை: சமாரியப் பெண்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


தமக்குத் தண்ணீர் தருமாறு சமாரியப் பெண்ணிடம் கேட்ட நேரத்திலேயே

கிறிஸ்து அப்பெண்ணுக்கு நம்பிக்கை எனும் கொடையை வழங்கினார்.

அவ்வாறு அப்பெண்ணின் நம்பிக்கையின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டதால்

அவரில் இறையன்பின் நெருப்பைப் பற்றியெரியச் செய்தார்.


ஆகவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்தி

உமது வல்லமையை வானதூதர்களோடு

புகழ்ந்து ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி :

சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: 

காண். யோவா 4:13-14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.

அல்லது வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். திபா 83:4-5 படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக் குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு 

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் இதயங்களை ஆண்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஊழியர்களுக்குக் கனிவுடன் இந்த அருளை வழங்குவதால் உம் அன்பிலும் பிறரன்பிலும் நிலைத்திருந்து அவர்கள் உம் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார்களாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Wednesday, 12 March 2025

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வாரம் - 16/03/2025

 தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். ஏனெனில் என் நெஞ்சே! நீ ஆண்டவருக்காகக் காத்திரு. 

இறை அருளின் காலமாகிய இத்தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் இணைந்து கல்வாரிப்பலியின் பலியில் கலந்து சிறப்பிக்க கூடிவந்திருக்கும் என் அன்பு உறவுகளே! இப்புதிய நாளுக்காகவும், இப்புதிய வாரத்திற்காகவும் நன்றிசொல்லி நுழைகின்றோம். 

இன்றைய முதல் இறைவார்த்தையில், ஆபிரகாமிற்கான இறைவனின் வாக்கு நிலையானதாக, பிரமாணிக்கம் நிறைந்ததாக அமைவதை காண்கின்றோம். இறைவனால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரின் வாக்கப்பெற்று, இறை பணியினை நிறைவேற்ற ஆபிரகாம் முன்வந்ததுபோல, நாமும் இறைவனால் அழைக்கப்பெற்றுள்ளோம், அவரின் தேர்வினால் பணியினையும் பெற்றுள்ளோம் என்பதை இவ் இறைவார்த்தை நினைவூட்டுகின்றது. கிறிஸ்து எமக்காக மரித்தார் என்றால் அவரின் சிலுவை எமக்கு ஓர் அருளின் சின்னமே என்பதை இரண்டாம் இறைவாக்கு நினைவூட்டுகின்றது. நற்செய்தியில், இயேசுவின் உருமாற்ற நிகழ்வு தரப்படுகின்றது.  

எமக்கு கொடுக்கப்படும் இத் தவக்காலம் இயேசுவின் பாடுகளோடும் அவர் மரணத்தோடும் இணைந்து சிந்திக்க அழைக்கின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைவரையும் அவர் அன்புசெய்கின்றார்; தனது மகன் வழியாக எம்மை பாவ அடிமைத் தழையில் இருந்து மீட்கின்றார்; அனுதினமும் எமக்கான அருளை சிலுவையில் சிந்திய தனது இரத்தத்தின் வழியாக எமக்கு அருளுகின்றார். இதற்காகவே எம்மை வழிநடத்தும் இவ் அருளின் காலமாகிய தவக்காலத்தின் ஊடாக எம்மையும் இணைத்து, அக்காலம் கற்றுத்தரும் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நடக்க அருள்வரம் கேட்போம். எமது அனைத்து ஒறுத்தல், தவ முயற்சிகள் நிறை பயனை தரவும், எமது புதிய தவக்கால தீர்மானங்கள் அனைத்தும் எமது ஆன்மாவை இன்னும் அழகுபடுத்தவேண்டுமென்றும் தொடரும் இக் கல்வாரிப் பலியில் இணைந்து மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 26:8-9 வருகைப் பல்லவி என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்; அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.

அல்லது  காண். திபா 24:6,2,22 

ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினை ந்தருளும்; எ ங் கள் பகைவர்கள் எ ங் களை ஒருபோதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?” என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.

கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.

அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 27: 1. 7-8. 9abc. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.


1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;

யாருக்கு நான் அஞ்சவேண்டும்?

ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;

யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி


7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்;

என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.

8 ‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்;

ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி


9abc உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;

நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்;

நீரே எனக்குத் துணை;

என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். -பல்லவி


13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;

மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்;

ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு 

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17-4:1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 20-4:1

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வசனம் - மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”


நற்செய்தி இறைவாக்கு

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: நவின உலகிலே பயணிக்கும் எமது திரு அவை சந்திக்கும் சாவாலான நுகர்வுக் கலாசாரத்திற்குள்ளே அகப்பட்டுவிடாமல், அறிவும், ஞானமும் மட்டுமல்ல அதனோடு கூடிய ஆன்மிக அனுபவமும், விவேகமும் திரு நிலையினரின் வாழ்வின் அணிகலன்களாக இருக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

அல்லது: 

அன்பின் இறைவா! உமது தூய திரு அவையை வழிநடத்தியருளும். குறிப்பாக நோய்வாய்ப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலம் சிறக்கவும், நீர் அவருக்காக வைத்திருக்கும் அனைத்து திட்டங்களிலும் அவர் முழுமனதுடனே செயற்படவும் அவருக்கு வேண்டிய அருளையும் ஆசீரயையும் அளித்திட வேண்டுமென்று, ...

2. எமக்காக மன்றாடுவோம்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிக்கும் இவ் ஜுபிலி ஆண்டில் எம்மை ஆயத்தம்செய்வோம். தூய ஆவியின் வழிநடத்தலில் திருக் குடும்ப உணர்வோடு, புதிய வழிகாட்டலில், புதிய நெறிப்படுத்தலில், புதிய சமுகமாக பயணிக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...


3. அன்பின் இறைவா! இத்தவக்காலத்திலே உமது குரலைக் கேட்கவும், உமது பாதையில் வழிநடக்கவுமென தம்மை ஒறுத்து, தியாகம் செய்யும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். இவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்து தங்கள் தியாகத்தில் சோர்வடையாமலும், புண்ணிய வாழ்வில் தளைத்திடாமலும், செபத்தில் இவ்வுலகிற்கான தேவைகளை அறியும் மனதை அளித்திட வேண்டுமென்று, ... 

அல்லது: 

தவ, ஒறுத்தல் முயற்சிகளாலும் செபத்தாலும் தம்மை இறைவனுடன் ஒன்றினைத்து வாழும் அனைவருக்காகாவும் மன்றாடுவோம். இவர்கள் தமது அர்ப்பணத்தால் இவ்வுலகிற்காக வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது பங்கின் பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: சத்தங்கள் நிறைந்த வேகமான உலகிலே, பொய்யான போக்கிலே சேர்ந்து பயணிக்கும் இக்காலத்திலே, குடும்ப உருவாக்கம் பெற்று மிளிரும் நல்ல தலைமுறை உருவாகவும், தமது வாழ்க்கையிலே எது சரி, எது பிழை என்பதை தெளிவாகக் கண்டுணரும் பாக்கியம் பெற அருள்புரிய வேண்டுமென்று,... 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக. எங்கள்.


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


கிறிஸ்து தமது சாவைச் சீடர்களுக்கு முன்னறிவித்து,

புனித மலையில் தமது பேரொளியை வெளிப்படுத்தினார்.

அதனால் சட்டமும் இறைவாக்குகளும் சான்று பகர்ந்தவாறு

தம் பாடுகள் வழியாகவே உயிர்ப்பின் மாட்சிக்குத் தாம் வந்து சேர வேண்டும் என்பதை அவர் விளங்கச் செய்தார்.


ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து

நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,

முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி : மத் 17:5

 என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால் புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச் செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்.


அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Thursday, 6 March 2025

தவக்கால முதலாம் ஞாயிறு வாரம் - 09/03/2025

 தவக்கால முதலாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

கருணையாம் அன்பின் இறைவன், தனது சிலுவை வழியாக தான் நிறைவேற்றிய மறைபொருளை இன்று இப்பலியின் ஊடாக நிறைவேற்ற உங்களை அழைக்கின்றார். கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்கினிய இறை நெஞ்சங்களே! தவக்காலத்தின் முதல் ஞாயிறு வாரத்தில் கூடிவந்திருக்கின்றோம். 

“இறைவனின் வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே இன்று நாம் சிந்திக்க அழைக்கும் கருப்பொருளாகும். நற்செய்தியின் ஊடாக இறை இயேசு எமக்கு விடுக்கும் அழைப்பும் இதுவே. இறைவனின் வார்த்தையினால் நாம் வாழ்வுபெறுகின்றோம், அவ் வாழ்வு தீமைகளை தகர்த்து, பொய்மைகளை உடைத்தெறிந்து, பாவங்களில் இருந்து விடுதலை பெற்றுத் தர வல்லது என்பதை மூன்று வகையான சோதனைகள் மூலம் இயேசு எமக்கு தெளிவுபடுத்துகின்றார். 

நாம் இயேசுவின் வர்த்தைகளுக்கு செவிமெடுப்பது எனபது, இவ் வார்த்தைகள் பேசும் அவரின் இதயத்தையே செவிமெடுக்கின்றோம் என்பதாகின்றது. எனவே, இறைவனின் உன்னத வார்த்தையால் இவ்வுலகமும், அனைத்துப் படைப்புக்களும் உண்டானதுபோல, இறைவனின் அதே வார்த்தையினால், அன்னை மரியின் உதரத்தில் இறைமகன் உதித்ததுபோல, அவ் வார்த்தைகளால் அதிசயங்கள் அற்புதங்கள் நிறைவேறினதுபோல, எமது இப் பயணப் பாதையிலும் இறை ஆசீரோடு கூடிய அதிசயங்கள் நிறைவேறுவதாக. எமது தவ ஒறுத்தல்கள்,  செபங்கள் வழியாக இயேசுவை இன்னும் நெருங்கி வரும் வரங்களைக் கேட்போம், அவர் இதயத்திற்கு செவிமெடுப்போம், அவர் பாடுகளோடு பயணிப்போம். 

இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் இப்பலியில் பக்தியுடன் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 90:15-16

 என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு நிறைவளிப்பேன்.


"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.


திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டுதோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக் கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது:

நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.

எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 (பல்லவி: 15b)

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.


1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர்,

எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.

2 ஆண்டவரை நோக்கி, ‘நீரே என் புகலிடம்;

என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்’ என்று உரைப்பார். -பல்லவி


10 தீங்கு உமக்கு நேரிடாது;

வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி


12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.

13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;

இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி


14 ‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்;

அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;


15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;

அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்;

அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்’. -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 8-13

சகோதரர் சகோதரிகளே,

மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், “அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறைநூல் கூற்று.

இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா?

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வசனம் மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.


 நற்செய்தி இறைவாக்கு

பாலைநிலத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார்; சோதிக்கப்பட்டார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-13

அக்காலத்தில்

இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.


பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி

அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார்.

அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு


1, எமது ஆன்மிகப் பாதையிலே எம்மை தெளிவான பாதைக்கு இட்டுச் செல்ல அரும்பாடுபடும்  அனைத்து மறைபணியாளர்களுக்கும் இறைவன் ஞானம் நிறைந்த வல்லமையையும், அருளையும் அளித்தருள வேண்டுமென்று ...

அல்லது:

கருணையின் இறைவா! இன்றைய இப்பலியில் இணைந்து எமக்காக இறைவரங்களை இரஞ்சி பெற்றுத்தரும் எமது பங்குத் தந்தை மற்றும் அனைத்து துறவிகள் அனைவரையும் உம்மிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். நீர் உமது பணிக்கென அழைத்த இவர்களை கனிவுடன் காத்தருளவும், அனபையும், வல்லமையையும் நிறைவாகப் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று, ...


2. புதிதாக ஆரம்பித்திருக்கும் இத்தவக்காலத்திலே தம்மை முழுமையாக இணைத்து, புதிய உடன்- படிக்கையாம் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற தம்மை அர்ப்பணிக்கும் அனைவரும், இறை மன்னிப்பையும், அவர் இரக்கத்தையும் நிறைவாகப் பெறும் பாக்கியம்பெற அருள்பாலிக்க வேண்டுமென்று, ...

அல்லது: 

கருணையின் இறைவா! இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் அனைத்து ஒறுத்தல் முயற்சிகளையும், தவ முயற்சிகலையும், எமது செப முயற்சிகளையும் ஆசீர்வதியும். இதனால் நாம் பெற்றுக்கொள்ளும் அனைத்து இறைவரங்களையும் எமது ஆன்ம நலன்களுக்காகவும், இவ்வுலகின் அனைத்து ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் பயன்பட அருள்புரிய வேண்டுமென்று, ...


3. எமது பங்குச் சமூகத்திலே, தடுமாறி, தடம்மாறி, அர்த்தமற்ற வாழ்வோடு பயணிக்கும் பலரினுடைய வாழ்வுக்காகமன்றாடுவோம். இத்தவக்காலத்திலே இவர்கள் வாழ்விலே இறைவன் தொடர்ந்தும் பேசவும், இவர்கள் உள்ளம் தேடும் அமைதியும், மகிழ்ச்சியும் இறைவனருளால் நிலையாகக் கிடைக்கப்பெற அருள்புரிய வேண்டுமென்று ...


4. எம்மைச் சுற்றி காணப்படும் அனைத்து தீமைகளிலும் வெற்றிகொண்டு, இயேசுவின் சிலுவையோடு வாழ்வுக்கு அர்த்தம் காணவும், புதிய சமுகம் படைக்கும் உயிர்ப்பின் மக்களாக திகழ வரமருள வேண்டுமென்று ...


5. கருணையின் இறைவா!  நீர் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தீர் என்று முழுமனதுடனே நம்பும் நாம், எம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், தொழில் துறைகளை இழந்தவர்கள், பல்வேறு காரணங்களால் அவதியுறுகின்றவர்கள் என அனைவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளவும், அவர்களின் தேவையில் எம்மை இணைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.


தொடக்கவுரை: ஆண்டவரின் சோதனை.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


கிறிஸ்து நாற்பது நாள்கள் இவ்வுலக உணவைத் தவிர்த்து,

உண்ணா நோன்புக்கு உருக்கொடுத்து அதைப் புனிதப்படுத்தினார்;

மேலும் தொடக்கத்தில் தோன்றிய

பாம்பின் மாயக் கவர்ச்சிகள் அனைத்தையும் அவர் தோற்கடித்து,

தீமையின் ஆட்சி மீது வெற்றிகொள்ள எங்களுக்குக் கற்பித்தார்.

அதனால் பாஸ்கா மறைநிகழ்வைத் தகுதியான மனதோடு கொண்டாடி

இறுதியாக முடிவில்லாப் பாஸ்காவுக்குக் கடந்து செல்வோமாக.


ஆகவே வானதூதர் அணிகளோடும்

புனிதரின் பெருந்திரளோடும் நாங்கள் சேர்ந்து,

உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து,

முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி : மத் 4:4

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாயினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறார்.


அல்லது காண். திபா 90:4

ஆண்டவர் தம் தோள் வலிமையினால் உம்மைப் பாதுகாப்பார்; அவருடைய இறக்கைகளின்கீழ் நீர் தஞ்சம் அடைவீர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் மீது நிறைவான ஆசி இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் துன்பத்தில் நம்பிக்கை வளர்வதாக; சோதனையில் நற்பண்பு உறுதி பெறுவதாக; நிலையான மீட்பு அருளப்படுவதாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...